கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 07.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
பிரமலோகத்தார் பூலோகப் பிறப்பு
===================================
பிரமலோ கத்திலுள்ள பிலத்த இருஷிகளை
வரவழைத்து அய்யா நாராயணர் வகிர்வார்
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த ரிஷிமாரே
ஏதுங்கள் ஞாயம் என்னோ டுரையுமென்றார்
அப்போது நல்ல அந்தரிஷி யேதுரைப்பார்
இப்போது அய்யாவே எங்களைப்பூ லோகமதில்
படைக்கவே ணுமெனவே பகர்ந்தமொழி மாறாமல்
நடக்கக் கருமமிது நாரணரே பொய்யாது
முன்னமே யெங்கள் முறைவழியி லோருயிரை
வன்னமுள்ளச் சாணாராய் வகுத்தீரே யும்மகவாய்
அல்லாம லெங்கள்வழி ஆனரிஷி தங்களிலே
பொல்லாத குற்றம் பிரமனுக்குச் செய்ததினால்
அன்பத்தினா லொன்றிரிஷி அவனிதனில் போகவென்று
இன்புற்ற நாரணரே ஈந்தீரவர் கேட்டவரம்
ஆனதா லவர்கள் அவனிதனி லேதிரிய
ஏனையா எங்களைநீர் இப்போ பிறவிசெய்தால்
இனம்பிரிந்து நாங்கள் இருப்போமே பூமிதனில்
கனம்பொருந்தும் நாரணரே கட்டுரைக்க வேணுமென்றார்
.
விளக்கம்
=========
சொர்க்கலோகத்தாரை எல்லாம் பூலோகப் பிறவிக்கு அருள் பாலித்த மகாவிஷ்ணு, அடுத்து, பிரமலோக வாசிகளான ரிசிகளை எல்லாம் வரவழைத்து, என் குழந்தைகளான பலமிக்க ரிசிமார்களே ! இப்போது வானுலகத்தவர்களை எல்லாம் பூவுலகத்திலே பிறவி செய்யப்படுவதான நடவடிக்கைகளில் உங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் உள்ளதானால் உடனே சொல்லுங்கள் என்றார்.
.
அதைக் கேட்ட அந்த ரிசிமார்கள், சுவாமி, எங்களை எல்லாம் பூலோகத்தில் பிறவி செய்யவேண்டும் என்று தாங்கள் நிச்சயித்தது நிச்சயித்தபடியே ஆகட்டும். அது நிகழ்ந்தாக வேண்டிய விதியுமாகும். எனவே, அந்த விதி ஒரு போதும் பொய்க்காது.
.
உங்கள் திட்டப்படி எங்களையெல்லாம் பூலோகத்தில் பிறவி செய்ய வேண்டும் என்பதற்காகவே, நாங்கள் இருக்கும் சொர்க்க லோகத்தில் உள்ள ஒருவரின் உயிரை முன் ஏற்பாடாக சப்தமாதர்களில் ஒரு மாதுவின் மணிவயிற்றின் மூலம் உம்முடைய பிள்ளையாகப் பெற்றுக் கலியுகத்திலே பெருகி வாழ வைத்திருப்பதையும் நாங்கள் நன்கு அறிவோம்.
.
முன்னொரு காலத்தில் எங்களோடு பிரம்ம லோகத்தில் இருந்த ஐம்பத்து ஐந்து ரிசிமார்கள், பிரம்ம தேவனுக்கே உரிய பிறவிக் கணக்குச் சுவடியைத் திருடிய குற்றத்திற்காக, அவர்கள் ஐம்பத்து ஐந்து பேரையும், கல்சிலையாகுவீர் என்று பிரம்மதேவன் சாபமிட்டதின் விளைவாக, அவர்கள் 55 ரிசிமார்களும் கல்சிலையாகி, பூலோகத்தில் நிற்கும்போது, தாங்கள் ஸ்ரீரங்கத்திலிருந்து திருவனந்தபுரத்திற்குச் செல்லும் வேளையில் தங்களின் திருக்கரம் அந்தச் சிலைகளின் மேல்பட்டு அந்த 55 ரிசிகளும் உயிர் பெற்று, சுவாமி எங்களுக்கு நற்கதி அருளுங்கள் என்று வேண்டினர்.
.
அப்போது அந்த 55 ரிசிகளையும் பார்த்து நீங்களெல்லாம் சீமைக்கு ஒரு ரிசியாய்ச் சென்று, பிச்சையெடுத்து அதை மிச்சம் வைக்காமல் உண்டு, வினயமாக வேறெதுவும் நினைக்காமல் வாழுங்கள் என்று சொல்லி அனுப்பினீர்கள். தங்களின் உத்தரவுப்படி அவர்களும் சீமைக்கு ஒருவராக திரிந்து அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
.
இந்த நிலையில் எங்களையும், தாங்கள் பூலோகத்திலே மனுக்குலத்தில் பிறவி செய்தால், அந்த 55 ரிசிகளும் எங்களோடு வந்து சேர்வது எப்போது என்பதையும் எங்களுக்குச் சொல்லி அனுப்புங்கள் மேன்மைக்கும் மேன்மையான நாராயணப் பரம்பொருளே என்று வேண்டினர்.
.
.
அகிலம்
========
நல்லதுதா னென்று நாரா யணருரைப்பார்
வல்ல ரிஷிமாரே வகையாகக் கேட்டீரே
அதற்கு விபரம் அருளுவேன் கேளுமென்று
மதுக்குகந்த மன்னன் வழுத்துவா ரன்போரே
சென்ற ரிஷியெல்லாம் செடமெடுத்துப் பூமிதனில்
மண்டலங்கள் தோறும் வாழுவார் கண்டீரே
என்ன விதமாய் இருப்பாரென் றேயினமாய்
துன்னயமாய் நீங்கள் துணிந்துநன்றாய்க் கேட்டிங்கோ
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணு ரிசிமார்களைப் பார்த்து, ரிசிமார்களே, முன்னாளில் நிகழ்ந்த அருமையானதோர் சம்பவத்தை நினைவுகூர்ந்து தேவையான ஒரு கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். அதற்கான விவரத்தை இப்போதே உங்களுக்குத் தெளிவாகச் சொல்லுகிறேன்.
.
அந்த ஐம்பத்து ஐந்து ரிசிமார்களும் பூலோகத்தில் மனிதர்களாகப் பிறந்து, இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து நாட்டுக்கு ஒருவராக வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நீங்கள் பூலோகத்தில் பிறந்திருக்கும் காலத்தில் என்ன விதமாக அங்கே இருப்பார்கள் என்பது பற்றிய விவரத்தைத் துல்லியமாகச் சொல்லுகிறேன் கேட்டுக் கொள்ளுங்கள் என்று மகாவிஷ்ணு சொல்லத் தொடங்குகிறார். ரிசிமார்கள் ஆவலோடு அதைக் கேட்க முனைகின்றனர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚