108 திவ்ய தேசங்கள்

290 Posts • 118K views
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2K views 1 months ago AI indicator
*தினம் ஒரு திவ்ய தேச தரிசனம்-5* புதிய தொடர் பதிவு! ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்கள் தொடர் பதிவில் இன்று ஐந்தாவதாக தரிசனம் செய்ய இருப்பது 108 வைணவ திவ்ய தேச உலா - 5. அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயில் திருச்சி மாவட்டம் அன்பில் சுந்தரராஜப் பெருமால் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 5-வது திவ்ய தேசம் ஆகும். பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் இருப்பதைப் போல இங்கும் திருமால் தாரக விமானத்தின் கீழ் உள்ளார். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பில் உள்ளது. திருமழிசையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் (நான்முகன் திருவந்தாதி) செய்துள்ளார். நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத் தணையரங்கம் பேர் அன்பில்- நாகத் தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால் அணைப் பார் கருத்தனாவான் மூலவர்: சுந்தரராஜப் பெருமாள் உற்சவர்: வடிவழகிய நம்பி தாயார்: அழகியவல்லி தலவிருட்சம்: தாழம்பூ தீர்த்தம்: மண்டுக தீர்த்தம் தல வரலாறு ஒருசமயம் நான்முகனுக்கு உலகில் தானே மிகவும் உயர்ந்தவர் என்ற எண்ணம் மேலிட்டது. மேலும் தான் மட்டுமே உலகில் உயிர்களைப் படைக்கிறோம் என்றும் அவை அழகாக இருப்பதற்குக் காரணம் தான்மட்டுமே என்ற ஆணவமும் வலுப்பெற்றது. இருப்பினும் தன்னை யாரும் வணங்குவதில்லையே என்ற ஆதங்கமும் எழுந்தது. நான்முகனின் இந்த எண்ண ஓட்டத்தை உணர்ந்த திருமால், இதுகுறித்து நான்முகனை எச்சரித்தார். இதற்கெல்லாம் செவி சாய்க்காதவராக இருந்தார் நான்முகன். திருமால், நான்முகனைத் திருத்தும் நோக்கில், பூலோகத்தில் ஒரு சாதாரண மானிடப் பிறவி எடுக்குமாறு அவரை சபித்துவிட்டார். பூலோகத்தில் அனைத்து தலங்களுக்கும் சென்று தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கோரி வந்தார் நான்முகன். இவ்வாறு ஒவ்வொரு தலமாகச் சென்று வரும்போது ஒருநாள் இத்தலத்துக்கு வந்தார். இத்தலத்தில் திருமாலை நோக்கி தவம் இருக்கத் தொடங்கினார். அச்சமயத்தில் திருமால் பேரழகு வாய்ந்த மனிதராக நான்முகன் முன்பு வந்தார். அப்போது அவரைக் கண்டு அவருடைய அழகு குறித்து வினவினார். அப்போது திருமால், நான்முகனிடம் அழகு நிலையற்றது. ஆணவம் ஒருவரை அழிக்கக் கூடியது. இவ்விரண்டையும் கொண்டிருப்பவர்கள் சிறந்த வாழ்க்கையைப் பெறுவதில்லை என்று கூறினார். உபதேசம் செய்ததோடு மட்டுமல்லாமல் பள்ளி கொண்ட கோலத்தில் இத்தலத்தில் எழுந்தருளினார். பிற்காலத்தில் சோழ மன்னர் ஒருவரால் கோயில் எழுப்பப்பட்டது. நான்முகனிடம் மிகுந்த அன்பு கொண்டு, திருமால் எழுந்தருளிய தலம் என்பதால் ‘அன்பில்’என்ற பெயரை இத்தலம் பெற்றது. சுதபா என்ற முனிவர் தன் தவ வலிமையால் நீரிலும் நிலத்திலும் வாழும் பண்புகளைக் கொண்டிருந்தார். திருமால் மீது மிகுந்த பக்தி உடையவர். ஒரு சமயம் நீருக்கடியில் திருமாலை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்க்க துர்வாச முனிவர் வந்தார். நீருக்குள் இருந்ததால் சுதபா முனிவர், துர்வாசர் வந்ததை கவனிக்கவில்லை. வெகு நெரம் காத்திருந்ததால் கோபமடைந்த துர்வாசர், அவரை தண்ணீருக்கடியில் வாழும் தவளையாக (மண்டுகம்) பிறக்குமாறு சபித்துவிடுகிறார். இதன்காரணமாக சுதபா முனிவருக்கு மண்டுகர் என்ற பெயர் ஏற்பட்டது. துர்வாசரிடமே சாப விமோசனம் குறித்து கேட்டார் மண்டுகர். முற்பிறவியில் செய்த கர்மத்தாலேயே இச்சாபம் கிடைத்தது என்றும், தகுந்த காலத்தில் திருமாலின் தரிசனம் அருளப் பெற்று சாப விமோசனம் கிடைக்கும் என்று மண்டுகரிடம் கூறினார் துர்வாசர். அதன்படி இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் (மண்டுக தீர்த்தம்) திருமாலை நோக்கி தவம் செய்தார் மண்டுக முனிவர். அவரது தவத்தை மெச்சி திருமால் அவருக்கு சுந்தரராஜராக காட்சி அளித்து சாப விமோசனம் கொடுத்தார். கோயில் மூலஸ்தானத்தில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி நாபியில் நான்முகனுடன் அருள்பாலிக்கிறார் சுந்தர்ராஜ பெருமாள். உத்தமர் கோயிலில் ஈசனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதும், இத்தலத்துக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தார். இத்தலத்தில் முன்மண்டபத்தில் ஆண்டாள் தனிசந்நிதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். மூலவர் நின்ற கோலத்தில் இருக்க, உற்சவர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். ஒரே சமயத்தில் ஆண்டாளின் இரண்டு கோலங்களை தரிசனம் செய்வது சிறப்பு. தேவலோக நடன மங்கை ஊர்வசி தன் அழகு மீது கர்வம் வந்துவிடாமல் இருப்பதற்காக ஆண்டாளை வணங்கிச் சென்றுள்ளாள். ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் நடக்க அருள்புரிவாள். பிரகாரத்தில் நரசிம்மர், வேணு கோபாலர், லட்சுமி நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், ஆழ்வார்கள் அருள்பாலிக்கின்றனர். திருச்சி, திருப்பேர் நகர், திருஅன்பில் என அருகருகே மூன்று திவ்ய தேசங்களில் பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருவிழாக்கள் ஆடிவெள்ளி, தைவெள்ளியில் தாயார் புறப்பாடு, நவராத்திரி உற்சவம், திருக்கார்த்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு. மார்கழியில் திருவாய்மொழி, திருமொழி திருநாள், ராப்பத்து திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். மாசி மாத தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். தாயாரையும், ஆண்டாளையும் வணங்குவதால் திருமணத் தடை நீங்கி வாழ்வில் ஒளி பிறக்கும். அமைவிடம்: திருச்சியில் இருந்து 21 கி.மீ., தொலைவில் உள்ளது. திருமண வரம் அருளும் ஐந்தாவது திவ்ய தேசமான அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயில் தொடர்பான காணொளிகாட்சி கீழே!👇👇 #🙏பெருமாள் #108 திவ்ய தேசங்கள் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
12 likes
2 comments 27 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views 1 months ago AI indicator
*தினம் ஒரு திவ்ய தேச தரிசனம்-3* புதிய தொடர் பதிவு! ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்கள் தொடர் பதிவில் இன்று மூன்றாவதாக தரிசனம் செய்ய இருப்பது உத்தமர்கோவில் புருஷோத்தம பெருமாள் கோயில் திருச்சி மாவட்டம் உத்தமர்கோவில் (கதம்பவனம், பிச்சாண்டவர் கோயில், திருக்கரம்பனூர்) புருஷோத்தம பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 3-வது திவ்ய தேசம் ஆகும். நான்முகன், திருமால், ஈசன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம். திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி) இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு காரார் திண் கடல் ஏழு மலையேழுஇவ் வுலகேழுண்டு ஆராதென்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே மூலவர்: புருஷோத்தமன், தாயார்: பூர்ணவல்லி, சவுந்தர்ய பார்வதி தலவிருட்சம்: கதலி (வாழை), தீர்த்தம்: கதம்ப தீர்த்தம் விமானம்: உத்யோக விமானம்  தல வரலாறு ஈசனைப் போலவே பிரம்மதேவனும் ஐந்து தலைகளுடன் இருந்தார். ஒருசமயம் ஈசன் என்று நினைத்து பிரம்மதேவனுக்கு பணிவிடைகள் செய்யத் தொடங்கினார் பார்வதிதேவி. இந்த சம்பவத்தால், இனியும் குழப்பம் வரக்கூடாது என்று எண்ணி ஈசன், பிரம்மதேவனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கிள்ளி எடுத்தார். இதனால் ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதோடு மட்டுமல்லாமல் பிரம்மதேவருடைய கபாலமும் (மண்டை ஓடு) அவர் கையுடன் ஒட்டிக் கொண்டது. ஈசனுக்கு படைக்கப்பட்ட உணவு அனைத்தும் கபாலமே எடுத்துக் கொண்டது. பசியால் வாடினார் ஈசன். இதன் காரணமாக அந்த கபாலத்தையே யாசகம் வாங்கும் பாத்திரமாக ஏந்திக் கொண்டு பிட்சாடனர் கோலத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அப்போது ஒருநாள் இத்தலத்துக்கு வந்தபோது, திருமால், ஈசனின் பாத்திரத்தில் உணவு அளிக்கும்படி திருமகளிடம் கூறினார். திருமகளும் ஈசன் வைத்திருந்த கபாலத்தில் உணவிட்டாள். அதுவே பூரணமாக நிரம்பி ஈசனின் பசியைப் போக்கியது. இதனால் தாயார் ‘பூரணவல்லி’ என்ற பெயரைப் பெற்றார். திருமாலும் பள்ளி கொண்ட கோலத்தில் ஈசனுக்கு காட்சி தந்தார்.  பிரம்மதேவருக்கு பூலோகத்தில் தனக்கு ஒரு கோயில் இல்லை என்ற மனக்குறை இருந்தது. திருமால், பிரம்மதேவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மதேவரும் இத்தலத்துக்கு வந்து பெருமாளை வழிபட்டு தவம் செய்யத் தொடங்கினார். பிரம்மதேவரின் பக்தியை சோதிக்க எண்ணிய பெருமாள், கதம்ப மரத்தின் வடிவமாக அங்கு நின்று கொண்டார். இதை உணர்ந்த பிரம்மதேவர் கதம்ப மரத்துக்கு பூஜைகள் செய்து வழிபட்டார். பிரம்மதேவரின் பக்தியில் மகிழ்ந்த பெருமாள், பிரம்மதேவருக்கு காட்சி கொடுத்து எப்போதும்போல் இத்தலத்தில் இருந்து தன்னை வழிபட்டு வருமாறு கூறினார். மேலும் பிரம்மதேவருக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இத்தலத்தில் தனியாக பிரம்மதேவருக்கு வழிபாடு இருக்கும் என்று கூறினார் பெருமாள். பிரம்மாவும் இத்தலத்தில் தங்கினார். பிற்காலத்தில் பிரம்மதேவருக்கு சந்நிதி எழுப்பப்பட்டது. பிரம்மதேவருக்கு இடதுபுறத்தில் ஞான சரஸ்வதி தனிசந்நிதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஞான சரஸ்வதியின் கையில் ஓலைச் சுவடி, ஜெபமாலை உள்ளது. பிரம்மதேவருக்கு தயிர் சாதம், ஆத்தி இலை படைத்தும் சரஸ்வதி தேவிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாற்றியும் வழிபட்டால் ஆயுள் கூடும். கல்வி சிறக்கும். குருப்பெயர்ச்சி காலத்தில் பிரம்மதேவருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். இத்தல விமானத்தின் பெயர் உத்யோக விமானம். அதன் கீழ் கருவறையில் மூலவர் கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கிறார்கள். பூரணவல்லி தனிசந்நிதியில் சேவை சாதிக்கிறார். மகாலட்சுமிக்கும் தனிச்சந்நிதி உள்ளது. பெருமாளுக்கு பின்புறத்தில் மேற்கு பார்த்தபடி ஈசன் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இவர் பிரகாரத்தில் பிட்சாடனர் கோலத்தில் (உற்சவர்) அருள்பாலிக்கிறார்.  சிவன், பிட்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் ‘பிச்சாண்டார் கோயில்' என்றும், திருமால் கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் ‘கதம்பனூர்' என்றும் ‘கரம்பனூர்' என்றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லற வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை ‘உத்தமர் கோயில்' என்று மங்களாசாசனம் செய்துள்ளார். ஈசன், பிரம்மதேவன், திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சந்நிதிகள் அவர்கள் துணையுடன் அருள்பாலிக்கின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம். இத்தலம் சப்தகுரு தலம் என்று அழைக்கப்படுகிறது. சிவகுரு தட்சிணாமூர்த்தி, திருமாலின் குரு வரதராஜர். குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்கிராச்சாரியர் ஆகிய 7 குரு சுவாமிகளும் குருவுக்குரிய இடத்தில் இருந்து அருள்பாலிக்கின்றனர். குருபெயர்ச்சியின்போது அனைவருக்கும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும்.  திருவிழாக்கள் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது மும்மூர்த்திகளுக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக விதியுலா வருகின்றனர். தைப்பூசத்தில் ஈசனுக்கும் மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பெருமாளுக்கு சித்திரையிலும் ஈசனுக்கு வைகாசியிலும் தேர்த் திருவிழா நடைபெறும். திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க, கிரக தோஷங்கள் விலக தம்பதியர் ஒற்றுமை சிறக்க இத்தல பெருமாளை வணங்குவது நன்மை பயக்கும். அமைவிடம்: திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 8 கிமீ தொலைவிலும், ஸ்ரீரங்கத்தில் இருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது. சப்த குரு ஸ்தலம் என்று அழைக்கப்படும் மூன்றாவது திவ்ய தேசமான உத்தமர்கோவில் புருஷோத்தம பெருமாள் கோயில் தொடர்பான காணொளிகாட்சி கீழே!👇🚩🕉🪷🙏🏼 #🙏பெருமாள் #108 திவ்ய தேசங்கள் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
16 likes
17 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2K views 1 months ago AI indicator
*தினம் ஒரு திவ்ய தேச தரிசனம்-2* புதிய தொடர் பதிவு! ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதொடர் பதிவில் இன்று இரண்டாவதாக தரிசனம் செய்ய இருப்பது *உறையூர் அழகிய* *மணவாளர் பெருமாள்* *கோயில்* 108 வைணவ திவ்ய தேச தலங்களுள், திருச்சி மாவட்டம், உறையூர் அழகிய மணவாளர் பெருமாள் கோயில் இரண்டாவது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. திருக்கோழி,உறந்தை, நிகளாபுரி, திருவுறையூர் என்றும் இவ்வூர் அழைக்கப்படும். இத்தலம் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருப்பாணாழ்வாரின் அவதாரத் தலம் ஆகும். சோழ நாட்டு யானை, உறையூர் வந்தபோது கோழி ஒன்று அந்த யானையைத் தாக்கி ஓடச் செய்ததால், இவ்வூருக்கு ‘கோழியூர்’என்றும் ‘திருக்கோழி’என்றும் பெயர் கிட்டியது. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து 5 கிமீ தொலைவிலும், திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து 3 கிமீ தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் : அழகிய மணவாளர் தாயார்: கமலவல்லி நாச்சியார் தீர்த்தம்: கமலபுஷ்கரிணி, கல்யாண தீர்த்தம் ஆகமம்: பாஞ்சராத்ரம் விமானம்: கமல விமானம் தான் எழுதிய பெரிய திருமொழியில் ஒரே ஒரு பாசுரத்தில் இத்தலத்தைப் போற்றி, திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றமன்ன பாழியும் தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் வாழியரோ இவர் வண்ணமெனில் மாகடல் போன்று உளர் கையில் வெய்ய ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா தல வரலாறு துவாபர யுகத்தில் தர்மவர்ம சோழரின் வம்சத்து அரசர் நந்த சோழர் உறையூர் பகுதியை ஆண்டு வந்தார். ரங்கநாதரின் பக்தரான இவருக்கு நீண்ட காலமாக குழந்தைப் பேறு கிட்டவில்லை. மன்னர், தன் வருத்தத்தை ரங்கநாதரிடம் தெரிவித்தார். அவரும், தன் பக்தருக்காக, மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்குமாறு பணித்தார். ஒரு சமயம் மன்னர் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில், தாமரை மலரில் படுத்திருக்கும் குழந்தையைக் கண்டார். மகிழ்ச்சி அடைந்த மன்னர் அக்குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்று கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பருவம் அடைந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய மன்னர் எண்ணினார். ஒருநாள் தோழியருடன் கமலவல்லி வனத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, குதிரையில் பயணிக்கும் ரங்கநாதரைக் காண்கிறார். அவரையே மணக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார். இதைத் தொடர்ந்து, மன்னரின் கனவில் தோன்றிய பெருமாள், கமலவல்லியை மணக்க விரும்புவதாகக் கூறுகிறார். மன்னரும், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்கிறார். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதருடன் கமலவல்லி ஐக்கியமானார். மன்னரும் தனது மகளுக்காக கோயில் எழுப்பினார். நாச்சியார் கோயில் தாயாரின் அவதாரத் தலம் என்பதால் இத்தலம் நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இங்கு தாயாரே பிரதானமாகக் கருதப்படுகிறார். இங்கு பெருமாளுக்குரிய அனைத்து ஆராதனைகளும், கமலவல்லித் தாயாருக்கு நடைபெறுகிறது. மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லித் தாயாரும் மணக் கோலத்தில் வடக்கு திசை நோக்கி ரங்கநாதரைப் பார்த்தவாறு நின்றபடி அருள்பாலிக்கின்றனர். திருமணத் தடை உள்ளவர்கள், ஆயில்யம் நட்சத்திர தினத்தில் தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி தினத்தில் இத்தலத்தில் தாயார் மட்டுமே சொர்க்கவாசல் கடக்கிறார். ரங்கநாதர் மார்கழியில் வைகுண்ட வாசல் கடந்ததும், தை அல்லது மாசியில் வரும் ஏகாதசி தினத்தில், கமலவல்லி நாச்சியார் சொர்க்கவாசல் கடக்கிறார். பங்குனி உத்திர திருவிழாவின்போது, நம்பெருமாள் இத்தலத்துக்கு எழுந்தருளி, கமலவல்லி தாயாருடன் சேர்த்தி சேவை அருள்கிறார். மீண்டும் சுவாமி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தி சேவை அருள்கிறார். இவ்வாறு பங்குனித் திருவிழாவில்,பெருமாள் இரண்டு தாயாருடன் சேர்த்தி சேவை அருள்வதைக் காண கண்கோடி வேண்டும். 5 நிலை கோபுரம் கொண்டு இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் பிரகாரத்தில் நம்மாழ்வார், ராமானுஜருக்கு சந்நிதிகள் உள்ளன. ஆலயத்திருவிழாக்கள் புரட்டாசி நவராத்திரி விழா, கார்த்திகை திருப்பாணாழ்வார் 10 நாள் திருவிழா, மார்கழி வைகுண்ட ஏகாதசி 21 நாள் வைபவம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. திருமணத்தடை நீக்கும் இரண்டாவது திவ்ய தேசமான உறையூர் அழகிய மணவாளர் பெருமாள் கோயில் தொடர்பான காணொளிகாட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #108 திவ்ய தேசங்கள் #🙏பெருமாள் #108 திவ்ய தேசங்கள் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
20 likes
11 shares