சிவ சிவ
நமசிவாய வாழ்க
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்து அருள் செய்திடும் உத்தம நாதனை
கொழுந்தன்பு செய்து அருள் கூர வல்லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருள் அதுவாமே
(திருமந்திரம் - 280)
#திருமூலர்
கருத்து: சிலர், இறைவனிடம் அன்பு கொள்ளாமல் இறைவனை இகழ்ந்ததையும்; சிலர் இறைவனிடம் #அன்புகொண்டுஇறையருள் பெற்றதையும்; ஈசன் அறிவார்.
அதற்கேற்பவே தெய்வம் தன் அருளை விரும்பி வழங்கும்.
தன்னிடம் தலையாய அன்பு கொண்டவர்க்குத் தெய்வம் மிகுந்த மகிழ்ச்சியோடு அருள் செய்யும். இறையருள் தன்மை அது. இகழ்வது - #அன்பு செய்வது எனும் இரண்டையும், மிகவும் அழகாகச் சொல்லும் பாடல் இது.
முதலில் இகழ்வதைப் பார்க்கலாம்.
யாராவது நம்மை இகழ்ந்தால், பொறுக்க மாட்டேன் என்கிறது.
பதிலடி கொடுக்கிறோம்.
அப்படியென்றால், இறைவனும் நம்மைப்போல் தானா?
உண்மையான இகழ்ச்சியும் தூய்மையான #அன்பும் இறைவனுக்குத் தெரியும்.
#சாக்கிய நாயனார் என்பவர், கல்லை எடுத்து சிவபெருமான் மீது வீச, சிவபெருமான் அதை மலர்களாகவே ஏற்றுக் கொண்டார் என்பதைப் பெரிய புராணம் விரிவாகவே சொல்கிறதே.
காரணம்?
#சாக்கிய நாயனார் கல்லைத்தூக்கி வீசினா லும், அதைத் தூய்மையான பக்தியோடு மலராகப் பாவித்து வீசினார்.
இங்கே செயலைவிட, #அன்பே கணக்கிடப்பட்டது.
கண்ணப்ப நாயனார் வரலாறும் இதேதான்; செருப்புக் காலைத் தூக்கி, சிவபெருமான் மீது வைத்தார். அங்கும் செயலைவிட, தூய்மையான #அன்பே கணக்கிடப்பட்டது.
அவர்கள் எல்லாம் இகழ்ந்ததைப்போலத் தோன்றினாலும், இறைவனுடைய அருளைப் பெற்றார்கள்.
‘இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்’ என இப்பாடல் கூறுவதன் விளக்கம் இதுவே.
‘ஈசன் அறியும் இராப்பகலும் தன்னைப் பாசத்துடன் வைத்துப் பரிவு செய்வார்களை’ என மற்றொரு திருமந்திரப் பாடலும், இந்த உண்மையை விளக்கும்.
அதேசமயம், வழிபாடு செய்வதைப்போலச் செய்து ஏமாற்றுவதையும் ஈசன் அறிவார்.
அதற்கேற்றார்போல, ஈசனும் அருள் புரிவார்.
உதாரணமாக, ராவணன் சூரபத்மன் முதலானோர் இந்த வகைதான்.
கடுந்தவம் செய்து கயிலாயநாதரான சிவபெருமானை, நேருக்குநேராகத் தரிசித்து வரம் பெற்றும் , அதன் பிறகு ராவணனின் செயல்பாடுகள், தெரிந்ததுதானே! “சுவாமியிடம் இருந்து வரம்பெற்று விட்டோம். இனிமேல் நம்மைக் கேட்க யார் இருக்கிறார்கள்?” என்ற எண்ணத்தில் ராவணன் ஆடிய ஆட்டங்களும், அதன் விளைவுகளும் தெரிந்தவை தானே?
சூரபத்மன் வரலாறும் இதேதான்; கடுந்தவம் செய்து ஏராளமான வரங்களைப் பெற்றான். விளைவு? நல்லவர்களையெல்லாம் ஆட்டிப் படைத்து, ஆறுமுகனால் சம்ஹாரம் செய்யப்பட்டான். இதே கதைதான் நம்முடையதும். பெற்றோர்களுடன் திருவிழாவிற்குப் போகிறோம். எதையாவது பார்த்து ஆசைப்படுகிறோம்.
பெற்றோர்கள் என்னதான் சொன்னாலும், நாம் கேட்பதாக இல்லை. நம் முனைப்பே முன்னால் நிற்கிறது. பெற்றோர்களும் நாம் விரும்பியதை வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். அதைத் தின்றதும் நோய் வருகிறது.
நாம் விரும்பியதை வாங்கிக் கொடுத்த அதே பெற்றோரே, மருத்துவரிடம் சொல்லி ஊசிபோட்டுக் கசப்பு மருந்து தரச் சொல்கிறார்களல்லவா?
அதுபோல, நாம் பலவற்றை விரும்புகிறோம். நாம் கேட்பதைப் பரம்பொருள் கொடுத்து விடுகிறது. அதனால் பிரச்னை என்று வரும்போது, கசப்பு மருந்தைப்போலத் தண்டனை தருகிறது.
விவரம் புரியாத குழந்தை, ‘‘எங்க அம்மா எனக்குக் கசப்புமருந்து தராங்க’’ என்று புலம்புவதைப்போல, ‘‘தெய்வம் ஏதோ, எனக்குத்தான் கஷ்டத்தைக் கொடுக்கிறது’’ என்று புலம்புகிறோம்.
இவ்வாறு செய்யும் அதே ஈசன் தூய்மையான அன்பு கொண்ட அடியார்களுக்கு, மகிழ்வோடு அருள்செய்கிறாராம்.
மாணிக்கவாசகருக்காக மண்சுமந்து மன்னவன் கைப்பிரம்பால் அடி பட்டதும்;
சுந்தரருக்காகத் தூது போனதும்;
ஞானசம்பந்தருக்காகப் பாண்டிய மன்னரின் கூனைநீக்கி அவருக்கு அருள் புரிந்ததும்;
திருவுக்கரசருக்காகத் தண்ணீருடன் பொதிசோறு அளித்ததும் -
இறைவன் மகிழ்வோடு அருள் செய்த வரலாறுகளே!
ஆம்! தண்டனை கொடுத்த இறைவனே,
தூய #அன்பு கொண்டவர்களுக்காகத்தானே தேடிவந்து அருள் செய்த வரலாறுகளும் உண்டு.
ஆகையால், ‘‘இறைவனிடம் தூய்மையான- பேரம் பேசாத அன்பு வைத்தால், பக்தி செலுத்தினால், மகிழ்ந்து அருள்புரிவார் இறைவன்’’ எனக்கூறி பாடலை நிறைவு செய்கிறார் திருமூலர்.
திருச்சிற்றம்பலம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய