பைபிள் வாசகங்கள்:
ஏப்ரல் 10 : முதல் வாசகம்
இயேசுவில் அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 1-12
அந்நாள்களில்
பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்; அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும் இறந்தோர் இயேசுவின்மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும் கண்டு எரிச்சல் அடைந்து, அவர்களைக் கைது செய்தார்கள்; ஏற்கெனவே மாலையாகி விட்டதால் மறுநாள்வரை காவலில் வைத்தார்கள். அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட பலரும் நம்பிக்கை கொண்டனர். இவ்வாறு நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.
மறுநாள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் எருசலேமில் ஒன்றுகூடினார்கள். அவர்களுடன் தலைமைக் குருவான அன்னாவும், கயபா, யோவான், அலக்சாந்தர் ஆகியோரும், தலைமைக் குருவின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கூடியிருந்தார்கள். அவர்கள் திருத்தூதர்களை நடுவில் நிறுத்தி, ‘‘நீங்கள் எந்த வல்லமையால், அல்லது எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்?” என்று வினவினார்கள்.
அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: ‘‘மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, உடல் நலமற்றிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, ‘கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்.’ இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
ஏப்ரல் 10 : பதிலுரைப் பாடல்
திபா 118: 1-2,4. 22-24. 25-27a (பல்லவி: 22)
பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!
அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
4
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. - பல்லவி
22
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
24
ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். - பல்லவி
25
ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்!
26
ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
27a
ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 118: 24
அல்லேலூயா, அல்லேலூயா!
ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
ஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்
இயேசு சீடர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-14
அக்காலத்தில்
இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்றார். அவர்கள் “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்று, போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.
ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.
படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்” என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், “உணவருந்த வாருங்கள்” என்றார். சீடர்களுள் எவரும், “நீர் யார்?” என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
---------------------------------------------------------------------------
இயேசுவாலேயே நமக்கு மீட்பு
I திருத்தூதர் பணிகள் 4: 1-12
திருப்பாடல் 118: 1-2, 4, 22-24, 25-27a (22)
II யோவான் 21: 1-14
இயேசுவாலேயே நமக்கு மீட்பு
அறிவோம்; அறிவிப்போம்
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதும், எல்லாம் முடிந்துவிட்டது என்று அவரது சீடர்கள் அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பிப் போய்விட்டார்கள். இந்நிலையில் உயிர்த்த ஆண்டவர் இயேசுவே அவர்கள் முன் தோன்றி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றார். இன்றைய நற்செய்தியில் திபேரியக் கடலருகே தம் சீடருக்கு மூன்றாம் முறையாகத் தோன்றுகின்ற அவர், தாம் மெய்யாகவே உயிர்த்துவிட்டதை உணர்த்தும் விதமாக அவர்களோடு சேர்ந்து உணவு உண்கின்றார்; அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்துகின்றார்.
இயேசு தம் சீடர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்திய பிறகு அவர்கள் யாருக்கும் அஞ்சாமல் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்கின்றார்கள். இன்றைய முதல் வாசகத்தில் தலைமைச் சங்கத்தார் திருத்தூதர்களிடம் இயேசுவைப் பற்றி அறிவிக்கக் கூடாது என்று சொன்னாலும்கூட அவர்கள் அவரைப் பற்றித் துணிவோடு அறிவிக்கின்றார்கள். “இயேசுவாலன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை” என்று எடுத்துரைக்கின்றார்கள்.
இயேசுவை யூதர்கள் புறக்கணித்தார்கள். ஆனால், கடவுள் அவரை மூலைக் கல்லாக உயர்த்தினார். இன்று நாம் பதிலுரைப்பாடலாகப பாடக்கேட்ட திருப்பாடல் 118 யாரால் எப்போதும் பாடப்பட்டது என்பன பற்றிய சரியான குறிப்புகள் இல்லையென்றால், இயேசு மூலைக் கல்லாக உயர்த்தப்படுவார் என்ற செய்தியை முன்னறிவிக்கின்றது.
ஆகையால், இயேசுதான் நமக்கு மீட்பினை வழங்குகின்றவர் என்ற உண்மையாய் ஆழமாய் உணர்ந்தவர்களாய் அவரைப் பற்றி மற்றவருக்கு மிகத் துணிவுடன் அறிவிப்போம்.
இயேசுவைத் தம் மீட்பராக ஏற்றுக்கொண்டவர்
1984 ஆண்டு இரண்டு கொலைகள் செய்ததற்காக அமெரிக்காவைச் சேர்ந்த கர்லா ஃபயி டக்கர் (Karla Faye Tucker) என்ற பெண்மணி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே அவர் யாருடனும் பேசாமலும் பழகாமலும் அமைதியாக இருந்தார்.
இதற்கு நடுவில் அங்கே சிறைப்பணியாற்றி வந்த ஒரு சில கிறிஸ்தவர்கள் அவரிடம் ஒரு திருவிவிலியத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். அதை வேண்டா வெறுப்பாக வைத்திருந்த அவர், நேரம் போகாததால் மெல்ல அதை வாசிக்கத் தொடங்கினார். திருவிவிலியத்தை வாசிக்க வாசிக்க அவருக்குள் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இதனால் அவர் கிறிஸ்துவை நம்பி ஏற்றுக்கொண்டார். மட்டுமல்லாமல், அவர் அங்கிருந்த சிறையதிகாரியை மணந்துகொண்டு, நல்லதொரு கிறிஸ்தவராக வாழத் தொடங்கினார்.
இப்படிக் கிறிஸ்து யாரென்றே தெரியாமல் வாழ்ந்து வந்த டக்கர் கிறிஸ்துவை நம்பி ஏற்றுக்கொண்டு புதிய வாழ்வு வாழத் தொடங்கியதும், “கிறிஸ்துவுக்கு மாட்சிக்கு உண்டாகுக. ஏனெனில், அவர்தான் எனக்குப் புதியதொரு வாழ்க்கையைத் தந்தார்” என்று அவரைப் பற்றி மற்றவருக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார்.
இரண்டு கொலைகளைச் செய்து பாவியாக இருந்த டக்கருக்குக் கிறிஸ்து மீட்பினை வழங்கினார். நாமும் கிறிஸ்துவை நம்பி ஏற்றுக்கொண்டு வாழும்போது, மீட்படைவோம் என்பது உறுதி.
ஆண்டவரின் வார்த்தை
“இயேசுவே ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்” (உரோ 10:9).
தீர்மானங்கள்
1) இயேசுவை ஆழமாக அறிவது மட்டுமல்லாமல், அவரை மற்றவருக்கு அறிவிப்போம்.
2) ஆண்டவர் நமக்குத் துணையிருப்பதால், அவரைத் துணிவோடு அறிவிப்போம்.
3) யாரையும் புறக்கணிக்க வேண்டாம். ஏனெனில், ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் குடிகொண்டிருக்கின்றார்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்

