#vaalkkay malargal மலர்கள்: ஏப்ரல் 29
அறிவாட்சித்தரம்
மனித இன வாழ்வில் விஞ்ஞானம் வளர்ந்திருக்கின்றது. விரைவான போக்குவரத்துச் சாதனங்களும், விரைவாகச் செய்திகள் பரவும் வசதிகளும் பெருகியுள்ளன. உலகில் எந்த மூலையில் எந்த இடத்தில் ஒரு மனிதனால், ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அது உலகில் எந்த மூலையில் வாழும் மக்களுக்கும் விரைவாகப் பரவும் வசதி பெருகியுள்ளது. பொருளாதாரம், அரசியல், மதம் என்ற மூன்று துறைகளாலும், மனித இன வாழ்க்கையும், பண்பாடும் ஒன்றிணைக்கப்பட்டும், பாதுகாக்கப்பட்டும், வளர்க்கப்பட்டும் வருகின்றன.
இந்தச் சூழ்நிலைகளை மனதில் கொண்டு சிந்தித்துப் பார்த்தால், மனித இனத்திற்குப் பறித்துண்டு வாழும் முறை பொருந்தாது என்பதை உணரலாம். தேவையும் இல்லை. பழக்கப் பதிவுகளாலும், சிந்தித்துத் தெளிவு பெற்றுத் திருந்தி வாழ முடியாத தேக்கமுற்ற மனநிலையாலும், தேவையே இல்லாத துன்பமே விளைக்கும் தீய செயல்கள் மனித வாழ்வில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலைமை மாற வேண்டுமெனில், உலக அறிஞர்கள் பலர் கூடிச் சிந்தித்து. திட்டமிட்டு, கூட்டாகச் செயல் புரிய வேண்டியுள்ளது. உண்மையை விளங்கிக் கொள்ளவும், பழக்கப் பதிவுகளை மாற்றிப் பறித்துண்ணும் வாழ்விலிருந்து திருத்தம் பெறவும் உதவக்கூடிய ஆன்மீகக் கல்வி உலகமெங்கும் பரவ வேண்டும். முதலில் அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும், பொருள்துறைத் தலைவர்களும், கல்வித்துறைத் தலைவர்களும் பிரம்மஞானம் எனும் உயர் அறிவு பெற வேண்டும்.
ஏனெனில் இத்தகைய தலைவர்களுடைய வாழ்க்கை வழியையே துணைகொண்டும், அடிபற்றியும் மக்கள் வாழ்வு நடைபெற்று வருகிறது. பிரம்ம ஞானம் எனும் அறிவின் பேரொளிதான் மனிதனை முதலில் விலங்கினச் செயல் பதிவுகளிலிருந்து விடுவிக்கும். மேலும் புலன் கவர்ச்சிகளில் மயக்கமும், பறித்துண்ணல் என்ற தீயவினைப் பதிவுகளும் எந்த அளவில் குறைகின்றனவோ, அந்த அளவுக்குப் பிரம்ம ஞானம் தானாக ஒளிவிடத் தொடங்கும். படிப்படியாக, பிரம்மமே தானாக இருக்கும் “அறிவாட்சித் திறம்” உண்டாகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி
🌹🌹🌹


