நிஜமான தோல்வி அங்குதான் ஆரம்பமாகிறது...
தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இணைந்ததை திமுக கடுமையாக விமர்சித்தது. "காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது" என்றும், "இந்த நடவடிக்கை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை காட்டிக்கொடுக்கும் செயல்" என்றும், "அரசியல் சந்தர்ப்பவாதம்" என்றும் திமுக குற்றம்சாட்டியது.
இப்போது திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, "தன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள தென்னை மரம் வளைந்து பக்கத்து வீட்டுக்கு இளநீர் கொடுத்தால் அதனை என்னவென்று அழைப்பது?" என விமர்சித்தது மட்டுமல்லாமல் அதற்குமுன் அநாகரீகமான முறையில் அவர் செய்த ஒரு பதிவினை, கடும் எதிர்ப்புகள் கிளம்பியதன் விளைவாக பின்னர் நீக்கியிருந்தார்.
திமுக தனது தேர்தல் கூட்டணிக் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்குத் தேர்தல் நிதியுதவி வழங்குவது வழக்கமான நடைமுறையாகும். இருப்பினும், விசிகவிற்கு வழங்கப்பட்ட நிதி குறித்து பொதுவெளியில் சில திமுகவினர் பேசுவது கண்டனத்திற்குரியது என ஒரு கருத்து நிலவுகிறது. முன்பு திமுகவினர் இதே போல கம்யூனிஸ்டுகள் பற்றி பேசியது உண்டு.
திமுக மற்ற கட்சிகளுக்கு தேர்தல் சமயத்தில் உபகாரம் செய்தது போலவும், அவை தேர்தலுக்குப் பின்னர் நன்றி மறந்தது போலப் பேசுவதும் அநாகரீகத்தின் உச்சகட்டம். திமுக பெற்ற வெற்றியில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கில்லையா? அவர்கள் பெற்ற வெற்றி மட்டும் திமுகவிற்கு சொந்தமானதா? அப்படிப் பேசுவது பண்பாடான நடைமுறையா?
திமுக தலைவர்கள் தங்களுடைய இஷ்டத்திற்கு பேசினால் அது திமுகவின் கண்ணியத்தை பாதிக்கும். அது திமுகவின் மீது மக்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்சம் இருக்கிற அபிமானத்தையும் சீர்குலைத்து விடும். திமுகவினால் தவெக ஆட்சி அமைத்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை, வெறுப்பினை உமிழ்கிறார்கள் என மக்கள் நினைக்க வாய்ப்பு உள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளால் "தவெகவின் மீது திமுக பொறாமையுடன் சேற்றை வாரி இறைக்கிறது" என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்குவது மட்டுமல்லாமல், தவெகவின் ஆட்சியில் ஏற்படுகிற குழப்பங்களுக்கு எல்லாம் திமுகவே காரணம் என அவர்கள் நினைக்க மாட்டார்களா?
"வறுமையில் செம்மை" என்பது எவ்வளவு வறுமை வாட்டினாலும், தன்மானத்தையும் நேர்மையையும் இழக்காமல் கண்ணியத்தோடு வாழ்வதைக் குறிக்கும். இதுவே தமிழர்களின் மிக உயர்ந்த பண்பாடாகக் கருதப்படுகிறது.
இங்கே 'வறுமை' என்பதை "அரசியல் தோல்வி" என எடுத்துக்கொண்டால், இந்த காலகட்டத்தில்தான் பொறுமையுடனும், நிதானத்துடனும், பெருந்தன்மையுடனும் பிரச்சினைகளை அணுகவேண்டும் என தெளிவாகிறது.
அரசியல் என்பது ஒரு முடிவற்ற பயணம். ஒரு கட்சியின் அரசியல் வரலாற்றில் வெற்றியும் தோல்வியும் கோடையும் வசந்தமும் போல மாறிமாறி வருவது சகஜம். புதிதாக முளைத்த ஒரு கட்சியிடம் எதிர்பாராமல் அடைந்த தோல்வியினால் ஏற்பட்ட விரக்தியில் வாய்க்கு வந்தபடியெல்லாம் கட்சித் தலைவர்கள் கட்டுப்பாடின்றிப் பேச ஆரம்பித்தால், நிஜமான தோல்வி அங்குதான் ஆரம்பமாகிறது.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
00:05

