திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம் முதலாம் திருமுறை 75வது திருத்தலம்
திருவெங்குரு
அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர்
பவழமல்லி பிரம தீர்த்தம்
பாடல் எண் : 8
பாங்கிலா அரக்கன் கயிலையன் எடுப்ப பல தலைமுடியொடு தோள்
அவை நெரிய ஓங்கிய
விரலால் ஊன்றிய அன்று அவற்கே ஒளி திகழ் வாள்
அது கொடுத்து அழகாய
கோங்கொடு செருந்தி கூவிளமத்தம் கொன்றையும் குலாவிய செஞ்சடைச்செல்வர்
வேங்கை பொன் மலரார் விரைதருகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
பொழிப்புரை:
நற்குணங்கள் இல்லாத அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்தபோது அவன் முடிகள் அணிந்த பல தலைகளையும் தோள்களையும் கால்விரலை ஊன்றி நெரித்த வரும், அவன் பிழை உணர்ந்து வருந்திப்பாடிய அளவில் அப்பொழுதே அவனுக்கு ஒளிபொருந்திய வாளை வழங்கியருளியவ ரும், அழகிய கோங்கு, செருந்தி, வில்வம், ஊமத்த மலர், கொன்றை ஆகியன விளங்கும் சிவந்த சடைமுடிச் செல்வரும் ஆகிய சிவபிரானார் வேங்கை மரங்களின் பொன்போன்ற மலர்களின் மணம் கமழும் வெங்குரு என்னும் சீகாழித் திருக்கோயிலில் வீற்றிருந்தருள்கிறார்.
குறிப்புரை:
இராவணனை அடக்கி அருள்செய்தவர் இவர் என் கின்றது. பாங்கிலா அரக்கன் - குணமில்லாத இராவணன்.
#🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏾சனி பகவான்