செ.சாா்லஸ் செபஸ்டின்
#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை #இன்றைய வசனம் சிந்தனை*
*“..அவர்களிடையே நான் இருக்கின்றேன்”*
அது ஒரு சிற்றூரில் இருந்த பங்குக்கோயில். அதில், ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியின், மறையுரையின்போது பங்குப் பணியாளர் ஒரு பெரியவரையும் ஓர் இளைஞரையும் அழைத்தார். அவர்கள் இருவரும் அவருடைய அழைப்பினை ஏற்றுத் திருப்பீடத்திற்கு முன்பு வந்தார்கள்.
அப்போது பங்குப் பணியாளர் அவர்கள் இருவரையும் தன்னுடைய வலப்புறமும் இடப்புறமும் நிற்கச் சொல்லிவிட்டு, தன்னுடைய இரண்டு கைகளையும் இயேசு சிலுவையில் விரித்து வைத்திருப்பதைப் போன்று விரித்து வைத்துக் கொண்டார். பின்னர் அவர் பெரியவரைப் பார்த்து, “நீங்கள்தான் தந்தையாம் கடவுள்” என்றார். இளைஞனைப் பார்த்து, “நீதான் வீழ்ந்து கிடக்கும் மானுடம்” என்றார். தன்னை, “இயேசு கிறிஸ்து” என்று சொன்னார்.
கோயிலில் திரண்டிருந்த மக்கள் அனைவரும் பங்குப் பணியாளர் என்ன செய்யப் போகிறாரோ என்று அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். பங்குப் பணியாளர் தனது வலப்புறமும் இடப்புறமும் இருந்த பெரியவரையும் இளைஞரையும் தன்னுடைய கை நன்றாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்ய, அவர் விரித்து வைத்திருந்த இரு கைகளையும் ஒன்றாகக் கொண்டு வந்தார். இதனால் வலப்புறமும் இடப்புறமும் இருந்த இருவரும் ஒருவரையொருவர் தொடும் அளவுக்கு அருகருகே வந்தார்கள்.
உடனே அவர் அவர்கள் இருவரையும் தன்னுடைய கையை விட்டுவிடச் சொல்லிவிட்டு, ஒருவர் மற்றவருடைய கைகளைப் பற்றிக்கொள்ளச் சொல்ல, அவர்களும் ஒருவர் மற்றவருடைய கைகளைப் பற்றிக் கொண்டார்கள்.
நடந்த எல்லாவற்றையும் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த இறைமக்களிடம் பங்குப் பணியாளர், “தந்தையாம் கடவுளுக்கும் வீழ்ந்து கிடந்த மானுடத்திற்கும் இடையே இயேசு இணைப்பாளராக இருந்து ஒப்புரவைக் கொண்டு வந்ததை அடையாள முறையில் உணர்த்தும் பொருட்டே, நான் இப்படியொரு செயலைச் செய்து காட்டினேன். எங்கே கடவுளுக்கு மனிதருக்கும், ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கும் இடையே ஒன்றிப்பு ஏற்படுகின்றதோ, அங்கேதான் கடவுள் இருக்கின்றார்” என்று தெளிவாய்ச் சொல்லி முடித்தார்.
ஆம், எங்கே மனிதர்கள் ஒன்றித்திருக்கின்றார்களோ அங்கேதான் கடவுள் இருக்கின்றார். அதையே இந்த நிகழ்வும் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.
*திருவிவிலியப் பின்னணி:*
காணமற்போன ஆட்டினை – மனிதரை - எப்படி தேடிக் கொண்டு வரவேண்டும் என்ற பின்னணில் இன்றைய நற்செய்தி வாசகம் இருக்கின்றது. ஒரு மனிதர் பாவம் செய்கின்றபோது, அவரை எப்படி நல்வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்கு தனியாகவும், இருவர், மூவராகவும், அல்லது திருஅவையாகவும் சென்று அவரோடு பேசி, அவரை நல்வழிக்குக் கொண்டு வரலாம் என்று சொல்லும் இயேசு, இவ்வாறு ஒருவர் நல்வழிக்குக் கொண்டு வரப்படும்போது, சகோதரர் சகோதரிகள் நடுவில் ஒன்றிப்பு ஏற்படும்போது அங்கே தான் இருப்பதாகச் சொல்கின்றார்.
யூதர்களைப் பொறுத்தவரையில், பத்துப் பேர் இருந்தால், தொழுகைக் கூடத்தை நடத்தலாம் என்றொரு நியதி இருந்தது. இயேசுவோ, “இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன்” என்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரின் மாட்சி அல்லது அவரது உடனுறைதல் எருசலேம் திருக்கோயிலை விட்டு வெளியே செல்வதைக் குறித்து வாசிக்கின்றோம். இதற்கு முக்கியக் காரணம், மக்கள் கடவுளோடு ஒப்புரவாக இல்லை, சக மனிதர்களையும் அவர்கள் மனிதர்களாக நடத்தவில்லை. இறையன்பும் பிறரன்பும் இடத்தில்தான் கடவுள் இருப்பார். எனவே, நாம் கடவுளையும் அவரது சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்களையும் அன்பு, அவரது உடனுறைதல் நம் நடுவில் இருக்கச் செய்வோம்.
*சிந்தனைக்கு:*
உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில்தான் கடவுள் இருக்கின்றார்.
நாம் ஒவ்வொருவரும் அடுத்திருப்பவருக்குக் காவலாளிகள், அதனால் அவர்கள் வழி தவறிப்போகாமல் பார்த்துக் கொள்வது நம் கடமை.
மனிதருக்கு எதிராகச் செய்யும் பாவம் அனைத்தும் கடவுளுக்கு எதிராகச் செய்யப்படும் பாவமே.
*இறைவாக்கு:*
‘அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கின்றார்’ (1 யோவா 4:8) என்பார் யோவான். எனவே, கடவுளையும் அடுத்திருப்பவரையும் உண்மையாய் அன்புசெய்து, கடவுளின் உடனுறைதல் நம் நடுவில் இருக்கச் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
*- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*