#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
தமிழகக் கோயில்களையும் பூஜாரிகளையும் காக்க 11 அதிரடித் தீர்மானங்கள்: திருவண்ணாமலையில் எழுச்சியுடன் நடந்த 'ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாடு'!
திருவண்ணாமலை | மார்ச் 13, 2026
திருக்கோயில் பாதுகாப்பு, பசு பாதுகாப்பு, கலாச்சார பாதுகாப்பு மற்றும் பூஜாரிகளின் வாழ்வாதாரத்தை முன்வைத்து, விசுவ ஹிந்து பரிஷத் பூஜாரிகள் பேரமைப்பு சார்பில் ‘ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாடு’ 11-03-2026 புதன்கிழமை மாலை திருவண்ணாமலை கிரிவலப்பாதை சந்தைமேடு மைதானத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. திருவண்ணாமலை சடை சாமி ஆஸ்ரமம் திருப்பாத சுவாமிகள் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அகில பாரத சன்னியாசிகள் சங்க நிறுவனர் ராமானந்தா சுவாமிகள், சுத்தாத்துவித சைவத் திருமடம் குமாரசாமி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மன்னார்குடி ஸ்ரீ சண்டலக்கார செண்பக மன்னர் ஸ்ரீராமனுஜ ஜீயர் சுவாமிகள், ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமி உ.வே.தேஹளீச ராமானுஜ சாரியர், ஆத்மானந்த ஸரஸ்வதி சுவாமிகள் மற்றும் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
இந்த மாநாட்டிற்கு விசுவ இந்து பரிஷத் வட தமிழக மாநிலத் தலைவர் ஆண்டாள் பி. சொக்கலிங்கம் தலைமை வகித்தார். தென் வட மாநில அமைப்புச் செயலாளர் ஆத்தூர் வே. பாலாஜி, வட தமிழக மாநில அமைப்புச் செயலாளர் சு.வே. ராமன், அகில பாரத இணைச் செயலாளர் பி. எம். நாகராஜன் மற்றும் பூஜாரிகள் பேரமைப்பு மாநிலத் தலைவர் எஸ். ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, அகில பாரத அமைப்பு இணை பொதுச் செயலாளர் கோ. ஸ்தாணுமாலயன் விழா பேருரை ஆற்றினார்.
இம்மாநாட்டில் பூஜாரிகளின் நலன் மற்றும் கோயில் பாதுகாப்பு குறித்த 11 முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, பூஜாரிகள் அரசு சலுகைகளைப் பெறத் தடையாக இருக்கும் ₹72,000 வருவாய் வரம்பை ரத்து செய்ய வேண்டும், 60 வயது நிறைந்த அனைத்து பூஜாரிகளுக்கும் ₹5,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், பூஜாரி மறைவுக்குப் பின் அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் மற்றும் இந்து அறநிலையத் துறையில் பணியாற்றும் பூஜாரிகளுக்கு மாதம் ₹10,000 பணிக்கொடை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கவும், பட்டா இல்லாத கோயில்களுக்குப் பட்டா வழங்கவும், கோயில் வருவாயைக் கோயில் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே செலவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆன்மீகவாதிகளை மட்டுமே அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் மற்றும் இந்து கலாச்சாரத்தை இழிவுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற தீர்மானங்களும் மாநாட்டில் முன்வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிராமக் கோயில் பூஜாரிகள், அர்ச்சகர்கள், சிவனடியார்கள், சந்நியாசிகள் மற்றும் திரளான பக்தகோடிகள் கலந்து கொண்டனர்.