108 திவ்ய தேசங்கள்

290 Posts • 118K views
ரவிசங்கர் ராஜா, ஆரணி
655 views 18 hours ago AI indicator
*தினம் ஒரு திவ்ய தேச தரிசனம்-2* புதிய தொடர் பதிவு! ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதொடர் பதிவில் இன்று இரண்டாவதாக தரிசனம் செய்ய இருப்பது *உறையூர் அழகிய* *மணவாளர் பெருமாள்* *கோயில்* 108 வைணவ திவ்ய தேச தலங்களுள், திருச்சி மாவட்டம், உறையூர் அழகிய மணவாளர் பெருமாள் கோயில் இரண்டாவது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. திருக்கோழி,உறந்தை, நிகளாபுரி, திருவுறையூர் என்றும் இவ்வூர் அழைக்கப்படும். இத்தலம் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருப்பாணாழ்வாரின் அவதாரத் தலம் ஆகும். சோழ நாட்டு யானை, உறையூர் வந்தபோது கோழி ஒன்று அந்த யானையைத் தாக்கி ஓடச் செய்ததால், இவ்வூருக்கு ‘கோழியூர்’என்றும் ‘திருக்கோழி’என்றும் பெயர் கிட்டியது. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து 5 கிமீ தொலைவிலும், திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து 3 கிமீ தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் : அழகிய மணவாளர் தாயார்: கமலவல்லி நாச்சியார் தீர்த்தம்: கமலபுஷ்கரிணி, கல்யாண தீர்த்தம் ஆகமம்: பாஞ்சராத்ரம் விமானம்: கமல விமானம் தான் எழுதிய பெரிய திருமொழியில் ஒரே ஒரு பாசுரத்தில் இத்தலத்தைப் போற்றி, திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றமன்ன பாழியும் தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் வாழியரோ இவர் வண்ணமெனில் மாகடல் போன்று உளர் கையில் வெய்ய ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா தல வரலாறு துவாபர யுகத்தில் தர்மவர்ம சோழரின் வம்சத்து அரசர் நந்த சோழர் உறையூர் பகுதியை ஆண்டு வந்தார். ரங்கநாதரின் பக்தரான இவருக்கு நீண்ட காலமாக குழந்தைப் பேறு கிட்டவில்லை. மன்னர், தன் வருத்தத்தை ரங்கநாதரிடம் தெரிவித்தார். அவரும், தன் பக்தருக்காக, மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்குமாறு பணித்தார். ஒரு சமயம் மன்னர் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில், தாமரை மலரில் படுத்திருக்கும் குழந்தையைக் கண்டார். மகிழ்ச்சி அடைந்த மன்னர் அக்குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்று கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பருவம் அடைந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய மன்னர் எண்ணினார். ஒருநாள் தோழியருடன் கமலவல்லி வனத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, குதிரையில் பயணிக்கும் ரங்கநாதரைக் காண்கிறார். அவரையே மணக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார். இதைத் தொடர்ந்து, மன்னரின் கனவில் தோன்றிய பெருமாள், கமலவல்லியை மணக்க விரும்புவதாகக் கூறுகிறார். மன்னரும், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்கிறார். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதருடன் கமலவல்லி ஐக்கியமானார். மன்னரும் தனது மகளுக்காக கோயில் எழுப்பினார். நாச்சியார் கோயில் தாயாரின் அவதாரத் தலம் என்பதால் இத்தலம் நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இங்கு தாயாரே பிரதானமாகக் கருதப்படுகிறார். இங்கு பெருமாளுக்குரிய அனைத்து ஆராதனைகளும், கமலவல்லித் தாயாருக்கு நடைபெறுகிறது. மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லித் தாயாரும் மணக் கோலத்தில் வடக்கு திசை நோக்கி ரங்கநாதரைப் பார்த்தவாறு நின்றபடி அருள்பாலிக்கின்றனர். திருமணத் தடை உள்ளவர்கள், ஆயில்யம் நட்சத்திர தினத்தில் தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி தினத்தில் இத்தலத்தில் தாயார் மட்டுமே சொர்க்கவாசல் கடக்கிறார். ரங்கநாதர் மார்கழியில் வைகுண்ட வாசல் கடந்ததும், தை அல்லது மாசியில் வரும் ஏகாதசி தினத்தில், கமலவல்லி நாச்சியார் சொர்க்கவாசல் கடக்கிறார். பங்குனி உத்திர திருவிழாவின்போது, நம்பெருமாள் இத்தலத்துக்கு எழுந்தருளி, கமலவல்லி தாயாருடன் சேர்த்தி சேவை அருள்கிறார். மீண்டும் சுவாமி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தி சேவை அருள்கிறார். இவ்வாறு பங்குனித் திருவிழாவில்,பெருமாள் இரண்டு தாயாருடன் சேர்த்தி சேவை அருள்வதைக் காண கண்கோடி வேண்டும். 5 நிலை கோபுரம் கொண்டு இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் பிரகாரத்தில் நம்மாழ்வார், ராமானுஜருக்கு சந்நிதிகள் உள்ளன. ஆலயத்திருவிழாக்கள் புரட்டாசி நவராத்திரி விழா, கார்த்திகை திருப்பாணாழ்வார் 10 நாள் திருவிழா, மார்கழி வைகுண்ட ஏகாதசி 21 நாள் வைபவம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. திருமணத்தடை நீக்கும் இரண்டாவது திவ்ய தேசமான உறையூர் அழகிய மணவாளர் பெருமாள் கோயில் தொடர்பான காணொளிகாட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #108 திவ்ய தேசங்கள் #🙏பெருமாள் #108 திவ்ய தேசங்கள் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
16 likes
6 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views 5 days ago AI indicator
*தினம் ஒரு திவ்ய தேச தரிசனம்-1* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீரங்கம் ரங்கநாத* *சுவாமி கோயில்* 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகப் போற்றப்படும் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், 7 சுற்று மதில்களுடன் இக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் / உற்சவர்: ரங்கநாதர் / நம்பெருமாள் தாயார்: ரங்கநாயகி தலவிருட்சம்: புன்னை தீர்த்தம்: சந்திர தீர்த்தம் மற்றும் 8 தீர்த்தங்கள் ஆகமம் / பூஜை: பாஞ்சராத்திரம் விமானம்: பிரணாவாக்ருதி பஞ்சரங்கத் தலங்களுள் (ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கப்பட்டணம், ஸ்ரீரங்கநாதர் கோயில், ஸ்ரீரங்கம், சாரங்கபாணி கோயில், குடந்தை, அப்பால ரங்கநாதர், கோவிலடி, பரிமள ரங்கநாதர் கோயில், மயிலாடுதுறை) ஒன்றாக இத்தலம் போற்றப்படுகிறது. 12 ஆழ்வார்களில் மதுரகவியாழ்வார் தவிர ஏனையோரால் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. கம்பராமாயணத்தை கம்பர் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தலத்திற்க்கான தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரம்: பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே. ஊர் இலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன் ஆருளர்களைக் கணம்மா அரங்கமா நகருளானே! தல வரலாறு திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய ரங்கநாதரை, நெடுங்காலமாக பிரம்மதேவர் பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜைகள் செய்ய, சூரியன் நியமிக்கப்பட்டார். சூரிய குலத்தில் தோன்றிய ராமபிரானும், அயோத்தியில் இருந்த ரங்கநாதரை வழிபட்டு வந்தார். ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்கு வருகை புரிந்த விபீஷணனுக்கு, ராமபிரான், தான் பூஜித்து வந்த ரங்கநாதர் சிலையை பரிசாக அளித்தார். விபீஷணன், இலங்கை திரும்பும் வழியில், சற்று நேரம் ஓய்வெடுக்க எண்ணினார். ரங்கநாதர் சிலையை கீழே வைக்க விரும்பாத விபீஷணன், காவிரி ஆற்றங்கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக் கூடாது என்று கூறிவிட்டு, சற்று நேரம் ஓய்வெடுத்தார். ஆனால் அச்சிறுவன், ரங்கநாதர் சிலையைக் கீழே வைத்துவிட்டான். சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு வந்த விபீஷணன், சிறுவனைக் கடிந்து கொண்டார். தரையில் இருந்து மீண்டும் ரங்கநாதர் சிலையை எடுக்க இயலவில்லை. கலங்கிய மனநிலையில் இருந்த விபீஷணனுக்கு, அப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர் தர்மவர்மன் ஆறுதல் கூறினார். ரங்கநாதருக்கு காவிரிக் கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று விருப்பம். அதனால் குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டி, விபீஷணன் இருக்கும் தென் திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டு அருள்வதாக உறுதியளித்தார். சிறுவனாக வந்தது விநாயகப் பெருமான் என்று கூறப்படுகிறது. அவரே மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். ரங்கநாதரின் விருப்பத்துக்கு ஏற்ப தர்மவர்மனும், இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டார். காலப்போக்கில் இக்கோயில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்து போனதாக கூறப்படுகிறது. மன்னர் தர்மசோழர் மரபில் வந்த கிள்ளிவளவன், இக்கோயிலை மீண்டும் அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. கோயில் சிறப்பு இத்தலத்து ராஜ கோபுரம், இந்தியாவின் மிகப் பெரிய ராஜ கோபுரம் ஆகும். பல ஏக்கர் (ஏறத்தாழ 156 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலில் அழகிய மண்டபங்கள், திருக்குளங்கள், தனி சந்நிதிகள், 21 கோபுரங்கள், 7 சுற்றுப் பிரகாரங்கள் அமைந்துள்ளன. மேலும் 7 மதில்கள், 7 தாயார்கள், 7 உற்சவங்கள், 7 திருவடி சேவை, 7 கண்டுகளிக்கும் சேவை என்று சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. பொன்னால் வேயப்பட்ட ஸ்ரீரங்க விமானம், ‘ஓம்’என்ற பிரணவ வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளது. இதற்கு 24 கி.மீ தொலைவு சுற்றி எங்கிருந்து வழிபட்டாலும் இறைவனின் திருவடியை அடையக் கூடிய முக்தி நிச்சயம் என்று ஸ்ரீரங்க தலவரலாறு உரைக்கிறது. ரங்கவிலாஸ் மண்டபத்தில் உள்ள கல் கொடிமரத்தை வணங்கி, உயர்ந்து நோக்கினால், கொடிமரம் அசைவது போன்று தோன்றும். தனது 120-வது வயதில் (கிபி 1137) சாயுஜ்யம் அடைந்தார் ஸ்ரீராமானுஜர். இத்தனை ஆண்டுகள் கடந்தும் இக்கோயிலில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ரங்கநாதர் அணிந்து கொண்டிருக்கும் காலணிகள் கொஞ்சம், கொஞ்சமாகத் தேய்வதாக கூறப்படுகிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை ரங்கநாதரின் திருப்பாதத்தில் இருந்து காலணிகள் கழற்றப்படும்போது, அவரே பயன்படுத்தப்பட்டவை போல தேய்ந்து காணப்படும். ரங்கநாதரின் திருக்கண்கள், விபீஷணனால் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் நெல் சேமிப்பு கிட்டங்கிகள் வட்ட வடிவமாக அமைக்கப்பட்டன. 20 அடி விட்டமும், 30 அடி உயரமும் கொண்ட 5 பிரம்மாண்ட நெற்குதிர்கள் உள்ளன. எவ்வளவு நெற்கதிர்கள் கொட்டினாலும், அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் விரிவடையும் தன்மை கொண்டதாக நெற்குதிர்கள் அமைந்துள்ளன. ரங்கநாச்சியார் சந்நிதிக்கு வெளியில் அமைந்துள்ள ஐந்து குழி மூன்று வாசல் குறிப்பிடத்தக்கது. அர்த்த பஞ்சக ஞானத்தை ஐந்து குழி குறிப்பதாகவும், மூன்று வாசல் பிரம்மத்தின் வழி என்றும் கூறப்படுகிறது. ஐந்து குழிகள் வழியே ஐந்து விரல்களை வைத்து தென்திசை நோக்கினால் பரமபத வாசல் தெரியும் என்பதால் இவ்விதம், தாயார் பெருமாளை சேவிக்கிறார் என்பது ஐதீகம். இக்கோயில் சந்திர புஷ்கரணி, வில்வ தீர்த்தம், சம்பு தீர்த்தம், பகுள தீர்த்தம், பலாச தீர்த்தம், அசுவ தீர்த்தம், ஆம்ர தீர்த்தம், கதம்ப தீர்த்தம், புன்னாக தீர்த்தம் ஆகிய 9 தீர்த்தங்களைக் கொண்டுள்ளது. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம், காடுகாண் காதை, அகநானூறு உறையூர் முதுகூத்தன்னார் பாடல்களில் திருவரங்கம் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்களில், 247 பாசுரங்கள் திருவரங்கம் மீது அமைந்துள்ளன. திருமங்கையாழ்வார் 73 பாடல்களையும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் 55, பெரியாழ்வார் 35, குலசேகராழ்வார் 31, திருமழிசையாழ்வார் 14, நம்மாழ்வார் 12, திருப்பாணாழ்வார் 10, ஆண்டாள், 10, பூதத்தாழ்வார் 4, பொய்கையாழ்வார் 1 பாடலையும், பேயாழ்வார் 2 பாடல்களையும் பாடியுள்ளனர். ரங்கநாதரும் 7 அதிசயமும் ரங்கநாதர் கோயில் உள்ள ஏழு மதில் சுற்றுகள் ஏழு உலகங்களாக கருதப்படுகின்றன. மாடங்கள் சூழ்ந்த திருச்சுற்று - பூலோகம், திருவிக்கிரம சோழன் திருச்சுற்று - புவர்லோகம், அகலங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சுற்று - சுபர்லோகம், திருமங்கை மன்னன் திருச்சுற்று - மஹர்கோகம், குலசேகரன் திருச்சுற்று - ஜநோலோகம், ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று - தபோலோகம், தர்மவர்ம சோழன் திருச்சுற்று - சத்யலோகம் என்று கருதப்படுகின்றன. பெரிய கோயில், பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார், பெரிய கருடன், பெரியவசரம் (நைவேத்தியம்), பெரிய திருமதில், பெரிய கோபுரம் என்ற பெருமைகளைக் கொண்டதாக இக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்கநாச்சியார் என்று 7 நாச்சியார் உள்ளனர். ஸ்ரீரங்கம் கோயிலில் வருடத்துக்கு 7 முறை (விருப்பன் திருநாள், வசந்த உற்சவம், விஜயதசமி, வேடுபறி, பூபதி திருநாள் - அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, பாரிவேட்டை, ஆதி பிரம்மோற்சவம்) நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார். வருடத்துக்கு 7 முறை (சித்திரை, வைகாசி, ஆடி, புரட்டாசி, தை, மாசி, பங்குனி) நம்பெருமாள் கோயிலை விட்டு வெளியே எழுந்தருள்வார். ஏழு உற்சவத்தின்போது, 7-ம் நாள் (வருடத்துக்கு 7 முறை - சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி, பங்குனி) நெல்லளவு கண்டருள்வார். தாயார் சந்நிதியில் வருடத்துக்கு 7 உற்சவங்கள் (கோடை உற்சவம், வசந்த உற்சவம், ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை, நவராத்திரி, ஊஞ்சல் உற்சவம், அத்யயநோற்சவம், பங்குனி உற்சவம்) நடைபெறும். நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாளில் ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும். தமிழ் மாதங்களில் 7-ம் மாதமான ஐப்பசி 30 நாட்களும் தங்க குடத்தில் புனிதநீர் யானை மீது கொண்டு வரப்படும். திருமாலின் 7-ம் அவதாரமான ராமாவதாரம் பூஜித்த தலம் ஸ்ரீரங்கம் கோயில். பன்னிரெண்டு ஆழ்வார்களும் 7 சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். முதல் சந்நிதியில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், இரண்டாம் சந்நிதியில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், மதுரகவியாழ்வார், மூன்றாம் சந்நிதியில் குலசேகர ஆழ்வார், நான்காம் சந்நிதியில் திருப்பாணாழ்வார், ஐந்தாம் சந்நிதியில் தொண்டரடிப்பொடி ஆழ்வார், ஆறாம் சந்நிதியில் திருமழிசை ஆழ்வார், ஏழாம் சந்நிதியில் பெரியாழ்வார், ஆண்டாள் எழுந்தருளியுள்ளனர். இராப்பத்து 7-ம் திருநாளில் பராங்குச நாயகி திருக்கோலத்தில் நம்மாழ்வார் அருள்பாலிப்பார். பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள தென் திசையில் 7 கோபுரங்கள் (நாழிகெட்டான் கோபுரம், ஆர்யபடால் கோபுரம், கார்த்திகை கோபுரம், ரெங்கா ரெங்கா கோபுரம் தெற்கு கட்டை கோபுரம், தெற்கு கட்டை கோபுரம் - ஐஐ, ராஜ கோபுரம்) உள்ளன. 7 உற்சவ காலங்களில் (வசந்த உற்சவம், சங்கராந்தி, பாரி வேட்டை, அத்யயநோற்சவம், பவித்ரோற்சவம், ஊஞ்சல் உற்சவம், கோடை உற்சவம்) ரங்கநாதர் குறிப்பிட்ட மண்டபங்களில் மட்டும் எழுந்தருள்வார். வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாக 7 சேவைகள் உள்ளன. அவை பூச்சாண்டி சேவை, கற்பூர படியேற்ற சேவை, மோகினி அலங்காரம், ரத்னாங்கி சேவை, வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாகனம், உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீராமநவமி சேர்த்தி சேவை, தாயார் திருவடி சேவை, ஜாலி, சாலி அலங்காரம் ஆகும். ஆலயத்திருவிழாக்கள் ஆடிப்பெருக்கு உற்சவத்தின்போது பெருமாள் அம்மா மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். காவிரித் தாய்க்கு அவர் சார்பில் பட்டுப் புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை போன்றவை சீதனமாக அளிக்கப்படும். வைகுண்ட ஏகாதசி 21 நாள் வைபவம், 3 பிரம்மோற்சவ விழா, மாசி மாத தெப்பத் திருவிழா, தமிழ், ஆங்கில புத்தாண்டு, சனிக்கிழமை தினங்களில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் தொடர்பான காணொளிகாட்சி கீழே!👇🚩🕉🪷🙏🏼 #🙏பெருமாள் #திருச்சி ஸ்ரீ ரங்கம் பெருமாள் கோயில் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏கோவில் #108 திவ்ய தேசங்கள்
23 likes
20 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
615 views 18 hours ago AI indicator
*தினம் ஒரு திவ்ய தேச தரிசனம்-4* புதிய தொடர் பதிவு! ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்கள் தொடர் பதிவில் இன்று நான்காவதாக தரிசனம் செய்ய இருப்பது திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்   திருச்சி மாவட்டம் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 4-வது திவ்ய தேசம் ஆகும். கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் பெரிய பிரகாரத்தின் தென்பகுதியில் உள்ள கல் அறைகளில் ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும். உய்யக்கொண்டார் எங்களாழ்வானின் அவதாரத் தலம். திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமங்கையாழ்வார் பாசுரம் (பெரிய திருமொழி) ஆறினோடொரு நான்குடை நெடுமுடியரக்கன்றன் சிரமெல்லாம் வேறு வேறுக வில்லது வளைத்தவனே எனக்கருள் புரியே மாறில் சோதிய மரகதப் பாசடை தாமரைமலர் வார்த்த தேறல் மாந்தி வண்டின்னிசை முரல் திருவெள்ளறை நின்றானே. மூலவர்: புண்டரீகாட்சன் தாயார்: செண்பகவல்லி, பங்கயச் செல்வி தலவிருட்சம்: வில்வம் தீர்த்தம்: மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராக, கந்த, பத்ம தீர்த்தம் விமானம்: விமலாக்ருத விமானம் தல வரலாறு ஒருசமயம் பாற்கடலில் திருமாலும் திருமகளும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திருமால் திருமகளை வெகுவாகப் புகழ்ந்தார். அவள் கருணையால் அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியாக உள்ளன. அதில் தனக்கு பரம திருப்தி என்பதால் திருமகளுக்கு ஏதாவது வரம் கொடுக்க திருவுள்ளம் கொள்கிறார்.. அதற்கு திருமகள், திருமாலின் திருமார்பில் தான் நித்ய வாசம் செய்வதால் தனக்கு தனியாக வரம் ஏதும் பெற விருப்பம் இல்லை என்கிறார். இருப்பினும் தேவர்களைக் காட்டிலும் திருப்பாற்கடலில் தனக்கு அதிக உரிமை வேண்டும் என்றார். பெருமாள் தான் திருப்பாற்கடலில் அனைத்துமாக இருப்பதால், திருமகளின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று கூறுகிறார். ஆனால் பூலோகத்தில் சிபி சக்கரவர்த்திக்கு தான் தரிசனம் தரும்போது, திருமகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கிறார். ஒருமுறை தென்னிந்திய பகுதியில் அசுரர்கள், அங்கு வசிப்பவர்களுக்கு நிறைய இன்னல்கள் கொடுத்து வந்தனர். அந்த சமயத்தில் சிபி சக்கரவர்த்தி அவர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு வெள்ளை வராகம் (பன்றி) அங்கு தோன்றி அவர்களுக்கு நிறைய இன்னல்களைக் கொடுத்தது. சிபி சக்கரவர்த்தியின் படைவீரர்கள் எவ்வளவு முயன்றும் வராகத்தைப் பிடிக்க முடியவில்லை. சிபி சக்கரவர்த்தியே அதைப் பிடிக்க முயன்றார். அது தப்பித்து மலை மீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. சிபி சக்கரவர்த்தி அதைப் பிடிக்க மலையைச் சுற்றி வந்தார். அப்போது ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவரைக் கண்டார். அவர் கடும் தவம் புரிந்து கொண்டிருந்தார். விஷயத்தை மார்க்கண்டேய முனிவரிடம் கூறினார் சிபி சக்கரவர்த்தி. அப்போது மனம் மகிழ்ந்த முனிவர், “வராக வடிவில் வந்தது நாராயணன்தான். அவர் உனக்கு அருள்பாலித்திருக்கிறார். நான் அவரை நினைத்துத்தான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். நீ மிகவும் கொடுத்து வைத்தவன்” என்றார். மேலும் அங்குள்ள புற்றில் பாலால் அபிஷேகம் செய்யப் பணித்தார். அரசனும் அவ்வாறே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் அருள்பாலிக்கிறார். அப்போது இந்த தரிசனத்துக்கு வந்திருந்த திருமகளை நோக்கி, “உன் விருப்பப்படி இத்தலத்தில் உனக்கு அனைத்து அதிகாரத்தையும் தருகிறேன் . நான் அர்ச்சா ரூபமாக இருந்துகொண்டு அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன்” என்றார் திருமால். சிபி சக்கரவர்த்தி அனைவரிடத்தும் விடைபெற்றுக் கொண்டான். தான் ராவணனை அழிக்கச் செல்வதாக கூறும்போது, மார்க்கண்டேய முனிவர் மன்னரைத் தடுத்து, ராவணனை அழிக்க திருமால் ராமாவதாரம் எடுக்க இருப்பதாகக் கூறுகிறார். அவரை அவர் நாட்டுக்குச் சென்று நாட்டை ஆளும்படி கூறுகிறார் முனிவர். மன்னருக்கு இதில் திருப்தி இல்லை. அப்படியென்றால் காட்சி கொடுத்த பெருமாளுக்கு கோயில் எழுப்பும்படி முனிவர் சிபி சக்கரவர்த்தியிடம் கூற, அவரும் அவ்வாறே செய்வதாக உறுதி அளிக்கிறார். கோயில் கட்டும் பணிக்காக 3,700 குடும்பங்களை அழைத்து வந்தார் மன்னர். அவர்களில் ஒருவர் இறந்துவிட, இறந்த ஒருவருக்கு பதிலாக 3,700 பேரில் ஒருவராக இருந்து 3,700 குடும்பக் கணக்குக்கு குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டு அனைத்து பணிகளையும் செய்து முடிப்பதாக உறுதி அளித்தார் திருமால். திருமால் அளித்த வரத்தின்படி செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்துகொண்டு திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்னர் பல்லக்கில் எழுந்தருளுகிறார். புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள் ‘புண்டரீகாட்சப்பெருமாள்' ஆனார். பெருமாள் கிழக்கு பார்த்த நிலையில் அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் இவருக்கு மேல் உள்ள விமானம் விமலாக்ருத விமானம் என்று அழைக்கப்படுகிறது. 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளதால் வெள்ளறை என்ற பெயர் பெற்று திருவெள்ளறை ஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. இத்தல பெருமாளை தரிசிக்க 18 படிகளைக் கடக்க வேண்டும். (இது கீதையின் 18 அத்தியாயங்களைக் குறிக்கும்). கோபுர வாயிலில் இருக்கும் 4 படிகள் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. பலிபீடத்தை வணங்கி 5 படிகளைக் கடக்க வேண்டும். (இவை பஞ்சபூதங்களைக் குறிக்கின்றன) பெருமாளை தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளன. இவை தட்சிணாயன வழி (ஆடி முதல் மார்கழி வரை) என்றும் உத்தராயண வழி (தை முதல் ஆனி வரை) என்று பெயர் பெறும். இத்தல பெருமாளை கருடாழ்வார், சிபி சக்கரவர்த்தி, மார்க்கண்டேய முனிவர், நான்முகன், ஈசன் தரிசித்துள்ளனர். திருவிழாக்கள் சித்திரை திருவிழா, சித்ரா பவுர்ணமி (கஜேந்திர மோட்சம்) ஆவணி கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், பங்குனி திருவோணம் (பிரம்மோற்சவம்) தினங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. இத்தலத்தில் பலிபீடத்தின் முன்பு முதலில் கோரிக்கையை முன் வைப்பது வழக்கம். கோரிக்கை நிறைவேறியதும் பலிபீட திருமஞ்சனம் செய்து பொங்கல் படைத்து பிரார்த்தனையை நிறைவு செய்வது உண்டு. குழந்தை பேறு வேண்டி கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி பெருமாளுக்கு அமுது செய்த பொங்கலை உண்பது வழக்கம். அமைவிடம்: திருச்சியில் இருந்து துறையூர் பேருந்து வழியில் 20 கி.மீ., தொலைவில் மண்ணச்சநல்லூருக்கு அருகில் உள்ளது. குழந்தை பேறு அருளும் நான்காவது திவ்ய தேசமானதிருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில் தொடர்பான காணொளிகாட்சி கீழே!👇🚩🕉🪷🙏🏼 #🙏பெருமாள் #108 திவ்ய தேசங்கள் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
15 likes
12 shares