*🌹அர்ச். கன்னி மரியாயின் மீது பக்திகொள்வதன் அவசியம்..*
பரமபிதா மானிடரை நேசித்த அன்பினால் தம் ஏககுமாரனை உலகத்திற்கெனக் கொடுத்து விட்டார். ஆதாமிற்குப் பின் அத்தனை பிதாப்பிதாக்களும் எத்தனையோ பெருமூச்சுவிட்டு இரட்சகரின் வருகைக்காக மன்றாடி வந்தார்கள்.
மீட்பர் சிங்காரத் தோப்பில் முன்னறிவிக்கப்பட்டதிலிருந்து 4000 ஆண்டுகளாக தீர்க்கத்தரிசிகளும், கடவுளுக்கு ஏற்புடையவர்களாய் நடந்த பல பழைய ஏற்பாட்டின் புனிதர்களும் “ஆண்டவரே வாரும்" என்று ஆயிரம் மன்றாட்டுக்கள் செய்து வந்தார்கள்.
சர்வேசுரன் விரும்புகிறார். மக்கள் மன்றாடுகிறார்கள்.
ஆயினும் மீட்பரை உலகிற்கு அனுப்ப முடியவில்லை. காரணம், "தேவ குமாரனைக் கடவுளின் கரத்திலிருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ள உலகம் தகுதி பெற்றிருக்கவில்லை” என்று அர்ச். அகுஸ்தினார் உரைக்கிறார்.
நோவேயின் பேழையிலிருந்து புறப்பட்ட புறா, "பூமியின் மீதெங்கும் ஜலம் வியாபித்திருந்ததால் கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல் திரும்பவும் பெட்டகத்திற்கு வந்தது” (ஆதி 8:9) போல், உலகமெங்கும் பாவப் பிரளயமாயிருந்ததால் தேவ புறாவான சுதன் பூமியில் காலூன்ற இடம் காணப்படவில்லை.
ஆனால், தன் புண்ணியங்களின் உயர்வாலும், தன் வேண்டுதல்களின் வலிமையாலும் தேவ குமாரனைப் பெற்றுக் கொள்ளக் கூடிய பூமியாக மாமரியை இறைவன் தயாரித்தார். ஜென்ம கர்ம பாவம் எதுவும் இல்லாமல் முழுவதும் பரிசுத்தமாய் ஆங்காரத்தின் நிழல் முதலாய் இல்லாமல் முழுவதும் தாழ்ச்சியின் உருவமாய், தான் உற்பவித்த கணத்திலேயே சகல சம்மனசுக்களுக்கும், அர்ச்சிஷ்டவர்களுக்கும் மேலாக சகல புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த இந்த நாசரேத் கன்னிகையைத் தான் தன் குமாரன் தங்கும் புதிய சிங்காரத் தோப்பாகக் கடவுள் திட்டம் செய்திருந்தார்.
இத்திட்டத்தின் காலம் நிறைவேறிய போது தம் ஏக குமாரனை அந்தக் கன்னிகையின் வழியாகவே கடவுள் உலகிற்குக் கொடுத்தார்.
தம் ஏக திரவியத்தை இறைவன் நேரடியாக உலகத்திடம் கொடுக்காமல் மரியாயிடம் அவரைக் கொடுத்து அவர்கள் வழியாக உலகம் அவரைப் பெற்றுக் கொள்ளச் செய்தார்.
தேவசுதன் மனிதனானார் என்றால் அது மாதாவிடத்தில் தான். தேவ குமாரன் உலகத்தில் வந்தாரென்றால் அது மாதாவின் வழியாகத் தான்.
மாதாவின் வழியாக சேசு வந்தார் என்பது உண்மைதான்: ஆயினும் அப்படி என்ன பெருஞ்சிறப்பு உள்ளது? யாராவது ஒரு தாய் உலகில் அவருக்குத் தேவைப்பட்டது. அது மரியாளாக இருந்தது. அவ்வளவு தானே நமக்கு வேண்டியவர் சேசுகிறீஸ்து தானே? என்று கேட்பவர்கள் இன்னும் சிலர் இருக்கிறார்கள் !.
இப்படிக் கேட்டது முழு உண்மையை உணராததாகும். மாதா ஏதோ தற்செயலாய் கடவுளால் தெரிந்தெடுக்கப்படவில்லை நித்திய நித்தியமாக அவர்கள் இறைவனின் தாயாக தெரிந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
மேலும் முழு மனச் சுயாதீன சம்மதத்தோடு மாதா கடவுளின் தாய்மையை ஏற்று கடவுளின் சித்தத்தோடு முழுவதும் ஒத்துழைத்தார்கள்.
இதனாலேயே சேசு கிறீஸ்துவை மரியாயிடம் உருவாக்கிய கடவுள், அப்படிச் செய்யும்முன் தம் அணிகளில் முதன்மை வாய்ந்த ஒரு தூதரை அனுப்பி மரியாயின் சம்மதத்தைக் கேட்டார்! மாதா தன் முழு சுயாதீன விருப்பத்தைத் தெரிவித்தபிறகே அவரை அவர்களிடம் உருவாக்கினார். தேவனின் தாய்மை மாதாவிடம் வெறுமனே கொடுக்கப்படவில்லை. மாதா தன் முழு விருப்ப ஒத்துழைப்புடனேயே தேவனின் தாயானார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.
பரிசுத்த திருக்குடும்பமே எங்களை புண்ணிய வாழ்வு வாழ வழிநடத்துங்கள்
ஆமென்.
நன்றி - www.catholictamil.com #✝️இயேசுவே ஜீவன்


