ரவிசங்கர் ராஜா, ஆரணி
571 views
2 days ago
AI indicator
குருவாசகக்கோவை 128. எதிர்ந்தவுல கேதப்பா டெய்துவித்த லெண்ணா திதந்தருமெய் யாப்பற்றி யிட்டார் - மிதந்த உளியம் புணையெனக்கொண் டூர்ந்தாற்போ லாழ்ந்து விளிவர் பிறவி வெளத்து. பதச்சேதம்:- எதிர்ந்த உலகு ஏதப்பாடு எய்துவித்தல் எண்ணாது இதம் தரு மெய்யாப் பற்றியிட்டார் மிதந்த உளியம் புணை எனக்கொண்டு ஊர்ந்தால்போல் ஆழ்ந்து விளிவர் பிறவி வெளத்து. அரும்பதவுரை:- எதிர்ந்த - தன்முன் இருக்கின்ற; ஏதப்பாடு - கேடு; பற்றியிட்டார் - பற்றிக்கொண்டவர்கள்; உளியம் - கரடி; புணை - தெப்பம்; ஊர்ந்தால் - மிதந்துசென்றால்; விளிவர் - அழிவர். ஶ்ரீ சாதுஓம் சுவாமிகள் உரை:- கண்முன் காணப்படும் உலகம் தனக்குக் கேட்டை யுண்டுபண்ணுவதை அறியாமல் அது நன்மை தரக்கூடியதோர் உண்மையான பொருள் என்று கருதி அதைப் பற்றி நிற்போர் மிதந்து வரும் கரடியைத் தெப்பமெனப் போய்ப் பற்றிக் கொண்டு அதனுடன் மிதந்து சென்ற ஒருவனைப் போல், பிறவிக் கடலில் மூல்கி யழிவர். விளக்கக் குறிப்பு:- நல்லதோர் தெப்பமென்று அறியாமையால் முதலில் எண்ணிப் பற்றிக் கொண்ட பின் 'அது கரடி' என்றறிந்தாலும், அதை விட்டுவிடக் கருதி முயன்றாலுங்கூடி அது நம்மை விடாதது போல், உலகம் சத்தியம் என்ற அறியாமையால் அதன்பால் விசுவாசத்தோடு வளர்க்கப் பெற்ற வாசனைகளின் வலிவானது, மெய்யுணர்ந்த பெரியோர்களால் பிறகு "அது அசத்தியக் கற்பிதம்" என்று போதிக்கப்படும்போது கூட அதை விட நினைத்தாலும் மீண்டும் மீண்டும் நம்மைப் பகிர்முக விருத்திகளிலேயே இழுத்து ஆழ்த்தி வருத்தும் என்றவாறு. அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏽 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி