#vaalkkay malargal மலர்கள்: பிப்ரவரி 12
அன்பும், கருணையும்
இயற்கையை ஆராய்ந்து பார்த்தால் அன்பும், கருணையும் தான் எங்கும் எதிலும் அமைந்திருக்கக் காணலாம். அன்பு என்பது எந்த ஒன்றையும் உடலாலோ, மனத்தாலோ தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது. அப்படி இணைந்துள்ள மற்றொன்றுக்குத் தனது ஆற்றலைத் தொடர்ந்து அளித்துக் காத்து வருவது கருணை.
ஒரு முட்டையைப் பாருங்கள். அதிலுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றிணைத்து அதன் ஓடு பிடித்துக் கொண்டிருக்கிறது. இது அன்பு. முட்டைக்குள்ளிருக்கும் மஞ்சட்கருதான் குஞ்சு ஆக உருவாக இருக்கிறது. அந்த மஞ்சட்கருவுக்கு அதனைச் சுற்றியுள்ள வெள்ளைக்கரு தேவையான எல்லாப் பொருட்களையும் அளித்து நலமளிக்கிறது. இதுபோன்றது கருணை.
ஒரு மாமரத்தில் பிஞ்சு விடுகிறது. அதனைச் சிறு காம்பின் மூலம் விழுந்து விடாமல் மரமானது பிடித்துக் கொண்டிருக்கிறது. இது அன்பு. அவ்வாறு பிடித்துக் கொண்டே பிஞ்சு வளர்வதற்குத் தேவையான ரசாயண நீரை அந்த மரம் பாய்ச்சிக் கொண்டே இருக்கிறது. அதுதான் கருணை.
உயிரினங்களில் ஒரு குழந்தையைப் பெற்ற தாய் அதனை எப்போதும் தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டோ அல்லது அது பிரிந்து போய்விடாமல் கண்காணித்துக் கொண்டோ இருக்கிறாள் இது அன்பு. அதே காலத்தில் அந்தக் குழந்தை வளர்வதற்கும், வாழ்வதற்கும் தேவையான பால், உணவு இவைகளை அது வளர்ச்சி பெறும் வரையில் ஊட்டிக் கொண்டே இருக்கிறாள். இது கருணை.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி
🌹🌹🌹


