ShareChat
click to see wallet page
search
புதிய பாய்ச்சலில் பழைய திமுக.. டெல்லியை அதிரவைக்கும் திராவிடக் குரல் -முனைவர்.காந்தி பாபு “வடக்கே இருந்து வரும் ஆதிக்கக் காற்றுக்கு ஒருபோதும் தெற்கே இடமில்லை" என்பதைத் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் இந்த மண்ணில் ஆழமாக விதைத்துச் சென்றிருக்கிறார்கள். இன்று அதே முழக்கத்தை 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' எனும் தமிழ்நாட்டின் தளபதி, டெல்லி ஏகாதிபத்தியத்தின் செவிகளில் அறைந்து சொல்லியிருக்கிறார். ஒன்றிய பாசிச பாஜக அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கைக்கு எதிராக தனது கடும் கண்டனத்தையும், எச்சரிக்கையையும் பதிவு செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள காணொளி வெறும் அரசியல் உரையல்ல; டெல்லி ஆதிக்கத்தின் செருக்கை அடக்கப் புறப்பட்ட திராவிடத்தின் போர்க்குரல்! தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டின் குரலை ஒடுக்க நினைக்கும் டெல்லியின் சூழ்ச்சி இன்று நேற்று தொடங்கியதல்ல. 1999-ஆம் ஆண்டிலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் இது குறித்து மிகத் தெளிவான வரலாற்றுப் பாடத்தை முன்வைத்தார். குடும்ப நலத் திட்டத்தை இந்தியாவில் முன்னணியில் நின்று செயல்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டிற்குப் பரிசாக அதன் நாடாளுமன்ற இடங்களைக் குறைப்பது மிகப்பெரிய வேதனைக்குரியது என கலைஞர் அன்றே சாடினார். “1962-ஆம் ஆண்டு வரை 41-ஆக இருந்த தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகள், 1967-இல் 39-ஆகக் குறைக்கப்பட்டன. மக்கள் தொகையைக் குறைத்தது குற்றமா? நாட்டு நலனுக்காகச் சிறப்பாக செயல்பட்ட ஒரு மாநிலத்தைத் தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?. மக்கள்தொகைப் பெருக்க விகிதம் குறைகிறது என்பதற்காகத் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கக்கூடாது; அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்" என 1999-லேயே தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அழுத்தம் கொடுத்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் காட்டிய அதே துணிச்சலோடு, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம்!" என ஒன்றிய பாஜக அரசின் எதேச்சதிகாரத்திற்கு எதிராகக் களம் கண்டுள்ளார். "டீலிமிட்டேஷன்" (Delimitation) என்ற பெயரில் தனது எல்லையைத் தாண்டி பாஜக அரசு தென்னிந்திய மாநிலங்களை வஞ்சிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்கி, தென்னக மாநிலங்களின் குரலை ஒடுக்க நினைக்கும் 'புல்டோசர்' அரசியலை ஒழித்துக் காட்டுவோம் எனச் சூளுரைத்துள்ளார். மேலும், பிரதமர் மோடி தமிழர்களையும், தென் மாநில மக்களையும் இரண்டாம்தரக் குடிமக்களாகப் பார்க்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தண்டனை வழங்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் கர்ஜித்துள்ளார். ஒன்றிய பாசிச பாஜக அரசின் ஆணவப்போக்கைக் கண்டித்தும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக்கொடி ஏற்றி, நமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என அவர் அறைகூவல் விடுத்துள்ளார். எவ்வித ஆலோசனையுமின்றி, அவசர கதியில் மேற்கொள்ளப்படும் இந்த அரசியல் சாசனத் திருத்தம் மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும், இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், தமிழகத்தைப் பாதிக்கும் வகையிலும் வட மாநிலங்களுக்குச் சாதகமாகவும் இந்தத் தொகுதி மறுவரையறையை திரும்பப்பெறாவிட்டால், தமிழகம் அமைதியாக இருக்காது எனவும், தனது தலைமையில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். “தேர்தலும், அதிகாரமும் இரண்டாம் பட்சம்; சுயமரியாதையும், மாநில உரிமைகளுமே திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சு. இதுவரை டெல்லியின் பிடிக்குள் வராத தமிழ்நாடு, இனி டெல்லியைத் தன் ஆளுகைக்குள் கொண்டு வரும்!" எனத் தைரியமாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் “அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில், அவர் இயற்றிய அரசியலமைப்பைக் காக்கப் புறப்பட்டுள்ள இந்த திராவிடப்படை, டெல்லி ஏகாதிபத்தியத்திற்குப் பாடம் புகட்டும். தமிழ்நாடு இனி அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்காது என்ற முழக்கம், இனி டெல்லி சொல்வதை தமிழ்நாடு கேட்காது; மாறாக, தமிழ்நாடு சொல்வதைத்தான் டெல்லி கேட்டாக வேண்டும்” என்ற நிலையை உருவாக்கும் எனவும் கடுமையாக சாடியுள்ளார். கடந்தகாலத்தில் 1950-களிலும் 60-களிலும் இதே டெல்லி, இந்தி திணிப்பு எனும் ஆயுதத்தோடு தமிழ்நாட்டின் வாசலில் நின்றபோது, "தமிழ்நாட்டைத் தனிநாடாக்கி விடுவோம்" என்று கர்ஜித்த பேரறிஞர் அண்ணா சொன்ன "தனிநாடு" கோரிக்கை வெறும் பிரிவினைவாதமல்ல, அது "சுயாட்சி" எனும் தார்மீக உரிமை என்பதை கருத்தில்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் , மாநில உரிமைகளை மீட்கும் இந்த அறப்போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும் எனவும் தமிழ்நாட்டின் ஒரு அங்குல உரிமையைக் கூட விட்டுக் கொடுக்காமல், ஒன்றிய அரசின் ஆதிக்கத்தைச் சாய்த்த பழைய திமுகவின் வீரியத்தை, அதே போராட்டக் குணத்தை இந்தியா மீண்டும் காணப்போகிறது என்றும் ஒன்றிய அரசுக்கு தீர்க்கமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தமிழ்நாட்டை வஞ்சித்தால் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் போராட்டங்கள் வெடிக்கும் என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் எச்சரிக்கை, ஆர்எஸ்எஸ்-பாஜக கூடாரத்தை அதிரச் செய்திருக்கிறது. தமிழ்நாடு போராடும்!. தமிழ்நாடு வெல்லும்!. ஸ்டாலின் தொடரட்டும்… தமிழ்நாடு வெல்லட்டும்!. 🖤❤️ #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat