#innraya SINTHANAY சிந்தனை.*.( 07.05.2026)..
……………………………………………......
*கல்வி அழியாத செல்வம்..*
…………………………………………………………………..
மனிதன் தனது வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது கல்வி கற்பது ஒன்று தான். இளமை முதல் இறக்கும் வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமை அடைய முடியாது.
எனவே தான் ‘கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு’ என்னும் தொடர் மக்கள் இடையே நிலவுகிறது.
கல்வியை ஒருவன் கற்கத் தொடங்கும் போது சிறிது துன்பமாகத் தான் இருக்கும். ஆனால் கற்கத் தொடங்கி விட்டால் அதுவே இன்பமாக மாறும்..
நம்மிடம் இருக்கும் அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்குகிறது கல்வி. நம்மிடம் இருந்த அறியாமை விலகி அறிவு விரிவானதால் கல்வியில் இன்பம் தோன்றுகிறது.
கல்வி கற்றவர்கள், தாம் கற்றவற்றை வாழ்வில் பயன்படுத்த வேண்டும். கல்வியின் வாயிலாகத் தாம் கற்றவற்றை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். கற்றவர்க்குக் கல்வியே ஒரு செல்வமாக உதவும் தன்மை கொண்டது.
கல்வி கற்ற ஒருவனால் தான் கற்றவற்றை விளக்கிக் கூற இயலவில்லை என்றால் அந்தக் கல்வியால் யாருக்கும் பயன் இல்லை..
ஒருவன் எவ்வளவு சிறந்த முறையில் கல்வியைக் கற்று இருந்தாலும் எந்த இடத்தில் எப்படிப் பேச வேண்டுமோ, அந்த இடத்தில் அப்படிப் பேசத் தெரியவில்லை என்றால் , அவன் கற்ற கல்வியால் எந்தப் பயனும் இல்லை.
கல்வி அறிவும் இடம் அறிந்து சிறப்பாகப் பேசும் ஆற்றலும் ஒருவனிடம் இருந்தால் அவனால் எளிதில் வெற்றி பெற முடியும். பொன்னால் செய்யப்பட்ட மலர் அழகாக இருக்கும்.
அழகுடைய அந்தப் பொன்மலரில் நறுமணமும் இணைந்து இருந்தால் எவ்வளவு உயர்வாகக் கருதப்படுமோ அதைப் போன்றே கல்வி அறிவுடன் சொல்லாற்றலும் பெற்றவன் மதிக்கப்படுவான்..
கற்றவற்றை அவையில், சிறந்த முறையில் எடுத்துக் கூற இயலாதவன் கல்வி அறிவு பெற்றவனாய் இருப்பது பயனற்றது..
நம் தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்தது இக்கல்வி. அன்றைக்குக் கட்டணம் செலுத்தி, உயர் சாதிக்காரர்கள் மட்டுமே கற்ற கல்வி, இன்றைக்கு கட்டாயமாக எல்லாக் குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி. சீருடை, செருப்பு, புத்தகம், நோட்டு எல்லாம் இலவசம். இவ்வளவு வசதி வாய்ப்புகள் தரப்பட்டு, கல்வி அளிக்கப்படுகின்ற போது அதைத் தவறாது பொறுப்போடு கற்று முன்னேற வேண்டும்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட, கல்வி கற்பதற்கு எத்தடையும் இல்லை. இன்றைக்குப் பிள்ளைகள் கற்காமல் போனால்,அது பெற்றோர் குற்றம், பிள்ளையின் குற்றமேயாகும்.
கல்வி தான் இவ்வுலகில் வாழும் தகுதியை உங்களுக்குத் தருகிறது. உலக அறிவை, பல்வேறு செய்திகளை, பல்துறைக் கருத்துகளை உங்களுக்கு ஒரே இடத்தில் கொடுக்கிறது.
கல்வி தான் எது நல்லது? எது கெட்டது? எனப் பகுத்தறியக் கற்றுக் கொடுக்கும். ஒரு நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு என்பதையும் உணர வைக்கும். எந்த செயலையும் உற்று நோக்கக் கற்றுக் கொடுக்கும். சமயோகிதமாக நடந்து கொள்ளவும் கல்வியறிவே கை கொடுக்கிறது..
குறிப்பிட்ட நோக்கை அடைகின்ற வரை கல்வி கற்பதில் சலிப்போ, வெறுப்போ, அலுப்போ கொள்ளக் கூடாது.
கல்வியில் ஆர்வத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். கல்வி தான் பிறப்பால் வந்த பேதம், இழிவு, அடிமை நிலை அனைத்தையும் அகற்றும்.
சமுதாயத்தில் உயர்வையும், வருவாயையும், பாராட்டையும், திறமையையும் அளிக்கும் ஒரே கருவி கல்வி தான்.
ஆண்களே அன்றி பெண்களும் கற்க வேண்டும். அனைத்துப் பிள்ளைகளும் தவறாது கற்க வேண்டும். அனைவரும் சாதி பேதம் இல்லாமல் கற்க வேண்டும்,
இளமையில் கல்’ என்பதை உணர்ந்திருக்க வேண்டும். இளவயதில் படிப்பது நம் மனதில் அப்படியே பசு மரத்தாணி போல் பதிந்து விடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இல்லாதவர் வீட்டுப் பிள்ளைகளும் கற்க வேண்டும் என்பதற்காக நம் தலைவர்கள் உழைத்தது கொஞ்சமன்று.
சேரிப்புறத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை யெல்லாம் நீதிபதிகளாக, அதிகாரிகளாக, வழக்குரைஞர்களாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக மாற்றியது கல்வி.
படிப்பில் விருப்பத்தை உண்டாக்கிக் கொண்டால் படிப்பு எளிதாக மாறும், சுகமாக மாறும். கல்வியை. கசப்பாக எண்ணாமல் பெருமையாக எண்ணிப் படிக்க வேண்டும்..
*ஆம்.,நண்பர்களே..,*
கல்வி தான் ஒருவனை அறிவாளி ஆக்குகிறது. அறியாமை எனும் இருட்டைக் கல்வி எனும் ஒளி தான் போக்குகிறது.
கல்வி ஒருவனை மட்டும் மேம்படுத்தாது. அவனைச் சார்ந்தவர்களையும், சமுதாயத்தையும், ஏன் நாட்டையுமே அது உயர்த்த உதவும்.
பெற்றோர்களுக்கு ஒரு வார்த்தை!
உங்கள் குழந்தைக்குக் கல்வியின் அவசியத்தைப் புரிய வையுங்கள்.
கற்பதில் விருப்பத்தை உங்கள் குழந்தைகளுக்கு உண்டாக்குங்கள்.
( ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி....)💐💐💐🌺🌹🌹🌹


