(4) நம் கூரத்தாழ்வான் - சில குறிப்புகள் - நம் கூரத்தாழ்வான்
நம்பெருமாள், நம்மாழ்வார், நஞ்சீயர், நம்பிள்ளை என்பது போலக் கூரத்தாழ்வானுக்கு ‘நம்’ அடைமொழி உண்டு. இது எங்கிருந்து வருகிறது என்பதை சற்று ஆராயலாம்.
இராமாநுச நூற்றந்தாதியில்:
”மொழியைக் கடக்கும் பெரும்புகழான் - வஞ்ச முக்குறும்பு ஆம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்”
பொருள்: முக்குறும்பு என்பது கல்விச் செருக்கு (அதிகம் படித்தவன் என்ற எண்ணம்); செல்வச் செருக்கு (அதிகப் பணம் இருக்கிறது என்ற எண்ணம்); குலச் செருக்கு (உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்ற எண்ணம்). இந்த மூன்று கர்வங்களும் ஒரு பெரும் குழியைப் போன்றவை. அதற்குள் விழுந்துவிட்டால் வெளியேறுவது மிகக் கடினம். நம் கூரத்தாழ்வான் இந்த மூன்று கர்வங்களையும் ஜெயித்தவர்.
மேலே குறிப்பிட்டுள்ள இராமாநுச நூற்றந்தாதியில் “நம் கூரத்தாழ்வான்” என்கிறார் அமுதனார். காரணம் என்னவாக இருக்கும்?
ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று தெரிகிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லோரும் பெரிய நம்பிகளிடம் கோயிலைப் பிரதட்சிணம் செய்து ரட்சையிடப் பிரார்த்திக்கிறார்கள். பெரிய நம்பிகள் ”சரி செய்கிறேன், ஆனால் என்னுடைய நிழல் போலப் பெருமாளே உபாயம் (பாரதந்திரியத்தை) முழுமையாக உணர்ந்து நடப்பவர் ஒருவர் என்னைப் பின் தொடர வேண்டும்” என்று விண்ணப்பிக்க, ”அப்படிப்பட்டவர் யார்?” என்று ஸ்ரீராமானுஜர் கேட்க, “நம் கூரத்தாழ்வான்” என்றார் பெரிய நம்பி. இங்கே “நம்” என்ற பிரயோகம் பெரிய நம்பிகள் உபயோகித்ததையே அமுதனார் உபயோகித்துள்ளார் என்று நாம் கொள்ளலாம்.
( தொடரும்.. )
-சுஜாதா தேசிகன்
6.2.2026
#🙏பெருமாள் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்