꧁༺ᏉᎯℕℐTℋᎯЅℛℐ༻꧂
749 views • 3 months ago
மார்கழி 16 (டிசம்பர் 31) –
Meaning in Routine / அர்த்தமுள்ள அன்றாடங்கள்
“Those who have a ‘why’ to live, can bear almost any ‘how’.”
— Viktor Frankl
“தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?”
என்ற பாரதியின் கர்ஜனையிலிருந்து கடைசி வரியை மட்டும் எடுத்துக்கொண்டு, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாகவும், பயோவாகவும் வைத்துக்கொள்ளும் இளைஞர்கள் பலரைக் காண்கிறோம்.
கடைசி வரிக்கு முந்தைய வரிகளைச் சொல் என்றால் தெரியாது.
வலிமை மிகுந்த இந்த வரியை ஸ்டேட்டஸாக வைத்துவிட்டு, அப்படி என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் — ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அல்லது நெட்ஃப்ளிக்ஸில் அல்லது ஏதோ ஒரு பொழுதுபோக்கு ஆப்பில் குடியேறியிருக்கிறார்கள்.
அந்த முழுப்பாடலின் பொருளை அறிந்திருந்தால்,
அதை மனதில் நிறைத்திருந்தால்,
சோம்பித் திரிவோமா நாம்?
எல்லா இளைஞர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று நிச்சயமாக சொல்லவில்லை.
சமூக அக்கறை மிக்க, பொறுப்புள்ள இளைஞர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
ஆனால் வாழ்க்கையைப் பற்றிய எந்தவித சிந்தனையும் இன்றி,
எந்தத் திறன்களையும் வளர்த்துக்கொள்ளாமல்,
தன்னை மேம்படுத்திக்கொள்ள முனைப்பில்லாமல்,
எதுவும் உருப்படியாக செய்யாமல் இருக்கும் இளைஞர்கள் —
நாம் நினைத்ததைவிட அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்கு,
நம்மைச் சுற்றியுள்ள அரசியல், சமூக சூழல்கள் போதுமான சான்றாக இருக்கின்றன.
இந்த இளைஞர்களுக்கு வாழ்க்கையின் லட்சியம் என்ன?
அவர்களது ஆற்றலையும், அறிவையும், இளமைப் பருவத்தையும் வீணடிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இவர்களில் சிலருக்கு ஏதோ ஒரு லட்சியம்கூட இருக்கிறது.
ஆனால் அதுவும் —
ஓவர் நைட்டில் ஒபாமா ஆக வேண்டும்
என்ற வகையில் தான்.
இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல; நம்மில் பலருக்கும் பொருந்தும்.
இன்றைய யுகத்தில், நமது வாழ்க்கையை நாம் எங்கே தொலைக்கிறோம் என்று கேட்டால் —
நமது அன்றாடங்களில் — சமூக வலைதளங்களில் தொலைக்கிறோம்.
சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்தால்,
நம் கையில் இருக்கும் திறன்பேசி
நம் முன்னேற்றத்திற்கான ஏணி.
இல்லையென்றால் — அது ஒரு புதைக்குழி.
இதைக் நாம் உணர்வது எப்போது?
“Either you run the day, or the day runs you.”
— Jim Rohn
சரியான திட்டமிடலும், கட்டுப்பாடும் இல்லையென்றால்
நாட்கள் நகர்ந்துகொண்டுதான் இருக்கும்.
காலம் ஓடிக்கொண்டுதான் இருக்கும்.
ஆனால், நமது லட்சியங்கள்?
அவை பகல் கனவுகளாக மாறிவிடும்.
நல்ல பொழுதையெல்லாம்
ஸ்க்ரோல் செய்து கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன்
தானும் கெட்டார்…
சிலர் அல்லும் பகலும்
ஆன்லைனில் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை
என்று அலட்டிக்கொண்டார்…
புரிந்துகொண்டோரெல்லாம்
பிழைத்துக்கொண்டார்
உன்போல்
ஸ்க்ரோல் செய்தோரெல்லாம்
கோட்டைவிட்டார்!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இருந்திருந்தால்,
இப்படித்தான் பாடியிருப்பார்.
எனது நோக்கம்,
சமூக வலைதளங்களே தவறு என்று போதிப்பது அல்ல.
கட்டுப்பாடற்ற பயன்பாடுதான் பிரச்சினை.
ஒரு காலத்தில்,
தூர்தர்ஷன் மட்டுமே பொழுதுபோக்கிற்கும், செய்திகளுக்கும் இருந்தது.
“இன்றைய நிகழ்ச்சிகள் இத்துடன் முடிவடைகின்றன”
என்று இரவில் அறிவிப்பு வரும்.
அதற்கு மேல் — காலையில்தான்.
இன்றோ,
டிவி சேனல்களுக்கே டவுன் டைம் இல்லையென்றால்,
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில்
நமது ஃபீடுக்கு முற்றுப்புள்ளியே இல்லை.
இதனால் நமது மூளையில் டோப்பமின் சுரப்பு அதிகரிக்கிறது.
டோபமின் என்பது
“மகிழ்ச்சி ஹார்மோன்”
என்று பொதுவாக கருதப்படுகிறது.
ஆனால் உண்மையில்,
“இது நன்றாக இருக்கிறது.
இதை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்”
என்று நமது மூளையைத் தூண்டும்
உந்துதல் ரசாயனம் தான் டோபமின்.
சமூக வலைதளங்கள் இதையே மிக நுட்பமாகப் பயன்படுத்துகின்றன.
ஒரு செய்தித்தாளை வாசித்துவிட்டு மூடும் போது,
“இன்றைய செய்திகளைத் தெரிந்துகொண்டோம்”
என்று மூளைக்கு ‘முடிந்தது’ என்ற சிக்னல் கிடைக்கும்.
ஆனால் ஸ்க்ரோல் செய்தால் -
“இன்னும் கொஞ்சம் பார்த்தால் ஏதாவது கிடைக்கலாம்…” என்ற உணர்வு வருகிறது.
டோபமினும்
“இன்னும்… இன்னும்…”
என்று நம்மை உந்துகிறது.
“என் பதிவை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்?
யார் யார் லைக் செய்திருப்பார்கள்?
ஹார்ட் ரியாக்ஷன்?
ரீல்ஸ் வைரல் ஆகுமா?”
இந்த முன்கணிக்க முடியாத எதிர்பார்ப்பே
டோபமின் சுரப்பை அதிகரிக்கிறது.
இது கிட்டத்தட்ட
ஒரு சூதாட்ட இயந்திரம் போலவே வேலை செய்கிறது.
லைக், கமெண்ட், ஷேர் ஆகியவற்றால்
நமது மூளை
“நம்மை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்”
என்று தவறான முடிவுக்கு வருகிறது.
அதனால்தான்
இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்களுக்கும்,
“வாட்டர்மெலன் ஸ்டார்களுக்கும்”
பஞ்சமே இல்லாமல் போய்விட்டது.
நமது மூளை இயல்பாகவே
புதியதை விரும்பும்,
பழையதை அலட்சியப்படுத்தும்.
சமூக வலைதளங்களில்
5 விநாடிக்கு ஒரு புதிய காட்சி,
10 விநாடிக்கு ஒரு புதிய உணர்வு —மூளையை அதிக தூண்டுதலுக்குப் பழகுகிறது.
அதனால்தான்
புத்தகம் வாசிப்பது சலிப்பாகவும்,
ஒரே வேலையில் கவனம் செலுத்த முடியாமலும் இருக்கிறது.
உண்மையில்,
சமூக வலைதளங்கள் நம்மை மகிழ்ச்சியாக மாற்றவில்லை.
மாறாக,
“இன்னும் ஸ்க்ரோல் செய்து பார்…
மகிழ்ச்சி கிடைக்கலாம்”
என்ற எதிர்பார்ப்பைத் தான் தொடர்ந்து தூண்டுகின்றன.
ஆனால் நடைபயிற்சி,
வாசித்தல்,
பேசுதல்,
எழுதுதல்,
ஓவியம் தீட்டுதல்,
ஒரு நாளைத் திட்டமிட்டு
நான்கு வேலைகளைச் செய்து முடித்தல் —இவையெல்லாமும் டோபமினை உருவாக்குகின்றன.
வித்தியாசம் ஒன்றுதான் —
இது மெதுவாக சுரக்கும், ஆனால் நீடிக்கும்.
அன்றாட செயல்களை “இதைச் செய்வதால் நமக்கு நல்லது”
என்று மூளையைப் பழக்கப்படுத்தினால்,
அது, அதை
cue → routine → reward
என்ற பழக்கச் சங்கிலியாக மாற்றுகிறது.
முன்கணிக்கக்கூடியது என்றால் —
மூளை அதைத் தனக்குப் பாதுகாப்பானதாக அர்த்தப்படுத்திக் கொள்ளும்.
அதனால்தான்
சின்னக் குழந்தைகள்,
விபத்திலிருந்து மீண்டவர்கள்,
ஆட்டிஸம் குழந்தைகள் —
எல்லோருக்கும் ரூட்டின் அவசியமாகிறது.
அவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை.
நாமும் ஒரு அன்றாட வழக்கத்தை உருவாக்கினால்,
அது நமக்கும் பாதுகாப்பு தரும்.
ஆனால், அன்றாட வழக்கங்கள் உணர்ச்சித் தூண்டுதல் அதிகம் செய்யாததால், அதைச் செய்யும்
சமூக வலைதளங்கள் நம்மை ஹைஜாக் செய்கின்றன.
சுருக்கமாக:
அன்றாட வாழ்க்கை நமக்கு ஆழம் தருகிறது.
சமூக வலைதளங்கள் உச்சம் தருகின்றன.
இதை எப்படி மாற்றுவது?
அன்றாடத்தை
“பழக்கம்” என்று இல்லாமல்,
“பயிற்சி” அல்லது “பொறுப்பு” என்று பார்க்கும்போது
அது அர்த்தமுள்ளதாக மாறுகிறது.
* தினசரி வேலை → பொறுப்பின் பயிற்சி
* சமையல் → ஆரோக்கியப் பராமரிப்பு
* நடைபயிற்சி → உடலோடு உரையாடல்
இங்கே “பொறுப்பு” என்ற சொல்லுக்கு பதில் “கடமை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம். ஆனால், கடமை என்பது யாராலோ நமக்கு கொடுக்கப்பட்டது. அதனால் அது சுமையாகத் தோன்றலாம்.
ஆனால் பொறுப்பு என்பது
நாம் உணர்ந்து ஏற்றுக்கொள்வது.
அதனால்தான் உத்வேகம் இன்றி யாராவது வேலை செய்தால்,
“கடமைக்கே என்று செய்யாதே”
என்று சொல்கிறோம்.
அர்த்தம் என்பது செயலில் இல்லை.
நாம் கொடுக்கும் பார்வையில் இருக்கிறது.
காலையிலேயே கைபேசியுடன் ஆரம்பிக்காமல்,
ஒவ்வொரு நாளையும் செடிக்கு நீர் பாய்ச்சுதல்,
உடற்பயிற்சி,
வாசிப்பு,
தியானம் — என்று
உங்களுக்கு ஏற்றவாறு தொடங்குங்கள்.
ஒவ்வொரு நாளின் முடிவிலும்:
* நான் என்ன செய்ய நினைத்தேன்?
* என்ன செய்தேன்?
* ஏன் சிலவற்றை செய்யவில்லை?
* நாளை எப்படி திருத்தலாம்?
என்று சுய ஆய்வு செய்யுங்கள்.
சமூக வலைதளங்களை
“சலிப்பு தீர்க்க அல்லது ஜாலியாக இருக்க” என்றில்லாமல்,
“நோக்கத்துடன்” பயன்படுத்துங்கள்.
வரையறை உருவாக்குங்கள் —
இவ்வளவு நேரம்,
இவ்வளவு ரீல்ஸ்,
இவ்வளவு பதிவுகள் என்று.
பெரியவர்கள் கூட
வாட்ஸ்அப்பிற்குள்ளும்,
சீரியல்களுக்குள்ளும் மூழ்காமல்,
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற
வேறு என்ன செய்யலாம்
என்று சிந்தியுங்கள்.
ஒரு நாளின் அர்த்தம்
பெரிய நிகழ்வுகளில் இல்லை.
அது
ஆர்ப்பாட்டமில்லாத,
அமைதியான,
மீள்-செயல்களில் வளர்கிறது.
நாம் எதைத் தேர்வு செய்கிறோம்,
எப்படி திட்டமிடுகிறோம்,
எப்படிச் செய்து முடிக்கிறோம்,
முடிவில் எப்படி உணர்கிறோம் —
என்பதே நமது நாளின் அர்த்தமாக அமைகிறது.
அன்றாடங்கள் அர்த்தமுள்ளதாக மாறும்போது, வாழ்க்கை சலிப்பாக இருக்காது. அந்த சலிப்பை ஈடு செய்யத் தேவைப்படும் டோபமினை - மனம் சமூக வலைதளங்களிலும், சீரியல்களிலும் தேடாது.
புரிதலுடன் பயணிப்போம்.
இன்றைய நாளையும், நாளை பிறக்கவிருக்கும் புத்தாண்டையும்
அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்.
பயிற்சி செய்து பாருங்கள்:
* திறன்பேசியைத் திறக்கும் முன்:
“இப்போது ஏன் திறக்கிறேன்?” என்று கேளுங்கள்.
* சலிப்பென்றால்,
வாசித்தல் / நடைபயிற்சி / ஓவியம் — என்று
மாற்று செயல் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.
* நாள் முடிவில்:
“இன்று என் நேரத்தை
அர்த்தமுள்ளதாக பயன்படுத்தினேன்”
என்று மனதார சொல்லுங்கள்.
#என்_மனசெல்லாம்_மார்கழிதான்
#🎊புத்தாண்டு ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்💥 #📜புத்தாண்டு கோட்ஸ்🎉 #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #கோலங்கள் மார்கழி மாத கோலம் simple kolam
10 likes
12 shares