ShareChat
click to see wallet page
search
பைபிள் வாசகங்கள்: மே 1 : தொழிலாளரான புனித யோசேப்பு நினைவு முதல் வாசகம் பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள். தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 26- 2: 3 கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு பலுகிப் முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார். அப்பொழுது கடவுள், “மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது. விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார். ஆண்டவரின் அருள்வாக்கு. மே 1 : பதிலுரைப் பாடல் திபா 90: 2. 3-4. 12-13. 14,16 (பல்லவி: 17c) பல்லவி: ஆண்டவரே, நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்! அல்லது: அல்லேலூயா. 2 மலைகள் தோன்றும் முன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்கும் முன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! - பல்லவி 3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்து போன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி 12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி 14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். - பல்லவி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி திபா 68: 19 அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. அல்லேலூயா. மே 1 : நற்செய்தி வாசகம் இவர் தச்சருடைய மகன் அல்லவா? ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58 அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவை எல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை. ஆண்டவரின் அருள்வாக்கு. -------------------------------------------------------------------- தொழிலாளர்களுக்கு முன்மாதிரி அ. செய்த தொழிலை நேசித்தவர் யோசப்பு அளவுக்கு மரியாவையும் இயேசுவையும் யாரும் அன்பு செய்திருக்க முடியாது. யோசேப்பு மரியாவையும் இயேசுவையும் மிகவும் அன்பு செய்தார். அதே அளவுக்கு அவர் தன்னோடு இருந்த வறியவர்களையும் ஏழைகளையும் அன்பு செய்தார். அதனாலேயே அவர் நேர்மையாளர் என அழைக்கப்படுகின்றார். யோசேப்பின் அன்பு மேம்போக்காக இல்லை; மாறாக, அது ஆழமானதாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அது செயலில் வெளிப்பட்டது (1 யோவா 3:18). அவரது அன்பு செயலில் வெளிப்பட்டது என்பதை அவர் தன்னுடைய குடும்பத்திற்காக உழைத்ததன் மூலம் தெரிந்து கொள்ளலாம். யோசேப்பு தன்னுடைய குடும்பத்தோடு எகிப்தில் இருந்தபோதும், நாசரேத்தில் இருந்தபோதும் அயராது உழைத்து, அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்தார். இவ்வாறு அவர் தான் செய்வது சாதாரண தச்சுத் தொழில்தானே என எண்ணாமல், அதை மிகவும் உயர்வாக மதித்து, அதன்மூலம் குடும்பத்தைப் பேணிப் பராமரித்தார். ஆ. கடவுளைத் தேடிய தொழிலாளி இன்று ஒருசிலர், “இருக்கின்ற வேலையில், சாமி கும்பிட எங்கே நேரம் இருக்கின்றது?” என்று ஆதங்கப்படுவதுண்டு. குடும்பத்திற்காக உழைப்புதும் வேலை பார்ப்பதுதான் தேவைதான். அதற்காக படைத்தவரை மறந்துவிடக்கூடாது. யோசேப்பு தன்னுடைய குடும்பத்திற்காக உழைத்த அதே நேரத்தில், தன்னுடைய இதயத்தை மேலே எழுப்பத் தவறவில்லை; கடவுளின் குரல் கேட்கவும், அதன்படி வாழ்வதற்கும் அவர் மறுக்கவே இல்லை. கடவுளை விட்டுப் பிரிந்து நம்மால் ஒன்றும் செய்ய முடியாது (யோவா 15: 5). யோசேப்பு இதை நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் தன்னுடைய அலுவல்களுக்கு நடுவிலும் ஆண்டவரோடு ஒன்றித்திருந்தார். இ. எந்த வேலையும் இழிவானதல்ல காலரே கசங்காமல் வேலை செய்வோர் உயர்வாகவும், நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைப்போர் இழிவாகவும் பார்க்கப்படும் அவலம் இன்றும் தொடர்கின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு தச்சரின் மகன் என்பதற்காகப் புறக்கணிக்கப்படுகின்றார். இயேசு செய்த செயல்களை நம்பாமல், அவரது வெளித்தோற்றத்தைப் பார்த்து, அவரை யூதர்கள் புறக்கணித்தது வேதனையானது. இன்றைய முதல் வாசகம், கடவுள் படைத்த எதையும் எவரையும் தீட்டாகக் கருதாதே என்ற செய்தி பேதுருவுக்கு உணர்த்தப்படுகின்றது. அதை அவர் விருத்த சேதனம் செய்து கொண்டவர்களிடம் விளக்கிக் கூறுகின்றார். ஆகையால், எந்தவொரு தொழிலையும் தொழிலாளரையும் இழிவாகக் கருதாமல் உயர்வாகக் கருதுவோம். யோசேப்பின் முன்மாதிரியைப் பின்பற்றி நம்மோடு இருப்பவர்களை நாம் செய்யும் தொழில்களைச் சிறந்த விதமாய்ச் செய்வதன் மூலமாய் அன்பு செய்வோம். ஆண்டவரோடு எப்போதும் நிலைத்திருப்போம். பிரஞ்சுப் புரட்சி ஏற்படக் காரணம் சுதந்தரம், சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய வார்த்தைகளே பிரஞ்சுப் புரட்சியின் எழுச்சி முழக்கங்களாக இருந்தன. இப்படிப்பட்ட எழுச்சி முழக்கங்களை மையப்படுத்திய பிரஞ்சுப் புரட்சிக்கு அங்கிருந்த ஆட்சியாளர்களின் ஆணவப் போக்கும் ஒரு வகையில் காரணமாக இருந்தது. அவர்களின் ஆவணம் எந்த அளவுக்கு இருந்தது என்பதை உணர்த்தும் நிகழ்வு இது. சிறு வயது முதலே பதினாறாம் லூயி அரண்மனையில் இருந்த வேலைக்காரியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு சமயம் அவ்வாறு வேலைக்காரியுடன் விளையாடிக் கொண்டிருந்த அவர், அவளது கையைப் பார்த்துவிட்டு, “என்ன இது! எங்களுக்கு இருப்பது போல், உனக்கும் கையில் ஐந்து விரல்கள் இருக்கின்றனவே!” என்று அதிர்ச்சியுடன் கேட்டார். பதினாறாம் லூயும் சரி, அதிகாரத்தில் இருந்த மற்றவர்களும் சரி தொழிலாளர்களுக்குத் தங்களை விடக் கையில் குறைவாகவே விரல்கள் இருக்கும் என்ற எண்ணம் இருந்தது. இப்படிப்பட்ட ஆணவப் போக்குதான் பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது. கடவுள் நம்மைப் போலவே பிறரையும் படைத்திருக்கும்போது பிறப்பின் அடிப்படையில் பேதங்கள் எதற்கு? ஆன்றோரின் வார்த்தை ‘புனித யோசப்பு ஒரு நேர்மையளார்; கடின உழைப்பாளி; தன்னிடம் அடைக்கலம் புகுவோரைச் சிறந்த விதமாய்க் காக்கும் காவலர்; அவர் குடும்பங்களைக் காத்து, பராமரித்து, ஞானத்தில் வளர்க்கின்றவர்” – திருத்தந்தை பிரான்சிஸ். தீர்மானங்கள் 1) உழைப்பை உயர்வாய் மதிப்போம் 2) உழைப்பின் மூலம் உன்னதரின் மீட்புப் பணியில் பங்கேற்கின்றோம் என்பதை உணர்வோம் 3) உழைப்பு, உழைப்பு என்று உன்னதரைத் தேடுவதற்கு மறவாதிருப்போம். #பைபிள் வசனங்கள்