ShareChat
click to see wallet page
search
குருவாசகக்கோவை 14. பண்டிதத்திறன் 132. பண்டிதனென் றென்னைப் பலரழைப்ப தென்னோமெய்ப் பண்டிதனுக் குற்றகுறிப் பண்புதான் - பண்டுமுதல் ஆய்ந்தகலை யாவுமறி யாமையாய்ப் போகவவை ஆய்ந்தவனை யாயு மறிவு. பதச்சேதம்:- பண்டிதன் என்று என்னைப் பலர் அழைப்பது என்னோ மெய்ப் பண்டிதனுக்கு உற்ற குறிப் பண்பு தான் பண்டுமுதல் ஆய்ந்த கலை யாவும் அறியாமையாய்ப் போக அவை ஆய்ந்தவனை ஆயும் அறிவு. அரும்பதவுரை:- உற்ற - உள்ள; குறிப்பண்பு - அடையாளத் தன்மை; பண்டுமுதல் - வெகுகாலமாக; ஆயும் அறிவு - விசாரம் அல்லது விசாரத்தால் பெற்ற ஞானம். ஶ்ரீ சாதுஓம் சுவாமிகள் உரை:- ஆதிமுதல் (இப் பிறவியில் மட்டுமன்றி, பண்டைப் பிறவிகள் பலவற்றிலும்) கற்றறிந்த கலைகள் யாவும் வெறும் அறியாமையே யாவதை யுணர்ந்து, அவைகளைக் கற்றவனாகிய 'தான் யார்' என்று தன்னை விசாரித் தறியும் அறிவே உண்மையான, ஞான பண்டிதனுக்கு முக்கிய அறிகுறியான பண்பாகும். விளக்கக் குறிப்பு:- ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்ந்துவிட்டவன் பண்டிதன் அல்லன் என்கிறார் ஶ்ரீ பகவான்! அவைகளை அறிவின் அறிகுறியாகக் கருதாமல் அறியாமையின் அறிகுறியாகக் கண்டு கொள்வதே இங்கு வலியுறுத்தப்பட்டதாம். மக்கள் தன்னை (ஶ்ரீ பகவானை) பல்வேறு துறைகளில் (ஶ்ரீ பகவானது கவித்துவ மேன்மை, நூலாராய்ச்சி, ஞாபகசக்தி, மதிநுட்பம், தொழிற்றிறன், சித்திரம், வைத்தியம், பன்மொழிவன்மை, வாதத் திறன் இன்னவைகளைக் கண்டு கவர்ச்சியுற்று "பெரும் பண்டிதன்" என்று வியப்பதை மறுத்தலே நோக்கமாய்) பாண்டித்தியம் பெற்றிருப்பதாகக் கூறுவது தவறு என்கிறார். ஆனால் உண்மையான ஞானபண்டிதனும் அவரே என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டியது எவ்வாறெனின், அவர் ஆற்றிய ஆன்ம விசாரத்தால் எய்திய (தன்னறிவை) ஆன்ம ஞானத்தைப் பற்றியே என்க. தன்னை உடலாக அறியும் அறியாமையே அகந்தை. எனின் இவ்வறியாமையால் அறியப்பட்ட கலையறிவு அனைத்தும் அறியாமையாகத் தானே முடியும்! ஆதலால் தன்னைத் தவிர வேறு எதை யறிவதும் அறியாமையே. இவ்வாறு கண்டு கொள்பவனே உண்மையான பாண்டித்தியம் பெறத் தக்கவன். அதனால் அவன் தன்னை விசாரிக்க ஆரம்பிக்கிறான். இவ் விசாரமே மெய்ப் பண்டிதனுக்குரிய பண்பு அல்லது அடையாளம் எனப்பட்டது. அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
பகவான் ரமணர் - குருவாசகக் கோவை குருவாசகக் கோவை - ShareChat