*தினம் ஒரு தேவாரம்* *பாடல் பெற்ற* *சிவத்தலங்கள்*.
*புதிய தொடர் பதிவு*
*தேவாரம் பாடல் பெற்ற* *சிவ ஸ்தலங்கள்*
தொடர் பதிவில் இன்று காவிரி தென்கரை தலங்களில்
ஐந்தாவதாக(5)
பார்க்க இருப்பது
*பஞ்சவர்ணேஸ்வரர்* *திருக்கோவில்* *திருமூக்கிச்சரம்*
சிவஸ்தலம் பெயர்:
திருமூக்கிச்சரம் (உறையூர்)
இறைவன் பெயர்:
பஞ்சவர்ணேஸ்வரர், தான்தோன்றீஸ்வரர்
இறைவி பெயர்:
காந்திமதி அம்மை, குங்குமவல்லி
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்துக்கான பதிகம்
1)சாந்தம்வெண்ணீ றெனப்பூசி
காவிரிக் கரையில் இருந்து சுமார்
1 கி.மீ. தொலவில், திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறையூர் என்னும் சிவஸ்தலம் 8-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட ஒரு மிகப் பழமையான சிவாலயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.
கி.பி. 885-ம் ஆண்டு கல்வெட்டிலிருந்து இக்கோவிலில் பூஜைகள் சிறப்பாக நடைபெற தங்க நாணயங்கள் தானமாக உறையூர் கிராம சபைக்கு கொடுக்கபட்டதை அறியமுடிகிறது.
திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் ஆலயத்திலுள்ள கல்வெட்டுகளும் இரண்டாம் வரகுண பாண்டிய மன்னன் உறையூர் கோவிலுக்கு செய்த தான தருமங்கள் பற்றிய விபரங்களைக் குறிக்கின்றன.
தல வரலாறு:
உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னனின் மனைவி காந்திமதி ஒரு சிறந்த சிவபக்தை.
தினந்தோறும் திருச்சிராப்பள்ளி மலைக்குச் சென்று தாயுமானவரை
வழிபட்டு வந்தாள்.
அவள் பிள்ளைப்பேறு அடைந்த போதும் தவறாமல் வழிபாடு செய்து வந்தாள்.
ஒருநாள் உறையூரில் இருந்து சிராப்பள்ளி சென்று கொண்டிருந்தபோது வெய்யில் கொடுமை தாளாமல் வழியில் மயங்கி விழுந்தாள்.
தனது இறை வழிபாடு தடைபட்டு விட்டதே
என்று மிகவும் மனம் வருந்தினாள்.
காந்திமதியின் மனவருத்தத்தைப் போக்க விரும்பிய இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்குக் காட்சி தந்தார்.
இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர்
என்ற பெயர் பெற்றார்.
மற்றுமொரு தல வரலாறும் இத்தலத்திற்கு உண்டு.
சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்ததது.
யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர்.
சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான்.
சிவபெருமானும் கருணை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அக்கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித் தாக்கியது.
கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது.
கோழியும் அங்கே வந்தமர்ந்தது.
கோழியின் வீரச் செயலைக் கண்ட மன்னன் உறையூர் தலத்தின் மகிமையை உணர்ந்து தான் வணங்கும் சிவபெருமானுக்கு இத்தலத்தில் ஆலயம் ஒன்று எழுப்பினான்.
இத்தலமும் கோழியூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது.
இத்தல வரலாற்றை நினைவு படுத்தும் வகையில் மூலவர் கருவறை வெளிச் சுவற்றில் வலதுபுறம் யானையின் மதத்தை கோழி அடக்கும் புடைப்புச் சிற்பம் ஒன்றைக் காணலாம்
கோவில் அமைப்பு:
கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது.
கல் மண்டபத்தைத் தாண்டி ஆலயத்தில்
உள் நுழைந்தவுடன் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நந்தியைக் காணலாம்.
கோவிலில் மகாமண்டபம், அர்த்தமண்டபம் கடந்து சென்றால் மூலவர் கருவறை இருக்கிறது.
இங்கு சிவபெருமான் உதங்கமுனிவருக்கு
ஐந்து வர்ணமுடைய திருக்கோலத்தை ஐந்து சாமங்களில் காட்டியருளினார்.
காலையில் ரத்னலிங்கமாகவும், உச்சிக் காலத்தில் ஸ்படிக லிங்கமாகவும், மாலையில் ஸ்வர்ண லிங்கமாகவும், இரவில் வைர லிங்கமாகவும், அர்த்த சாமத்தில் சித்திர லிங்கமாகவும் காட்சி அளித்ததால் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்படுகிறார்.
இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் சந்நிதிக்கு நேர் எதிரே உதங்க முனிவரின்
சந்நிதி உள்ளது.
கருவறையில் மூலவர் லிங்க உருவில் அகன்ற ஆவுடையார் மீது தான்தோன்றீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார்.
மூலமூர்த்தி மிகவும் சிறிய சிவலிங்கத் திருமேனி.
சுயம்பு மூர்த்தியாகத் திகழும் இத் திருவுரு உள்ளங்கையளவே உள்ளது.
உள் மண்டபத்தில் இடப்பக்க முதல் தூணில் உட்புறம் "யானைமீது அம்பாரியில் சோழ மன்னன் வரும் போது, அவ்யானையைக் கோழி குத்தித் தாக்கும் சிற்பம்" உள்ளது.
இறைவி காந்திமதி அம்மை தெற்கு நோக்கி தனி சந்நிதியில் கைகளில் அங்குசமும், தாமரை மலரும் வைத்துக் கொண்டு அருள் புரிகிறாள்.
இத்திருத்தலத்தில் அமைந்துள்ள காந்திமதியம்மை நாகலோகத்தில நாககன்னியர்களால் பூசிக்கப்பட்டு சோழ மன்னனால் கொண்டு வரப்பட்டு இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டாள் என்பது ஐதீகம்.
இச்சந்நிதிக்கு அருகில் மஹாவிஷ்னு, சூரியன், காலபைரவர் மற்றும் சனீஸ்வரன் அகியோரின் உருவச் சிலைகள் உள்ளன.
அர்த்த மண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறமும் சுமார்
6 அடி உயரமுள்ள துவாரபாலகர்களின் சிலைகள் உள்ளன.
8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த இரு சிலைகளும் சிறந்த வேலைப்பாடுகளுடன் சிற்பக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
கருவறையின் தென்புற வெளிச் சுவற்றில் தட்சிணாமூர்த்தியும், வடபுற வெளிச் சுவற்றில் பிரம்மாவும் காட்சி அளிக்கின்றனர்.
பெரியதும் சிறியதுமாக இரு தட்சிணாமூர்த்தி உருவங்கள் உள்ளன.
பெரிய உருவம் சிறந்த சிற்பக் கலையழகுடன் திகழ்கின்றது.
சிறியது சோழர் காலத்தியது.
பெரியதாக வைக்க எண்ணி நாட்டுக்
கோட்டை நகரத்தார் தம் திருப்பணியில் செய்து வைத்தார்கள்.
4 அடி உயரமுள்ள சண்டிகேஸ்வரரின் உருவச் சிலையும் காணவேண்டிய ஒன்றாகும்.
திருமாலுக்கு எதிரில் உள்ள தூணில் பிட்சாடனர் உருவம் உள்ளது.
இதற்கு எதிர்க் கம்பத்தில் தாருகாவனத்து ரிஷிபத்தினிகளின் உருவங்கள் உள.
உறையூர்க் கோயிலில் சிற்பங்களுக்குக் குறைவில்லை என்பதுபோல, கருவறையின் வெளிபக்கச் சுவரில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன.
கருவறை வெளிச் சுவரில் மேற்புறத்தில் நான்கு பக்கங்களிலும், வரிசையாக இறைவனின் பல்வகையான தாண்டவங்களின் சிற்பங்கள் மிக்க கலையழகுடன் காணப்படுகின்றன.
சுற்றியுள்ள தூண்களில் பலவகையான சிற்பங்கள் உள்ளன.
ஒரு தூணில் ஐந்து பெண்கள் உருவத்தையே ஒரு குதிரையாக அமைத்துள்ள சிற்பமும், நான்கு பெண்கள் உருவத்தையே ஒரு குதிரையாக அமைத்துள்ள சிற்பமும் பார்த்து ரசிக்கத் தக்கவை.
யானை முகம், மனித உடல், பறவை கால் கொண்ட விசித்திரமான சிற்பம் ஒன்றும் உள்ளது.
உட்பிரகாரத்தின் தென்புறம் மிகப்பெரிய காளி உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஜெயகாளி என்று அழைக்கப்படும் இந்தக் காளி மிகவும் சக்தி வாய்ந்தவள்.
இத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு திருமுகமும் இரண்டு திருக்கரங்களும் விளங்க தனது இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.
இத்தலம் திருப்புகழ் வைப்புத் தலங்களில் ஒன்று.
பஞ்சபூத தலங்களாகிய சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், காளஹஸ்தி ஆகிய தலங்களில் காட்சியளித்து அருள் புரியும் சிவபெருமான் ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம் என்ற உறையூர் திருத்தலம்.
எனவே பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் இத்தல இறைவனை வழிபட்டாலே கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
மேலும் படைத்தலின் தெய்வமாகிய பிரம்மாவே இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால் எவ்வகை தொழிலிலும் வெற்றியடைய இத்தல மூலவராகிய பஞ்சவர்ணேஸ்வரரை வழிபட்டால் நலம் பெறலாம்.
கார்க்கோடகன் ஆகிய பாம்பும் கருடனும் இத்தலத்தில் வழிபட்டுள்ளதால் எவ்விதத்தில் பெற்றிருக்கும் சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து விமோசனம் கிடைக்கும் தலம் இதுவாகும்.
மற்றும் காசியப முனிவர், அவன் மனைவி கத்துரு இங்கு இறைவனை வழிபட்டுள்ளார்.
யானை ஏற முடியாதபடி
70 மாடக்கோவில்களைக் கட்டிய கோச்செங்கட் சோழன், 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்ச் சோழன் ஆகியோர் பிறந்த தலம் இதுவே.
புகழ்ச் சோழன் என்ற சோழ மன்னன் உறையூரில் ஆட்சி புரிந்து வந்தான்.
சிற்றரசன் ஒருவனுடன் போரிட்டு வெற்றி கண்ட புகழ்ச் சோழன் மடிந்து கிடந்த படை வீரர்களுள் ஜடாமுடியுடன் திருநீறு பூசிய தலையையும் கண்டு மிகவும் மனம் நொந்தான்.
சிவனடியார்க்கு அநீதி இழைத்தோமே என்று கலங்கினான்.
தன்னுடைய மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு தீமூட்டி அதனுள் அந்த சிவனடியார் தலையுடன் தானும் வீழ்ந்து முக்தி பெற்றான்.
63 நாயன்மார்களில் ஒருவராகவும் ஆனான்.
சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
எப்படிப் போவது?
திருச்சி நகரின் ஒரு பகுதி உறையூர். தேவாரம் பாடப் பெற்ற காலத்தில் இதுவே மூக்கீச்சுரம் எனப்பட்டது. உறையூரில் கடைவீதி தெருவில் இத்தலம் அமைந்திருக்கிறது.
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
1.உய்யக் கொண்டான் மலை - 4.5 கிமி -
2. திருச்சிராப்பள்ளி -
5 கிமி -
3. திருவெறும்பூர் - 17 கிமி
அருகில் உள்ள திவ்ய தேசம்கமலவல்லி நாச்சியார், அழகிய மணவாள பெருமாள் கோவில் - 750 மி
ஆலய முகவரி:அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வர் திருக்கோயில்
உறையூர்
உறையூர் அஞ்சல்
திருச்சி
திருச்சி மாவட்டம்
PIN - 620003
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔 #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥



