#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 13.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
உற்பனம்போல் கொண்டு உற்றஅவர் மாதாவும்
மகனே யின்றிரவில் மனஞ்சலித்து நான்வாடி
அகம்வைத்த எண்ணம் அறிந்துசிவ நாரணரும்
வந்துசொன்ன வுத்தரவை மகனேநீ கேளுவென்று
விந்து வழிக்கிளையோர் மிகுவாகக் கேட்டிருக்கச்
சொல்லுகிறா ளந்தச் சொற்பனத்தை யன்போரே
.
விளக்கம்
=========
இதை உண்மையாக நம்பி அவரின் தாய் தன் மகனை நோக்கி, மகனே இன்றிரவு நான் உன் நோயின் துன்பத்தைப் பற்றிய எண்ணத்தோடு மனம் வாடி இருந்ததை அறிந்து சிவனின் மைத்துனராகிய திருமால் சொல்லிச்சென்ற கட்டளையை நீ கேட்பாயாக என்றாள்.
.
.
அகிலம்
========
நல்லுறவாய்க் கேளுமென்று நவிலுவா ளன்போரே
ஆயிரத் தெட்டு ஆண்டிதுவா மிவ்வருசம்
மாசியென்ற மாதமிது வாய்த்ததேதி பத்தொன்பது
இம்மாத மித்தேதி ஏற்றதிருச் செந்தூரில்
நம்மாணை கொடியேறி நல்லதிரு நாள்நடக்கு
அங்குன் மகனை அழைத்துவ ருவாயானால்
எங்குள்ளோ ருமறிய இப்பிணி யுந்தீர்த்து
நல்லபே றுங்கொடுப்போம் நம்மாணை தப்பாதெனச்
சொல்லவே கண்டேன் சுவாமிகரு மேனிநிறம்
.
விளக்கம்
=========
அப்போது தங்கள் உறவினர்களும் கேட்டுக் கொணடிருக்க, சொல்லுகின்றாள் அன்புடையோரே கேட்பீர்களாக.
ஆயிரத்து எட்டாம் ஆண்டு ஆகிய இந்த ஆண்டில், மாசி மாதம் பத்தொன்பதாம் தேதி உயர்வு பொருந்திய திருச்செந்தூரில் கொடி ஏற்றப்பட்டு நல்ல முறையில் திருவிழா நடக்கிறது. அங்கே உன் மகனை அழைத்து வந்தால் இவ்வுலக மக்கள் அறியும்படியாக உன் மகனுடைய நொயைத் தீர்த்து, மிகவும் ந்னமையான நல்ல உயர்வும் கொடுப்போம். இது சத்தியம். நம் பேரில் ஆணை. இது தவறாமல் நடக்கும் என்று திருமால் என்னிடம் அருளினார். அவர் கருமேனி நிறமுடையவர்.
.
.
அகிலம்
========
நான்கண்ட சொற்பனந்தான் நழுவிமிகப் போகாது
தேன்கண்டாற் போலே சிரித்து மனமகிழ்ந்து
இந்தக் கனாவதற்கு இங்கிருந் தங்கேபோய்
வந்தல்லா தேபிணியும் மாறவகை யில்லையல்லோ
.
விளக்கம்
=========
நான் கண்ட இந்தச் சொற்பணம் எந்த வகையிலும் தவறாத ஒன்று என்று கூறித் தேன்மழை பொழிந்ததைக் கண்டவர்போன்று சிரித்து மனம் மகிழ்ந்து, என்னுடைய இந்தக் கனவின்படி நாம் இங்கிருந்து திருச்செந்தூர் போய் வராமல் இந்தநோய் எந்த வகையிலும் மாறக்கூடிய வழி இல்லை அல்லவா? என்று தாய் உரைத்தாள்.
.
.
அகிலம்
========
என்றுரைக்க எல்லோரும் இன்பமுட னேமகிழ்ந்து
நன்றுநன்று போவதற்கு நடைக்கோப்பு கூட்டுமென்றார்
வேண்டும் பலகாரம் விதவிதமாய்ச் சேகரித்து
ஆண்ட கருப்புக்கட்டி ஆனதெல்லாஞ் சேகரித்துத்
தானதர்மஞ் செய்ய தனங்கள் மிகவெடுத்துத்
தீன மானவரைத் திடமாகக் கூட்டிவந்து
ஆளுமிகச் சேகரித்து அகலநல்ல தொட்டில்வைத்து
நாளு கடத்தாமல் நடக்கவழி கொண்டனராம்
.
விளக்கம்
=========
எல்லாரும் இன்பமுடன் மகிழ்ந்து, நன்று நன்று நாம் திருச்செந்தூருக்கு நடந்து போவதற்குரிய எல்லாப் பொருள்களும் சேகரித்திடுவோம் என்றனர். உடனே, அங்குப் புறப்படுவதற்குத் தேவையான பலகாரங்களை விதம் விதமாகச் செய்து, ஒருவருடமாக பக்குவப்படுத்தப்பட்டு கற்கண்டாக்கப்பட்ட கருப்புக் கட்டியும், இன்னும் வேண்டுவனவும் சேகரித்தனர். வழியில் செல்லும்போது தான தருமங்கள் செய்ய வேண்டிய பொருள்களும் எடுத்துக் கொண்டனர். நோயுற்றவரை கவனமாக அழைத்துச் செல்லத் தேவையான ஆட்களையும் கூட்டி நோயுற்ற அவரை வீதியான தொட்டில் ஒன்றில் கிடத்தி, நேரம் கடத்தாமல் திருச்செந்தூர் நோக்கி நடக்கலாயினர்.
.
.
அகிலம்
========
மாதாவும் மகனும் வாய்த்த நருளுடனே
நிதாவின் பாதாரம் நெஞ்சில் மிகநிறுத்தி
இருந்த பதியும்விட்டு ஏற்றவொரு காதம்விட்டு
வருந்த நருளோடே வழிகொண்டா ரன்போரே
கூடங் குளமும்விட்டுக் குளிர்ந்தசுக்குப் பாரும்விட்டுத்
தோடவழி யாறுங்கண்டு சூறாவழிக் காடும்விட்டு
நடந்து வொருவனத்தில் நல்லதண்ணீ ராவிகண்டு
கொடர்ந்த பலகாரம் கொண்டுதண்ணீர் தான்குடித்து
தகையாறிக் கொண்டு தானிருக்கும் வேளையிலே
.
விளக்கம்
=========
இவ்வாறு தாயும் மகனும் தம்மோடு வந்துத மக்களுடன் திருமாலின் பாதங்களை மனதில் நிலைநிறுத்தித் தமது ஊரைவிட்டு அகன்று, ஒரு காதம் தூரம் வந்து கொண்டிருந்தனர். கூடங்குளத்தைத் தாண்டி, குளிர்ச்சி பொருந்திய சுக்குப்பாரு இடத்தையும் தாண்டி தோட்ட வழி ஆறும், சூறாவழி காடும் கடந்து ஒரு வனத்தில் வந்தடைந்தனர். அங்கிருந்த நல்ல தண்ணீர் நிரம்பிய குளத்தைக் கண்டு, அதன் பக்கத்தில் அமர்ந்து தாம் கொண்டு வந்த பலகாரம் முதலியவற்றை உண்டு தண்ணீர் குடித்துச் சடைவாறினர்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.


