#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 19.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
மேலுக ளொக்க மினுமினுக்கப் பச்சையிட்டுக்
காலுக ளுக்குத்தங்கக் கழராப் பணிகளிட்டு
மகனை யெடுத்து மடிமீதி லேயிருத்தி
உகமாள வந்தவனோ உடையவனோ என்றுசொல்லிக்
கண்ணைத் தடவி கரிய முகந்தடவி
எண்ணும் வளர்வாயென்று இசைந்தமுகத் தோடணைத்துப்
.
விளக்கம்
=========
வைகுண்டர் உடலில் முத்துக்களை அணியச் செய்து, கால்களுக்குக் கழன்று போகாதவண்ணம் தங்கத்தாலாகிய ஆபரணங்கள் அணிவித்து, மகனை எடுத்து மடிமீது அமர்த்தி, மகனே இந்த யுகத்தை ஆள வந்தவன் நீ, நீ இவ்வுலகம் எல்லாவற்றுக்கும் உரிமையுடையவன் என்று சொன்னார். பிறகு தமது அன்பான குழந்தையின் கண்களையும் கரிய முகத்தையும் இதமாகத் தடவிக் கொடுத்து, சிறப்பாக நீ வளர்ந்து வருவாயாக என்று மலர்ந்த முகத்தோடு கூறி தமது முகத்தோடு அவர் முகத்தையும் சேர்த்து அணைத்து கொண்டார்.
.
.
அகிலம்
========
பாலனைப் போல்காட்டிப் பதினா றுடன்காட்டி
நாலுரண்டு காட்டி நல்ல மகவதுக்கு
நடக்கக் கருமம் நவின்றிடவே நாரணரும்
அடக்க முடனே அருளுவா ரன்போரே
நல்ல வுபதேசம் நன்மகவுக் கேயருளி
வல்லத் திருநாதன் வகுக்கிறா ரன்போரே
.
விளக்கம்
=========
முப்பூ நிலையடைந்த அவரை குழந்தையாக முதலில் தோன்றச் செய்து பிறகு பதினாறு வயதுடைய வளர்ந்த குழந்தையாக மாற்றி அமைத்து அகரம் பற்றி அக்குழந்தைக்கு புரிய வைத்தார். பிறகு வைகுண்டர் செய்ய வேண்டிய செயல் முறைகளை எல்லாம் ஒழுங்காக அடக்கம் நிறைந்ததாக விளக்க சிறந்த பல உபதேசங்களை அந்த நல்ல குழந்தைக்கு ஒவ்வொன்றாகத் திருமால் உபதேசித்து அருளுகின்றார் அன்போரே.
.
.
அகிலம்
=======
விஞ்சையருளல்
================
தேடிய மறைநூல் வேதன் தேவியர்க் கமல நாதன்
நாடிய இறையோன் ஞானி நாச்சிமார் தேவ ரோடும்
கூடிய ரிஷியோர் வானோர் குவலய மறியா விஞ்சை
தேடிய மகனார்க் கென்று செப்பினா ரொப்பில் லானே
.
விளக்கம்
=========
வேதங்களில் தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றவரும், தேவியர்க்கு அன்புக் குரியவரும் ஆகிய ஒப்பில்லாத திருமால், எல்லாரும் விரும்புகின்ற ஈசரும், ஞானிகளும், கற்புள்ள கன்னிகளும், தேவர்களும், ரிஷிகளும், வானலோகத்தோரும், உலக மாந்தர்களும்கூட அறிய முடியாத உபதேசத்தைத் தம்முடைய மகனாக அடைந்த வைகுண்டருக்கு அருளினார்.
அகிலம்
=======
மகனே வுனது மனமறிய மறையோ ரறியா விஞ்சைசெய்து
அகமே யருளித் தருவதெல்லாம் அனுப்போ லசலில் விலகாதே
உகமே முடிந்த தின்பிறகு உதிக்குந் தர்மயுகத் தில்வந்தால்
செகமே யறியச் சொல்லிமிகச் சிறந்தே வாழ்ந்து வாழ்வோமே
.
விளக்கம்
=========
மகனே, வேதங்கள் அறிந்தவர்கள்கூட அறிய முடியாதவை இந்த உபதேசங்கள். இவற்றை உன் மனம் அறியும்வகையில் நான் அருளுகின்றேன். இந்த உபதேசங்களிலிருந்து ஓர் அணு அளவுகூட மாறி நடந்துவிடாதே. இக்கலியுகம் முடிந்த பிறகு உண்டாகப் போகின்ற தருமயுகத்தில், நீ ஆட்சி புரிய வேண்டி வரும்போது இவ்வுலகம் அறியும்படியாக மக்களுக்கு இவற்றை எடுத்துக் கூறிச் சிறந்த முறையில் நீ ஆட்சி புரிந்து வருவாயாக என்றார்.
.
.
அகிலம்
=======
ஆண்டா யிரத்து எட்டதிலே அதனே மாத மாசியிலே
நான்றாங் கடலின் கரையாண்டி நாரா யணனே பண்டாரம்
கூண்டாந் தெச்ச ணாபுரியில் கொண்டோம் பள்ளி தர்மமுற்று
ஒன்றாம் விஞ்சை யிதுமகனே உரைப்பேன் ரண்டாம் விஞ்சையதே
விளக்கம்
==========
ஆயிரத்து எட்டாம் ஆண்டில் மாசி மாதம் முதல் நானே தான் கடலின் கரை ஆண்டியாகவும், நாராயணராகவும், பண்டாரமாகவும், நாம் கூடி இருக்கின்ற இந்தத் தெச்சணாபுரியில் தரும நிலையில் பள்ளி கொண்டேன் என்று திடமாகக் கூறுவாயாக. இதுவே நான் உனக்குக் கூறுகின்ற முதலாம் விஞ்சை. இனி நான் கூறப்போகின்ற இரண்டாம் விஞ்சையை நீ கேட்பாயாக.
.
அகிலம்
=======
வேண்டாம் வேண்டாங் காணிக்கையும் மிகவே வேண்டாங் கைக்கூலி
ஆண்டார் நாரா யணன்தனக்கு அனுப்போல் வேண்டாங் காவடியும்
வேண்டா மெனவே நிறுத்தல்செய்து வாய்த்த சிறையாய்க் கவிழ்ந்திருநீ
இரண்டாம் விஞ்சை யிதுமகனே நவில்வேன் மூன்றாம் விஞ்சையதே
.
விளக்கம்
=========
காணிக்கை, கைக்கூலி ஆகியவற்றை எக்காரணத்தை முன்னிட்டும் வாங்க வேண்டாம். இவ்வுலகை ஆண்டு கொண்டிருக்கும் நாராயணராகிய எமக்கு அணு அளவுகூட காவடி எடுத்தல் முதலிய விழாக்களும் வேண்டாம் என்று கூறி, இவற்றை எல்லாம் தடை செய்து, நீ சிறையில் இருப்பது போன்று மனக் கட்டுப்பாட்டோடு வாழ்ந்து வருவாயாக. இதுவே நான் கூறும் இரண்டாம் விஞ்சை. இனி மூன்றாம் உபதேசத்தைக் கூறப் போகின்றேன் கேட்பாயாக.
.
அகிலம்
=======
கொற்றவர் தானு மாண்டு குறும்புகள் மிகவே தோன்றி
உற்றதோர் துலுக்கன் வந்து உடனவன் விழுந்து வோடி
மற்றதோ ராண்டு தன்னில் வருவோ மென்றா கமம்போல்
முத்தலத் தோருங் காண உரைத்தனர் மூன்றாம் விஞ்சை
.
.
விளக்கம்
=========
நீதியுள்ள அரசர்கள் இறப்பு எய்தித் தவறான வழி முறைகளும் ஆட்சிகளும் உலகில் தோன்றும். அப்பொழுது துலுக்கன் ஒருவன் நாட்டைப் பிடிக்கத் தெச்சணாபூமிக்கு வந்து தோல்வியுற்று ஓடிடுவான். அதன் பிறகு சிறந்த ஓர் ஆண்டில் இப்பூலகில் வைகுண்டர் தோன்றுவார் என்னும் ஆகமச் சொல்லைப் போன்று மூவுலகத்தோரும் அறியும்படியாக இந்த மூன்றாம் விஞ்சையைத் திருமால் அருளினார்.
.
.
அகிலம்
========
நல்ல மகனே நாலாம் விஞ்சைகேளு
வல்ல நடுஞான வாய்த்த வைகுண்டமது
பிறந்துகொண் டிருக்கெனவும் புதிய நட்க்ஷத்திரத்தில்
அறந்தழைக்க நன்றாய் அதுகுதிக்கு மென்றுசொல்லு
.
விளக்கம்
=========
அருமையான மகனே நான்காம் விஞ்சையை இனிக் கூறப் போகின்றேன் உயர்வான ஞானம் வாய்க்கப் பெற்ற தருமபூமி பிறந்து கொணடிருக்கின்றது என்றும், புதிய நட்சத்திரத்தில் உலகில் அறம் தழைப்பதற்கு வேண்டித் தருமபூமி வெளிப்படையாகக் குதித்து வெளிப்படும் என்றும் சொல்லு.
.
.
அகிலம்
=======
மாழுவது மாண்டு மனதுகந்த தேமுழிக்கும்
முழுவதை நீக்கி முழிப்பதுவே கண்டுகொள்ளும்
.
விளக்கம்
==========
அவ்வாறு தருமபூமி வெளிப்படும் பொழுது அழிந்து போகக் கூடியவை எல்லாம் அழிந்துவிடும். உனது மனதுக்கு இயைந்தவர்களே ஆன்மீக விழிப்புற்று எழுவர். அவ்வாறு அழிகின்றவை அழிக்கப்பட்டு, ஆன்மீக விழிப்புற்று எழுபவர் தருமபூமியை அறிந்து கொள்ளுவர்.
.
.
அகிலம்
========
ஒருநெல் லெடுத்து உடைக்கநாடு கேட்டுக்கொள்ளும்
இருநெல் லெடுத்து உடைக்கநாடு தாங்காது
மலைக ளுதிர்ந்துவிடும் வான மழிந்துவிடும்
தலைநாட் சேத்திரமும் தானுதிரும் ஆலங்காய்போல்
என்றுநா லாம்விஞ்சை இதுதானே என்மகனே
.
விளக்கம்
=========
ஒரு நெல் எடுத்து உடைக்கும் நேரத்துக்குள் தருமபூமி காணத் தகுதியுள்ள ஆன்ம விழ்ப்புற்றவர்களின் உண்மை நிலையை நான் சோதித்து அறிந்து கொள்ளுவதை நாடு தெரிந்து கொள்ளும். தருமயுகம் தோன்றும் சமயம், இரண்டாவது நெல் எடுத்து உடைக்கும் நேரத்துக்குள் ஆலமரத்தில் இருக்கின்ற காய்கள் எல்லாம் உதிர்ந்து விடுவதைப் போன்று, ஆத்மீக விழிப்புற்றவனது நினைவிலுள்ள உலக விவகாரங்களாகிய மலைகள், வானம், தலைக்கு மேலே காட்சி அளிக்கின்ற நட்சத்திரங்கள் ஆகிய இவை எல்லாம் அவன் நினைவிலிருந்து அகன்று நிற்கும். இதுவே நான்காம் விஞ்சை ஆகும்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.


