ரமணானந்த ஸ்வர்ணகிரி
1934ம் வருஷம் மார்ச் மாதம் ஸ்ரீ ரமணாஸ்ரமத்திற்கு விஜயம் செய்து ஹாலில் ஸ்ரீ ரமணரை நமஸ்கரித்தேன்.
“யார் நீ?” என்று பகவான் என்னைக் கேட்டார்.
“நான் நாராயணஸ்வாமி” என்றேன். [அவரது இயற்பெயர்]
“இந்த நான் என்று நீ சொல்வது உன்னுடைய தேகமா வாயா அல்லது கையா?” என்று கேட்டார். மேலும் “நீ உனது தேகத்திலிருந்து வேறுபட்டிருக்கிறாய். நீ அதை வைத்துக்கொண்டிருப்பவன். தேகமானது உனது உடைமை” என்றார்.
“நான் தேகத்திலிருந்து வேறுபட்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய தேகத்தையும் நான் என்னும் எந்தன் சுயத்தையும் இரண்டாகப் பிரிக்கும் வேறுபாடு தெளிவாகத் தெரியவில்லை” என்று நான் சொன்ன போது...
“சுயத்தினை விசாரம் செய். ”நான்” என்ற எண்ணம் முளைக்கும் இடத்தைத் தேடிச் சென்றால் நீ யார் என்று உனக்குத் தெரிய வரும்” என்று விளக்கினார்.
ஸ்ரீ ரமணர் நான் முயற்சி செய்து பார்ப்பதற்கு வேலை கொடுத்தார். அந்தப் பாடத்தில் நான் திருப்தியுற்று அவரது வாழ்வும் போதனைகளும் என்ற புத்தகத்தை வாங்கி ஆஸ்ரமத்தில் தங்கி அன்றிரவே படித்துமுடித்தேன். நிறைய படிக்கப் படிக்க நான் நிறையவே பகவானின் பக்கம் ஈர்க்கப்பட்டேன். அவரது உதாரணங்களும் போதனைகளும் என்னை வெகுவாகக் கவர்ந்திழுத்தன.
பகவானிடம் ஒரு கேள்வியை எழுப்ப விரும்பி நான் ஆரம்பிக்கும் போதே பால் பிரண்டனின் The Secret Pathஐ மேற்கோள் காட்டி எனக்கு பதிலளித்து விட்டார். அதில் குறிப்பிட்டுள்ளபடி பேச்சு என்பது அமைதியாக உள்ள எண்ணங்களின் தொடர்பை தொந்தரவு செய்யும் வாதம் என்றார்.
உபதேச சாரத்தை மனப்பாடம் செய்யும் சில வாலிபர்களுக்கு அதைச் சரியாகச் சொல்லிக்கொடுத்து உதவி செய்துகொண்டிருந்தார். தத்துவார்த்தமான வரிகளின் அரிச்சுவடிக் கூட தெரியாத அந்த வாலிபர்களுக்கு இவர் பயிற்சியளித்துக்கொண்டிருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. இதனால் என்ன பயன் என்று எண்ணினேன். இதைப் பற்றி நான் ஒரு வார்த்தைக் கூட பேசாத போது பகவான் என் பக்கம் திரும்பி...
“இந்த வரிகளின் அர்த்தம் இக்குழந்தைகளுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் ஒரு வயதை எட்டியவுடன் அல்லது சிரமமான நிலையில் இருக்கும் போது இதை நினைவுபடுத்திப் பார்க்கும் போது இது மனதுக்கு இதமளிப்பதாகவும் சந்தோஷம் தருவதாகவும் அமையும்” என்றார்.
அடுத்த நாள் சில நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் பண்டிதர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தோம். (அவர் கணபதி முனி) உள்ளூர் பள்ளிகளில் அவர் சம்ஸ்க்ருத ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பகவான் தன்னுடைய ஆரம்ப காலத்தில் தங்கியிருந்த இடங்களில் இவரும் தங்கியிருந்திருக்கிறார். அப்படி அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது பகவான் மாலை வேளைகளில் உட்கார்ந்திருக்கும் இடம் ஒன்றிற்கு வந்தோம். உடனே அந்த பண்டிதர் கீழேயிருந்து ஒரு பிடி மண்ணெடுத்து நெற்றியில் கொஞ்சம் பூசிக்கொண்டு வாயிலும் சிறு துளி போட்டுக்கொண்டார்.
“அந்தப் புனிதமான மனிதர் அமர்ந்த இந்த இடம் மிகவும் தெய்வகடாக்ஷம் நிரம்பியது. ஸ்வர்க்கம் முழுவதும் சுற்றிவந்ததற்கு சமானம் அவரது காலடித் தடங்கள் பட்ட இடம்” என்றார். 🚩🕉🪷🙏🏼
#பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி