saravanan
448 views
1 days ago
#vaalkkay malargal மலர்கள்: ஏப்ரல் 6 எண்ண அலைகள் இயற்கையை உணர்ந்து அறவழி ஒழுகி அறியாமையைத் தீய்க்க வல்ல ஒரு மதிப்புள்ள உயர் மனிதனாக இருந்தும் தன் தகைமையும், இயற்கையாற்றலின் இயக்க நியதியும் அறியாமல், மனிதன் தனது எண்ண ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். தன் தேவை, தற்கால இன்பம் என்ற அளவில் குறுகி உணர்ச்சி வயமாகிப் பிறர்க்கும், பிற்காலத்திற்கும் தீமை விளைவிக்கும் வகையில் செயல் புரிகிறான். பிறரைத் தாக்கி தீமை விளைவிக்கும் எண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்கிறான். தன்குடும்பம், சமுதாயம், வேறு நாட்டு மக்கள் இவர்கள் மேல் சினம், வெறுப்பு, பகை கொண்டு அவன் எண்ண அலைகள் எப்போதும் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறான். இவ்வெண்ண அலைகள் அணு ஆற்றலாகவே பரவி, மனித இன உடல்களிலும், மூளையிலும் பொருந்தா உணர்வுப் பதிவுகளாகவும்அமைகின்றன. இப்பதிவுகளைப் பாவப் பதிவுகள் என்றும் சாபம் என்றும் அறிவறிந்த முன்னோர்கள் கூறியுள்ளனர். இயற்கை நியதியறியாமை என்ற மருளால் மனிதன் மனிதனுக்குப் பகையாகி பொதுவாக, சமுதாயமே சாபத்துக்குள்ளாகின்றது. ஒவ்வொருவரும் பிறருக்குத் துன்பமளிக்க வேண்டும் என்று விரும்புவதும், அதற்குத் துணிந்து செயல்புரிவதும், பெரும்பாலான மக்களிடம் இயல்பாக வளர்ந்து வருகின்றது. மனித எண்ண ஆற்றல் இயற்கை ஆற்றலின் ஒரு பகுதி இயக்கமே என்று முன்னரும் விளக்கியிருக்கின்றேன். அதன் விளைவு என்னவாகும்? மனித குல வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும் பெருகும். இயற்கைச் சீற்றம், போர், மழையின்மை இவ்வாறாக இயற்கை ஆற்றலும், மனித ஆற்றலும் கூடி மனித எண்ண ஆற்றலால் தீய விளைவுகளாகின்றன. மனிதன், மனிதன் மதிப்பை உணர்ந்து பிறர்க்குத் துன்பமளிக்காமலும், இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும், எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்று மனமார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹