ஜபர்தஸ்தான பேச்சுகளுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை!
"தூய அரசியல் மடிந்துவிட்டது": இது, அதிமுக MLA க்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைந்தது பற்றி அன்புமணி ராமதாஸ் பேசியது. அரசியலில் நேரத்திற்கு தகுந்த மாதிரி எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.
முன்பு, பாமகவைச் சேர்ந்த சௌமியா அன்புமணிக்கு துணை முதலமைச்சர் பதவி கேட்டு கட்சித் தலைமை பேரம் பேசியதாக இணையத்தில் செய்திகள் உலா வந்தன. அந்த செய்திக்கு பாமக தரப்பில் இருந்து மறுப்பு எதுவும் வந்ததில்லை.
விசிக ஒரு முடத்தெங்கு ஆ. ராசா பேச்சு. தவெகவின் ஆட்சி திமுகவின் தயவால்தான் நடைபெறுகிறது என்றும், அது அவர்களின் சொந்த பலத்தால் அமைந்த அரசு அல்ல என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திமுக ஏன் தவெகவிற்கு தயவு காட்ட வேண்டும்? இடைத் தேர்தல் வந்தால் இருப்பதும் போய்விடும் என்ற பயத்தினாலா?
துரை வைகோ, மதிமுக MLA க்கள் துரதிர்ஷ்டவசமாக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், அதனால் தங்களால் தற்போதைய புதிய அரசுக்கு ஆதரவு அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதாவது, வாய்ப்பு கிடைக்காத வரை எல்லோரும் யோக்கியர்கள்தான். பாவம், விஜய்யை ஆதரிப்பதற்கு முடியவில்லை என்ற தனது ஆதங்கத்தை துரைவைகோ வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிட்டார்.
பதவியை எதிர்பார்த்து தவெகவை ஆதரிக்கவில்லை என்று பேசிய வேலுமணி & கோ, பிறகு எதற்காக தவெகவை ஆதரித்தது? பின்னர் மறுபடியும் ஏன் EPS இடம் சரண்டர் ஆனது என்று தெரியவில்லை. (தாய்வீடு போகிறார்களாம்!)
ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சீமான், தற்போது நாம் தமிழர் கட்சியினர் விஜய்யை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார். இந்த மாற்றம் எதனால் விளைந்தது என்று தெரியவில்லை!
ஒரு கழுதையில் அப்பா சவாரி செய்ய, மகன் நடந்து செல்கிறான். அதைப்பார்த்த ஒருவன் அப்பாவிடம் "சிறுவனை நடக்கவிட்டு நீ சவாரி செய்யலாமா?" என்று கேட்கிறார். பிறகு அப்பா கீழே இறங்கிவிட்டு மகனை கழுதையில் ஏற்றுகிறார்.
வருவோர் போவோர் பேச்சைக் கேட்டு இருவரும் கழுதை மீது பயணம் செய்கிறார்கள். இதைப் பார்த்த ஜீவகாருண்யமிக்க மனிதன் "கழுதையை இம்சை செய்யலாமா?" என்று விமர்சனம் செய்தான். போதுமடா சாமி, என்று தகப்பனும் மகனும் கழுதையைச் சுமந்தால், ஊரே கைகொட்டி "முட்டாள்கள்" என்று சிரித்ததாம்.
யாரும் விமர்சனம் பண்ண முடியாத அளவுக்கு ஒரு முடிவினை விஜய்யால் மட்டுமல்ல யாராலும் எடுக்க முடியாது. விஜய் தனக்கு பெரும்பான்மை இல்லை, மறுதேர்தலில் மக்களைச் சந்திக்கிறேன் என்று முடிவு செய்தாலும் விமர்சனங்கள் வரவே செய்யும்.
பின்னே? அதிமுக MLA க்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் வரப்போகும் இடைத்தேர்தலில் திராவிடக் கட்சிகள் போட்டியிடுமா என்றே தெரியவில்லை. இதில் பொதுத்தேர்தல் என்றால் கூண்டோடு கைலாசம் என்பது உறுதி. ஆனாலும், ஆளாளுக்கு பேசும் ஜபர்தஸ்தான பேச்சுக்களுக்கு மட்டும் குறை ஒன்றுமில்லை...
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
00:08

