#✝️இயேசுவே ஜீவன் நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்*
ஏப்ரல்-25
அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே, எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென்.
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா,
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.
ஏனெனில், அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது, அவரது இரக்கம். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.
நித்திய மகிமைக்கு இருப்பிடமான, கன்னித்தாயின் திருக்குமாரனாகிய இயேசுவே! அத்தியந்த பக்தி வணக்கத்துடனே தேவரீரை ஆராதிக்கிறேன். ஆராதனைக்குரிய பரம திருவருட்சாதனமாகிய தேவ நற்கருணையை, தேவரீர் உண்டாக்கின நாள் முதற்கொண்டு, அதிலே மனுமக்களால் தேவரீருக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரோகங்களுக்கும், இயன்ற மட்டும் பொதுப் பரிகாரம் செய்யும் பொருட்டு, அடியேன் சகல பாவிகளுக்குத் திடமான அடைக்கலமும், தேவரீருக்குப் பிறகு அவர்களுக்குப் பிரதான நம்பிக்கை ஆதரவுமாகிய, உம்முடைய திரு மாதாவின் உதவி அநுக்கிரகத்தை இரந்து கேட்கிறேன் சுவாமி.
மனுக்குலத்தின் நம்பிக்கையும், பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் அரசியும், உம்முடைய திருக்குமாரனை இடைவிடாது ஆராதிக்கிறவளுமாகிய அன்புள்ள தேவதாயே! நீர் அன்போடே ஏற்றுக்கொண்ட பிள்ளைகளில், அடியேன் ஒருவனாயிருக்க, மகிமைப் பாக்கியம் பெற்றவனாகையால், அனந்த பக்தி நம்பிக்கை நேசத்துடனே, உம்முடைய பாதத்திலே விழுந்து பாவிகளாகிய எங்களுக்கு, நீதித் தீர்வையிடும் நித்திய கர்த்தாவினிடத்தில் நீரே மனுப்பேசி, எங்களுக்காகவும், எங்கள் பேராலேயும், உம்முடைய புண்ணிய பலன்களால் உத்தரிக்கவும், எங்களாற் செலுத்த முடியாத, அனந்த நமஸ்காரக் கடமைகளைத் தீர்த்து நிறைவேற்றவும் வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம் ஆண்டவளே. ஆமென்.
நிலையான புகழுக்குரிய தூய்மைமிகு நற்கருணைக்கு எல்லா காலமும் ஆராதனையும் புகழும் மாட்சிமையும் உண்டாகக்கடவது.
இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க !


