ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views 2 months ago AI indicator
அருணாசலத்தில் நான் சாப்பிடுவதற்காக நுழைந்த ஒரேயொரு வீடு உன் தாத்தாவுடையதுதான். அருணாசலேச்வரரின் பக்தரான அவர் தினமும் தவறாமல் கோயிலுக்குச் செல்வார். வாட்ட சாட்டமாக இருந்த அவர் ருத்ராக்ஷ மாலையோடு வேறு பல மணிகளையும் அணிந்திருப்பார். அந்த நாட்களில், சுமார் 1896-ம் ஆண்டில், அருணாசலேச்வரர் கோயில் நுழைவாயில் கோபுரத்தின் அருகேயுள்ள சுப்ரமண்யர் ஸந்நிதியில் நான் இருப்பது வழக்கம். தினமும் உன்னுடைய தாத்தா என் முன் சிறிது நேரம் அமர்ந்திருப்பார் என்றாலும், எதுவும் பேச மாட்டார். நான் அப்போது 16 வயது இளைஞனாக இருந்தேன். அவர் சற்று வயது முதிர்ந்தவர் என்றாலும் என்னுடன் இருக்கும் போது அவரும் மௌனமாகவே இருப்பார். ஊரில் பிரபலமாக இருந்த அவருடைய வீட்டிற்குப் பல முக்கியஸ்தர்கள் விருந்தினர்களாக வருவதுண்டு. ஒரு நாள் அவருடைய இல்லத்திற்கு முக்கியமாக ஒருவர் வருவதாக இருந்ததால் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றும் கூட உன்னுடைய தாத்தாகோயிலுக்கு தரிசனத்திற்கு வந்தவர், என் முன்னே வந்து அமர்ந்து கொண்டார். சிறிது நேரம் கழித்து எழுந்திருந்து தன் வழக்கமான மௌனத்தைக் கைவிட்டு என்னைப் பார்த்து, 'எழுந்திரு! என்னுடைய வீட்டிற்கு நாம் சென்று பிக்ஷை எடுத்துக் கொண்ட பின்னர் நீ திரும்பி வரலாம்!' என்று கூறினார். அப்போதெல்லாம் நான் பேசுவது வழக்கமில்லை. அதனால் சைகையால் 'நான் வரவில்லை' என்பதைத் தெரிவித்தேன். ஆனால் நான் சொல்வதை அவர் பொருட்படுத்தவில்லை. அவர் வாட்ட சாட்டமாக இருந்தார். நானோ மெலிந்து பலவீனமாயிருந்தேன். அவர் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தார். நானும் சமிக்ஞையால் வரவில்லையென்று மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொண்டிருந்தேன். நான் சிறிதும் அசைந்து கொடுக்காததால், குனிந்து அவர் கையோடு என் கையைப் பிணைத்து என்னைப் பலவந்தமாக எழும்பச் செய்து அவரைத் தொடருமாறு செய்தார். இவ்வாறாக அவருடைய வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழையும்படிச் செய்யப்பட்டேன். என்னை முக்கியமான ஒரு இடத்தில் அமரச்செய்து எல்லோருடைய இலையையும் விடப் பெரிய ஒரு இலையைப் போட்டு அதில் அவரே பரிமாறினார். நான் உண்ட பிறகு அவர் உண்டார். அந்த நாட்களில் நான் குளிக்கும் வழக்கமில்லை. அதனால் என் உடலிலிருந்து துர்நாற்றம் வீசும் என்பதால் யாரும் என் அருகே வரமாட்டார்கள். அவ்வாறிருந்த போதும் உனது பாட்டனார் மட்டும் தவறாமல் என் முன் வந்து நெருக்கமாக அமர்ந்து கொள்வார். பலரும் என்னைக் காண வந்துவிட்டுப் போய் விடுவார்கள். இளமைப் பருவத்திலிருந்த போதும் இந்த உடம்பினுள் இருந்தது பூரணப் பொருள் என்பதை உனது பாட்டனார் மட்டுமே உணர்ந்து கொண்டார்' என்று பகவான் கூறியதாக TPR சொன்ன போது அவருடைய கண்கள் பனித்தன. - T P. ராமச்சந்ரய்யர் ( ரமண பெரியபுராணம் ) 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
13 likes
19 shares

More like this