ShareChat
click to see wallet page
search
பைபிள் வாசகங்கள்: மே 3 : முதல் வாசகம் தூய ஆவி நிறைந்த எழுவரைத் தெரிந்தெடுங்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 1-7 அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர். எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, “நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். நாங்களோ இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்” என்று கூறினர். திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர். கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக்கொண்டே சென்றது. குருக்களுள் பெருங்கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர். ஆண்டவரின் அருள்வாக்கு. மே 3 : பதிலுரைப் பாடல் திபா 33: 1-2. 4-5. 18-19 (பல்லவி: 22) பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! அல்லது: அல்லேலூயா. 1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். - பல்லவி 4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி 18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி மே 3 : இரண்டாம் வாசகம் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 4-9 அன்பிற்குரியவர்களே, உயிருள்ள கல்லாகிய ஆண்டவரை அணுகுங்கள். மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உயர் மதிப்புள்ள கல் அதுவே. நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக! இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக! ஏனெனில், “இதோ, சீயோனில் நான் ஒரு மூலைக்கல் நாட்டுகிறேன். அது தேர்ந்தெடுக்கப்பட்ட, விலையுயர்ந்த மூலைக்கல். அதில் நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார்” என்று மறைநூலில் காணக்கிடக்கிறது. நம்பிக்கை கொண்ட உங்களுக்கு அது உயர் மதிப்புள்ளதாக விளங்கும். நம்பிக்கை இல்லாதவர்களைப் பொறுத்தமட்டில், “கட்டுவோர் புறக்கணித்த கல்லே முதன்மையான மூலைக்கல்லாயிற்று.” மற்றும் அது, “இடறுதற் கல்லாகவும் தடுக்கி விழச்செய்யும் கற்பாறையாகவும்” இருக்கும். அவர்கள் வார்த்தையை ஏற்காததால் தடுக்கி விழுகிறார்கள்; இதற்கென்றே அவர்கள் குறிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி. ஆண்டவரின் அருள்வாக்கு. நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 14: 6 அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை, என்கிறார் ஆண்டவர், அல்லேலூயா. மே 3 : நற்செய்தி வாசகம் வழியும் உண்மையும் வாழ்வும் நானே. ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12 அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்’ என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்” என்றார். தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” என்றார். இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்” என்றார். அப்போது பிலிப்பு அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார். இயேசு அவரிடம் கூறியது: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால், என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” ஆண்டவரின் அருள்வாக்கு. --------------------------------------------------------------------- நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார் பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு (திப 6: 1-7; 1 பேது 2: 4-9; யோவா 14: 1-12) நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார் ஹட்சன் டெய்லரின் நம்பிக்கை சீனாவிற்குக் கடவுளின் வார்த்தையை முதன்முதலில் கொண்டு சென்றவர் ஹட்சன் டெய்லர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரான இவர், சீனாவிற்கு நற்செய்தி அறிவிக்கச் செல்வதற்கு முன்பாக ஒரு மருத்துவரிடம் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கப்பலில் இவர் சீனாவிற்குச் செல்வதற்கான நாள் நெருங்கிக்கொண்டே வந்தது; இவரது கையில் சொற்ப அளவில்தான் பணம் இருந்தது. அந்தப் பணத்தையும் ஒருநாள் இவர் தன் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பி வரும்போது, ஒரு குடும்பம் பணமின்றி மிகவும் துன்பப்படுவதைப் பார்த்துவிட்டு, அந்தக் குடும்பத்திடமே கொடுத்துவிட்டார். ‘கையில் இருந்த பணமும் போய்விட்டதே! இப்போது சீனாவிற்கு எப்படிச் செல்வது?’ என்று இவர் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கவில்லை; மாறாகக் கடவுள் தனக்கு வேண்டிய பணத்தை நிச்சயம் தரும் என்ற நம்பிக்கையோடு இருந்தார். இவர் சீனாவிற்குச் செல்வதற்கு முந்தைய நாள், யாரிடம் இவர் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாரோ, அந்த மருத்துவர் இவரை அழைத்து, “இதுவரைக்கும் நான் உனக்குச் சரியாகவே ஊதியம் கொடுத்ததில்லை. காரணம் என்னிடம் சிகிச்சைக்காக அவ்வளவாக யாரும் வருவதில்லை. இது உனக்கு நன்றாகத் தெரியும். சிறிது நேரத்திற்கு முன்பாக என்னிடம் சிகிச்சை பெற்றுவந்த செல்வந்தர் ஒருவர் ஒரு பெரிய தொகையைக் கட்டணமாக என்னிடம் கொடுத்துவிட்டுப் போயிருக்கின்றார். அந்தப் பணத்தை ஊதியமாக நீயே வைத்துக்கொள்” என்று சொல்லி. பணத்தை இவரிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டதும் இவர், ‘கடவுளை நான் நம்பியிருந்தேன்; அவர் என்னைக் கைவிடவில்லை’ என்று அவருக்கு நன்றி சொன்னார். மிகப்பெரிய நற்செய்திப் பணியாளரான ஹட்சன் டெய்லரைப் போன்று, நாம் கடவுளை நம்பியிருக்கும்போது அவர் நம்மைக் கைவிடுவதில்லை அதனால் நாம் எதற்கும் பதற்றமடையத் தேவையே இல்லை. பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை, “நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார்” என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம். நம்பிக்கையளிக்கும் இயேசு பொதுவாக, புதிதாக ஒரு பயணத்தை, திட்டத்தைக் கையிலெடுக்கும் ஒருவரை அவரது நண்பர்களும் நல விரும்பிகளும் நம்பிக்கை நிறைந்த சொற்களால் திடப்படுத்துவதுண்டு, தேற்றுவதுண்டு; அவர் யாரையும் தேற்றுவது கிடையாது. ஆனால், இன்றைய நற்செய்தியில் இதற்கு நேர் எதிராக நடக்கின்றது. இயேசு யூதர்கள் கையில் ஒப்புவிக்கப்பட்டுக் கொல்லப்பட்டவிருந்தார். அதனால் அவரது சீடர்கள்தான் அவரைத் தேற்றியிருக்க வேண்டும் அல்லது நம்பிக்கையூட்டியிருக்க வேண்டும். ஆனால், இயேசு தம் சீடர்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றார். காரணம் அவர்கள் தங்கள் தலைவரைவிட்டுப் பிரிந்து என்ன செய்யப் போகிறோமோ? என்று உள்ளம் கலங்கி இருந்தார்கள். அதனால் இயேசு அவர்களிடம், “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடம் நம்பிக்கை கொள்ளுகள்” என்கின்றார். பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய இரண்டாம் வாசகம் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகின்றது. இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறும், “இதோ சீயோனில் நான் ஒரு மூலைக்கல் நாட்டுகின்றேன். அது தேர்ந்தெடுக்கப்பட்ட, விலையுயர்ந்த மூலைக்கல். அதில் நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார்” (எசா 28: 16) என்ற இறைவார்த்தையை மேற்கோள் காட்டிப் பேசும் பேதுரு, “நம்பிக்கை கொண்ட உங்களுக்கு அது – இயேசு - உயிர் மதிப்புள்ளதாக விளங்கும்” என்கிறார். நற்செய்தியில் இயேசு சொல்வதுபோல், பாறையின்மீது கட்டப்பட்ட வீடு உறுதியாய் இருக்கும். அதற்கேற்ப எவர் ஒருவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்கின்றாரோ, அவர் எதற்கும் கலங்கிடத் தேவையில்லை. நம்பிக்கையினால் எதையும் எதிர்கொள்ளலாம் கிறிஸ்தவம் வேகமாக வளர்ந்தபோது, ஒருசில பிரச்சனைகளும் தலைதூக்கத் தொடங்கின. அதில் முதன்மையான ஒரு பிரச்சனை விருந்துகளில் கிரேக்க மொழி பேசும் கைம்பெண்கள் சரியாகக் கவனிக்கப்படவில்லை என்பதாகும். கிரேக்க மொழி பேசிய கைம்பெண் அடிப்படையில் யூதர்களாய் இருந்தாலும், அவர்கள் பாலஸ்தினத்திற்கு வெளியே, சிதறி வாழ்ந்ததால், அவர்களுக்கு அப்படியொரு நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த திருத்தூதர்கள், இப்பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்று பதற்றமடையவில்லை. ஏனெனில், அவர்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதனால் அவர்கள் மிகவும் விவேகத்தோடு நற்சான்று பெற்ற, தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்த எழுவரைத் திருத்தொண்டர்களாக நியமித்து, பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள். பொதுவாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் இதுபோன்ற பிரச்சனைகளும் இடர்களும் நமக்கு வரலாம். அப்போது நாம் அவற்றை எப்படி எதிர்கொள்வது எனக் கலங்கித் தவிக்கவேண்டிய தேவையில்லை. மாறாக, நாம் உயிர்மதிப்புள்ள ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தால், எதற்கும் பதற்றமடையத் தேவையில்லை. கடவுளின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்போம் ஆண்டவர் இயேசு கலங்கித் தவிக்கும் நமக்கு நம்பிக்கை அளிக்கின்றார் என்றால், நாம் சந்திக்கும் பிரச்சனைகளை விவேகத்தோடு எதிர்கொள்வதற்கான ஆற்றலை அவர் அளிக்கின்றார் எனில், இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 33 இல் சொல்லப்படுவது போல், அவர் நம்மீது இரக்கம் காட்டுகின்றார் எனில், அதற்குக் கைம்மாறாக நாம் அவரது மேன்மைமிக்க செயல்களை அறிவிக்க வேண்டும். அது நமது கடமையும், நம்மீது சுமத்தப்பட்ட பொறுப்பும் கூட. இன்றைய இரண்டாம் வாசகத்தின் இறுதியில் பேதுரு, “உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி” என்கின்றார். பேதுருவும் சரி, ஏனைய திருத்தூதர்களும் சரி, இயேசு கைது செய்யப்பட்டுச் சிறையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டபோது, அவரை விட்டு ஓடிப்போனார்கள்; ஆனாலும் இயேசு அவர்களை மன்னித்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்டினார். இதனால் அவர்கள் இயேசுவைப் பற்றி எல்லாருக்கும் துணிவுடன் எடுத்துரைத்தார்கள். இயேசுவின் சீடர்களைப் போன்று நாமும் அவரிடமிருந்து ஏராளமான நன்மைகளை அடைந்திருக்கலாம். அதற்குக் கைம்மாறாக, நாம் அவரது மேன்மை மிக்க செயல்களை எல்லாருக்கும் அறிவிக்கவேண்டும். அதுவே நாம் இயேசுவுக்குச் செய்யும் மிகப்பெரிய கைம்மாறாக இருக்கும். ஆகையால், நம்மீது பேரன்பு காட்டி, நமக்கு நம்பிக்கையூட்டி இருக்கும் இயேசுவைப் பற்றி எல்லாருக்கும் எடுத்துரைத்து, அவரது உண்மையான சீடர்களாய்த் திகழ்வோம். சிந்தனைக்கு “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” (மாற் 5:19) என்று கெரசேனர் பகுதியில் பேய்பிடித்திருந்த மனிதரை நலமாக்கிய பின் இயேசு அவரிடம் கூறுவார். கடவுள் நம்மீதும் இரக்கம் கொண்டு, நமக்குக் ஏராளமான நன்மைகளைச் செய்த்திருப்பார். அதனால் நாம் அவற்றை மற்றவருக்கு அறிவித்து, அவர்களும் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்