#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # வேலை கிடைக்க திருக்கொள்ளிக்காடு சென்று வழிபடுங்கள்
உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற வேலையை அருள்வதற்கு ஒரு தலம் இருக்கிறது. அதுவே திருக்கொள்ளிக்காடு. அக்னிபுரி, அக்னி க்ஷேத்திரம் என்றெல்லாம் போற்றப்படும் இந்தத் தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம்.
இங்கு சனீஸ்வரர், தனிச்சந்நிதியில் உள்ளார். லட்சுமி கடாட்சத்தை அள்ளித் தருபவராக, விரும்பிய வேலையைத் தரும் கிரகமாகவும் இவர் அருள்கிறார். இவருக்கு அருகிலேயே திருமகளும் சந்நிதி கொண்டிருக்கிறார்.
இது, பொங்கு சனீஸ்வர க்ஷேத்திரம் எனப் போற்றப்படுகிறது.
இங்கே சனீஸ்வரன் சகல செல்வங்களுக்கும் அதிபதியாக இருந்து, குபேர சம்பத்துகளைத் தருபவனாக, ஆயுளுக்கும் ஆரோக்கியத்துக்கும் அதிபதியாக இருந்து அருள்பாலிக்கிறார் என்பது விசேஷம்.
சனீஸ்வரன் வேண்டிய பணி, இங்கு கிடைத்ததால் வேண்டிய வேலை அளிக்கும் தயாபரனாக ஈசனும் இங்கே எழுந்தருளி இருக்கிறார். உற்சவர் திருப்பெயர் தீவண்ணநாதர். வன்னி, கொன்றை, ஊமத்தை தலவிருட்சங்களாக இருக்கின்றன.
காவிரித் தென்கரைத் தேவாரத்தலங்களுள் 115-வது தலம். மக்கள் வழக்கில் இது கள்ளிக்காடு என்று வழங்கப்படுகிறது. அக்கினி வழிபட்ட தலமாதலின் கொள்ளிக்காடு என்று பெயர் பெற்றது.
இத்தலத் தேவாரத்தில் இறைவன் யானையை உரித்த செயல் குறிப்பிடப்படுவதால், ஒரு காலத்தில் இக்கோயிலை கரியுரித்த நாயனார் கோயில் என்றும் அழைத்ததாகத் திருமுறைகள் கூறுகின்றன.
முற்கால சோழ மன்னன் ஒருவனுக்கு சனி தோஷம் விலக்கிய தலம் என்பதால் இது 2000 ஆண்டுகளுக்கு முந்தையது எனப்படுகிறது.
கொள்ளிக்காடர் என்று பதிகத்தில் இங்குள்ள ஈசனை ஞானசம்பந்தர் அழைக்கிறார். தீவண்ணநாதர் என்று அழகிய தமிழிலும் ஈசனுக்கு மற்றொரு பெயர் உள்ளது. இங்குள்ள அம்பிகையை பஞ்சின் மெல்லடியாள் என்று ஞானசம்பந்தர் அழைக்கிறார். சனியால் பாதிக்கப்பட்டு நாடிழந்து, மனைவியை இழந்த நளன் இங்கு வந்து வழிபட்டான் என்றும் புராணம் கூறுகிறது.
மேலும், இங்குள்ள முருகப்பெருமான் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்த்தபடி அமைந்துள்ள கோலம் சிறப்பானது.
அக்னிப் பிழம்பாக ஈசன் சனீஸ்வரருக்குக் காட்சி தந்து அருளியதால் இங்குள்ள ஈசன் அக்னீஸ்வரர் என்றானார். சதுரவடிவக் கருவறையில் லிங்க வடிவில் சுயம்புவாக ஈசன் அருளுகிறார்.
கருவறை விமானத்தின் வெளிப்புற தேவகோஷ்டங்களில் நான்முகன், ஆலமர்ச் செல்வன், அண்ணாமலையாரும் உள்ளனர்.
அர்த்தமண்டபக் கோஷ்டங்களில் கணபதி இருக்கிறார். பைரவர், நவகிரகம், மகாலட்சுமி, சனீஸ்வரன் ஆகியோருக்குத் தனிச்சந்நிதிகள் உள்ளன. முக மண்டபத்தில் நந்தி, நால்வர் பெருமக்கள் சிற்பங்களும் உள்ளன.
அம்மையின் திருநாமம், ஸ்ரீமிருதுபாத நாயகி. ஆம், பஞ்சின் மெல்லடியாள் என்ற அழகிய திருப்பெயரைக் கொண்டவள்.
கண்ட சனி, ஜன்ம சனி, மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி, அந்திமச் சனி என இருக்குமிடத்துக்கு ஏற்ப சனி வகைகள் அநேகம்.
இந்தத் தலத்தில் பொங்கு சனீஸ்வரராக, கையில் கலப்பையுடன் திருக்காட்சி தந்தருள்கிறார். காகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, அபய வரத முத்திரை எனக் காட்சி தருகிறார் பொங்கு சனீஸ்வரர்.
பொங்கு சனியை இங்கு வணங்க சகலமும் பொங்கிப் பெருகும். கலப்பை என்பது விளைச்சலையும் பெருகுவதையும் குறிக்கும். எனவே இங்கு சனியை வணங்க உங்கள் பொருளாதாரத் தேவைகள் யாவும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இங்கே வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி, பஞ்சினும் மெல்லடியாள் சமேத ஸ்ரீஅக்னீஸ்வரரையும் ஸ்ரீசனி பகவானையும் வழிபட நிச்சயம் வேண்டிய வேலை, பதவி உயர்வுகள் கிட்டும். சம்பள உயர்வு, கிரக தோஷங்களில் இருந்து விடுதலை யாவும் கிட்டும் என்கிறார்கள் ஊர் மக்கள்.
மேலும், இங்கு மட்டுமே சிறப்பாக பைரவரும் பொங்கு சனீஸ்வரரும் எதிரெதிர் சந்நிதியில் இருந்து பார்த்துக் கொள்கின்றனர். இதனால் கால பைரவரும் எதிரிகள் தொல்லை, வம்பு வழக்குகள் போன்ற பிரச்னைகளையும் தீர்த்து, மன தைரியத்துடன் வாழ்வதற்கு அருள்கிறார் எனப்படுகிறது. ரிஷப ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாக இது இருந்து வருகிறது.
அமைவிடம்:
திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், 16 கி.மீ. தொலைவில் உள்ளது பாங்கல் நால்ரோடு. அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில், செல்லும் சாலையில், 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கொள்ளிக்காடு திருத்தலம். திருவாரூரிலிருந்து பஸ் வசதி குறைவு. கார் மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.


