ShareChat
click to see wallet page
search
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று ஜூன் 29 1613 - ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கான, க்ளோப் தியேட்டர், தீவிபத்தில் தரைமட்டமானது. சேம்பர்லின் பிரபுவின் உதவியுடன் 1594இல் லார்ட் சேம்பர்லின்'ஸ் மென் என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பின்னாளில் கிங்'ஸ் மென் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடக நிறுவனத்திற்காகத்தான், பெரும்பாலான நாடகங்களை ஷேக்ஸ்பியர் எழுதினார். இந்த நிறுவனத்தின் சார்பில், ஷேக்ஸ்பியரும் 8இல் ஒரு பங்கு அளித்து, 1599இல் க்ளோப் தியேட்டர் கட்டப்பட்டது. 1576இல் தி தியேட்டர் என்ற பெயரில் அமைக்கப்பட்டதுதான் வண்டனின் முதல் நிரந்தர நாடக அரங்கு. நிலத்துக்கு, உரிமையாளரிடம் 21 வருட குத்தகை ஒப்பந்தம் செய்து இந்த அரங்கு உருவாக்கப்பட்டிருந்தாலும், குத்தகை முடிந்தபோது, அரங்குக்கு அவர் சொந்தம் கொண்டாடினார். 1598இன் கிறிஸ்துமசை அவர் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, நாடக நிறுவனத்தினர் மரத்தாலான அந்த முழுக் கட்டிடத்தையும் பிரித்துக் கொண்டுவந்துவிட்டனர். அந்த மரத்தைக் கொண்டுதான் க்ளோப் தியோட்டர் உருவாக்கப்பட்டது. மூன்று அடுக்குகளில், மூவாயிரம் பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கான இதில், பார்வையாளர் பகுதிக்கு கீற்றுக் கூரை அமைக்கப்பட்டிருந்தது. ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவையும், திறந்தவெளி அரங்கு என்பதால் வாண வேடிக்கைகளும்கூட நாடகங்களில் இடம்பெறும். அவ்வாறு ஒரு நாடகத்தில் குண்டு இல்லாமல் வெறும் வெடிமருந்தைக்கொண்டு பீரங்கி வெடிக்கும் காட்சியை நிகழ்த்தியபோது, கீற்றுக் கூரையில் தீப்பற்றி, அரங்கு முழுமையாக அழிந்தாலும், உயிர்ச்சேதம் இல்லையென்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டில் திரும்பக் கட்டப்பட்டாலும், திருச்சபையைச் சீர்திருத்திய ப்யூரிட்டன்கள் காலத்தில் அனைத்து அரங்குகளுடன் சேர்த்து 1642இல் இதுவும் மூடப்பட்டு, 1644இல் இடிக்கப்பட்டது. லண்டனிலேயே 1906இல் தொடங்கப்பட்ட ஹிக்'ஸ் தியேட்டர், 1909இல் க்ளோப் தியேட்டர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அப்பெயரில் 85 ஆண்டுகளுக்கு இயங்கியது. 1994இல் அது கீல்குட் தியேட்டர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஷேக்ஸ்பியரின் நினைவாக, இயன்றவரை பழைய க்ளோப் தியேட்டரின் வடிவத்திலேயே 'ஷேக்ஸ்பியரின் க்ளோப்' அரங்கு, 1997இல் கட்டப்பட்டது. ஷேக்ஸ்பியர் காலம் போலவே, மரத்தால் கட்டப்பட்டு, ஒளி விளக்குகள், ஒலிபெருக்கிகள் உள்ளிட்டவையின்றி, நாடகங்களை நடத்தும் இதுதான் லண்டனில் உள்ள ஒரே கீற்றுக்கூரைக் கட்டிடம்! இந்த, ஷேக்ஸ்பியரின் அரங்கைக் காண, ஆண்டுக்கு 2 லட்சம் பார்வையாளர்கள் வருகின்றனர்.