*குரு சரித்திரம்-8*
புதிய தொடர் பதிவு
அத்தியாயம் - 6
சித்த முனிவர் கூறிய
ஸ்ரீ பாத வல்லபாவின் கதையை ஆழ்ந்து கேட்ட நமத்ஹரகா அவரிடம் கேட்டார் "என் குருதேவா, மகாத்மா, சித்த புருஷரே, இந்தக் கதையில் நீங்கள் கூறினீர்களே ஸ்வாமி
ஸ்ரீ பாத வல்லபா தாத்தாத்திரேயரின் அவதாரம் என்று, அப்படி என்றால் தெய்வமான அவர் ஏன் பல புனித இடங்களுக்கும் சென்று அங்குள்ள ஆலயங்களில் தரிசனம் செய்தார்.
அதற்கும் மேலாக
அவர் எதற்காக கோகர்ணத்துக்கு முக்கியத்துவம் தந்து அங்கு சென்றார் என்பதை எனக்கு கூறுவீர்களா?" எனப் பணிவுடன் கேட்க சித்த முனிவர் அவரது சந்தேகத்துக்கான விளக்கத்தை தந்து அந்தக் கதையையும் கூறினார்.
"நமத்ஹரகா, நீ கேட்டது நல்ல சந்தேகமே.
இந்த சந்தேகம் எவருக்கும் வரக்கூடியதே.
ஸ்ரீ பாத வல்லபா தத்தாத்திரேயரின் அவதாரம் என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை.
தெய்வங்கள் மனித உருவை எடுத்து வரும்போது மனித குலத்துக்கு எடுத்துக் காட்டும் வகையில் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில செயல்பாடுகளை தாமே செய்து காட்ட வேண்டி உள்ளது.
எதையுமே வாயால் சொல்வதை விட செயலால் செய்து காட்டுவதே சிறந்த முறை ஆகும்.
ஆகவே அந்த செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்பதை மனித குலத்துக்கு எடுத்துக் காட்டவே ஸ்ரீபாத வல்லபா தனது சீடர்களுடன் தானே ஆலயங்களுக்கு சென்று அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் சில காரியங்களை செய்து காட்டினார்.
அவற்றை அவரது சீடர்கள் அனைத்து இடங்களிலும் பரப்பி வந்தார்கள்.
அப்படியே பின்னர் வந்த மகாபுருஷர்களும் செய்தார்கள்.
அவர் ஏன் கோகர்ணத்துக்கு சென்றார் என்றால்
அந்த புனித தலம் திருமூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானின் இருப்பிடம்.
அங்குதான் சிவபெருமான் தானே ஆத்மலிங்க உருவில் அமர்ந்து உள்ளார்.
இதனால்தான் அந்த ஷேத்திரம் மஹா ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
அது மகா புனித பூமியாகும்.
இதுதான் பகீரதன்
தவமிருந்து அழைத்து வந்த கங்கை நதி முதலில் பூமியில் பாய்ந்த இடம்.
அதில் பல தெய்வங்களும், சித்த புருஷர்களும், மகாத்மாக்களும் தீர்த்தமாடி உள்ளார்கள்.
அங்குள்ள சிவலிங்கம் சிவபெருமானின் மைந்தனான வினாயகப் பெருமானால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதன் கதையை கூறுகிறேன்.
அதைக் கேட்டால் அங்கு ஸ்ரீ பாத வல்லபா அங்கு ஏன் முதலில் சென்றார் என்பதின் காரணம் புரியும்" என்று கூறிய சித்த புருஷர் அந்தக் கதையைக் கூறலானார்.
"இலங்கையை ஆண்டு வந்த ராவணனின் தாயார் கைகாசி என்பவள்.
அவள் பெரும் சிவபக்தை.
சிவ தீட்ஷையை பெற்று இருந்த அந்தப் பெண்மணி தினமும்
ஒரு புதிய சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு போய் நதிக்கரையில் அதை வைத்துவிட்டு அங்கேயே நதியில் குளித்தப் பின் சிவலிங்கத்தை பூஜித்தப் பின் அதன் எதிரில் அமர்ந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி தினமும் ஒரு இலட்சத்து எட்டு முறை முறை நமச்சிவாயா
எனும் மந்திரத்தை ஓதி சிவபெருமானை பூஜித்தப் பின்னரே உணவு அருந்துவாள்.
தினமும் ஒரு புதிய சிவலிங்கத்தை
எடுத்து வந்து பூஜை செய்பவளுக்கு ஒருநாள் அவளுக்கு புதிய சிவலிங்கம் கிடைக்கவில்லை.
ஆகவே பூஜைக்கு நேரமாகிவிட்டது என்பதினால் நதிக்கரைக்கு சென்று பூமி மண்ணைக் கொண்டு ஒரு சிவலிங்கத்தை செய்து அதற்கு பூஜை செய்துவிட்டாள்.
அன்று எதேச்சையாக அவள் மண்ணினால் சிவலிங்கம் செய்து பூஜித்ததை ராவணன் பார்த்துவிட்டான்.
உடனே தன் தாயிடம் சென்று 'அம்மா, நீங்கள் ஏன் தினமும் புதிய சிவலிங்கத்தை தேடி அலைய வேண்டும்.
அந்த சிவபெருமான்
குடி உள்ள கைலாய மலையையே இங்கு கொண்டு வந்து வைக்கிறேன்.
நீ நேரடியாகவே அவரை பூஜிக்கலாம்' என்று கூறிவிட்டு கைலாய மலையை பெயர்த்து எடுத்து வரச் சென்றான். (அந்த கட்டத்தில்தான் ராவணனது பிடியில் அனைத்து தேவர்களும், காலங்களும், திசைகளும் இருக்க தேவேந்திரன் முதல் வருணன், வாயு, அக்னி மற்றும் யமன் போன்றவர்களும் ஒவ்வொரு விதங்களில் அவனுக்கு சேவகம் செய்யும் நிலை இருந்தது.
ராவணனின் சகோதரன் குபேரனே அவருக்கு அடிமையாக இருந்த நேரம் அது.
அத்தனை சக்தி வாய்ந்தவனாக ராவணன் இருந்தான்.
அதைக் குறித்து அனைவரும் சிவபெருமானிடம்
சென்று முறை இட்டு தம்மை ராவணனின் கொடுமைகளில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டி வந்தார்கள்.
தாம் தக்க நேரத்தில் அவர்களுக்கு உதவுவதாக சிவபெருமான் கூறி இருந்தார்.
அந்த நேரத்தில் நடந்த சம்பவம்தான் இந்தக் கதை)
கைலாய மலை அடிவாரத்துக்கு சென்று அந்த மலையை தனது தலைகளினால் முட்டி, மோதி அதை ஆட்டி, ஆட்டி பூமியில் இருந்து அடியோடு பெயர்த்து எடுக்க முயன்றான்.
மலை பயங்கரமாக ஆடத் துவங்க தேவர்களும், கைலாயவாசிகளும் பயந்து போய் சிவபெருமானிடம் சென்று அதைக் குறித்துக் கூறினார்கள்.
அனைத்தையும் கைலாயத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்த சிவபெருமான் அவன் மலையை பெயர்த்து தோளிலே வைக்க இருந்த சமயத்தில் தனது காலினால் மலையை அவன் மீது அழுத்த அவன் மலை அடியில் சிக்கிக் கொண்டு வலி தாங்காமல் கதறினான்.
என்ன இருந்தாலும் ராவணனும் சிவபெருமானின் பரம பக்தன் என்பதினால் அவன் கதறலைக் கேட்டு ஒரு ஷணம் அவன் தலையையும் இரு கைகளையும் மட்டுமே வெளியில் எடுக்க வைத்து விட்டு மீண்டும் மலையை அவன் மீதே வைத்து அமுக்கிக் கொண்டார்.
ராவணன் சற்றும் தாமதிக்காமல் தனது கையினால் ஒரு தலையை வெட்டி எடுத்து, இன்னொரு கையையும் வெட்டி எடுத்துக் கொண்டு அவற்றைக் கொண்டு தனது சக்தியினால் ஒரு வீணையை உருவாக்கினான்.
அவனுக்குத் தெரியும் சிவபெருமான் இசைப் பிரியர் என்று.
உடலின் பல பாகங்களில் இருந்து நரம்புகளை பிடுங்கி எடுத்து அவற்றை வீணையின் தந்திக் கம்பிகளாக்கி அதை மீட்டி சிவபெருமானைப் போற்றி பல்லவி, அனுபல்லவி என ஏழு ஸ்வரங்களில் சாமவேத கானத்தில் சிவஸ்துதியை பாடத் துவங்கினான்.
அவன் பாடிய இசையில் மனம் லயித்துப் போன சிவபெருமானும் அவனை மலை அடியில் இருந்து வெளியில் எடுத்து அவன் அந்த மலையை பெயர்க்க முயன்றதின் காரணத்தைக் கேட்டார்.
சற்றும் தயங்காமல் அவரிடம் ராவணன் கூறினான் 'சிவபெருமானே, என்னுடைய தாயார் உமது பக்தை ஆவாள்.
அவள் தினமும் ஒரு சிவலிங்கத்தை எடுத்து வந்து அதையே நீங்களாக பாவித்து உமது நாமத்தை ஒருலட்ஷத்து எட்டு முறை உச்சாடனம் செய்த பின்னரே உணவு அருந்துவாள்.
அவளுக்கு இன்று எந்த சிவலிங்கமும் கிடைக்கவில்லை என்பதினால் மண்ணினால் ஆன சிவலிங்கத்தை
நீங்களாக பாவித்து
பூஜை செய்தாள்.
அது என் மனதை வேதனைப்படுத்தியது.
என் காலடியில் நவ நதிகளும் ஓடுகின்றன.
தேவேந்திரன் முதல் வாயு, அக்னி, யமன், வருணன், என அனைவரும் எனக்கு சேவகம் செய்கிறார்கள்.
காமதேனு என் இல்லத்தில் இருக்க கல்பவிருஷமோ என் விட்டு தோட்டத்தில் வளர்கிறது.
இவை அனைத்துமே உங்களுக்குத் தெரியும். அவை அனைத்துமே கிடைக்க நீங்கள் கொடுத்த வரமே காரணம்.
எனக்கு நிகரானவன் இனி இல்லை எனும் அளவுக்கு நீங்கள் எனக்கு சக்தியை தந்துளீர்கள்.
இப்படியாக அனைத்து சக்திகளும் பெற்று உள்ள நான் நீங்கள் குடி கொண்டுள்ள இந்த மண்ணினால் ஆன மலையையே இலங்காபுரியில் கொண்டு வந்து வைத்து விட்டால் அவள் தினமும் உங்களை நேரடியாக பூஜிக்கலாம் அல்லவா என்று எண்ணியே இங்கு வந்து இந்த மலையை எடுத்துப் போக வந்தேன்' என்றான்.
இசை மழையினால் ஈர்க்கப்பட்ட சிவனார் அவன் முன் தோன்றி, 'உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்' என்று கூறினார்.
இராவணன் கேட்டான் சிவபெருமானே நான் கூறியபடி எனக்கு என்னுடைய தாயாரின் மகிழ்ச்சியே முக்கியம்.
ஆகவே அவள் கஷ்டப்படாமல் தினமும் உம்மை துதித்து விட்டு அதன் பின்னர் உணவருந்தும்
வகையில் இருக்க நீர் குடி கொண்டுள்ள இந்த மலையை உம்மோடு சேர்த்து என் நாட்டிற்கு எடுத்துச் செல்ல என்னை அனுமதிக்க வேண்டும்.
அதோடு எனக்கும் உங்களைப் போலவே அளவற்ற சக்தி வேண்டும். மகேஷ்வரா இந்த வரத்தை மட்டும் தந்தால் போதும்' என்று கேட்டான்.
அதைக் கேட்ட சிவபெருமான் சற்றும் தாமதிக்காமல் கூறினார் 'ராவணா, உன்னுடைய தாயாருக்காக நீ என்னிடம் வைக்கும் உன்னுடைய வேண்டுகோள் நியாயமாகவே உள்ளது.
ஆகவே நீ அதிக சிரமம்படத் தேவை இல்லை.
உன்னுடைய தாயாருக்கு வேண்டியது என்னை பூஜிப்பதே.
ஆகவே உனக்கு நான் உனக்கு நானே குடி இருக்கும் என்னுடைய ஆத்ம லிங்கத்தைத் தருகின்றேன்.
அதை ஆராதிப்பதின் மூலம் உன் தாயாருக்கு என்னை நேரடியாக ஆராதித்ததின் பலன் கிடைத்து விடும்.
ஆகவே நீ மலையை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நான் குடி இருக்கும் ஆத்ம லிங்கத்தை மட்டும் ஆராதித்தால் அது மட்டுமே போதும்.
மேலும் இதை நீயும் மூன்று வருடங்கள் தொடர்ந்து மூன்று
வேளை பூஜை செய்து நான் இப்போது உனக்கு உபதேசிக்கும் மந்திரத்தை ஒரு லட்ஷத்து எட்டு முறை உச்சாடனம் செய்து வந்தால் நீயும் என்னைப் போலவே சக்தி கொண்டவனாக மாறி விடுவாய் (அந்த மந்திரத்தை அவனுக்கு உபதேசித்தார்).
ஆனால் ஒரே ஒரு
சின்ன நிபந்தனை.
இன்று மாலைக்குள் இதை நீ உன் நாட்டுக்கு கொண்டு சென்று எங்கு வைக்க வேண்டுமோ அங்கு பூமியில் வைக்க வேண்டும்.
அதை மீறி வேறு எங்காவது அதை பூமியில் வைத்து விட்டால் அதை அதன் பின் அங்கிருந்து எடுக்க முடியாது.
அதை நீ அங்கேயே ஆராதித்தாலும் உனக்கு அதனால் எந்த பலனும் கிடைக்காது.
ஆனால் அதே சமயம் அந்த இடத்தில் அதை வணங்கி பூஜிக்கும் மற்றவர்களுக்கு அவர்கள் விரும்பியவை கிடைக்கும்.
உனக்கு நான் கொடுத்த வரம் வீணாகிவிடும்.
அது மட்டும் அல்ல அதோடு நீ உன் பிடியில் வைத்துள்ள அனைத்து தேவர்களும் உனக்கு சேவகம் செய்யும் அனைத்து தேவலோக அதிபதிகளும் விடுதலை ஆகி விடுவார்கள்.
அதன் பின் அவர்களை உன்னால் ஒன்றுமே செய்ய முடியாமல் அவர்கள் உன்னை விட சக்திசாலிகளாகி விடுவார்கள், பத்திரம்' என்று கூறிவிட்டு அவனிடம் தனது ஆத்ம லிங்கத்தைக் கொடுத்து அனுப்பினார்.
நடந்த அனைத்து விஷயங்களும் நாரதருக்கு தெரிய வந்தது.
அவர் உடனடியாக விஷ்ணு மற்றும் பிரும்மாவிடம் ஓடிச் சென்று அதைக் குறித்துக் கவலையுடன் விவாதித்தார்.
சிவபெருமான் என்ன காரியம் செய்து விட்டார்.
ஏற்கனவே ராவணனை அடக்க முடியாத அளவு அவன் அக்கிரமங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
ஆத்மலிங்கத்தை பூஜித்து அவன் சிவபெருமானின் சக்தியையும் பெற்று விட்டால் அவன் சிவபெருமானையே அழித்து விடுவானே எனக் கவலைக் கொண்டு சிவபெருமானிடம் ஓடிச் சென்று தமது கவலையையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்கள்.
சிவபெருமானும் தான் செய்து விட்ட தவறை உணர்ந்து விட்டார்.
ஆனால் அதையும்
ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகவே தாம் செய்ததாகவும், அதை நிவர்த்திக்க தனது மகன் வினாயகர் மூலம் மட்டுமே முடியும் என்றும் ஒரு சின்ன குறிப்புத் தந்தார்.
இப்போது என்ன செய்யலாம் என அனைவரும்
யோசித்தப் பின் ஒரு
நாடகத்தை நடத்தி ராவணனின் கையில் உள்ள லிங்கத்தை கீழே வைக்க வைத்து விட்டால் அவன் பெற்ற வரம் அழிந்து விடும் என்பதை உணர்ந்தார்கள்.
அடுத்தடுத்து யோசனைகளை செய்தபின், ராவணன் அவன் நாட்டு செல்லும் முன்னரே அவனை வழியிலே தடுத்து நிறுத்தி மாலை வரை அவனது நேரத்தை வீணடிக்க வேண்டும்.
அதற்குள் எப்படியாவது ராவணனை ஏமாற்றி லிங்கத்தை பூமியிலே வைக்க வைத்து விடலாம் என திட்டம் தீட்டினார்கள்.
ராவணன் தன் கையில் ஆத்மலிங்கத்தை எடுத்துக் கொண்டு வேக வேகமாக சென்று கொண்டு இருக்கையில் அந்த பாதையில் நின்றபடி வழியை மறைத்தார் நாரதர்.
ராவணனுடன் தேவை இல்லாமல் எதை எதையோ பேசி அவனை மேற்கொண்டு செல்ல முடியாமல் பாதையை மறைத்தவண்ணம் இருக்க கோபமுற்ற ராவணன் அவரை
தள்ளிக் கொண்டு செல்ல முடியாமல் தவித்தான்.
மாலை நேரமும் வேகவேகமாக வந்து கொண்டு இருந்தது.
எதை எதையோ பேசிப் பேசி ராவணனின் எண்ணத்தை திசை திருப்பி அவனை ஏமாற்றி அவன் வாயினாலேயே அந்த ஆத்மலிங்க மகிமையைக் கூறவைத்த நாரதர் நகைத்து விட்டு ராவணனிடம் கூறினார் 'ராவணா, உன்னை நினைத்தால் பரிதாபமாக உள்ளது.
உன்னை சிவபெருமான் நன்கு ஏமாற்றி விட்டார். அவரிடம் பத்து ஆத்மலிங்கங்கள் உள்ளன.
அவற்றில் ஒன்றில் மட்டுமே அவர் குடி இருக்கிறார்.
இப்போதைக்கு உன்னை திருப்தி செய்து அனுப்பி விட வேண்டும் என்பதற்காக உண்மையான ஆத்மலிங்கத்தை கொடுக்காமல் வேறு ஒன்றைக் கொடுத்து அனுப்பி உள்ளார்.
யாராவது தன்னை
ஒரு கைதி போல மற்றவர்களிடம் கொடுப்பார்களா?
மூன்று வருடங்கள் நீ அதை பூஜித்துக் கொண்டு இருப்பதற்குள் என்னென்னவோ நடந்துவிடும்.
நீ நன்கு ஏமாற்றப்பட்டு விட்டாய் என்பதையும் உனக்கும் அவர் சக்தி கிடைக்காது என்பதையும் உணர்வாய்' என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
அதற்குக் காரணம் சற்று தொலைவில் வினாயகர் ஒரு அந்தணர் உருவில் வேகமாக வந்து நாரதர் பின்னால் நின்று விட்டதை அவர் கவனித்ததுதான்.
ராவணன் ஒரு கணம் சஞ்சலத்தில் ஆழ்ந்தான்.
இதென்ன நாரதர் என்னைக் குழப்பி விட்டாரே !!
நாரதர் சென்று விட்டதும் ஏற்கனவே முடிவாகி
இருந்தபடி திடீர் என்று அந்த இடத்தைக் கடும் குளிர் பற்றி கொண்டது.
வருணன் ஏற்படுத்திய தாங்க முடியாத குளிர், வயிற்றில் நீர் நிறைந்து போக இயற்கை அவஸ்தைப்பட்டு தவித்தபடி நடந்தான்.
அவனால் மேலும் ஒரு எடுத்து வைக்க முடியவில்லை. தவித்தான்.
மடியில் சிவலிங்கத் வைத்துக் கொண்டா இயற்கை உபாதைக் கழிக்க முடியும்?
அப்போதுத அந்த வழியில் அந்தணர் உருவில் வந்து கொண்டு இருந்த வினாயகரை அவர்
யார் என்று அறிந்து கொள்ளாமல் சந்தித்தான்.
அவரிடம் கேட்டான் 'அந்தணரே, நீங்கள்
எங்கு சென்று கொண்டு இருக்கிறீர்கள்?
அந்தணர் கூறினார் 'வழியை விடப்பா. நான் மாலைக்குள் அடுத்த ஊருக்கு செல்ல வேண்டும்.
அங்கு ஆரம்பிக்க உள்ள யாகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
அவரை தடுத்து நிறுத்திய ராவணன் கூறினான் 'அந்தணரே தயவுசெய்து எனக்கு சின்ன உதவி செய்யுங்கள்.
இயற்கை உபாதையை என்னால் பொறுக்க முடியவில்லை.
நான் அதோ இருபது அடி தள்ளித் தெரிகிறதே அந்த மறைவில் ஓடைக்கு அருகில் சென்று இயற்கை உபாதைக் கழித்து விட்டு வருகிறேன்.
தயவு செய்து இந்த லிங்கத்தை அதுவரை பூமியில் வைக்காமல் கையில் வைத்து இருந்தால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்.
இதை கண்ட கண்ட இடங்களில் உள்ள தரையில் வைக்கக் கூடாது' என்று கூறினான்.
அதன் பின் அந்த லிங்கத்தின் கதையையும் சுருக்கமாக கூறினான்.
அவரும் 'சரி ஆனால் ஒரு நிபந்தனை.
நான் ஒரு நாழிகைப் பொறுத்து பத்து எண்ணுவேன்.
அதற்குள் நீங்கள் வராவிடில் இதை கீழே வைத்து விடுவேன் என்றார்.
ஒரு நாழிகை மிகப் பெரிய அளவிலான நேரம் என்பதால் அதற்குள் தாராளமாக தன் வேலையை முடித்துக் கொண்டு கைகால்களை அலம்பிக் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணியவாறு ராவணன் அந்த லிங்கத்தை வினாயகரிடம் தந்து விட்டு சென்றான்.
அதுதான் அவன் செய்த பெரும் தவறு.
ராவணன் காட்டிய ஓடையின் தூரம் இருபது அடி கூட இருக்காது போல இருந்தது.
அங்கு சென்று விட்டு இயற்கை உபாதைக் கழித்துவிட்டு அரை நாழிகையில் வந்து விட முடியும் என்பதினால்தான் தைரியமாக ராவணன் அப்படிக் கூறினான்.
அந்த மறைவிடத்துக்கு சென்று இயற்கை உபாதைக் கழித்து விட்டு திரும்பினான்.
ஆனால் அந்த இடத்தில் இருந்து சிவலிங்கத்தை வினாயகரிடம் அவன் கொடுத்திருந்த இடத்துக்கு செல்ல இரண்டு நாழிகை ஆகும்.
அவ்வளவு தூரத்தில் இருந்தது அந்த இடம்.
ராவணன் திடுக்கிட்டான். இதென்ன நான் இங்கு
வர கால் நாழிகக்கூட ஆகவில்லை.
ஆனால் இப்போது அங்கு செல்ல இரண்டு நாழிகைக்கு மேலாகிவிடும் போலிருக்கிறதே என குழம்பினான்.
அதெப்படி அருகில் தெரிந்த இடம் இத்தனை தூரமாகிவிட்டது என திடுக்கிட்டவன் அங்கிருந்து ஓடி வரலானான், 'அந்தணரே தயவு செய்து அதை கீழே வைத்து விடாதீர்கள் எனக் கூவியவாறு அவன் வருவதற்குள் ஒரு நாழிகைக் கடந்ததும்
பத்து எண்ணிய அந்தணர் அதை கீழே வைத்துவிட்டு மறைந்துவிட்டார்.
அங்கு ஓடோடி வந்தும் வந்து சேர மூன்று நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது.
ராவணன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தான்.
(பூமியிலே பதிந்திருந்த சிவலிங்கத்தை எடுக்க பலவாறு பல பக்கங்களிலும் இருந்து முயன்றதில் அது ஒரு பசுவின் காது போல உருமாறியதே தவிர, பூமியில் இருந்து அதை வெளியில் வெளிவரவில்லை.
பசுவின் காது போல லிங்கம் மாறி விட்டதினால் அந்த இடம் கோ கர்ணம் அதாவது பசுவின் காது என ஆயிற்று.)
ஆனால் என்ன செய்வது? அவன் சக்தி எல்லாம் வீணாகிப் போயிற்று.
தேவர்களும், தேவலோக அதிபதிகளும் அவனிடம் இருந்து விடுதலை பெற்றார்கள்.
ராவணன் துயரத்துடன் நாடு திரும்பினான். (இத்துடன் அத்தியாயம் 6 முடிந்தது.)
தொடரும். 🚩🕉🪷🙏🏼
#🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #தெய்வீக சிந்தனைகள் #ஞானிகள் பேசுகிறோம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏