ShareChat
click to see wallet page
search
பைபிள் வாசகங்கள்: ஏப்ரல் 16 : முதல் வாசகம் நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27-33 அந்நாள்களில் காவலர்கள் திருத்தூதர்களை அழைத்துக்கொண்டுவந்து யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, “நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப்பார்க்கிறீர்களே!” என்றார். அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கு மனமாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்” என்றனர். இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத் தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர். ஆண்டவரின் அருள்வாக்கு. ஏப்ரல் 16 : பதிலுரைப் பாடல் திபா 34: 1,8. 16-17. 18-19 (பல்லவி: 6a) பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார். அல்லது: அல்லேலூயா. 1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி 16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். - பல்லவி 18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். - பல்லவி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 20: 29 அல்லேலூயா, அல்லேலூயா! “தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்.” அல்லேலூயா. ஏப்ரல் 16 : நற்செய்தி வாசகம் தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-36 அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் தன் சீடர்களிடம் கூறியது: மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர். தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தரும் சான்றை ஏற்றுக்கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார். கடவுளால் அனுப்பப்பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார். தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும். ஆண்டவரின் அருள்வாக்கு. ---------------------------------------------------------------------- நம்பிக்கையும் நிலைவாழ்வும் பாஸ்கா காலத்தின் இரண்டாம் வாரம் வியாழக்கிழமை I திருத்தூதர் பணிகள் 5: 27-33 திருப்பாடல் 34: 1&8, 16-17, 18-19 (6a) II யோவான் 3: 31-36 நம்பிக்கையும் நிலைவாழ்வும் ஆண்டவரைப் பற்றிக் கொள்ளுங்கள்! இயேசுவின்மீது ஒருவர் நம்பிக்கை வைப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முதன்மையான காரணம், அவர் விண்ணுலகிலிருந்து வந்தவர் என்பதுதான். இயேசு விண்ணுலகிலிருந்து வந்தவர் என்பதால் விண்ணுலகு சார்ந்தவை பற்றியே பேசினார். அப்படிப்பட்டவரிடம் நம்பிக்கை கொள்கின்ற ஒருவர் நிலைவாழ்வு பெறுகின்றார். நிக்கதேமிடம் தொடர்ந்து பேசுகின்ற இயேசு, அவரிடம், விண்ணுலகிலிருந்து வந்தவர் விண்ணுலகு சார்ந்தவை பற்றிப் பேசுகின்றார் என்று சொல்லிவிட்டு, “அவரிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார்” என்றார். அதைப் பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம். இயேசுவின்மீது அல்லது கடவுள்மீது நம்பிக்கை கொண்ட இருவரைப் பற்றி இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுகின்றது ஒருவர் தாவீது. இன்னொருவர் திருத்தூதர்(கள்) தாவீது தனக்கு எதிரிகளிடமிருந்தும் துரோகிகளிடமிருந்தும் ஆபத்து வந்தபோது, மனிதருடைய உதவியை நாடாமல், ஆண்டவரிடம் தஞ்சம் புகுந்தார். ஆண்டவரும் அவரை ஆபத்திலிருந்து காத்தார். அதனால்தான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 34 இல் தாவீது, “ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்” என்கிறார். உயிர்த்த இயேசுவைக் காணும் வரை யூதர்களுக்கு அஞ்சி வாழ்ந்த திருதூதர்கள், அவரைக் கண்ட பிறகு, அவர்மீது நம்பிக்கை கொண்டவர்களாய், அவரைப் பற்றித் துணிவுடன் சான்று பகர்கின்றார்கள். இதனால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றார்கள். அப்படியிருந்தும் அவர்கள் மனிதர்களுக்குக் கீழ்ப்படியாமல், ஆண்டவருக்கு மட்டுமே கீழ்ப்படிந்து, அவருக்குச் சான்று பகர்கின்றார்கள்; அவர்மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்பதைத் தங்களால் வாழ்வாலும் வார்த்தையாலும் எடுத்துரைக்கின்றார்கள். இயேசு கிறிஸ்து ஒருவரால் மட்டுமே நமக்கு நிலைவாழ்வு அளிக்க முடியும். அதனால் நாம் அவர்மீது நம்பிக்கை வைத்து, அவருக்குச் சான்று பகர்வோம். நம்பிக்கை என்றால் என்ன? மூன்று சிறுவர்களிடம், “நம்பிக்கை என்றால் என்ன?” என்றொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முதற்சிறுவன், “கடவுளை உறுதியாய்ப் பற்றிக் கொள்வது” என்றான். இரண்டாம் சிறுவன், “கடவுளைச் சிக்கெனப் பிடித்துக் கொள்வது” என்றான். மூன்றாம் சிறுவனோ, “கடவுளை விட்டு விலகாதிருப்பது” என்றான். மூவரும் சரியான பதில் சொன்னதால் கேள்வி கேட்டவர் அவர்களை வெகுவாகப் பாராட்டினார். ஆண்டவரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு, அவரது வழியில் நடக்கின்ற ஒருவரே நிலைவாழ்வடைகின்றார். நாம் ஆண்டவரைப் பற்றிக் கொண்டு வாழ்கின்றோமா? அல்லது அலகையைப் பற்றிக் கொண்டு வாழ்கின்றோமா? சிந்திப்போம். ஆண்டவரின் வார்த்தை “ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவரே அவர்கள் நம்பிக்கை” (எரே 17: 7) தீர்மானங்கள் 1) ஆண்டவரே நமது உயிருக்கு அடைக்கலம்; அதனால் அவரை உறுதியாய்ப் பற்றிக் கொள்வோம். 2) நமக்குப் புதுவாழ்வளித்திருக்கும் ஆண்டவரை ஆற்றலோடு அறிவிப்போம். 3) நிலைவாழ்வு ஆண்டவரிடம் மட்டுமே உண்டு. அதனால் அவரிடம் தஞ்சம் புகுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்