#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று ஜூன் 29
1976 - சேஷெல்ஸ் இங்கிலாந்திடமிருந்து விடுதலையடைந்தது. உண்மையில், ஐரோப்பியக் குடியேற்றங்கள் உருவாகதற்குமுன், தொல்குடியினர் என்று யாருமே வாழந்திராத நாடு, இந்த சேஷெல்ஸ்(இதுதான் சரியான உச்சரிப்பு)! வாஸ்கோ ட-காமா, இந்தியாவுக்கு நான்காவது முறையாகப் பயணித்தபோது, 1503இல் இத்தீவுகளைக் கண்டதே, இத்தீவுகளைப் பற்றிய முதல் பதிவு. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்ப்பெனியின் கப்பலொன்றில் வந்தவர்கள், 1609இல் இங்கு தரையிறங்கியதே முதலில் பதிவு செய்யப்பட்ட மனித வருகை. அதன்பின், ஆஃப்ரிக்க, ஆசிய வணிகத்தில், இடையில் தங்கிச் செல்லுமிடமாகப் பயன்படுத்தப்பட்டதுடன், இத்தீவுகளில் பல, கடற்கொள்ளையர்கள் பதுங்குமிடமாகவும் பயன்பட்டன. ஆலிவர் லவாசியர் என்ற ஃப்ரெஞ்ச்சுக் கடற்கொள்ளையர், உலக வரலாற்றின் மிகப்பெரிய புதையல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும், சுமார் 100 கோடி (இங்கிலாந்து)பவுண்டுகள் (இன்று பல்லாயிரம் கோடி ரூபாய்களாக இருக்கும்!) மதிப்புள்ள, கொள்ளைச் செல்வத்தை, இத்தீவுகளில் ஒன்றில் புதைத்திருப்பதாக நம்பப்படுகிறது! 1756இல் ஃப்ரான்சால் கைப்பற்றப்பட்டு, குடியேற்றமாக்கப்பட்ட சேஷெல்சில், கரும்புத் தோட்டங்களில் வேலைசெய்ய, ஏராளமான ஆஃப்ரிக்கர்கள் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டனர். ஃப்ரெஞ்ச்சுப் புரட்சியை முறியடிக்க நடைபெற்ற முதல் கூட்டணிப் போரின்போது, இங்கிலாந்து, சேஷெல்சைக் கைப்பற்றியது. சேஷெல்சை ஆட்சிபுரிந்த ஃப்ரெஞ்ச்சுக்காரர்கள், இங்கிலாந்துப் படைகளுடன் மோதலில் ஈடுபடாமல் சுமுகமாகவே அதிகாரத்தை ஒப்படைத்து, தங்கள் நிலங்களைப் பாதுகாத்துக்கொண்டனர். ஆங்கிலேயர்களும் ஆஃப்ரிக்கர்களையும், மடகாஸ்கரின் மடகாசி மக்களையும் அடிமைகளாக 'இறக்குமதி' செய்தனர். முதலில் ஃப்ரெஞ்ச் ஆட்சியிருந்ததால், ஃப்ரெஞ்ச் மொழியுடன் ஆஃப்ரிக்க மொழிகள் கலந்து சேஷெல்வா கிரியோல் என்ற புதிய மொழி உருவானது. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் கலந்து உருவாகும் முழுமையான (இலக்கணத்துடன்கூடிய) புதிய மொழி ஆங்கிலத்தில் கிரியோல் என்றழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் குடியேற்றங்களைக் கைவிட்ட நடவடிக்கைகளின்போது, சேஷெல்சுக்கும் விடுதலை கிடைத்தது. இன்றும் ஃப்ரெஞ்ச், ஆங்கிலம், சேஷெல்வா கிரியோல் ஆகியவைதான் ஆட்சி மொழிகளாக உள்ளன. 115இல் வெறும் 33 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கிறார்கள். உலகிலேயே கடல் நடுவிலுள்ள தீவுகளில் க்ரானைட் காணப்படுவது இங்கு மட்டும்தான். தாவர இனங்களிலேயே மிகப்பெரிய விதைகொண்டதாகக் குறிப்பிடப்படும், காய் முற்ற இருபதாண்டுகள் ஆகக்கூடிய, சுமார் 30 கிலோவரை எடைகொண்ட கடல் தேங்காய் இங்கு மட்டுமே வளர்கிறது. தேங்காய்த் திருடன் என்றழைக்கப்படும் மிகப்பெரிய நண்டு(கால்களை நீட்டினால் மூன்றடி!) உட்பட பல அபூர்வ உயிரினங்களின் தாயகமாக சேஷெல்ஸ் விளங்குகிறது. உயர் வருவாயப் பொருளாதாரங்களாக உலக வங்கியால் வகைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு ஆஃப்ரிக்க நாடுகளில் சேஷெல்சும் ஒன்று. மற்றொன்று மொரீஷியஸ்!

