வெள்ளை அறிக்கை கொடுத்து வெற்றிக் கொடிகட்டு!
வெள்ளை அறிக்கை (White Paper) என்பது ஒரு அரசாங்கம் சிக்கலான பிரச்சினைகள், கொள்கை அல்லது நிதிநிலை குறித்த உண்மையான தரவுகளை மக்களுக்குத் தெரிவிப்பதற்காக வெளியிடும் அதிகாரப்பூர்வ ஆவணம் ஆகும். இது ஒரு பிரச்சனையின் பின்னணி, தற்போதைய நிலை மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விளக்கமளிக்கிறது.
முதல்வர் விஜய் அவர்கள்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற கையோடு ஆற்றிய உரையில் வெள்ளைஅறிக்கை பற்றிப் பேசியது, அவர் ஒரு தெளிவான திட்டத்துடன் செயல்படும் நோக்குடன் இருக்கிறார் எனத்தெரிகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் அவரைப் பண்படுத்தியிருப்பது கண்கூடு.
இன்று மக்களின் அபிமானம் பெற்ற அரசியல் தலைவர்கள் மிகவும் குறைவு. அப்படி மக்களுடைய அபிமானம் பெற்ற தலைவர்களில் ஒருவர் செங்கோட்டையன். அவர் தவெகவில் இணைந்தபோது பெரும்பாலான அரசியல் நோக்கர்கள் அவருடைய கணிப்பு தவறாது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அது தவறவில்லை.
கரூர் சம்பவத்திற்குப்பின் விஜயின் அரசியல் வாழ்க்கை அத்துடன் முடிந்தது என்று ஆரூடம் சொன்னவர்கள் அனேகம் பேர். இதனால் மனரீதியாகவும் விசாரணைகளை முன்னிட்டு அலைச்சல்களாலும் சிரமங்களுக்கு உள்ளானார். அது போக ஜனநாயகன் பட விவகாரத்தில் கடுமையான மன அழுத்தங்களுக்கு ஆளானார்.
விஜய் சந்தித்த பல்வேறு இடையூறுகளினால் அவருடைய மன உறுதியினை குலைக்க முடியவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த மோசமான அனுபவங்கள் தொடரப்போகும் அவரது நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒருவேளை விஜய் மேலும் ஒரு டஜன் தொகுதிகளில் வென்றிருந்தால் இந்த பொன்னான அனுபவங்கள் கிடைத்திருக்காது. விசிக, முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருகிறது என்றால், தவெக ஆட்சியின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கின்றன என்று பொருள். சிறிய கட்சிகளாகவே இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டியது அவசியம் என்று அவை ஆதரவு தந்தது பெரிய விஷயம்தான்.
தமிழகத்தின் நிதிநிலை ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கழக அரசுகள் ஏராளமாகக் கடன் வாங்கி வைத்துள்ளன. அதனால் ஏற்பட்ட வட்டிச்சுமையை தவெக சுமக்க வேண்டிய நிலை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேலும் மேலும் கடன் வாங்குவதை ஓரளவிற்கு மேல் தொடர முடியாது.
போதிய நிதி ஆதாரங்களை உருவாக்கி அவற்றை மேம்படுத்துவதே விஜய் தலைமையில் அமைந்துள்ள அரசின் முக்கிய கடமையாக இருக்கும் என நம்பலாம். கட்டுக்கடங்காமல் கடன்களை வாங்காமல் புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்கி வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது மக்களும் அதைப் புரிந்து கொள்வார்கள் என நம்பலாம்.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை