பைபிள் வாசகங்கள்:
ஏப்ரல் 15 : முதல் வாசகம்
நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 17-26
அந்நாள்களில்
தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக் கட்சியினர் அனைவரும் பொறாமையால் நிறைந்து திருத்தூதரைக் கைது செய்து பொதுச் சிறையில் காவலில் வைத்தனர். ஆனால் இரவில் ஆண்டவரின் தூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்று, “நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளை யெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்” என்றார். இதைக் கேட்ட அவர்கள் பொழுது விடிந்ததும் கோவிலுக்குச் சென்று கற்பித்தார்கள்.
தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்தவர்களும் அனைத்து இஸ்ரயேல் மக்களின் ஆட்சிப் பேரவையாகிய தலைமைச் சங்கத்தைக் கூட்டித் திருத்தூதர்களைச் சிறையிலிருந்து கொண்டுவருமாறு ஆள் அனுப்பினார்கள். அந்த ஏவலர்கள் அங்கு வந்தபோது சிறையில் அவர்களைக் காணவில்லை. எனவே அவர்கள் திரும்பி வந்து, “நாங்கள் சிறைச்சாலை உறுதியாய்ப் பூட்டப்பட்டிருப்பதையும், காவலர் வாயிலருகில் நின்றுகொண்டு இருப்பதையும் கண்டோம். ஆனால் கதவைத் திறந்தபோது உள்ளே எவரையும் காணவில்லை” என்று அறிவித்தார்கள்.
இவ்வார்த்தைகளைக் கேட்ட கோவில் காவல் தலைவரும், தலைமைக் குருக்களும் அவர்களுக்கு என்னதான் நேர்ந்திருக்கும் என்று மனங்குழம்பி நின்றனர். அப்பொழுது ஒருவர் வந்து, “நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்” என்று அவர்களிடம் அறிவித்தார். உடனே காவல் தலைவர் ஏவலர்களுடன் கோவிலுக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றார். மக்கள் கல்லெறிவார்கள் என்று அவர் அஞ்சியதால் வன்முறை எதுவும் கையாளவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
ஏப்ரல் 15 : பதிலுரைப் பாடல்
திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 6a)
பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
அல்லது: அல்லேலூயா.
1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி
3
என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி
5
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி
7
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.
8
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 3: 16
அல்லேலூயா, அல்லேலூயா!
தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா.
ஏப்ரல் 15 : நற்செய்தி வாசகம்
தம் மகன் வழியாக உலகை மீட்கவே, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-21
அக்காலத்தில்
இயேசு நிக்கதேமிடம் கூறியது: தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
---------------------------------------------------
கடவுளின் அன்பிற்குப் பதிலன்பு
பாஸ்கா காலத்தின் இரண்டாம் வாரம் புதன்கிழமை
I திருத்தூதர் பணிகள் 5: 17-28
திருப்பாடல் 34: 1-2, 3-4, 5-6, 7-8 (6a)
II யோவான் 3: 16-21
கடவுளின் அன்பிற்குப் பதிலன்பு
அறிவோம்; துணிவுடன் அறிவிப்போம்
இருளில் இருக்கும் ஒருவர் ஒளிக்கு வரவேண்டும். இங்கே இருள் என்பதை அறியாமையோடும், ஒளி என்பதைக் கடவுளோடும் நாம் ஒப்பிடலாம்.
நிக்கதேம் பரிசேயர் தலைவரில் ஒருவர். எனினும் அவர் ஆண்டவரைப் பற்றி முழுமையாய் அறிந்திருக்க வில்லை. அதனுடைய அடையாளம்தான் அவர் இரவு நேரத்தில் இயேசுவிடம் வந்தது. அறியாமை என்ற இருளில் இருந்த அவருக்கு இயேசு கிறிஸ்து ஆண்டவரின் பேரன்பைப் பற்றி எடுத்துரைத்து, அவரை ஆண்டவரைப் பற்றி ஞானத்தில் வளர்த்தெடுக்கின்றார். இதன்பிறகு அவர் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவராய் வாழ்கின்றார்.
முதல் வாசகத்தில் ஆண்டவரின் பேரன்பை ஆழமாய் உணர்ந்து கொண்ட திருத்தூதர்கள் தலைமைச் சங்கத்தாரின் எதிர்ப்பையும் மீறி வாழ்வைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு மிகத் துணிச்சலாக அறிவிக்கின்றார்கள். ஒரு காலத்தில் யூதர்களுக்கு அஞ்சி, அறைக்குள் தங்களை அடைத்துக் கொண்ட திருத்தூதர்கள் உயிர்த்த ஆண்டவரைக் கண்டதும், துணிவோடு வாழ்வைப் பற்றிய நற்செய்தியை, இயேசுவைப் பற்றி அறிவிக்கின்றார்கள்.
இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 34, ஆண்டவர் தன்னை ஆபத்துகளிலிருந்து காத்ததற்கு நன்றியாகப் பாடப்பட்ட பாடலாகும். ஒரு பக்கம் சவுல், இன்னொரு பக்கம் எதிரிகள் இப்படிப் பல இடங்களிலிருந்து வந்த ஆபத்துகளிலிருந்து ஆண்டவர் தாவீதைக் காத்ததால், தாவீது, “ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்” என்று பாடுகின்றார்.
தாவீது, நிக்கேதம், திருத்தூதர்கள் இவர்கள் யாவரும் கடவுளின் பேரன்பை உணர்ந்தார்கள். உணர்ந்தது மட்டுமல்லமல், அதனை மற்றவருக்கு அறிவித்தார்கள். நாமும் கடவுளின் பேரன்பை உணர்ந்து, அதனை மற்றவருக்கு அறிவிப்போம்.
கடவுளின் அன்பை உணர்ந்த மருத்துவர்
ரிச்சர்ட் டியோ என்றொரு மருத்துவர் இருந்தார். பணமும் புகழும் வெற்றியுமே பெரிதென நினைத்த இவர் அவற்றிற்காகக் கடுமையாக உழைத்தார். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், தன்னிடத்தில் வந்த நோயாளர்களை நோயாளர்களாகப் பார்க்காமல், பணம் காய்க்கும் மரங்களாகப் பார்த்து, அவர்களிடமிருந்து எவ்வளவு பணம் பறிக்க முடியுமோ, அவ்வளவு பணம் பறித்தார்.
ஒரு கட்டத்தில் இவருக்கு நுரையிரலில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குப் பிறகு இவரது வாழ்க்கை முற்றிலுமாக மாறிப் போனது. தன்னிடம் வந்த நோயாளர்களை வெறும் ஜடமாகப் பார்த்து வந்த இவர் அவர்கள் படும் துன்பங்களையும் வேதனைகளையும் அறிந்து, அவர்களுக்கு உரியமுறையில் சிகிச்சை அளித்தார். இவற்றிற்கெல்லாம் காரணமாக அமைந்தது, இவருக்குப் புற்று நோய் இருப்பது தெரிந்ததும் கடவுளின் பேரன்பை உணர்ந்து கொண்டதுதான்.
எப்போது இவர் கடவுளின் பேரன்பை உணர்ந்தாரோ, அப்போதே பணம், புகழ், வெற்றி எல்லாம் ஒன்றுமே இல்லை என்று இவர் அறிந்தார். இதற்குப் பிறகு இவர் சிறிது காலமே வாழ்ந்தாலும் தான் உணர்ந்த கடவுளின் பேரன்பை தன்னுடைய செயல்கள் மூலம் மற்றவருக்கு வெளிப்படுத்தினார்.
கடவுளின் பேரன்புக்கு முன்பாக இவ்வுலகில் எதுவுமே பெரிதில்லை; அந்த அன்பை முதலில் நாம் உணரவேண்டும். உணர்வது மட்டுமல்லாமல், அதனை நமுடைய வாழ்வால் மற்றவருக்கு உணர்த்த வேண்டும்.
ஆண்டவரின் வார்த்தை
“உங்கள் மனப்பாங்கு புதிப்பிக்கப்பட வேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள்” (எபே 4: 24
தீர்மானங்கள்
1) ஆண்டவரைப் பற்றிய அறிவில் வளர்வோம்
2) ஆண்டவரை அறியும் நாம், அவரை அடுத்தவருக்கும் அறிவிப்போம்.
3) கடவுள் தன்னுடைய அடியார்களை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதால், அவரைப் பற்றித் துணிவுடன் மற்றவருக்கு அறிவிப்போம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்

