இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 02/07/2026
வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 312
வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் :
XII 1)“பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; அவன் பூமியில் வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,” (வெளி 14:6) (Part - 2)
"சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி, உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின் மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன." (ஏசா 52:7)
“சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி; இதோ, உங்கள் தேவன் என்று கூறு.” (ஏசா 40:9) “இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின் மேல் வருகிறது." (நாகூ 1:15) “அனுப்பப்படாவிட்டால் எப்படி பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.” (ரோம 10:15)
மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்கள் எல்லாம், தேவனுடைய நற்செய்திகளை மனுக்குலத்திற்கு சுவிசேஷங்களாய் அறிவிக்கும்படி சுவிசேஷகர்களையும், இரட்சிப்பின் செய்திகளை அறிவிக்க அப்போஸ்தலர்களையும் தேவாதி தேவன் வேதாகம காலங்களில் அனுப்பியுள்ளார் என்பதையே நமக்குப் போதிக்கின்றது. மாறாக தேவ தூதர்களைக் கொண்டு மனுக்குலத்திற்கு எந்த ஒரு சுவிசேஷத்தையோ, இரட்சிப்பின் சத்தியங்களையோ அறிவித்ததாக வேதாகமத்தில் அறிய முடியவில்லை.
வெளி 14:6-ம் வசனத்தில் பூமியில் வாழும் சகல ஜனங்களுக்கும் நித்திய சுவிசேஷமான, நித்தியானந்த தேவனுடைய மகிமையை அடைந்துகொள்ள அறிவிக்கும் சுவிசேஷமான இரட்சிப்பின் சுவிசேஷத்தை, வானத்தின் மத்தியில் பறந்து கொண்டு ஒரு தூதன் அறிவித்ததை அப்.யோவான் காண்கிறார். வானத்தின் மத்தியில் பறந்து கொண்டு நித்திய சுவிசேஷத்தை இத்தூதன் அறிவிக்கிறபடியால்,இவர் தேவதூதன் என்று பல வேத பண்டிதர்கள் என்ணுகின்றனர். மேலே தியானம் செய்த அநேக வேத வசனங்கள் மனுக்குலத்திற்கு சுவிசேஷத்தையோ, இரட்சிப்பின் சத்தியத்தையோ மனுக்குலத்திலிருந்து மீட்கப்பட்ட பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களைக் கொண்டே தேவன் அறிவிக்கிறார் என்பதை அறிவிக்கின்றது. “தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்." (2 பேது 1:21), "வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது". (2 தீமோ 3:16) “பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக் கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்கத் தேவ தூதரும் ஆசையாயிருக்கிறார்கள்." (I பேது 1:12) மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களெல்லாம், தேவனுடைய பரிசுத்த மனுஷர்களாகிய அபோஸ்தலர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு தீர்க்கதரிசனங்களை பேசினார்கள் என்று அறிவிக்கின்றது.
தூதன், அப்போஸ்தலன் என்றால் அனுப்பப்பட்டவன் என்ற பொருளையுடையதாயிருக்கிறது. "அனுப்பப்படாவிட்டால் எப்படிப் சங்கிப்பார்கள்?." (ரோம 10:15). வெளி 14:6-ம் வசனத்தில் வானத்தின் மத்தியில் பறந்து கொண்டிருக்கும் தூதனானபடியால் சீயோனிலிருந்து வந்த தூதன் என்று எண்ணுகிறார்கள். வெளி 12:7-ம் வானத்தில் வலு சர்ப்பத்தோடும் அவனைச் சேர்ந்த தூதர்களோடும் மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் யுத்தம் பண்ணி, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் ஜெயித்தார்கள்." (வெளி 12:11) என்று வாசிக்கிறோமே. மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் என்றால் வெளி 12:1-ம் வசனத்தின்படி மணவாட்டி சபையின் தலைமை அப்போஸ்தலன் மற்றும் அவரைச் சார்ந்த உடன் ஊழியர்களும் என்றே ஆவிக்குள் அறிகிறோம். இந்த ஊழியர்கள் நடுவானம் என்ற மத்திய ஆகாயத்திற்கு. ஆவியில் பூரணமடைந்து மகிமையின் மறுரூபத்தை அடைந்தவர்களாய் பறந்து போய், வலு சர்ப்பத்தோடு யுத்தம் பண்ணி ஜெயத்தை அடைகிறார்கள் என்பதை ஆவிக்குள் நிதானிக்க வேண்டும். வெளி 12:7.11, 6, 14 வசனங்களின்படியான சம்பவங்கள் அந்திக்கிறிஸ்துவின் முதல் 3½ ஆண்டின் இறுதியில் நடக்கிறது. வெளி 14:6,7 வசனங்களின்படியாக சம்பவங்கள் அந்திக்கிறிஸ்துவின் பின் 3½ ஆண்டான மகா உபத்திரவ காலத்தில் நடக்கிற சம்பவங்களாகும். பின் 3½ ஆண்டின் மீட்பின் ஊழியத்தைப் பற்றி வெளி 11:3-12 வசனங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வூழியத்தை வெளி 11:3-ம் வசனத்தின்படி எலியா. ஏனோக்கு என்பவர்களின் ஊழியமாயிருக்கிறது. மல் 4:5,6 வசனங்களின்படி எலியாவை “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புவேன்” என்கிறார் தேவனாகிய கர்த்தர்.
அந்திக்கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி ஆரம்பமாவதற்கு முன் எலியாவின் ஆவியைப் பெற்ற கிருபையின் கால ஊழியம் செய்யும்படியான ஒரு அப்போஸ்தலனை அனுப்பி, வலுசர்ப்பத்தை ஜெயிக்கும் மிகாவேலாகவும் (வெளி 12:7,11) வெளி 14:6 வசனங்களின்படி ஆவிக்குள் மறுரூபமடைந்து நடுவானத்திற்கு சென்று கடைசிக்கால நித்திய சுவிசேஷத்தை அறிவிக்கும் தூதனாகவும், ஊழியம் செய்யும் படியான திட்டத்தை தேவன் தன் ஆதீனத்தில் கொண்டுள்ளார் என்பதை ஆவிக்குள் நிதானிக்கிறோம்.
கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர்,
I. ஆசீர்வாதம்
"பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை"
மதுரை,
இந்தியா,
(தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805)
Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n.
#🙏ஆன்மீகம் #✝️இயேசுவே ஜீவன் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✝பைபிள் வசனங்கள்


