#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று ஜூன்.29
.
எழுத்தாளர் அனுராதா ரமணன் பிறந்த தினம் இன்று.
பல்வேறு தலைப்புகளில் புதினங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார்.
இவரது சில கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன.
தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன.
அனுராதா தமிழ் நாட்டிலிலுள்ள தஞ்சாவூரில் பிறந்தவர்.
நடிகரான அவரது தாத்தா ஆர்.பாலசுப்பிர மணியத்தின் தூண்டுதலால் இவர் எழுத்தாளரானார்.
இவர் கணவர் பெயர் ரமணன்
இவர்களுக்கு இரண்டு மகள்கள் உண்டு.
அனுராதாவுக்குக் கலைகளில் நல்ல ஈடுபாடு இருந்தது.
கலைக் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடிக்கும் முன்னரே திருமணம் ஆயிற்று.
அவருடைய திருமணம் ஒரு கசப்பான அனுபவமாகவே இருந்தது என்பதை அவரே எழுதியிருக்கிறார்.
இருபத்துமூன்று வயதிலேயே இரு பெண் குழந்தைகளுடன் பிறந்தகம் வந்தார்.
விட்ட படிப்பைத் தொடர்ந்தார். தனி மனுஷியாகத் தன் பெண்களை வளர்க்க முற்பட்டார்
ஆரம்பத்தில் ஓவியராகவும் வடிவமைப்பவராகவும்தான் அவர் பத்திரிகை உலகில் நுழைந்தார்.
Indian Housewife, Grahani aur Grahasti மற்றும் மங்கையர் மலருக்கு வடிவமைப்பவராக இருந்தார்.
ஒருமுறை மங்கை பத்திரிகைக்குத் தன் ஓவியங்களுடன் போனபோது தன் டயரியை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டார்.
அதில் அவர் எழுதியிருந்த குறிப்புகளைக் கண்ட ஆசிரியர் அவரைக் கதை எழுதுமாறு கூறவே மிகுந்த தயக்கத்துடன் எழுதிய கதைதான் கனவு மலர்கள் கருகும்போது.
அதைத் தன் பெயரில் எழுதத் தயங்கி சாம்பவி என்னும் பெயரில் எழுதினார்.
அதன் பிறகு தினமணி கதிரில் நான்கு சுவர்களுக்கு நடுவில் எழுதினார்.
ஓவியரான அவர் 1977இல் எழுத்தாளராக உருவெடுத்தார்.
முப்பத்திரண்டு ஆண்டுகளில் அவர் எழுதிக் குவித்தார் எனலாம்.
கிட்டத்தட்ட 800 நாவல்களும் 1230 சிறுகதைகளும் எழுதியிருக்கிறார் என்று அனுமானிக்கப்படுகிறது.
ஆனந்த விகடனில் பரிசு பெற்ற இவரது சிறை என்னும் கதை திரைப்படமாக்கப்பட்டது.
கூட்டுப் புழுக்கள், ஒரு வீடு இரு வாசல், மலரின் பயணம் போன்ற இவர் கதைகள் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் படமாக்கப்பட்டன.
இவருடைய பல கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாக வெற்றி பெற்றிருக்கின்றன.
சுபமங்களா, வளையோசை போன்ற பத்திரிகை களுக்கு ஆசிரியராக இருந்த அனுபவமும் இவருக்கு உண்டு. எழுத்துக்கான பல விருதுகளும் இவரைத் தேடிவந்தன.
ஒன்பது ஆண்டுகள் தினமலரில் அன்புடன் அந்தரங்கம் என்னும் பத்தியின் மூலம் பலருக்குப் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆலோசனை தந்தார்.
தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களைப் படித்தவர் தான் அனுராதா.
ஆனால் அவர் தன் எழுத்துலகத்தை வேறுமாதிரி உருவாக்கிக்கொண்டார்.
அதற்குக் காரணம் தனி மனுஷியாக, தன் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்ந்து, முழு நேர எழுத்தாளராக இருந்து இரு பெண்களை வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு அவருக்கு இருந்ததே.
2004இல் காஞ்சிமடத் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதியை முறைதவறி நடந்ததாகக் குற்றம் சாட்டியது அனுராதாவுக்குப் பல எதிரிகளையும் நண்பர்களையும் உருவாக்கியது.
.
பெண்களில் பலர் இவரைத் தங்களுக்கு உற்றவராகப் பார்த்தார்கள்; பலர் இவரைத் துரோகியாகவும் பார்க்க முற்பட்டனர்.
2004இல் இவர் விடுத்த வெளிப்படையான குற்றச்சாட்டு மதவாதிகள் சிலரைப் பாதித்த விதம் இவரது இறப்புக்குப் பிறகுகூடத் தெரிந்தது.
எதனாலும் பாதிக்கப்படாமல் அனுராதா தொடர்ந்து கதை எழுதிக்கொண்டும் தங்களுள் ஒருத்தியாக மற்றவர் கருதும்படி நகைச்சுவையுடனும் நயத்துடனும் நட்புடனும் கட்டுரைகள் எழுதிக்கொண்டும் தான் இருந்தார்
2004இல் அளித்த குறிப்பிட்ட பேட்டியில் சாகும்வரை எழுதிக்கொண்டும் வரைந்துகொண்டும் இருக்க வேண்டுமென அனுராதா கூறியிருக்கிறார். அப்படியேதான் இருந்தார்.
அமெரிக்காவில் வசிக்கும் அவருடைய பெண்கள் சுதாவும் சுபாவும் அவர் வெளியிட்டுள்ள வாழ்க்கைக் குறிப்புகளையும், அவர் எப்போதும் கிறுக்கும் சித்திரங்களையும் வெளியிட்டால் அது பெண்கள் வாழ்க்கையை விளக்கும் சரித்திரக் கண்ணியாக அமையும்.
இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக் கோரும் தம்பதியருக்கு சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்
மே 16, 2010 இல் மாரடைப்பால் சென்னையில் தனது 62ஆவது வயதில் காலமானார் அனுராதா ரமணன்.


