குருவாசகக்கோவை
(நேரிசை வெண்பா)
914. எங்குமே போக வியலா திருக்குமுழுப் பங்குபோ லாகப் பவனனுட்க எங்குமே
மேவா தலைமனத்தை வீட்டலே மெய்ம்மையாச் சாவாமை யெய்துஞ் சதுர்.
பதச்சேதம்:-
எங்குமே போக இயலாது இருக்கும் முழுப் பங்கு போல் ஆகப் பவனன் உட்க எங்குமே
மேவாது அலை மனத்தை வீட்டலே மெய்ம்மையாச்
சாவாமை எய்தும் சதுர்.
அரும்பதவுரை:-
பங்கு - முடவன்; பவனன் - காற்று; உட்க - பயப்பட; வீட்டலே - மாய்த்தலே.
ஶ்ரீ முருகனார் சுவாமிகள் உரை:-
எவ்விடத்துஞ் சற்றுந் தங்காது காற்றும் வெட்கச் சதா சலிக்கு மனத்தை மிக்கணித்தாகப் புடைப்பெயரத்தானும் முடியாது அறவே முடங்கிக் கிடக்கும் முழு முடம் போலச் சுட்டறிவுவற்றுச் சும்மா விருக்குமாறு மாய்த்தலே, உண்மையில் ஒருவன் அமுதத்துவமடையும் உபாயமாம்.
விசேடவுரை:- ஜனன மரணச் சம்சாரம் உண்மையில் மனத்துக்கன்றி ஆன்மாவுக் கின்மையின் அம்மனத்தோடு அதன் வடிவாய்த் தான் சலியாது, அதனைத் தனக்கயலாக்கி மாய்க்கவே தன்னுண்மையா மமரத்தன்மை ஒருவற் கறிபடு மென்பதாம்.
ஶ்ரீ சாதுஓம் சுவாமிகள் உரை:-
வாயுதேவனும் அஞ்சும்படியான வேகத்துடன் எந்த இடத்திலும் நிலையின்றி யலையும் மனத்தை, எங்குமே போக முடியாமல் இருக்கு மிடத்திலேயே கிடக்கும் முழுமுடவன் ஒருவனைப் போல அசைவற்ற தாகும்படி அடக்கி யழிப்பதுதான் உண்மையான சாவாத் தன்மையை அடைவதாகும்.
விளக்கக் குறிப்பு:-
ஸ்ரீ முருகனார் கூறியது:- ஜனனமரணச் சம்சாரம் உண்மையில் மனத்துக்கே யன்றி ஆன்மாவுக் கின்மையின், அம் மனத்தோடு அதன் வடிவாகவே தானும் சலியாது, அதனைத் தனக்கு அயலாக்கி மாய்க்கவே, தன் உண்மையாம் அமரத் தன்மை ஒருவற்கு அறிபடும் என்பதாம்.
அப்பனேஅருணாசலம்.
🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼
#பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #தெய்வீக சிந்தனைகள்