அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஒரு தற்காலிகப் போர்நிறுத்தம் எட்டப்பட்டது. நேரடித் தாக்குதல்கள் குறைந்திருந்தாலும் முழுமையாக நிற்கவில்லை. அவ்வப்போது இரு தரப்புமே மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வந்தன. இதற்கிடையே இப்போது நிலைமை கையை மீறிச் செல்கிறது.
ட்ரோன் தாக்குதல்கள்
வளைகுடாவில் மெல்லத் திரும்பிய அமைதியைத் தவிடுபொடியாக்கும் வகையில் ஈரான் இன்று குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் மீது திடீரென ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. குவைத் சர்வதேச விமான நிலையம் பிரதானப் பகுதி மற்றும் டிப்ளமேட்டிக் பகுதிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் விமான நிலைய வளாகம் கடுமையாகச் சேதமடைந்தது.
இந்தியர் பலி
இந்தக் கொடூரத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இதற்கிடையே உயிரிழந்த நபர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இதை குவைத்தில் இருக்கும் இந்தியத் தூதரகமும் உறுதி செய்துள்ளது. அவர் விமான நிலையத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்தவர் என்றும் டிரோன் தாக்குதலில் அவர் உயிரிழந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த மோசமான தாக்குதலில் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகள் உட்பட 63 பேர் படுகாயமடைந்துள்ளனர் என குவைத் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து குவைத் ஏர்போர்ட் தற்காலிகமாக மூடப்பட்டது. சில மணி நேரத்திற்குப் பிறகு நிலைமை சீரான பிறகே டெர்மினல் 4ல் இருந்து குவைத் ஏர்வேஸ் விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
அமெரிக்க படைகள்
இதற்கிடையில், பஹ்ரைன் நாட்டில் அமைந்துள்ள அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாவது படைத்தளத்தை (US Fifth Fleet) குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளது. ஆனால், பஹ்ரைன் ராணுவம் ஈரானின் 3 ஏவுகணைகளையும் பல ட்ரோன்களையும் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தித் தடுத்து நிறுத்தியுள்ளது. குவைத்தை நோக்கி வந்த ஈரானின் இரண்டு ஏவுகணைகள் நடுவானிலேயே உடைந்ததாகவும் சில இலக்குகளைத் தவறவிட்டும் விழுந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
மீண்டும் திடீரென வெடித்துள்ள இந்தப் போர் காரணமாகக் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உடனடியாக 2 சதவீதத்திற்கும் மேல் எகிறியுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கையாளும் மிக முக்கியமான 'ஹார்முஸ் ஜலசந்தி' பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த மோதல், ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும், இந்தியாவையும் நேரடியாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
பாதுகாப்பு
வளைகுடாவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பிற்கும், உலக நாடுகளின் பொருளாதாரத்திற்கும் இந்த வான்வழித் தாக்குதல்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. போர் எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ.. அவ்வளவு சீக்கிரம் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும்.. பொருளாதாரப் பாதிப்புகளும் குறையும் என்பதால் போரை முடிவுக்குக் கொண்டு வர இரு தரப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்துகிறார்கள். #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📢 ஜூன் 3 முக்கியதகவல்கள் 👍


