அக்னி நட்சத்திரம் எப்போது தொடங்குகிறது?
2026ஆம் ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் மே 28ஆம் தேதி வரை இருக்கும் என்பதால் இந்த 25 நாட்களும் வெயில் வாட்டி வதைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நாட்களில் என்னவெல்லாம் செய்யலாம்? கூடாது? எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? பார்க்கலாம்.
தமிழகத்தில் கோடைக் காலத்தின் உச்சக்கட்ட வெயில் தகிக்கும் காலமே 'அக்னி நட்சத்திரம்' அல்லது 'கத்திரி வெயில்' என அழைக்கப்படுகிறது. சூரியன் பரணி நட்சத்திரத்தின் 3-ஆம் பாதத்தில் நுழைந்து, நெருப்புக்குரிய கிருத்திகை நட்சத்திரத்தை முழுமையாகக் கடந்து, ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதம் வரை பயணிக்கும் காலமே அக்னி நட்சத்திரமாகும்.
பொதுவாக இது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் பிற்பகுதியில் அதாவது மே முதல் வாரத்தில் தொடங்கி, வைகாசி மாதத்தின் முற்பகுதி வரை சுமார் 21 முதல் 25 நாட்கள் வரை நீடிக்கும். ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்பு இருக்கும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.
ஆன்மிகப்பின்னணி
சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து உதித்த முருகப் பெருமானுக்கு உரிய 'கிருத்திகை' நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிப்பதாலேயே இந்த நாட்களில் பூமியில் வெப்பம் தகிக்கிறது என்பது ஐதீகம். நெருப்பின் அதிபதியான அக்னி தேவன், தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும் காலமாக இது கருதப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் இறைவனின் உக்கிரத்தைத் தணிக்க, சிவன் கோவில்களில் மூலவர் மீது சொட்டுச் சொட்டாக நீர் விழும்படி சிறிய துளைகள் இடப்பட்ட பாத்திரத்தைக் கட்டி தாராபிஷேகம் செய்வார்கள். அக்னி நட்சத்திரம் முடியும் வரை, தினமும் உச்சிக்கால பூஜை தொடங்கி மாலை பூஜை வரை இந்த அபிஷேகம் நடைபெறும். மாரியம்மன் கோவில்களில் சிறப்புப் பூஜைகளும், பால்குட விழாக்களும் நடைபெறும்.
என்ன செய்யலாம்?
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மோர், இளநீர், நுங்கு, தர்பூசணி மற்றும் பழச்சாறுகளை அதிகம் பருக வேண்டும்.
தளர்வான பருத்தி ஆடைகளை, வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டியது அவசியம்.
வெளியே செல்வதை முடிந்த அளவு காலை, மாலை நேரங்களில் போகுமாறு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
வெளியே செல்லும்போது குடை, தொப்பி, சன் கிளாஸ் போன்றவற்றை அணியுங்கள். சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்துவதும் நல்லது.
தாகத்தால் வாடும் ஏழை எளிய மக்களுக்கும், விலங்குகளுக்கும் தண்ணீர், மோர் மற்றும் பானகங்களை வழங்கலாம்.
என்ன செய்யக் கூடாது?
சுட்டெரிக்கும் மதிய நேரங்களில் (காலை 11 மணி முதல் 4 மணி வரை) தேவையின்றி வெளியே செல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
உடலுக்கு உஷ்ணத்தைத் தரும் காரமான மற்றும் அசைவ உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
பயணங்களை குறிப்பாக நீண்ட தூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
ஆன்மிக ரீதியாக…
காலை, மாலை வேளைகளில் சிவன் கோயில்களுக்கும் அம்மன் கோயில்களுக்கும் செல்லலாம்.
சாஸ்திர மற்றும் ஜோதிட ரீதியாக, இந்த 21 நாட்களும் சுப காரியங்களுக்கு உகந்ததல்ல என்று கூறப்படுகிறது. எனவே திருமணம், கிரகப்பிரவேசம், புதிய கட்டிடங்களுக்குப் பூமி பூஜை செய்தல், மரம் வெட்டுதல் மற்றும் விவசாயத்திற்கான விதை விதைத்தல் போன்ற முக்கிய காரியங்களைச் செய்வதை மக்கள் பாரம்பரியமாகத் தவிர்த்து வருகின்றனர்.
இந்த நாட்களில் உடலையும் உள்ளத்தையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதே ஆரோக்கியத்திற்கும் ஆன்மிகத்திற்கும் சிறந்தது என்று நம்பப்படுகிறது. #அக்னி நட்சத்திரம் #ஆன்மீகத் தகவல்கள்💐 #🍹 கோடைக்கால குளிர் பானங்கள் 🧊 #🏖️ சம்மர் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🕰️ கோடைக்கால நினைவுகள்🌞


