பைபிள் வாசகங்கள்:
ஏப்ரல் 26 : முதல் வாசகம்
கடவுள் அவரை ஆண்டவரும் மெசியாவுமாக்கினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14a, 36-41
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.”
அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்குப் பேதுரு, அவர்களிடம், “நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது” என்றார்.
மேலும் அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி, “நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார். அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
ஏப்ரல் 26 : பதிலுரைப் பாடல்
திபா 23: 1-3a. 3b-4. 5. 6. (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
அல்லது: அல்லேலூயா.
1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3a
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். - பல்லவி
3b
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்.
4
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி
5
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி
6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி
ஏப்ரல் 26 : இரண்டாம் வாசகம்
உங்கள் ஆன்மாக்களின் ஆயரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 20b-25
அன்பிற்குரியவர்களே,
நன்மை செய்தும், அதற்காகப் பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும். கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன் மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்.
“வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை.” பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; நியாயமாகத் தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார். சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்.
நீங்கள் வழி தவறி அலையும் ஆடுகளைப்போல இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 14-15
அல்லேலூயா, அல்லேலூயா!
நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
ஏப்ரல் 26 : நற்செய்தி வாசகம்
ஆடுகளுக்கு வாயில் நானே.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-10
அக்காலத்தில்
இயேசு கூறியது: ‘‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்குமுன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். அறியாத ஒருவரை அவை பின்தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது.”
இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
மீண்டும் இயேசு கூறியது: ‘‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே. எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
--------------------------------------------------------------------
ஆன்மாக்களின் ஆயர் இயேசு
பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு
(திப 2: 14a, 36-41; 1 பேது 2: 20b-25; யோவா 10: 1-10)
ஆன்மாக்களின் ஆயர் இயேசு
ஓவியர் ஆயர் ஆனார்
பிரபல ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் ஓவியங்களைத் தத்ரூபமாக வரையக் கூடியவர்.
ஒருநாள் அவர் ஒரு பெண்மணி தன் கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு, புயற்காற்றில் தத்தளிப்பது மாதிரி ஓவியம் வரைந்து கொண்டிருந்தார். அவர் அந்த ஓவியத்தை வரைய வரைய அவருக்குள்ளே இப்படியோர் எண்ணம் தோன்றியது: “நாம் இப்படி மனிதர்கள் புயலில் தத்தளிப்பது மாதிரி ஓவியம் வரைவதற்குப் பதில், வாழ்க்கையில் தத்தளித்துக் கொண்டிக்கும் மனிதர்களை மீட்பதற்கு அவர்களுக்கு ஏன் நற்செய்தியை அறிவிக்கக் கூடாது?”
இந்த எண்ணம் அவருக்குள் தோன்றியதும் அவர் ஓவியம் வரைவதை விட்டுவிட்டு, ஆப்ரிக்காவிற்குப் புறப்பட்டுச் சென்று, அங்கே நற்செய்தியை அறிவித்து, பின்னாளில் ஓர் ஆயரானார்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் ஓவியர் ஆன்மாக்களை மீட்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததும், தான் செய்து வந்த வேலையை விட்டுவிட்டு நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்டுச் சென்றார். பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, ‘ஆண்டவர் இயேசு ஆன்மாக்களின் ஆயர்’ என்ற சிந்தனையைத் தருகின்றது. ஆன்மாக்களின் ஆயரான இயேசு மற்ற ஆயர்களிடமிருந்து எப்படி வித்தியாசமானவர்? அவரது குரலை நாம் ஏன் கேட்டு நடக்க வேண்டும்? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.
வாயிலாக இருப்பவர்
வழிகாட்டி என்று தங்களை அழைத்துக்கொண்டு மக்களைப் புதை குழியில் தள்ளுவோர் இன்று ஏராளமானோர் பெருகிவிட்டார்கள். இதுபோன்ற தவறான வழிகாட்டிகளைப் புறந்தள்ளிவிட்டு, நல்ல வழிகாட்டிகளை நாம் இனங்கண்டு கொள்வது மிகவும் இன்றியமையாதது.
இஸ்ரயேலிலும் இதுபோன்ற தவறான வழிகாட்டிகள் பலர் இருந்தார்கள். இவர்கள் மக்களுக்கு நல்வழி காட்டுவதற்குப் பதில் அவர்களைத் தவறான பாதையில் வழி நடத்தினார்கள். இன்னும் சொல்லப் போனால், வேலியே பயிரை மேய்வது போல், இவர்கள் மந்தையை மேய்க்காமல், அதை மேய்ந்தார்கள் (எசே 34:8). இதனால்தான் இயேசு அவர்களைக் குறித்துச் சொல்லும்போது, “எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே” (யோவா 10:8) என்கிறார். இப்படிச் சொல்லிவிட்டு, “நானே வாயில்” என்கின்றார் அவர்.
நானே வாயில் என்று இயேசு சொல்வது, “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி, எவரும் தந்தையிடம் வருவதில்லை” (யோவா 14:6) என்ற அவரின் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன. ஒருவர் இயேசுவின் வழியாய்த்தான் தந்தையிடம் செல்ல முடியும் என்றால், அவர் இயேசுவின் குரல் கேட்பதும், அவரைப் பின்தொடர்வதும் இன்றியமையாதவையாக இருக்கின்றன. இயேசு வழியாக மட்டுமில்லாமல், ஒளியாகவும் இருக்கின்றார் (யோவா 8:12). அதனால் அவரைப் பின்தொடர்கின்ற யாரும் இடறிவிழுவதற்கு வாய்ப்பே இல்லை.
வாழ்வளிப்பவர்
போலிகளைப் பின்தொடராமல், நல்ல ஆயாராம் இயேசு கிறிஸ்துவைப் பின்தொடர்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி பார்த்தோம். இவரை நாம் ஏன் பின்தொடர வேண்டும் என்ற கேள்வி நமக்கு எழலாம். இதற்கான பதிலை இன்றைய இரண்டாம் வாசகத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.
இஸ்ரயேலில் இயேசுவுக்கு முன்பாக இருந்த ஆயர்கள் திருடர்களும் கொள்ளையர்களுமாய், மந்தையையே மேய்ந்தவர்களாய் இருந்த வேளையில், கிறிஸ்து கிறிஸ்து மந்தைக்காக – மக்களுக்காகத் துன்பப்படும் ஆன்மாக்களின் ஆயராக இருந்தார். இதைப் பற்றிப் பேதுரு இன்றைய இரண்டாம் வாசகத்தில் குறிப்பிடும்போது, “நன்மை செய்வதும், அதற்காகப் பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும். கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று, ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார்” என்பார்.
கிறிஸ்து நமக்காகத் துன்புற்றார் எனில், நாம் வாழ்வு பெறுவதற்காகத் துன்புற்றார். அதனால் அவரின் அடிச்சுவடுகளை நாம் பின்பற்றி நடந்தால், இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 23 இல் தாவீது சொல்வது போல் நமக்கு குறையேதும் இருக்காது. ஒரு சாதாரண ஆடு மேய்க்கும் சிறுவனாக இருந்து, பின்னாளில் இஸ்ரயேலின் அரசனாக உயர்ந்த தாவீது, நல்ல ஆயாராம் ஆண்டவரின் வழி நடந்தார். அதனால் ஆண்டவர் அவரை எந்தவொரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.
நாமும் நம்மை முழுமையாய் அறிந்திருக்கும், நமக்காக வாழ்வு தந்திருக்கும் நல்ல ஆயாராம் இயேசுவின் வழி நடந்தால், நமக்கு எந்தவொரு குறையும் இருக்காது.
மனம்மாறி, அவர் குரல் கேட்போம்
“நாமும் ஒரு காலத்தில் அறியாமையில் இருந்தோம். கீழ்ப்படியாமல் இருந்தோம். நெறிதவறிச் சென்றோம். தீய நாட்டங்களுக்கும் பல்வகைச் சிற்றின்பங்களுக்கும் அடிமைகளாய் இருந்தோம்” (தீத் 3:3) – இது புனித பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்தில் இடம்பெறும் வார்த்தைகள் ஆகும். ஒருவர் அறியாமையில் இருக்கும்போது அவர் எத்தகைய கேட்டினை வருவித்துக் கொள்கின்றார் என்பதைப் பவுலின் இவ்வார்த்தைகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.
யூதர்களும் தங்கள் அறியாமையால்; அல்லது திருச்சட்டம் அறியாதவர் மூலம் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள்; ஆனால், கடவுள் அவரை மூன்றாம் நாளில் வெற்றி வீரராய் உயிர்த்தெழச் செய்தார். இதையெல்லாம் பேதுரு, பதினொருவருடன், பெந்தக்கோஸ்து நாளில் திரண்டிருந்த மக்களிடம் எடுத்துச் சொன்னபோது, அவர்கள் உள்ளம் குத்தப்பட்டவர்களாய், “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கின்றார்கள். அப்போது பேதுரு அவர்களிடம், “நீங்கள் மனம் மாறுங்கள்... இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்” என்கிறார். அவர்களும் அவ்வாறே செய்து திருமுழுக்குப் பெறுகின்றார்கள். இவ்வாறு அன்று மூவாயிரம் பேர் திருமுழுக்குப் பெறுகின்றார்கள்.
அன்று யூதர்களைப் போன்று இன்று நாமும் அறியாமையால் நமக்காக வாழ்வளித்த இயேசுவைப் பின்தொடராமல், நம்முடைய வழியில்; அல்லது நம்மைத் தவறாக வழிநடத்துவோரின் வழியில் நடக்கலாம். இத்தகைய சூழ்நிலையில் நாம் மனம்மாறி, ஆண்டவர் இயேசுவைப் பின்தொடர்வது மிகவும் அவசியமாக இருக்கின்றது.
மனமாற்றம் என்பது மேம்போக்காக இல்லாமல், உள்ளார்ந்த விதமாய், உண்மையாய் இருக்க வேண்டும். இதைப் பற்றித் திருமுழுக்கு யோவான் குறிப்பிடும்போது, “நீங்கள் மனம்மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்” (மத் 3:8) என்பார். ஆகையால், நாம் அறியாமையால் வழி தவறி அலைந்திருந்தால், மனம் மாறி, நமக்கு வாழ்வளித்த நல்ல ஆயாராம் இயேசுவின் வழி நடந்து, அவர் தரும் ஆசிகளைப் பெறுவோம்.
சிந்தனைக்கு
‘ஆண்டவரை நம்புங்கள். ஏனெனில் அவர் நல்ல ஆயர்; அவர் தன் ஆடுகளை அறிவார்; ஆடுகளும் அவரை அறியும்” என்பார் ரசல் பல்லார்ட் என்ற அறிஞர். எனவே, நாம் நல்ல ஆயாராம் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அவர் குரல் கேட்டு நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்

