Barakath Ali
548 views 4 days ago
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை நடந்த தினம் இன்று! 1990 ஆகஸ்ட் 3-ஆம் தேதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு அருகிலுள்ள காத்தான்குடியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான ஆயுதத் தாக்குதலை மறந்துவிட முடியாது. காத்தான்குடியில் உள்ள மீரா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஹுசைனிய்யா பள்ளிவாசல் ஆகிய இரண்டு வழிபாட்டுத் தலங்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது 30 பேர் கொண்ட ஆயுதமேந்திய குழு பள்ளிவாசல்களுக்குள் புகுந்து, இயந்திரத் துப்பாக்கிகளாலும் கைக்குண்டுகளாலும் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதில் சிறுவர்கள், முதியவர்கள் உட்பட 147 முஸ்லிம்கள் துள்ளத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்டார்கள். 70- க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தாக்குதலை விடுதலைப் புலிகள் அமைப்பினரே மேற்கொண்டதாக இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களும் மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டினர். புலிகள் இயக்கம் இதனை மறுத்தாலும் பின்னர் அதன் அரசியல் பிரிவுத் தலைவர்கள் ’தமிழ்-முஸ்லிம் உறவில் ஏற்பட்ட பெரிய தவறு’’ என இந்தப் படுகொலையைக் குறிப்பிட்டனர். இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பது உலகிற்குத் தெரிந்திருந்தாலும், உள்நாட்டுப் போர்ச் சூழல் மற்றும் அரசியல் காரணங்களால் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவே இல்லை. 35 ஆண்டுகளைக் கடந்தும், இந்தக் கொடூரக் குற்றத்திற்கு எந்தவொரு தரப்பும் சட்டப்பூர்வமாகப் பொறுப்பாக்கப்படவோ முறையான விசாரணைகள் நடத்தப்பட்டுப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை என்பதுதான் பெரும் துயரம். பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச நீதிமன்றங்களையோ அல்லது சுயாதீன போர்க்குற்ற விசாரணைகளையோ கோரி வந்தாலும், அதற்கான முறையான விசாரணைகள் இன்றுவரை முன்னெடுக்கப்படவில்லை. காத்தான்குடி படுகொலைகளின் நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காத்தான்குடியில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசல் இன்றும் அந்தத் துப்பாக்கிச் சூட்டு வடுக்களுடனேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் அந்தத் துயரமான வரலாற்றையும், உயிரிழந்தவர்களின் நினைவையும் அடுத்த தலைமுறையினர் மறந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த வடுக்களை அப்படியே வைத்துள்ளனர். பள்ளிவாசலின் உட்புறச் சுவர்கள், தூண்கள் மற்றும் ஜன்னல் நிலைகளில் பாய்ந்த தோட்டாக்கள் ஏற்படுத்திய துளைகள் இன்றும் அப்படியே இருக்கின்றன. படுகொலை செய்யப்பட்ட 147 பேரின் பெயர்கள் அடங்கிய பெரிய நினைவுப் பலகை ஒன்று பள்ளிவாசல் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. #தமிழ்நாடு அரசியல் #அரசியல் #📺அரசியல் 360🔴 ##🗞️வரலாற்றில் இதே நாள் 😲
12 likes
13 shares

More like this