#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 26.05.2026
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
திருவாசகம் 2
ஏகமொரு பரமானதும் இம்மென்றொரு வாயுவில் சத்து வளைந்ததும் சத்தில் சிவம் தோன்றியும் சிவத்தில் சத்தி தோன்றியும் சத்தியில் நாதம் தோன்றியும் நாதத்தில் விஷ்ணு தேன்றியும் ருத்திரர் மயேசுரர் உலகம் தோன்றியும் உலகில் அண்டபிண்டம் தோன்றியும் பிண்டத்தில் குறோணி அசுரன் தோன்றியும் குறோணி வானலோகம் விழுங்கவும்
.
விளக்கம்
==========
ஒன்றாகவும், எல்லாமாகவும் இருக்கின்றது பரம் ஆகும். அவ்வாறிருக்க இம் என்னும் ஓசையோடு உருவாகிய ஓசைக் காற்றிலிருந்து ஒருவகைக் சக்தி உருவாகியது. அந்தச் சக்தியிலிருந்து சிவம் தோன்றியும், சிவத்தில் சக்தியும், அதில் நாதமும் தோன்றியது. நாதத்திலிருந்து விஷ்ணுவும், விஷ்ணுவிலிருந்து உருத்திரர், மகேசுவரர், உலகம் அண்டம் பிண்டங்கள் அத்தனையும் தோன்றன. அவ்வாறு தோன்றிய பிண்டத்திலிருந்து முதலில் குறோணி என்னும் அசுரன் தோன்றுகிறான். அக்குறோணி தெய்வலோகத்தை விழுங்குகிறான்.
.
.
அகிலம்
========
கோபத்தால் விஷ்ணு சென்று குறோணியைத் துண்டாறாய் வெட்டி உலகில் தள்ளவும், துண்டமென்றில் குண்டோமசாலி பிறக்கவும் சுகசோபன மண்டபமலைய விளித்ததும் திருமருகரது கேட்கவும் தேவாதிகளை நாங்கிலாக்கி வரையானதைத் தூண்டிலாக்கிக் கடலை ஓடையாக்கிக் காயாம்பு வண்ணர் ஓடமேறியே கறைக்கண்டர் ஓணிதள்ளவே கன்னியிலே தூண்டலுமிட்டு அக்குண்டோமசாலியையும் வதைத்து மறுயுகம் தோன்றியே
.
விளக்கம்
==========
இதைக் கண்ட விஷ்ணு கோபம் கொண்டு மிகுந்த சக்தி பெற்றுக் குறோணியை ஆறு துண்டுகளாக வெட்டிப் பூவுலகில் தள்ளுகிறார். அதோடு நீடியயுகம் முடிகிறது.
.
அடுத்துச் சதுர்யுகம் தோற்றுவிக்கப்படுகிறது. இவ்வுலகத்தில் ஆறு துண்டுகளில் ஒரு துண்டிலிருந்து குண்டோமசாலி என்னும் அசுரன் தோன்றுகிறான். இவ்வுலகில் பிறந்த அவன் தெய்வலோகம் முழுதும் கேட்கும்படி முழங்கினான். அதைத் திருமால் செவியுற்று அவனைக் கொல்ல தேவர்களை நாங்கூழ் புழுக்கள் ஆக்கி, மலைகளைத் தூண்டில் ஆக்கி, ரிக், யஜூர், சாம அதர்வண வேதங்களை தூண்டில் கயிறு ஆக்கி, வாயு பகவானைத் தோணி ஆக்கி, வருண பகவானை மிதப்பு ஆக்கி கடலை ஓடை ஆக்கி காயாம்பூ வண்ணனாகிய திருமால் தோணியினுள் ஏறுகின்றார். கறைக்கண்டர் ஆகிய சிவன் ஓடத்தைத் தள்ளுகிறார்.
.
குண்டோமசாலி கிடந்த கன்னி ஆற்றிலே தூண்டல் இட்டு அவனைக் கொன்று, நெடியயுகம் தோற்றுவிக்கப்படுகிறது.
.
.
அகிலம்
========
தில்லைமலாலன் மல்லோசி வாகனென்ற இருபேருடைய அநியாயம் பொறுக்காமலே அவனிருவரையும் சங்காரம் செய்து அடுத்த யுகம் தோன்றியே, சூரன் சிங்கமுகா சூரன் செய்த அநியாயம் பொறுக்காமலே ஆதித்திருநெடுமால் ஆறுமுகக் கடவுளென நாமமுங் கூறியே அவனையும் சங்காரஞ் செய்து அவ்வுகத்திலே பிறந்த அசுரன் இரணியனையும் வதைத்து அந்த யுகமும் அழித்து அடுத்த யுகம் தோன்றியே,
.
விளக்கம்
==========
இங்குத் தில்லைமல்லாலனும் மல்லோசி வாகனனும் பிறந்து அநியாயம் செய்யவே, அவர்களையும் கொன்று, அடுத்த யுகத்தைத் தோற்றறுவிக்கிறார். இந்த யுகம் கிரேதாயுகம் எனப்படுகிறது. இந்த யுகத்தில் சூரபற்பன் என்னும் சூரனும் சிங்கமுகா சூரனும் தோன்றுகின்றனர். இவர்களும் இதற்கு முன் வந்த அசுரர்கள் செய்த கொடுமைகளையே செய்து வந்தனர். இவர்கள் அநியாயம் பொறுக்க முடியாமல் ஆறுமுகக் கடவுள் என்னும் பெயரோடு அவதாரம் எடுத்து அந்த அசுரனையும் நாராயணர் அழிக்கிறார். அதே யுகத்தில் பிறந்த இரணியன் என்னும் அசுரனையும் நரசிம்ம அவதாரத்தோடு தோன்றி வதைத்து ஒழிக்கிறார். அவன் கொடுமையும் ஓய்ந்திடவே அந்த யுகத்தையும் அழிக்கிறார்.
.
.
அகிலம்
========
அரக்கன் இராவணசங்காரமுஞ் செய்து சீதாப்பிராட்டியினுடைய சிறையையு மீட்டித் தென்னிலங்காபுரி அரக்கரையும் கொன்று அக்கிளையொழிய அக்குலமும் அறுத்து அடுத்தயுகம் தோன்றியே; பஞ்சவர்க்கு பகாரியாகியே பகைத்தத் துரியோதனனையும் வதைத்துப் பஞ்சவர்க்குக் குருநாடு பட்டமுஞ் சூட்டியே அரசாள வைத்து கலிவருவானெனக் காற்று வீசினதைக் காதிலே கேட்டுக் கானக வழிநடந்து பஞ்சவர்களுடைய பாரப்பெலன்களையும் வாங்கிப் பச்சை மாலை சுமந்திருந்த பயமாயக் கூட்டைப் பர்வதாமலை யுச்சியிலே கிடத்தி,
.
விளக்கம்
==========
அடுத்த திரேதாயுகத்தில் இராவணை அழித்துச் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்டு, அவ்வசுரக் கிளைகளையும் ஒழித்து அவ்வுகத்தை முடிக்கிறார்.
.
துவாபரயுகம் பிறக்கிறது. இந்த யுகத்தில் நாரணர் பஞ்ச பாண்டவர்களுக்கு உதவி புரியும் நாயகன் கண்ணணாகத் தோன்றுகிறார். பஞ்சவரும் எதியான துரியோதனனை வதைத்து அழிக்கிறார். பஞ்ச பாண்டவருக்குப் பட்டம் சூட்டி அரசாள வைக்கிறார். அச்சமயத்தில் கலியின் தோற்றத்தைச் செய்தி மூலமாக அறிந்து காட்டின் வழியாகத் தம்முடைய அடுத்த செயலுக்காக நடந்து கொண்டிருக்கிறார். கலியின் பிறப்பால் பாண்டவர்களுடைய பலங்கள் எல்லாம் கண்ணனால் வாங்கப்படுகிறது. பிறகு அவர் இதுவரை சுமந்து வந்த பொனகூட்டுச் சடலத்தைப் பர்வதாமலை உச்சியிலே கிடத்துகிறார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.


