ஞானிகள் பேசுகிறோம்

ரவிசங்கர் ராஜா, ஆரணி
724 views
7 days ago
AI indicator
*குரு சரித்திரம்-10* புதிய தொடர் பதிவு அத்தியாயம்-10 நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் "சித்த முனிவரே குருபுரத்தில்தான் ஸ்ரீ பாத வல்லபா பல மகிமைகளை செய்துள்ளார் என்றும், அவர் அங்குதான் மறைந்து விட்டார் என்றும் கூறினீர்களே, அதன் பின் அவர் வேறு அவதாரம் எதுவும் எடுக்கவில்லையா? அவர் வேறு மகிமைகளை சூஷ்ம உலகில் இருந்து செய்யவில்லையா? இவற்றையும் எனக்கு கூறுவீர்களா" என்று கேட்டார். அதற்கு சித்த முனிவர் கூறினார் "நமத்ஹரகா, ஸ்ரீ பாத வல்லபா மறைந்து விட்டாலும் சூஷ்ம உலகில் இருந்தபடி அவர் பல மகிமைகளை செய்துள்ளார். அதனால்தான் குருபுரம் புனித ஷேத்திரமாக கருதப்படுகிறது. அவருடைய பாதுகைகள் இந்த ஊரில் உள்ளதினால் இங்குதான் அவர் இன்னமும் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவும் இங்கு வந்தாலே அனைத்து பாபங்களும் விலகும் என்றும் கூறுகிறார்கள். அவருடைய பாதுகை எத்தனை மகிமை வாய்ந்தது என்பதை எடுத்துக் காட்டும் இந்தக் கதையைக் கேள்" என்று கூறிவிட்டு அந்தக் கதையை கூறத் துவங்கினார். 'முன் ஒரு காலத்தில் வெளியூரில் இருந்த பிராமணர் ஒருவர் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அவர் சம்பாத்தியம் பெரியதாகிக் கொண்டே வந்ததினால் ஒவ்வொரு வருடமும் அவர் குருபுரத்துக்கு வந்து இங்குள்ள ஸ்ரீ பாத வல்லபா ஸ்வாமிகளின் பாதுகைகளுக்கு பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் செய்து விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். அப்படி இருந்து வருகையில் ஒரு வருடம் அவருடைய வியாபாரத்தில் அதிக அளவு லாபம் கிடைத்து இருந்ததினால் இரண்டு நாட்களுக்கு ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டு பையில் நிறைய பணத்தை எடுத்துக் கொண்டு குருபுரத்துக்கு வந்து கொண்டு இருந்தார். அதை சில திருடர்கள் தெரிந்து கொண்டார்கள். ஆகவே பணத்துடன் குருபுரத்துக்கு அவர் வந்து கொண்டு இருந்தபோது வழியில் அவரை வழிமறித்து கழுத்தை அறுத்து அவரைக் கொன்றப் பின் அவரிடம் இருந்தப் பணத்தை திருடிக் கொண்டு சென்று விட்டார்கள். ஆனால் சூஷ்ம வடிவில் அங்கிருந்த ஸ்ரீ பாத வல்லபா அதை பார்த்து விட்டார். தனது கையில் ஒரு சூலாயுதத்தை ஏந்திக் கொண்டு அந்த திருடர்களை துரத்திச் சென்று பிடித்து அவர்களை அந்த சூலத்தினாலேயே குத்திக் கொன்றார். அதில் ஒருவன் குத்தப்படும் முன்னர் அவர் கால்களில் விழுந்து மன்னிப்பைக் கேட்டு தன்னை விட்டு விடுமாறு கதறினான். கொள்ளை அடித்த பணத்தையும் அவரிடமே கொடுக்க அவர் அவன் மீது இரக்கம் கொண்டு கருணைக் காட்டி அவனைக் கொல்லாமல் விட்டார். அவனிடம் சிறிது வீபுதியைக் கொடுத்து அதை அந்த பிராமணரின் அறுந்த தலையில் தடவிய பின் அதை அவனது உடலோடு சேர்த்து வைக்குமாறு கூறியதும் அவனும் ஓடிச் சென்று அவர் கூறியதை செய்தான். என்ன அதிசயம். அடுத்த ஷணம் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்த பிராமணன் மயக்கம் தெளிந்து எழுவது போல உயிர் பெற்று எழுந்தான். உயிர் பெற்று எழுந்தவன் அவன் எதிரில் நின்று கொண்டு இருந்த திருடனிடம் தான் எங்கு இருக்கிறேன், தன்னை சுற்றி என்ன நடந்தது, தன்னை யாரோ தாக்கி விட்டுப் போனார்களே, அவர்கள் யார் என்றெல்லாம் கேட்டார். அந்த திருடனும் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவருக்குக் கூறிவிட்டு யாரோ முன்பின் தெரியாதவர் கையில் சூலத்துடன் வந்து தம் நண்பர்களைத் தாக்கிக் கொன்று தன்னை கருணைக் காட்டி கொல்லாமல் விட்டு விட்டார் என்றும், அவரே இறந்த அந்த பிராமணனை பிழைக்க வைக்க வீபுதியை தந்தார் என்றும், அதை தடவிய பின் அறுந்து கிடந்த தலையையும், உடம்பையும் ஒன்றாக வைத்ததும் உயிர் பிழைத்து எழுந்து வந்து விட்ட உண்மையையும் கூற அந்த பிராமணனும் தனக்கு உயிர் பிச்சைக் கொடுத்தது ஸ்ரீ பாத வல்லாபாவே என்பதைப் புரிந்து கொண்டார். ஸ்வாமியின் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டழுத பின் அந்த திருடனுக்கு காட்சி தந்து அவனிடம் வீபுதி கொடுத்து என்பதை அனுப்பியது கருணைக் கடலான ஸ்ரீ பாத வல்லாபாவே அவனுக்கும் புரிய வைக்க அவனும் ஆனந்தம் அடைந்து தான் செய்த தவற்றுக்கு வருந்தி அவரிடம் மன்னிப்புக் கேட்டான். அதற்குப் பின்னர் அவனும் அந்த பிராமணனுக்கு துணையாக குருபுரம் சென்றான். அங்கு சென்றதும் இருவரும் ஸ்வாமிகளின் பாதுகைகளுக்கு பூஜைகள் செய்து வழிபட்டப் பின், அந்த பிராமணன் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யும்போது அவருக்கு உதவியாக இருந்தான். இப்படியாக ஸ்ரீ பாத வல்லபா அங்கு சூஷ்மமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்" என்று கூறிய பின்னர் குருபுரம் கதையை கூறி முடித்தார் (இத்துடன் அத்தியாயம் 10 முடிந்தது). தொடரும். 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள் #ஞானிகள் பேசுகிறோம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
ரவிசங்கர் ராஜா, ஆரணி
633 views
7 days ago
AI indicator
*குரு சரித்திரம்-8* புதிய தொடர் பதிவு அத்தியாயம்-8 சித்த முனிவர் சற்று நேரம் மெளனமாக இருந்த பின் கதையை இன்னும் தொடர்ந்தார். "ஸ்வாமி ஸ்ரீ பாத வல்லபா கோகர்ணத்தில் மூன்று வருடங்கள் தங்கி இருந்த பின் அங்கிருந்துக் கிளம்பி பல ஷேத்திரங்களுக்கும் சென்ற பின் ஸ்ரீ சைலம் என்ற ஊரில் இருந்த மல்லிகார்ஜுனனைக் காணச் சென்றார். அந்த ஆலயத்தின் அருகில் கிருஷ்ணா எனும் புனித நதி ஓடுகின்றது. மேலும் அந்த நதியில் பல கரைகளில் பல்வேறு அற்புதமான ஆலயங்கள் உள்ளன. அங்கெல்லாம் சென்று விட்டு வந்தார் ஸ்ரீ பாத வல்லபா. குருவார்பூர் என்பது நிவிருத்தி சங்கமம் என்ற இடத்தில் உள்ளது . அங்கு ஒரு மெத்தப் படித்த பண்டிதர் வாழ்ந்து வந்தார். சகல சாஸ்திரங்களிலும் வல்லுநர் அவர். ஊரில் நல்ல மரியாதையையும் மதிப்பையும் பெற்று இருந்தார். அவருக்கு அம்பிகா என்ற மனைவி இருந்தாள் அவர்களுக்கு பல குழந்தைகள் பிறந்து பிறந்து மரணம் அடைந்து இருந்தன. ஆகவே அவர்கள் மன வருத்தத்தில் இருந்தார்கள் என்றாலும் தெய்வ அருளினால் அவர்களுக்கு கடைசியாகப் பிறந்த குழந்தை உயிருடன் இருந்தது. ஆனால் வளர்ந்து வந்தக் குழந்தை சற்று கூட படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தது. ஆகவே அந்த சிறுவனுக்கு அவனுடைய தந்தையே பாடங்கள் சொல்லித் தரலானார். எட்டாவது வயதில் பூணூல் போட்டு பாண்டித்தியம் செய்யும் கல்வியை தர முயன்றார். அது அவனுடைய மனதுக்கு பிடிக்கவில்லை என்பதினால் அந்த சிறுவனுக்கு மண்டையில் எதுவுமே ஏறவில்லை. சடங்குகளை செய்யும் பண்டிதனாக ஆவதற்கு நியமங்களை சொல்லிக் கொடுக்க நினைத்தாலும் அதையும் அவனால் சரிவர கற்க முடியவில்லை. இப்படியாக எதை கற்பிக்க நினைத்தாலும் அவன் எதையும் கிரகித்துக் கொள்ள முடியாத முட்டாளாகவே இருந்ததினால் ஒரு நாள் கோபம் கொண்டு அந்த சிறுவனை அவனது தந்தை பிரம்பினால் விளாசி விட்டார். அவருக்கு மனதில் பயம். நாளை தனக்குப் பிறகு அவன் வாழ்வதற்கு என்ன செய்வான், நாமோ ஏழ்மை குடும்பத்தில் உள்ளவர்கள் என்ற மன ஆதாங்கமே அவரது கோபத்தின் காரணம். தன்னுடைய மகனை அடிப்பதைக் கண்டு மனம் பதறிப் போனாள் அம்பிகா. என்ன இருந்தாலும் தாய் உள்ளம் தவிக்கும் அல்லவா. தனது கணவனிடம் இனி குழந்தையை இப்படிக் கண்மூடித்தனமாக அடிப்பதை நிறுத்துங்கள் என்று சண்டை போட்டு விட்டாள். அதற்காக அவள் பின் வருந்தினாலும் அதன் விளைவாக மனம் ஒடிந்து போன அந்த பிராமணன் விரைவில் மடிந்தே போனான். இனி குடும்பத்தை யார் காப்பது என்ற நிலை வந்தபோது அம்பிகா அங்கும் இங்கும் அலைந்து தனக்குக் கிடைத்த வேலைகளை செய்து அந்த சம்பாத்தியத்தில் சிறுவனையும் வளர்த்து வந்தாள். ஊரில் உள்ளவர்கள் வாய் சும்மா இருக்குமா? 'உதவாக்கரை நீ உன் அப்பனையும் பறி கொடுத்துவிட்டாய். உன் தாயாரும் மரணம் அடைந்து விட்டால் நீ சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்?' என்று அவனை திட்டித் தீர்ப்பார்கள். மூடனாக இருந்தாலும் ஊரார் பேச்சை எத்தனை நாள்தான் பொறுத்துக் கொள்ள முடியும். அந்த சிறுவன் மனதில் துக்கம் வந்துவிட்டது. ஒருநாள் வீட்டுக்குச் சென்று தாயாரிடம் அழுதான். ஊரார் கூறுவதை எல்லாம் கூறி அழுதான். அப்போதுதான் அம்பிகாவுக்கும் பொறி தட்டியது போல மனம் வருந்தி பயந்தது. 'ஆமாம் ஊரார் சொல்வதில் என்ன தவறு உள்ளது? எனக்குப் பிறகு நீ என்ன செய்வாய்?" என்று அவனிடம் கேட்ட பின் மகனிடம் கூறினாள் 'மகனே இனி நமக்கு உதவ யாருமே இல்லை. நீ இல்லாவிடிலும் நான் கூலி வேலை செய்தாவது வாழ்ந்து விடுவேன். ஆனால் நான் போய் விட்டால் நீ என்ன செய்வாய் என மனம் பதறுகிறது. நாமோ பரம ஏழைகள். ஆகவே,வா,நாம் சென்று நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டு விடலாம்' என்றதும் அவள் மகனும் மறுப்புக் கூறாமல் தாயுடன் கிளம்பிச் செல்ல இருவரும் கிருஷ்ணா நதிக்கரையை அடைந்தார்கள். அவர்கள் சென்ற வேளையில் அதே இடத்தில் ஸ்ரீ பாத வல்லபாவும் குளித்துக் கொண்டு இருந்தார். ஒரு பெண்மணியும். சிறுவனும் நதியில் குதித்து தற்கொலை செய்ய முயன்றதைக் கண்டவர் அவர்கள் அருகில் சென்று அவர்களை தடுத்து நிறுத்தினார். அவரைக் கண்டவள் மடை திறந்த வெள்ளம் போல கண்ணீர் விட்டு அழுது தம் நிலையைக் கூறி தாம் தற்கொலை செய்து கொள்வதை தடுக்காதீர்கள் எனவும் தற்கொலை செய்து கொண்ட பாபம் அடுத்த ஜென்மத்தில் தொடராமல் இருக்கவும்,அடுத்த ஜென்மத்திலாவது தனக்கு இந்த மகன் நல்ல அறிவாளியாக பிறக்க அருள் புரிய வேண்டும் எனவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை நதிக்கரையில் அமரச் சொல்லி அவர்களிடம் கூறினார் அம்மணி, எந்த ஒரு நிலையிலும் தற்கொலை செய்து கொள்ள தீர்மானிப்பது ஒரு பிரச்னைக்கு தீர்வாகாது. உனக்கு அடுத்த ஜென்மத்தில் நிச்சயமாக நல்ல மகன் பிறப்பான் என்று என் மனம் கூறுகிறது. ஆகவே நீ சனிபிரதோஷ தினங்களில் மாலையில் ஆலயத்துக்குச் சென்று சிவபெருமானை துதித்து வேண்டிக் கொண்டால் நிச்சயமாக நல்லதே நடக்கும் என்பதற்கு உதாரணம் கிருஷ்ண பெருமானின் தாயாரான யசோதை ஆகும். அவளுக்கும் பூர்வ ஜென்மத்தில் இப்படி ஒரு சோதனை நேரிட்டபோது, அவள் பிரதோஷ கால பூஜையை கண்டு களித்ததினால் சிவபெருமானின் கருணையை பெற்றாள். ஆகவேதான் அவளுக்கு கிருஷ்ணனே மகனாகப் பிறந்தார்' என்று கூற அம்பிகா அவரிடம் கேட்டாள் 'மகானே, உங்களைக் கண்டதும்தான் எனக்கு மன அமைதி வந்தது போல உள்ளது. உங்களால் எங்களுக்கு விமோட்சனம் கிடைக்கும் என்றே மனம் நினைக்கின்றது. நீங்கள் எங்களுக்கு யசோதை கிருஷ்ணரை மகனாக பெற்ற அந்த முழுக் கதையையும் கூறிவிட்டு, என் மகனையும் ஆசிர்வதித்து அனுப்ப வேண்டும். நீங்களே என் மகனை சரி செய்வீர்கள் என்று உங்கள் மீது என்னை அறியாமலேயே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. மகாத்மாவே, நான் வாழ்கையை இனி தைரியமாக எதிர்கொள்வேன். சிவபெருமானை இன்று முதல் விடாமல் துதிக்கத் துவங்குவேன். எங்களுக்கு அந்தக் கதையையும் கூறி என் மகனையும் ஆசிர்வதிக்க வேண்டும்' என்று கேட்க ஸ்ரீ பாத வல்லபா கதையைக் கூறலானார். ஸ்ரீ பாத வல்லபா கூறலானார் 'அம்மணி, முன் ஒரு காலத்தில் உஜ்ஜயினி என்ற நகரை சந்திரசேனன் என்ற ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் நற்குணம் பெற்றவன். அவனுக்கு சிவபெருமானின் அருளினால் கிடைத்த சிந்தாமணி என்ற ஒரு நகை இருந்தது. அதை எந்த உலோகத்தின் மீதிலாவது வைத்தால் அந்த உலோகம் தங்கமாகிவிடும் என்பது அதன் விசேஷம். அதனால் அந்த மன்னன் அந்த நகையை நல்ல காரியங்களுக்கே பயன்படுத்தி வந்ததினால் தனது நாட்டில் உள்ளவர்களை பசி, பட்டினி இல்லாமல் வாழ வைத்து வந்தான். நாடும் செழிப்பாக இருந்தது. இவற்றைக் கண்ட பக்கத்து நாட்டு அரசர்கள் பொறமைக் கொண்டார்கள். ஆகவே அரசன் ஏமாந்து இருக்கும் நேரத்தில் அவன் நாட்டின் மீது படை எடுத்து அவனை கொன்று விட்டு நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என முடிவு செய்தார்கள். சந்திரசேனனுக்கு ஒரு விதமான சனி தோஷம் இருந்தது. அதன் தீமையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றால் பகுளா திரியோதசி எனும் நாளில் சிவபெருமானை ஆராதித்து பூஜை செய்து வழிபட வேண்டும் என்று அவரது அரசவை பண்டிதர்கள் கூறினார்கள். ஆகவே அரசனும் அந்த பூஜையை செய்ய மஹாகாலேஷ்வரர் ஆலயத்துக்கு சென்று இருந்தபோது அண்டை நாட்டு மன்னர்கள் ஒரு இரவில் அவன் நாட்டின் மீது படையெடுத்து வந்தார்கள். அவர்கள் படை எடுத்து வருவது சந்திரசேனனுக்கு தெரியாது. அவன் அமைதியாக பூஜைகளை செய்து கொண்டு இருந்தான். அவர்கள் வந்து கொண்டு இருந்ததைக் வனப்பகுதியில் திரிந்து கொண்டு இருந்த இரண்டு ஆட்டிடையர்கள் பார்த்து விட்டார்கள். அதை உடனடியாக மன்னனிடம் சென்று கூற வேண்டும் என்று எண்ணிக் கொண்டு மகாகாளேஸ்வரர் ஆலயத்துக்கு சென்றபோது அவர்கள் மன்னன் செய்து கொண்டு இருந்த சிவபூஜையைக் காண நேரிட்டது. அவர்கள் இருவரும் சகோதரர்கள். பூஜையைக் கண்டவர்களுக்கு தாம் வந்தக் காரியம் மறந்து போயிற்று. மன்னனைப் போல நாமும் பூஜை செய்தால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட, அவர்கள் இருவரும் தம் வீட்டின் அருகில் இருந்த ஒரு மரத்தின் அடியில் சென்று அந்த இடத்தை பசுவின் சாணத்தை தெளித்து சுத்தப்படுத்திய பின்னர் கோலங்கள் போட்டு உருண்டையான ஒரு கல்லைக் கொண்டு வந்து அங்கு வைத்து அதற்கு சிறிது பால் ஊற்றி (ஆட்டுப் பால்) அபிஷேகம் செய்து வனத்தில் இருந்து கொண்டு வந்திருந்த பூக்களையும் வில்வ இலையையும் போட்டு ஆராதித்தார்கள். அவர்களில் ஒருவன் அந்த இடம் அமைதியாக இருப்பது போல உணர்ந்ததினால் நமச்சிவாயா எனும் மந்திரத்தை மனதில் கூறிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு அதன் எதிரில் அமர்ந்து கொண்டுவிட்டான். அவன் பக்தி உண்மையாக இருந்ததினால் அவனை அறியாமலேயே அவன் தியான நிலைக்குச் சென்று விட்டான். அவனை எத்தனை அழைத்தும் அவன் எழுந்திருக்கவில்லை என்பதினால் அவனுக்கு எதோ ஆகிவிட்டது என பயந்து போன இரண்டாமவன் தனது வீட்டுக்குச் சென்று பெற்றோர்களை அழைத்து வந்தான். அவர்களும் வந்து தியானத்தில் இருந்தவனை எழுப்ப முயல அவன் எழுந்திருக்கவில்லை. சிவசிவா இவனுக்கு என்ன ஆயிற்று எனக் கூவியவாறு வந்து அவனை அப்படியே தூக்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்கள். இந்தக் கல்லினால்தானே உனக்கு எதோ ஆகிவிட்டது எனக் கோபம் கொண்டு அந்தக் கல்லை தூக்கி எறிந்தார்கள். அதோடு அதன் மீது அவன் அர்ச்சனை செய்து போட்டு இருந்த வில்வ இலைகளையும் சேர்த்து குப்பைப் போல எடுத்து அந்தக் கல் மீதே போட்டு விட்டு அவனை தூக்கிக் கொண்டு சென்றார்கள். அந்த நேரத்தில் கண் விழித்தவன் முன்னால் சிவபெருமான் அவன் கண்களுக்கு மட்டும் புலப்படும் வகையில் தோன்றினார். அவனும் சிவபெருமானிடம் மனம் வருந்தி தாம் சென்ற காரியத்தை மறந்து பூஜை செய்த கதையையும் கூறி விட்டு, தமது பெற்றோர்கள் தாம் பூஜித்த சிவலிங்கத்தை அவமானப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டப் பின் நாட்டையும் அவர் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினான். அதைக் கேட்ட சிவபெருமான் கூறினார் மகனே, நீ வருத்தப்படத் தேவை இல்லை. எப்போது உன்னுடைய பெற்றோர்கள் சிவசிவா என என்னை உச்சாடனம் செய்து, வில்வ இலைகளை என்மீது கொட்டினார்களோ அதை நான் அவர்கள் செய்த அர்சசனையாகவே பாவித்துக் கொண்டேன். ஆகவே அவர்கள் என்னை தம்மை அறியாமலேயே ஆராதித்தார்கள். ஆகவே அவர்களுக்கு நீயே அடுத்த ஜென்மத்தில் பேரும் புகழும் பெற்ற மகனாகப் பிறப்பாய். அதன் பின் நீயும் கைலாயத்தை அடைவாய், கவலைப் படாதே மன்னனை நான் காப்பேன் என்று கூறிவிட்டு மறைந்தார். அந்த ஆட்டு இடையன் தன்னை பூஜித்த இடத்தில் பெரும் ஜோதி வடிவமாக நெருப்பு பிழம்பாக அவர் நின்று கொண்டார். அந்த நாட்டை நோக்கி வந்து கொண்டு இருந்த எதிரிப் படையினர் ஆகாயம்வரை நீண்டது போல எரிந்து கொண்டிருந்த ஜோதியை தூரத்தில் இருந்தே கண்டார்கள். அதைக் கண்டவர்கள் பயந்து போயினர். அவர்களுக்கு அது சிவபெருமான் என்பது தெரியாததினால் தாங்கள் வருவதை அறிந்து கொண்டு விட்ட மன்னன் சந்திரசேனன் தம்மை தீயில் அகப்பட்டுக் கொண்டு கருகி சாகடிக்க திட்டம் போட்டு பெரும் தீயை அனைத்து பகுதிகளிலும் பரவ விட்டு விட்டார் என்று எண்ணிக் கொண்டு பயந்து திரும்பி ஓடி விட்டார்கள். இதற்கிடையில் நடந்த அனைத்தையும் மற்றவர்கள் மூலம் அறிந்து கொண்ட மன்னன் அந்த ஆட்டிடையனின் பக்தியினால்தான் சிவபெருமானே தன்னுடைய நாட்டைக் காத்தார் என்று பெருமை அடைந்து அவனுக்கு நிறைய நிலங்களை தானம் கொடுத்து கௌரவித்தான். அடுத்த ஜென்மத்தில் அந்த அட்டிடையனின் தாயாரும் யசோதையாக பிறக்க, அந்த ஆட்டிடையனே கிருஷ்ணராக அவளுக்கு பிறந்தார்'. இப்படியாக அம்பிகாவுக்கு கதையைக் கூறிய ஸ்ரீ பாத வல்லபா அவர்களை சிவபெருமானை துதிக்குமாறு அறிவுரைக் கூறிய பின்னர் அந்த முட்டாள் மகனை அருகில் அழைத்து அவன் தலை மீது தன் கையை வைத்து ஆசிர்வதிக்க அந்த சிறுவனும் தன்னை மறந்து அனைத்து வேதங்களையும் அந்த இடத்திலேயே உச்சரிக்கத் துவங்க, ஸ்ரீ பாத வல்லபாவும் அங்கிருந்து மறைந்து விட்டார். அந்த சிறுவன் பெரும் பாண்டித்தியம் பெற்றவனாகி பெரும் புகழ் பெற்று விளங்கி சிவபக்தரானார். அவரை முட்டாள், மூடன் என கேலி செய்த மக்கள் அவரிடம் மன்னிப்பைக் கோரினார்கள்". இப்படியாக நமத்ஹரகாவுக்கு கதையைக் கூறிய சித்த முனிவர் 'மகனே, குருவின் மகிமை என்பது எத்தனை உயர்வானது என்பது இந்தக் கதை மூலம் உனக்குப் புரிந்திருக்கும். குருவின் துணையும், ஆசியும் இருந்தால் இந்த உலகில் கிடைக்காதது எதுவுமே இருக்காது என்பதை நன்கு உணர்ந்து கொள்' என்றார். அந்தக் கதையைக் கேட்ட அம்பிகாவும் மனம் அமைதி அடைந்து தனது மகனுடன் கிளம்பிச் சென்றாள். அவள் ஸ்ரீ பாத வல்லபாவின் அறிவுரைப்படி சனிப்பிரதோஷ தினங்களில் தவறாமல் ஆலயம் சென்று சிவபெருமானை வழிபாட்டு வர அடுத்த ஜென்மத்தில் கராஞ்சா எனும் இடத்தில் அம்பா பவானி என்ற பெயரில் பிறப்பை எடுக்க அவளுக்கு ஒரு பெரிய மகான் மகனாகப் பிறந்தார். (இத்துடன் அத்தியாயம்-8 முடிந்தது). தொடரும். 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள் #ஞானிகள் பேசுகிறோம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
ரவிசங்கர் ராஜா, ஆரணி
620 views
7 days ago
AI indicator
*குரு சரித்திரம்-9* புதிய தொடர் பதிவு அத்தியாயம்-9 நமத்ஹரகா சித்த முனிவரிடம் மீண்டும் பணிவுடன் கேட்டார். "சித்த முனிவரே, இந்த சம்பவத்தைத் தவிர ஸ்ரீ பாத வல்லபா வேறு ஏதும் மகிமைகளை நடத்திக் காட்டி உள்ளாரா? அப்படி என்றால் அதைக் குறித்து எனக்கும் கூறுவீர்களா?" என ஆவலுடன் கேட்க சித்த முனிவர் மீண்டும் கூறலானார். "நமத்ஹரகா ஒரு காலத்தில் குருபுரம் என்ற ஒரு ஊர் இருந்தது. அங்கிருந்த நதியில் தினமும் ஒரு வண்ணான் வந்து துணிகளை துவைத்து எடுத்துச் செல்வது வழக்கம். அப்போது ஸ்ரீ பாத வல்லபா அவர்களும் அந்த ஊரில் இருந்தார்கள். அந்த வண்ணானுக்கு ஸ்வாமிகளிடம் பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு என்பதினால் அவருக்கு எந்த விதத்திலாவது சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆகவே ஸ்வாமிகள் நதியில் குளிக்கச் செல்கையில் தானும் அவர் பின்னால் சென்று அவர் குளித்தவுடன் அவரது துணிகளை துவைத்துக் கொடுப்பான். அது மட்டும் அல்லாமல் அவருடைய குடிலுக்கும் சென்று அவர் சமையல் பாத்திரங்களை துலக்கிக் கொடுப்பதும், குடிலை பெருக்கி சுத்தப்படுத்திக் கொடுப்பதையும் ஒரு வாழ்க்கை முறையாகவே வைத்து இருந்தான். ஸ்ரீ பாத வல்லபா அவர்களுக்கு எந்த ஜாதி துவேஷமும் இல்லை என்பதினால் அந்த வண்ணான் செய்து வந்த பணிவிடைகளை மனதார ஏற்றுக் கொண்டார். இப்படியாக அந்த வண்ணான் காலம் அவருக்கு பல பணிவிடைகளை செய்து வந்தபோது ஒரு நாள் அந்த நதியில் ஒரு முஸ்லிம் மன்னன் தனது படையினருடன் நூற்றுக்கணக்கான கப்பல்களில் அந்த வழியே பயணம் செய்து கொண்டு இருந்ததைக் கண்டான். அந்த மன்னனின் கழுத்திலும், உடம்பிலும் ஆபரணங்கள் மின்னின. அவ்வப்ப்போது படைவீரர்கள் வந்து அவருக்கு ஏதேதோ பணிவிடை செய்தவண்ணம் இருந்தார்கள், உண்பதற்கு பல்வேறு பழங்கள் மற்றும் உணவுகளையும் கொண்டு வந்து தந்தார்கள். அதைக் கண்ட வண்ணான் மனதில் நினைத்தான் ஆஹா மன்னன் என்றால் இப்படித்தான் சேவகம் செய்வார்கள் போலும்! இத்தனை சுகமாக இருக்க அருள் புரியும் எந்தக் கடவுளை அந்த மன்னன் வணங்கித் துதிக்கிறான் என்று தெரியவில்லையே' அன்று தனக்கு பணிவிடைகளை செய்ய வந்த வண்ணானின் மனதில் இருந்த அந்த ஏக்கத்தை ஸ்வாமிகள் புரிந்து கொண்டார். அவனிடம் அவர் கேட்டார் 'குழந்தாய் (பெரியவர்கள் தம்மைவிட சிறியவர் எத்தனை வயதானாலும் அவர்களை உரிமையோடு குழந்தாய், மகனே, அம்மணி மற்றும் மகளே என்றே அழைப்பார்கள். இந்தப் பழக்கத்தை சாதாரணமாக அனைவரும் கடைபிடித்தார்கள்), உனக்கும் அந்த மன்னனைப் போல அத்தனை சுகபோகமாக வாழ ஆசையாக உள்ளதா?' வண்ணன் கூறினான் 'ஸ்வாமி, உங்களுக்கு சேவகம் செய்வதை பெரும் பாக்கியமாக நான் கருதினாலும், உள்ளுக்குள்ளே நான் ஏழை என்ற ஏக்கம் என்னை விட்டு அகலாமல் உள்ளது. அதனால்தான் இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டால் என்னை அறியாமல் என் மனதிலும் ஆசை துளிர் விட்டு விடுகிறது. அதற்கு நீங்கள் என்னை மன்னித்து விட வேண்டும்'. அதைக் கேட்ட ஸ்வாமிகள் அவனுக்கு ஆறுதல் கூறினார். 'குழந்தாய் இதில் உன் தவறு ஏதும் இல்லை. இது இயற்கை ஆகும். உன்னுடைய நல்ல குணத்தினால் நீ என்னிடம் மறைக்காமல் உன் மனதில் இருந்ததை கூறி விட்டாய். கவலைப் படாதே. நீ அடுத்த ஜென்மத்தில் பீதார் எனும் நகரில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து அந்த நாட்டின் மன்னனாக இருப்பாய். அப்போது நானும் உன்னை வேறு அவதாரத்தில் வந்து சந்திப்பேன். கவலைப்படாதே. உன்னுடைய இந்த ஜென்ம அனைத்து ஆசையும் அடுத்த ஜென்மத்தில் நிறைவேறும்' என்று கூறி அவனை ஆசிர்வதித்தார். அப்போது அந்த வண்ணான் பணிவாக அவரிடம் கேட்டான் 'ஸ்வாமி நீங்கள் எனக்குத் தந்த இந்த ஆசிகளே எனக்கு போதுமானது. ஆனால் ஒருவேளை நான் அடுத்த ஜென்மத்தில் நீங்கள் அருள்புரிந்தபடி முஸ்லிம் மன்னனாக ஆகிவிட்டாலும், உங்களுக்கு எந்த விதத்திலாவது பணிவிடை செய்யும் நிலையில்தான் இருக்க வேண்டும். அப்போது இந்த ஜென்மத்தின் வாழ்வை நான் அறிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கும் நீங்கள் அருள் புரிய வேண்டும்'. அவன் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த ஸ்ரீ பாத வல்லபா அவனிடய கூறினார் 'குழந்தாய், நீ நிச்சயம் அடுத்த ஜென்மத்திலும் எனக்கு சேவகம் செய்யும் வாழ்க்கையுடன் இருப்பாய். அப்போது உனக்கும் பூர்வ ஜென்ம வாழ்கை, அதாவது இந்த ஜென்ம வாழ்கை நினைவில் இருக்கும் வகையில் நீயும் இருப்பாய்'. விரைவில் அந்த வண்ணானும் இறந்து போனான். பீதார் நகரில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து மன்னனாகவும் ஆகிவிட்டான். அதற்கு இடையில் குருபுரத்தில் தங்கி இருந்த ஸ்ரீ பாத வல்லபா அவர்களும் நதியின் உள்ளே அப்படியே மறைந்து விட்டார். அவர் நடந்து சென்று போய் அங்கிருந்து கரையில் விட்டுச் பாதுகைகளையே சென்ற இன்றும் குருபுரத்தில் உள்ள ஆலயத்தில் பக்தர்கள் வணங்கி வருகிறார்கள். அந்த இடம் இன்றும் புனித ஷேத்திரமாக கருதப்பட்டு வருகிறது (இத்துடன் அத்தியாயம் -9 முடிந்தது). தொடரும். 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள் #ஞானிகள் பேசுகிறோம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
ரவிசங்கர் ராஜா, ஆரணி
678 views
7 days ago
AI indicator
*குரு சரித்திரம்-8* புதிய தொடர் பதிவு அத்தியாயம்-7 நாமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் "மகாத்மாவே, கோகர்ணத்தில் சிவலிங்கம் அமைந்த கதையை அல்லவா கூறினீர்கள். ஆனால் ஸ்ரீ பாதா அவர்கள் ஏன் அங்கு சென்றார் என்பதைக் கூறவில்லையே. அதையும் தயவு செய்து கூறுவீர்களா?" எனக் கேட்டதும் சித்த முனிவர் நகைத்தபடி கூறினார் "நமத்ஹரகா, நான் இன்னும் நீ கேட்ட கேள்விக்கே பதில் கூறி முடிக்கவில்லையே. முதலில் கோகர்ணம் வந்தக் கதையை நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதினால்தான் அதை முதலில் கூறினேன். அந்த மகிமை வாய்ந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என ஸ்ரீ பாதா முடிவு செய்ததற்கு இன்னொரு கதையும் சேர்ந்தே காரணம் ஆகும். அதையும் கூறுகிறேன் கேள்" என்று கூறிய பின் அந்தக் கதையைக் கூறலானார். நமத்ஹரகா பக்தி பூர்வமாக அவர் எதிரில் அமர்ந்து கொண்டு அவர் கூறியதை ஆர்வத்தோடு கேட்டபடி இருந்தார். முன்னொரு காலத்தில் இஷ்வகு வம்சத்தைச் சார்ந்த கல்மதபாக்ஷா என்ற மன்னன் ஒருவர் ஆட்சியில் இருந்தார். அவர் நல்ல பாண்டித்தியம் பெற்று அனைத்து சாஸ்திரங்களையும் கற்று அறிந்திருந்தார். அவர் பெரும் கொடையாளி மட்டும் அல்ல அனைவரிடமும் கனிவோடு நடந்து கொண்டவர். அனைவரிடமும் மரியாதை காட்டுபவர். ஒரு முறை அவர் காட்டில் வேட்டையாடச் சென்றபோது தூரத்தில் நெருப்பு ஜ்வாலையைப் போன்று காட்சி தந்து கொண்டு இருந்த ஒரு ராக்ஷசன் மரத்தின் மீது அமர்ந்து இருப்பதைக் கண்டார். ராக்ஷசர்கள் மனிதர்களை தின்பவர்கள் என்பதினால் அவர் அம்பெறிந்து அந்த ராக்ஷசனைக் கொன்று விட்டார். அப்போது இன்னொரு மரத்தில் பதுங்கி இருந்த அந்த ராக்ஷசனின் சகோதரன் அரசன் சென்றபின் காயமுற்று இறக்கும் தருவாயில் கிடந்த தனது சகோதரனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதபோது இறக்கும் தருவாயில் இருந்த ராக்ஷசன் கூறினான் 'சகோதரா, என்னை இந்த நாட்டு மன்னன் கொன்று விட்டான். ஆகவே நீ அவனை எப்படியாவது பழி வாங்க வேண்டும். அப்படிக் கூறிவிட்டு இறந்து போனான். சில வருடங்கள் கடந்தன. அரசனை பழிவாங்க சமயத்தை எதிர்நோக்கி ராக்ஷசன் காத்து இருந்தான். ஒரு முறை அரண்மனையில் ரிஷி, முனிவர்களைக் கௌரவிக்கும் ஒரு பெரிய விழா நடைபெற்றது. அதற்கு வெளியில் இருந்தும் சமையல்காரர்கள் வந்தார்கள். தனக்கு மழலை செல்வம் இல்லை என்பதினால் பெரிய பூஜை செய்து ரிஷி முனிவர்கள் மூலம் தெய்வத்திடம் இருந்து அதற்கான ஆசிகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த விழாவை ஏற்பாடு செய்து இருந்தான் கல்மதபாக்ஷா. அதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு மாறு வேடத்தில் சமையல்காரனாக அந்த ராக்ஷசன் தானும் ஒரு சமையல்காரனாக சென்று விட்டான். அந்த விழாவில் அரசன் தன்னுடைய குல குருவான வசிஷ்டரையும் அழைத்து இருந்தான். வந்திருந்த ரிஷி, முனிவர்களுக்கு உணவு செய்ய துவங்கியதும் அதில் மனித மாமிசத்தை யாருக்கும் தெரியாமல் கலந்துவிட்ட ராக்ஷசன் அதை வசிஷ்டருக்கும் பரிமாற ஏற்பாடும் செய்து விட்டான். உணவு பரிமாறப்பட்டபோது தம் இலையில் மாமிசம் கலந்த உணவைக் கண்ட வசிஷ்டர் கோபமுற்று என்ன நடந்தது என்பதை யோசனை செய்யாமல் அந்த அரசன் தன்னை அவமதித்து விட்டதாகக் கருதி அவன் ஒரு பிரும்ம ராக்ஷசனாக மாறுமாறு சாபம் கொடுத்து விட்டார். மன்னன் தன்னை அறியாமல் நடந்த குற்றத்துக்கு மன்னிப்பை கோரினான். யாரோ ஒருவன் வேண்டும் என்றே செய்துவிட்ட தவறுக்கு தான் பொறுப்பல்ல என்றாலும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர் கொடுத்த சாபத்தை விலக்கிக் கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்டும், வசிஷ்டரோ மக்கள் செய்யும் தவறுகளுக்கு மன்னனே பொறுப்பு எனக் கூறி அதை விலக்கிக் கொள்ள மறுத்தார். ஆனால் அந்த மன்னனின் மனைவியான தமயந்தி வசிஷ்டரின் காலில் விழுந்து கணவனுக்காக மன்னிப்புக் கேட்டாள். தமது குல குருவை சாந்தப்படுத்தி சாபத்தை விலக்கிக் கொள்ளுமாறு வேண்டிக் கேட்க அவரும் மனம் இளகி தான் கொடுத்த சாபத்தின் கடுமையைக் குறைத்தார். அப்படி அவர் மாற்றிய சாபத்தின்படி அந்த மன்னன் பன்னிரண்டு வருடங்கள் பிரும்ம இராட்சஷனாக இருந்த பின் மீண்டும் மனித உடல் பெற்று மன்னன் ஆவான் என்றும் அதன் பின்னரே அவர்களுக்கும் மழலை பாக்கியம் கிட்டும் என்றும் ஆசிர்வதித்தார். அந்த சாபத்தின்படி அந்த மன்னனும் பிரும்ம இராட்சஷனாக மாறி காடுகளில் உலாவத் துவங்கினான். அப்படி அவன் உலாவிக் கொண்டு இருந்த சமயத்தில் ஒரு நாள் தன்னுடைய மனைவியுடன் அந்த வழியே சென்று கொண்டு இருந்த ஒரு பிராமணத் தம்பதியினரை பிரும்ம ராக்ஷசனின் இயற்கை குணத்தின்படி அவர்களை தின்பதற்காக சிறை பிடித்தான். அந்த பிராமணனின் மனைவியோ தன்னை முதலில் தின்று விட்டு தன்னுடைய கணவரை விடுதலை செய்து விடுமாறு அதனிடம் கெஞ்சினாள். அவள் மகா கற்புக்கரசி. தூய்மையான பதிவிரதை. ஆனால் அவள் எத்தனை கெஞ்சியும் அந்த பிரும்ம இராட்சஷன் அதைக் கேட்காமல் அந்த பிராமணனின் மார்பைப் பிளந்து அவன் இருதயத்தில் இருந்து வெளியேறி வந்த இரத்தத்தை ஆனந்தமாகக் குடித்தான். அதனால் கோபமுற்ற அந்த பதிவிரதை கேடு கெட்ட பிரும்ம இராட்சஷனே, நான் இத்தனைக் கெஞ்சியும் என்னுடைய கணவனை கொன்று விட்டாய். உனக்கு பன்னிரண்டு ஆண்டுகால ராக்ஷச வாழ்வுக்குப் பிறகு சாப விமோசனம் கிடைத்து அரியணை எறப் போகிறாய் அல்லவா. ஆனால் அங்கு உனக்கு நிம்மதி கிடைக்கப் போவது இல்லை. எப்படி என்னை என்னுடைய கணவரிடம் இருந்து பிரித்து விட்டாயோ அது போலவே நீ அரியணை ஏறியதும் என்று உன் மனைவியுடன் நீ சேர்ந்து படுப்பாயோ அன்றே உனக்கும் அவள் எதிரிலேயே மரணம் சம்பவிக்கும்' என சாபம் இட்டாள். பிரும்ம ராக்ஷசனாகி பன்னிரண்டு ஆண்டுகள் வனங்களில் திரிந்து கொண்டு இருந்த கல்மதபாக்ஷா பன்னிரண்டு வருட கால ராக்ஷச வாழ்வுக்குப் பிறகு சாப விமோசனம் பெற்று மனித உருவை அடைந்தான். அரண்மனைக்கு திரும்பியவனை எதிர்கொண்டு அழைத்து கட்டிப் பிடிக்க ஓடி வந்த மனைவியை தடுத்து நிறுத்தினான் கல்மதபாக்ஷா. தன்னுடைய மனைவியிடம் தனக்கு கிடைத்த மற்றொரு சாபத்தைப் பற்றிக் கூறி இனி அவர்கள் இரவு நேரத்தில் தனித்தனி இடங்களில் படுக்க வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துரைத்தான். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவள் அப்படியே மயங்கி விழுந்தாள். பன்னிரண்டு வருட சாப காலம் முடிந்த பின் நமக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்ற ஆசையில் மண் விழுந்து விட்டதே என்ற வருத்தமே அதன் காரணம். ஆனால் அவளை எழுப்பி ஆறுதல் வார்த்தைகளைக் கூறி தேற்றினான் மன்னன். ஆகவே அந்த சாபம் விலக வேண்டுமானால் அதற்கான ஒரே வழி தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு, புனித நதிகளில் நீராடி, நதிக்கரைகளில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று தெய்வங்களை வேண்டிக் கொள்வதுதான் என்று மன்னனின் ஆலோசகர்கள் கூறினார்கள். பண்டிதர்களுடைய ஆலோசனைக்கு ஏற்ப கணவனும் மனைவியும் புனித யாத்திரைப் பயணத்தை மேற்கொண்டார்கள். அப்படி பல இடங்களுக்கும் சென்று கொண்டு இருந்தபோது மிதிலை நகரின் வனப்பகுதியில் தங்கி இருந்த மகரிஷி கௌதமரை சந்திக்க நேரிட்டது. அவரை சந்தித்து வணங்கித் துதித்து தம்முடைய அனைத்துக் கதையையும் அவரிடம் கூறி அழுதார்கள். அவரும் அவர்களது நிலையைக் கண்டு வருத்தம் அடைந்து அவர்களுக்கு ஒரு அறிவுரைக் கொடுத்தார். அவர் கூறினார் 'நீங்கள் இருவரும் இங்கிருந்துக் கிளம்பி கோகர்ணம் செல்லுங்கள். அங்கு சென்று அங்குள்ள நதியில் நீராடி வினாயகர் ஸ்தாபித்த சிவபெருமானின் ஆத்மலிங்கத்தை வணங்கித் துதித்தால் பிரும்மஹத்தி தோஷம் முற்றிலும் விலகும். பூலோகத்தில் உள்ள கைலாயம் அது. பிரும்மா, விஷ்ணு முதல் அனைத்து தேவர்களும் தினமும் அங்கு வந்து சிவபெருமானை துதித்தபடி இருக்கிறார்கள். கைலாயத்தில் சிவபெருமானுக்கு சேவகம் செய்யும் அனைவருமே இங்கும் வந்து ஆத்மலிங்கத்தில் உள்ள சிவபெருமானுக்கு சேவகம் செய்து விட்டுப் போகிறார்கள். அங்கு வாசம் செய்யாத மகா முனிவர்களோ, மகரிஷிகளோ, கிம் புருஷர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் யாருமே இல்லை என்பதினால் அதைவிட இந்த பூலோகத்தில் புண்ணிய ஸ்தலம் வேறு எதுவுமே கிடையாது என்றே கூறலாம். அங்கு சென்று பரமேஸ்வரனை வணங்கித் துதித்தால் கேட்டது அனைத்தையும் அவர் தருவார். அந்த லிங்கத்தின் மகிமை எப்படிப்பட்டது என்றால் அது கிருதே யுகத்தில் பளிங்கு போன்ற வெண்மையாகவும், திரதே யுகத்தில் சிவப்பு நிறத்திலும், துவாபகர யுகத்தில் மஞ்சளாகவும், கலி யுகத்தில் கறுப்பு நிறத்திலும் இருந்தவாறு காட்சி தரும். அதனால்தான் கிழக்கு புறத்தில் உள்ள இந்த ஷேத்திரம் பெரும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஷேத்திரத்தில் வந்து பூஜிப்பதினால் கிடைக்கும் மேலான பலன் என்ன தெரியுமா? இங்கு வந்து தத்தம் பாபங்களைக் களைந்து கொண்டு மோட்ஷம் செல்லும் ஆத்மாக்கள் சிவபெருமானின் ருத்திர கணங்களாக மாறி விடுகின்றன என்பதே. இதை விட என்ன பெரும் பேறு வேண்டும்? பண்டிகை தினங்களான சிவராத்திரி, சங்கராந்தி, பிரதோஷம் போன்ற தினங்களில் இங்கு வந்து ஆராதிப்பதின் மூலம் சிவனிடமே ஐக்கியம் ஆகிவிட முடியும் என்ற அளவில் சிவபெருமானின் மகிமை உள்ளது. ஆகவே நீங்கள் இருவரும் அங்கு சென்று சிவபெருமானை வேண்டிக் கொண்டால் உங்களது குறை விலகும்'. என்று கௌதம முனி அந்த மன்னன் கல்மதபாக்ஷா தம்பதியினரிடம் கூறினார். அதைக் கேட்ட கல்மதபாக்ஷா அவரிடம் கேட்டார் 'மேன்மைமிக்க குருவே. உங்கள் அறிவுரையை ஏற்று நீங்கள் கூறியவாறு அங்கு சென்று எமது பாபங்களைக் களைந்து கொள்கிறோம். அதற்கு முன்னால் சின்ன சந்தேகம் உள்ளது. அதையும் நீங்கள் எமக்கு விளக்கினால் ஆறுதலாக இருக்கும். இந்த ஷேத்திரத்தில் பாவங்களைக் களைந்து கொண்டவர்கள் கதை வேறு ஏதும் உண்டா? அப்படி இருந்தால் அதையும் எமக்குக் கூறுவீர்களா என்று கேட்டார். அதைக் கேட்ட கௌதம முனிவர் கூறினார் 'அப்பனே, கதை என்ன? நானே நேரில் பார்த்த ஒரு சம்பவம் உள்ளது. அதைக் கூறுகிறேன் கேள்' என்று கூறிய பின் அது குறித்துக் கூறலானார். 'ஒருமுறை ஒரு சிவராத்திரி தினத்தன்று இங்குள்ள ஆத்ம லிங்கத்தை வழிபட நான் வந்திருந்தேன். அப்போது நான் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தபோது சற்று தள்ளி ஒரு மரத்தடியில் வயதான ஒரு கிழவியும் படுத்துக் கிடந்தாள். அவள் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவள். அவள் கழுத்தும் வயிறும் விங்கி இருந்தது. பசி, பசி என்று அவள் கதறிக்கொண்டே இருந்தாலும் அவள் அருகில் யாரும் சென்று அவளுக்கு உதவவில்லை. அவள் கையில் சில வில்வ இலைகள் இருந்தன. முனகிக் கொண்டே படுத்துக் கிடந்தவள் சற்று நேரத்தில் மரணம் அடைந்து விட்டாள். அப்போதுதான் அந்த அற்புதத்தைக் கண்டேன். மேலுலகில் இருந்து சிவகணங்கள் வந்து அவளுடைய ஆத்மாவை தமது தேரில் ஏற்றிக் கொண்டு சென்றன. ஆனால் அங்கு யம தூதர்களைக் காணவில்லை. எனக்கு ஒரே ஆச்சர்யமாகி விட்டதினால் ஓடிச் சென்று அந்த சிவகணங்களை 'தாழ்ந்த ஜாதியை சேர்ந்த இந்த பெண்மணியா நீங்கள் சிவலோகத்துக்கு அழைத்துச் செல்கிறீர்கள்?" என்று கேட்டபோது அவர்கள் கூறினார்கள் 'முனிவரே இந்த தலத்தின் மகிமையை அறியாமல் கேட்கிறீர்கள். இவள் மரணம் அடையும் தருவாயில் 'சிவசிவா' என முனகிக் கொண்டே இருந்ததினால் அந்த தாரக மந்திரம் இவளுக்கு சிவலோகப் பிராப்தியை தந்தது. அது மட்டும் அல்ல அவள் கையில் வைத்திருந்த வில்வ இலைகள் பறந்து போய் அந்த ஆத்ம லிங்கத்தின் மீது விழுந்ததினால் அதை அவரும் அர்ச்சனை வில்வமாக ஏற்றுக் கொண்டார். அத்தனைக் கருணை மிக்கவர் இங்குள்ள சிவபெருமான். யாராக இருந்தால் என்ன? இங்கு குடி கொண்டுள்ள சிவபெருமானுக்கு அனைத்து உயிர்களும் ஒன்றேதான். ஆகவேதான் இந்த ஜென்ம புண்ணியத்தினால் அவளுக்கு சிவலோகப் பிராப்தி கிடைத்தது. அது மட்டும் அல்ல இந்தப் பெண்மணி பூர்வ ஜென்மத்தில் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்து இருந்து மணமானவள். ஆனால் எதோ ஒரு காரணத்தினால் அவள் விதவையாகி விட்டாள். அவளுடைய பெற்றோர் மரணம் அடைந்தப் பின் வேறு வழி இன்றி விலைமாதாகி அவளிடம் வந்த வாடிக்கையாளர்களின் தூண்டுதலால் மாமிசங்களையும் உண்ணும் அளவுக்கு சென்று விட்டாள். அப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நாள் அவள் தனியே நின்று கொண்டு இருந்த ஒரு பசுவின் சின்ன கன்றை கொன்று அதன் மாமிசத்தையும் உண்டதினால் அந்த கன்றின் தாயின் சாபத்தினால் இந்த பிறவியில் தாழ்ந்த ஜாதியில் பிறந்து யாருமற்ற அனாதையாக இறக்க வேண்டி இருந்தது. ஆனால் அந்த பிறவியிலும் அவள் விலைமாதாக இருந்தபோதும், பசுவின் மாமிசத்தை உண்டபோதும் உணவை உண்பதற்கு முன்பும், பின்னரும் 'சிவசிவா' என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தாள். அதனால்தான் அவளுக்கு தன்னை அறியாமலேயே கிடைத்த பூர்வ ஜென்ம புண்ணியமும் சேர்ந்தே இருந்தது. ஆகவே இவளை சிவலோகத்துக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறினார்கள். இந்தக் கதையை கௌதம முனிவர் கூறியதும் அவர் கால்களில் விழுந்து வணங்கிய கல்மதபாக்ஷா தம்பதியினரும் கோகர்ணத்துக்கு வந்து பாபங்களைக் களைந்து கொண்டு ஆனந்த வாழ்வை மீண்டும் பெற்று. குழந்தைகள் பல பெற்று பல காலம் ஆனந்தமாக வாழ்ந்தார்கள். இந்த தலத்தின் மேன்மை இப்படியாக இருந்ததினால்தான் ஸ்ரீ பாத வல்லபாவும் இங்கு வந்து மூன்று வருடங்கள் இங்கு இருந்தபடி தவமிருந்து விட்டுப் போனார்" என்று சித்த முனிவர் நமத்ஹராவுக்குக் கூறினார். அந்தக் கதையை ஆனந்தமாக கேட்டவண்ணம் அமர்ந்திருந்தார் நமத்ஹரகா. தொடரும். 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள் #ஞானிகள் பேசுகிறோம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
ரவிசங்கர் ராஜா, ஆரணி
700 views
7 days ago
AI indicator
*குரு சரித்திரம்-8* புதிய தொடர் பதிவு அத்தியாயம் - 6 சித்த முனிவர் கூறிய ஸ்ரீ பாத வல்லபாவின் கதையை ஆழ்ந்து கேட்ட நமத்ஹரகா அவரிடம் கேட்டார் "என் குருதேவா, மகாத்மா, சித்த புருஷரே, இந்தக் கதையில் நீங்கள் கூறினீர்களே ஸ்வாமி ஸ்ரீ பாத வல்லபா தாத்தாத்திரேயரின் அவதாரம் என்று, அப்படி என்றால் தெய்வமான அவர் ஏன் பல புனித இடங்களுக்கும் சென்று அங்குள்ள ஆலயங்களில் தரிசனம் செய்தார். அதற்கும் மேலாக அவர் எதற்காக கோகர்ணத்துக்கு முக்கியத்துவம் தந்து அங்கு சென்றார் என்பதை எனக்கு கூறுவீர்களா?" எனப் பணிவுடன் கேட்க சித்த முனிவர் அவரது சந்தேகத்துக்கான விளக்கத்தை தந்து அந்தக் கதையையும் கூறினார். "நமத்ஹரகா, நீ கேட்டது நல்ல சந்தேகமே. இந்த சந்தேகம் எவருக்கும் வரக்கூடியதே. ஸ்ரீ பாத வல்லபா தத்தாத்திரேயரின் அவதாரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தெய்வங்கள் மனித உருவை எடுத்து வரும்போது மனித குலத்துக்கு எடுத்துக் காட்டும் வகையில் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில செயல்பாடுகளை தாமே செய்து காட்ட வேண்டி உள்ளது. எதையுமே வாயால் சொல்வதை விட செயலால் செய்து காட்டுவதே சிறந்த முறை ஆகும். ஆகவே அந்த செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்பதை மனித குலத்துக்கு எடுத்துக் காட்டவே ஸ்ரீபாத வல்லபா தனது சீடர்களுடன் தானே ஆலயங்களுக்கு சென்று அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் சில காரியங்களை செய்து காட்டினார். அவற்றை அவரது சீடர்கள் அனைத்து இடங்களிலும் பரப்பி வந்தார்கள். அப்படியே பின்னர் வந்த மகாபுருஷர்களும் செய்தார்கள். அவர் ஏன் கோகர்ணத்துக்கு சென்றார் என்றால் அந்த புனித தலம் திருமூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானின் இருப்பிடம். அங்குதான் சிவபெருமான் தானே ஆத்மலிங்க உருவில் அமர்ந்து உள்ளார். இதனால்தான் அந்த ஷேத்திரம் மஹா ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. அது மகா புனித பூமியாகும். இதுதான் பகீரதன் தவமிருந்து அழைத்து வந்த கங்கை நதி முதலில் பூமியில் பாய்ந்த இடம். அதில் பல தெய்வங்களும், சித்த புருஷர்களும், மகாத்மாக்களும் தீர்த்தமாடி உள்ளார்கள். அங்குள்ள சிவலிங்கம் சிவபெருமானின் மைந்தனான வினாயகப் பெருமானால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் கதையை கூறுகிறேன். அதைக் கேட்டால் அங்கு ஸ்ரீ பாத வல்லபா அங்கு ஏன் முதலில் சென்றார் என்பதின் காரணம் புரியும்" என்று கூறிய சித்த புருஷர் அந்தக் கதையைக் கூறலானார். "இலங்கையை ஆண்டு வந்த ராவணனின் தாயார் கைகாசி என்பவள். அவள் பெரும் சிவபக்தை. சிவ தீட்ஷையை பெற்று இருந்த அந்தப் பெண்மணி தினமும் ஒரு புதிய சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு போய் நதிக்கரையில் அதை வைத்துவிட்டு அங்கேயே நதியில் குளித்தப் பின் சிவலிங்கத்தை பூஜித்தப் பின் அதன் எதிரில் அமர்ந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி தினமும் ஒரு இலட்சத்து எட்டு முறை முறை நமச்சிவாயா எனும் மந்திரத்தை ஓதி சிவபெருமானை பூஜித்தப் பின்னரே உணவு அருந்துவாள். தினமும் ஒரு புதிய சிவலிங்கத்தை எடுத்து வந்து பூஜை செய்பவளுக்கு ஒருநாள் அவளுக்கு புதிய சிவலிங்கம் கிடைக்கவில்லை. ஆகவே பூஜைக்கு நேரமாகிவிட்டது என்பதினால் நதிக்கரைக்கு சென்று பூமி மண்ணைக் கொண்டு ஒரு சிவலிங்கத்தை செய்து அதற்கு பூஜை செய்துவிட்டாள். அன்று எதேச்சையாக அவள் மண்ணினால் சிவலிங்கம் செய்து பூஜித்ததை ராவணன் பார்த்துவிட்டான். உடனே தன் தாயிடம் சென்று 'அம்மா, நீங்கள் ஏன் தினமும் புதிய சிவலிங்கத்தை தேடி அலைய வேண்டும். அந்த சிவபெருமான் குடி உள்ள கைலாய மலையையே இங்கு கொண்டு வந்து வைக்கிறேன். நீ நேரடியாகவே அவரை பூஜிக்கலாம்' என்று கூறிவிட்டு கைலாய மலையை பெயர்த்து எடுத்து வரச் சென்றான். (அந்த கட்டத்தில்தான் ராவணனது பிடியில் அனைத்து தேவர்களும், காலங்களும், திசைகளும் இருக்க தேவேந்திரன் முதல் வருணன், வாயு, அக்னி மற்றும் யமன் போன்றவர்களும் ஒவ்வொரு விதங்களில் அவனுக்கு சேவகம் செய்யும் நிலை இருந்தது. ராவணனின் சகோதரன் குபேரனே அவருக்கு அடிமையாக இருந்த நேரம் அது. அத்தனை சக்தி வாய்ந்தவனாக ராவணன் இருந்தான். அதைக் குறித்து அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறை இட்டு தம்மை ராவணனின் கொடுமைகளில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டி வந்தார்கள். தாம் தக்க நேரத்தில் அவர்களுக்கு உதவுவதாக சிவபெருமான் கூறி இருந்தார். அந்த நேரத்தில் நடந்த சம்பவம்தான் இந்தக் கதை) கைலாய மலை அடிவாரத்துக்கு சென்று அந்த மலையை தனது தலைகளினால் முட்டி, மோதி அதை ஆட்டி, ஆட்டி பூமியில் இருந்து அடியோடு பெயர்த்து எடுக்க முயன்றான். மலை பயங்கரமாக ஆடத் துவங்க தேவர்களும், கைலாயவாசிகளும் பயந்து போய் சிவபெருமானிடம் சென்று அதைக் குறித்துக் கூறினார்கள். அனைத்தையும் கைலாயத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்த சிவபெருமான் அவன் மலையை பெயர்த்து தோளிலே வைக்க இருந்த சமயத்தில் தனது காலினால் மலையை அவன் மீது அழுத்த அவன் மலை அடியில் சிக்கிக் கொண்டு வலி தாங்காமல் கதறினான். என்ன இருந்தாலும் ராவணனும் சிவபெருமானின் பரம பக்தன் என்பதினால் அவன் கதறலைக் கேட்டு ஒரு ஷணம் அவன் தலையையும் இரு கைகளையும் மட்டுமே வெளியில் எடுக்க வைத்து விட்டு மீண்டும் மலையை அவன் மீதே வைத்து அமுக்கிக் கொண்டார். ராவணன் சற்றும் தாமதிக்காமல் தனது கையினால் ஒரு தலையை வெட்டி எடுத்து, இன்னொரு கையையும் வெட்டி எடுத்துக் கொண்டு அவற்றைக் கொண்டு தனது சக்தியினால் ஒரு வீணையை உருவாக்கினான். அவனுக்குத் தெரியும் சிவபெருமான் இசைப் பிரியர் என்று. உடலின் பல பாகங்களில் இருந்து நரம்புகளை பிடுங்கி எடுத்து அவற்றை வீணையின் தந்திக் கம்பிகளாக்கி அதை மீட்டி சிவபெருமானைப் போற்றி பல்லவி, அனுபல்லவி என ஏழு ஸ்வரங்களில் சாமவேத கானத்தில் சிவஸ்துதியை பாடத் துவங்கினான். அவன் பாடிய இசையில் மனம் லயித்துப் போன சிவபெருமானும் அவனை மலை அடியில் இருந்து வெளியில் எடுத்து அவன் அந்த மலையை பெயர்க்க முயன்றதின் காரணத்தைக் கேட்டார். சற்றும் தயங்காமல் அவரிடம் ராவணன் கூறினான் 'சிவபெருமானே, என்னுடைய தாயார் உமது பக்தை ஆவாள். அவள் தினமும் ஒரு சிவலிங்கத்தை எடுத்து வந்து அதையே நீங்களாக பாவித்து உமது நாமத்தை ஒருலட்ஷத்து எட்டு முறை உச்சாடனம் செய்த பின்னரே உணவு அருந்துவாள். அவளுக்கு இன்று எந்த சிவலிங்கமும் கிடைக்கவில்லை என்பதினால் மண்ணினால் ஆன சிவலிங்கத்தை நீங்களாக பாவித்து பூஜை செய்தாள். அது என் மனதை வேதனைப்படுத்தியது. என் காலடியில் நவ நதிகளும் ஓடுகின்றன. தேவேந்திரன் முதல் வாயு, அக்னி, யமன், வருணன், என அனைவரும் எனக்கு சேவகம் செய்கிறார்கள். காமதேனு என் இல்லத்தில் இருக்க கல்பவிருஷமோ என் விட்டு தோட்டத்தில் வளர்கிறது. இவை அனைத்துமே உங்களுக்குத் தெரியும். அவை அனைத்துமே கிடைக்க நீங்கள் கொடுத்த வரமே காரணம். எனக்கு நிகரானவன் இனி இல்லை எனும் அளவுக்கு நீங்கள் எனக்கு சக்தியை தந்துளீர்கள். இப்படியாக அனைத்து சக்திகளும் பெற்று உள்ள நான் நீங்கள் குடி கொண்டுள்ள இந்த மண்ணினால் ஆன மலையையே இலங்காபுரியில் கொண்டு வந்து வைத்து விட்டால் அவள் தினமும் உங்களை நேரடியாக பூஜிக்கலாம் அல்லவா என்று எண்ணியே இங்கு வந்து இந்த மலையை எடுத்துப் போக வந்தேன்' என்றான். இசை மழையினால் ஈர்க்கப்பட்ட சிவனார் அவன் முன் தோன்றி, 'உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்' என்று கூறினார். இராவணன் கேட்டான் சிவபெருமானே நான் கூறியபடி எனக்கு என்னுடைய தாயாரின் மகிழ்ச்சியே முக்கியம். ஆகவே அவள் கஷ்டப்படாமல் தினமும் உம்மை துதித்து விட்டு அதன் பின்னர் உணவருந்தும் வகையில் இருக்க நீர் குடி கொண்டுள்ள இந்த மலையை உம்மோடு சேர்த்து என் நாட்டிற்கு எடுத்துச் செல்ல என்னை அனுமதிக்க வேண்டும். அதோடு எனக்கும் உங்களைப் போலவே அளவற்ற சக்தி வேண்டும். மகேஷ்வரா இந்த வரத்தை மட்டும் தந்தால் போதும்' என்று கேட்டான். அதைக் கேட்ட சிவபெருமான் சற்றும் தாமதிக்காமல் கூறினார் 'ராவணா, உன்னுடைய தாயாருக்காக நீ என்னிடம் வைக்கும் உன்னுடைய வேண்டுகோள் நியாயமாகவே உள்ளது. ஆகவே நீ அதிக சிரமம்படத் தேவை இல்லை. உன்னுடைய தாயாருக்கு வேண்டியது என்னை பூஜிப்பதே. ஆகவே உனக்கு நான் உனக்கு நானே குடி இருக்கும் என்னுடைய ஆத்ம லிங்கத்தைத் தருகின்றேன். அதை ஆராதிப்பதின் மூலம் உன் தாயாருக்கு என்னை நேரடியாக ஆராதித்ததின் பலன் கிடைத்து விடும். ஆகவே நீ மலையை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் குடி இருக்கும் ஆத்ம லிங்கத்தை மட்டும் ஆராதித்தால் அது மட்டுமே போதும். மேலும் இதை நீயும் மூன்று வருடங்கள் தொடர்ந்து மூன்று வேளை பூஜை செய்து நான் இப்போது உனக்கு உபதேசிக்கும் மந்திரத்தை ஒரு லட்ஷத்து எட்டு முறை உச்சாடனம் செய்து வந்தால் நீயும் என்னைப் போலவே சக்தி கொண்டவனாக மாறி விடுவாய் (அந்த மந்திரத்தை அவனுக்கு உபதேசித்தார்). ஆனால் ஒரே ஒரு சின்ன நிபந்தனை. இன்று மாலைக்குள் இதை நீ உன் நாட்டுக்கு கொண்டு சென்று எங்கு வைக்க வேண்டுமோ அங்கு பூமியில் வைக்க வேண்டும். அதை மீறி வேறு எங்காவது அதை பூமியில் வைத்து விட்டால் அதை அதன் பின் அங்கிருந்து எடுக்க முடியாது. அதை நீ அங்கேயே ஆராதித்தாலும் உனக்கு அதனால் எந்த பலனும் கிடைக்காது. ஆனால் அதே சமயம் அந்த இடத்தில் அதை வணங்கி பூஜிக்கும் மற்றவர்களுக்கு அவர்கள் விரும்பியவை கிடைக்கும். உனக்கு நான் கொடுத்த வரம் வீணாகிவிடும். அது மட்டும் அல்ல அதோடு நீ உன் பிடியில் வைத்துள்ள அனைத்து தேவர்களும் உனக்கு சேவகம் செய்யும் அனைத்து தேவலோக அதிபதிகளும் விடுதலை ஆகி விடுவார்கள். அதன் பின் அவர்களை உன்னால் ஒன்றுமே செய்ய முடியாமல் அவர்கள் உன்னை விட சக்திசாலிகளாகி விடுவார்கள், பத்திரம்' என்று கூறிவிட்டு அவனிடம் தனது ஆத்ம லிங்கத்தைக் கொடுத்து அனுப்பினார். நடந்த அனைத்து விஷயங்களும் நாரதருக்கு தெரிய வந்தது. அவர் உடனடியாக விஷ்ணு மற்றும் பிரும்மாவிடம் ஓடிச் சென்று அதைக் குறித்துக் கவலையுடன் விவாதித்தார். சிவபெருமான் என்ன காரியம் செய்து விட்டார். ஏற்கனவே ராவணனை அடக்க முடியாத அளவு அவன் அக்கிரமங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஆத்மலிங்கத்தை பூஜித்து அவன் சிவபெருமானின் சக்தியையும் பெற்று விட்டால் அவன் சிவபெருமானையே அழித்து விடுவானே எனக் கவலைக் கொண்டு சிவபெருமானிடம் ஓடிச் சென்று தமது கவலையையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்கள். சிவபெருமானும் தான் செய்து விட்ட தவறை உணர்ந்து விட்டார். ஆனால் அதையும் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகவே தாம் செய்ததாகவும், அதை நிவர்த்திக்க தனது மகன் வினாயகர் மூலம் மட்டுமே முடியும் என்றும் ஒரு சின்ன குறிப்புத் தந்தார். இப்போது என்ன செய்யலாம் என அனைவரும் யோசித்தப் பின் ஒரு நாடகத்தை நடத்தி ராவணனின் கையில் உள்ள லிங்கத்தை கீழே வைக்க வைத்து விட்டால் அவன் பெற்ற வரம் அழிந்து விடும் என்பதை உணர்ந்தார்கள். அடுத்தடுத்து யோசனைகளை செய்தபின், ராவணன் அவன் நாட்டு செல்லும் முன்னரே அவனை வழியிலே தடுத்து நிறுத்தி மாலை வரை அவனது நேரத்தை வீணடிக்க வேண்டும். அதற்குள் எப்படியாவது ராவணனை ஏமாற்றி லிங்கத்தை பூமியிலே வைக்க வைத்து விடலாம் என திட்டம் தீட்டினார்கள். ராவணன் தன் கையில் ஆத்மலிங்கத்தை எடுத்துக் கொண்டு வேக வேகமாக சென்று கொண்டு இருக்கையில் அந்த பாதையில் நின்றபடி வழியை மறைத்தார் நாரதர். ராவணனுடன் தேவை இல்லாமல் எதை எதையோ பேசி அவனை மேற்கொண்டு செல்ல முடியாமல் பாதையை மறைத்தவண்ணம் இருக்க கோபமுற்ற ராவணன் அவரை தள்ளிக் கொண்டு செல்ல முடியாமல் தவித்தான். மாலை நேரமும் வேகவேகமாக வந்து கொண்டு இருந்தது. எதை எதையோ பேசிப் பேசி ராவணனின் எண்ணத்தை திசை திருப்பி அவனை ஏமாற்றி அவன் வாயினாலேயே அந்த ஆத்மலிங்க மகிமையைக் கூறவைத்த நாரதர் நகைத்து விட்டு ராவணனிடம் கூறினார் 'ராவணா, உன்னை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. உன்னை சிவபெருமான் நன்கு ஏமாற்றி விட்டார். அவரிடம் பத்து ஆத்மலிங்கங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றில் மட்டுமே அவர் குடி இருக்கிறார். இப்போதைக்கு உன்னை திருப்தி செய்து அனுப்பி விட வேண்டும் என்பதற்காக உண்மையான ஆத்மலிங்கத்தை கொடுக்காமல் வேறு ஒன்றைக் கொடுத்து அனுப்பி உள்ளார். யாராவது தன்னை ஒரு கைதி போல மற்றவர்களிடம் கொடுப்பார்களா? மூன்று வருடங்கள் நீ அதை பூஜித்துக் கொண்டு இருப்பதற்குள் என்னென்னவோ நடந்துவிடும். நீ நன்கு ஏமாற்றப்பட்டு விட்டாய் என்பதையும் உனக்கும் அவர் சக்தி கிடைக்காது என்பதையும் உணர்வாய்' என்று கூறிவிட்டு சென்று விட்டார். அதற்குக் காரணம் சற்று தொலைவில் வினாயகர் ஒரு அந்தணர் உருவில் வேகமாக வந்து நாரதர் பின்னால் நின்று விட்டதை அவர் கவனித்ததுதான். ராவணன் ஒரு கணம் சஞ்சலத்தில் ஆழ்ந்தான். இதென்ன நாரதர் என்னைக் குழப்பி விட்டாரே !! நாரதர் சென்று விட்டதும் ஏற்கனவே முடிவாகி இருந்தபடி திடீர் என்று அந்த இடத்தைக் கடும் குளிர் பற்றி கொண்டது. வருணன் ஏற்படுத்திய தாங்க முடியாத குளிர், வயிற்றில் நீர் நிறைந்து போக இயற்கை அவஸ்தைப்பட்டு தவித்தபடி நடந்தான். அவனால் மேலும் ஒரு எடுத்து வைக்க முடியவில்லை. தவித்தான். மடியில் சிவலிங்கத் வைத்துக் கொண்டா இயற்கை உபாதைக் கழிக்க முடியும்? அப்போதுத அந்த வழியில் அந்தணர் உருவில் வந்து கொண்டு இருந்த வினாயகரை அவர் யார் என்று அறிந்து கொள்ளாமல் சந்தித்தான். அவரிடம் கேட்டான் 'அந்தணரே, நீங்கள் எங்கு சென்று கொண்டு இருக்கிறீர்கள்? அந்தணர் கூறினார் 'வழியை விடப்பா. நான் மாலைக்குள் அடுத்த ஊருக்கு செல்ல வேண்டும். அங்கு ஆரம்பிக்க உள்ள யாகத்தில் கலந்து கொள்ள வேண்டும். அவரை தடுத்து நிறுத்திய ராவணன் கூறினான் 'அந்தணரே தயவுசெய்து எனக்கு சின்ன உதவி செய்யுங்கள். இயற்கை உபாதையை என்னால் பொறுக்க முடியவில்லை. நான் அதோ இருபது அடி தள்ளித் தெரிகிறதே அந்த மறைவில் ஓடைக்கு அருகில் சென்று இயற்கை உபாதைக் கழித்து விட்டு வருகிறேன். தயவு செய்து இந்த லிங்கத்தை அதுவரை பூமியில் வைக்காமல் கையில் வைத்து இருந்தால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன். இதை கண்ட கண்ட இடங்களில் உள்ள தரையில் வைக்கக் கூடாது' என்று கூறினான். அதன் பின் அந்த லிங்கத்தின் கதையையும் சுருக்கமாக கூறினான். அவரும் 'சரி ஆனால் ஒரு நிபந்தனை. நான் ஒரு நாழிகைப் பொறுத்து பத்து எண்ணுவேன். அதற்குள் நீங்கள் வராவிடில் இதை கீழே வைத்து விடுவேன் என்றார். ஒரு நாழிகை மிகப் பெரிய அளவிலான நேரம் என்பதால் அதற்குள் தாராளமாக தன் வேலையை முடித்துக் கொண்டு கைகால்களை அலம்பிக் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணியவாறு ராவணன் அந்த லிங்கத்தை வினாயகரிடம் தந்து விட்டு சென்றான். அதுதான் அவன் செய்த பெரும் தவறு. ராவணன் காட்டிய ஓடையின் தூரம் இருபது அடி கூட இருக்காது போல இருந்தது. அங்கு சென்று விட்டு இயற்கை உபாதைக் கழித்துவிட்டு அரை நாழிகையில் வந்து விட முடியும் என்பதினால்தான் தைரியமாக ராவணன் அப்படிக் கூறினான். அந்த மறைவிடத்துக்கு சென்று இயற்கை உபாதைக் கழித்து விட்டு திரும்பினான். ஆனால் அந்த இடத்தில் இருந்து சிவலிங்கத்தை வினாயகரிடம் அவன் கொடுத்திருந்த இடத்துக்கு செல்ல இரண்டு நாழிகை ஆகும். அவ்வளவு தூரத்தில் இருந்தது அந்த இடம். ராவணன் திடுக்கிட்டான். இதென்ன நான் இங்கு வர கால் நாழிகக்கூட ஆகவில்லை. ஆனால் இப்போது அங்கு செல்ல இரண்டு நாழிகைக்கு மேலாகிவிடும் போலிருக்கிறதே என குழம்பினான். அதெப்படி அருகில் தெரிந்த இடம் இத்தனை தூரமாகிவிட்டது என திடுக்கிட்டவன் அங்கிருந்து ஓடி வரலானான், 'அந்தணரே தயவு செய்து அதை கீழே வைத்து விடாதீர்கள் எனக் கூவியவாறு அவன் வருவதற்குள் ஒரு நாழிகைக் கடந்ததும் பத்து எண்ணிய அந்தணர் அதை கீழே வைத்துவிட்டு மறைந்துவிட்டார். அங்கு ஓடோடி வந்தும் வந்து சேர மூன்று நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. ராவணன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தான். (பூமியிலே பதிந்திருந்த சிவலிங்கத்தை எடுக்க பலவாறு பல பக்கங்களிலும் இருந்து முயன்றதில் அது ஒரு பசுவின் காது போல உருமாறியதே தவிர, பூமியில் இருந்து அதை வெளியில் வெளிவரவில்லை. பசுவின் காது போல லிங்கம் மாறி விட்டதினால் அந்த இடம் கோ கர்ணம் அதாவது பசுவின் காது என ஆயிற்று.) ஆனால் என்ன செய்வது? அவன் சக்தி எல்லாம் வீணாகிப் போயிற்று. தேவர்களும், தேவலோக அதிபதிகளும் அவனிடம் இருந்து விடுதலை பெற்றார்கள். ராவணன் துயரத்துடன் நாடு திரும்பினான். (இத்துடன் அத்தியாயம் 6 முடிந்தது.) தொடரும். 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள் #ஞானிகள் பேசுகிறோம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
ரவிசங்கர் ராஜா, ஆரணி
673 views
7 days ago
AI indicator
*குரு சரித்திரம்-8* புதிய தொடர் பதிவு அத்தியாயம் - 5(ii) அதைக் கேட்ட அவரது பெற்றோர் மனம் வருந்தினார்கள். சுமதிக்கு தத்தாத்திரேயர் காட்சி தந்தபோது அவளுடைய மகன் எதைக் கூறினாலும் அதை தடுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தது மனதில் அழியாமல் இருந்தாலும் தனக்கு மகனாகப் பிறந்து விட்ட ஒருவர் துறவற நிலைக்கு செல்வதை மனத்தால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள். அவர் இப்படிக் கூறியதும், அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு "மகனே, எங்கள் வாழ்க்கையில் நல்லதொரு மகனாக வந்து விளக்கேற்றி வைப்பாய். எங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தருவாய் என நினைத்தோமே. குருடனாகவும், முடமாகவும் உள்ள உன் சகோதரர்களை எங்கள் காலத்துக்குப் பின்னர் யார் பாதுகாத்து வருவார்கள் என்று நாங்கள் வருந்திக் கொண்டு இருந்த நேரத்திலே, கவலைப்படாதே, நான் இருக்கிறேன் என்பது போல நீ வந்து என் வயிற்றில் பிறந்து எங்களுக்கு மன அமைதியை தந்தாய். ஆனால் அந்த மகிழ்ச்சி உடைந்து போய்விடும் போலல்லவா இருக்கிறது நீ துறவி என்ற நிலையில் செல்ல நினைப்பதும். எங்களுக்கும் வயது ஏறிக் கொண்டே உள்ள நிலையில் உன் சகோதரர்களை பாதுகாக்க யார் இருப்பார்கள். நாமோ ஏழைக் குடும்பத்தில் உள்ளோம். நமக்கு உதவவும் யாரும் கிடையாது. உன் முடிவை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் மன பாரத்தைக் கொட்டுவது போல உன்னிடம் என் மனதில் உள்ள கவலையை கூறிவிட்டேன். இனி நடப்பது நடக்கட்டும். இதுதான் விதி என்றால் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். வேறென்ன செய்ய இயலும்" என்று கண்களில் இருந்து அருவிபோல வழிந்தோடிய கண்ணீருடன் அவரை இறுகக் கட்டிக் கொண்டவள் அப்படியே மயங்கியும் விழுந்து விட்டாள். மயங்கி விழுந்தவளை ஆறுதலாக தூக்கி எழுப்பினார் ஸ்ரீபாதா. அவளிடம் கூறினார் "அம்மா, என்னை தயவு செய்து தவறாக நினைக்காதே. நான் உனக்கு மகனாகப் பிறந்ததே உனக்கு நல்லதொரு மகன் வேண்டும் என்று நீ வேண்டியதினால்தான். இந்த ஜென்மத்தில் நான் மனித குல மேம்பாட்டுக்கு என்னை அர்பணித்துக் கொண்டுதான் உன் மூலம் வெளி வந்தேன். அதற்காக நான் உன்னை கை விட்டு விடுவேன் என்று தவறாக நினைக்காதே. மனித குலத்தில் நீங்களும் ஒன்றுதானே. நான் ஏற்கனவே யோக லஷ்மியை மணந்து கொண்டு விட்டவன் (அதாவது தான் தத்தாத்திரேயரின் அவதாரம் என்பதை மறைமுகமாக எடுத்துக் காட்டினார். தத்தாத்திரேயரின் மனைவியே லஷ்மி தேவியின் இன்னொரு அவதாரமான யோக லஷ்மி ஆவார் ). ஆகவே அஞ்சாமல் நான் எதற்கும் விரும்பும் வாழ்கையை கைகொள்ள எனக்கு நீங்கள் அனுமதி தர வேண்டும். என் சகோதரர்களை கைவிட்டு சென்று விடுவேன் என்று எப்படி நீங்கள் நினைத்தீர்கள்? என்னை நம்பியவர்களை நான் எப்படிக் கைவிடுவேன் என்று நினைக்கின்றீர்கள்? கவலை படவேண்டாம். அவர்களை பாதுகாப்பது என் பொறுப்பு". இப்படியாகக் கூறிய பின்னர் தனது இரண்டு சகோதரர்களையும் அருகில் வருமாறு சைகை காட்டினார். என்ன அதிசயம் நடக்கிறது என்பது புரியாதது போல குருடராக இருந்தவரும் சைகையை புரிந்து கொண்டு அவர் அருகில் செல்ல முடமானவரும் அவர் அருகில் சாதாரணமாக நடந்து சென்றதும் அவர்கள் இருவரின் தலை மீதும் தனது கையை வைத்து ஸ்ரீ பாத வல்லபா ஆசிர்வதிக்க, இரண்டு சகோதரர்களும் திடகார்த்தமான உடலுடன் உள்ள ஆண் மகன்களாக உருமாறினார்கள். இரு சகோதரர்களும் தமது சகோதரர் தங்களை விட வயதில் இளையவர் என்றாலும் கூட ஸ்ரீ பாத வல்லபாவின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். அதைக் கண்ட பெற்றோர்கள் ஆனந்தம் அடைந்து அழுதார்கள். அதன் பின் சில நாட்களிலேயே அவர்களுக்கு எங்கெங்கிருந்தோ செல்வம் வந்து சேர வாழ்கை கஷ்டம் இல்லாமல் ஓடத் துவங்கியது. அந்தக் கட்டத்தில் ஸ்ரீ பாதா அவருடைய பெற்றோர்களிடம் "இனி என் சகோதரர்கள் உங்களுக்கு அனைத்து விதத்திலும் துணையாக இருப்பார்கள். நீங்களும் நலமாக இருந்து சொர்க்கம் செல்வீர்கள். இனி என் பிறப்பு எனக்கு இட்டுள்ள கடமைகளை நிறைவேற்ற கிளம்பிச் செல்கிறேன்" என்று கூறிவிட்டு அவர்களிடம் இருந்து விடைப் பெற்றுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி புனித யாத்திரைகளை மேற்கொண்டார். கிளம்பிச் செல்லும் முன் தான் அவதாரப் புருஷர் என்றாலும் கூட தன்னை பெற்றெடுத்ததினால் குருவுக்கு முன்னரான தாய் - தந்தை ஸ்தானத்துக்கு மரியாதை தரும் வகையில் ஸ்தூல உடம்பில் உள்ள புதல்வனாக தன்னைக் காட்டிக் கொண்டு அவர்களை நமஸ்கரித்து விட்டே கிளம்பிச் சென்றார். அங்கிருந்து கிளம்பி வடநாட்டிற்கு சென்றவர் விந்திய மலை, திரிவேணி சங்கம், காசி, கயா, ஹரித்துவார், ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதர்நாத், என பல புனித இடங்களுக்கும் சென்று அங்கிருந்த நதிகளில் நீராடி, ஆலயங்களை தரிசித்த பின் தத்தாத்திரேயர் வசித்து வந்த இடமான ஸாயாத்ரி மலை அடிவாரத்தை அடைந்தார். அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டப் பின் அங்கிருந்துக் கிளம்பி கோகர்ணம் எனும் சென்றார். அது அவருக்கு முக்கியமான விஜயமாக அமைந்தது. வழி நெடுக அவருடைய தெய்வீக அருளை உணர்ந்து கொண்ட பல சாது, சன்யாச முனிவர்கள் அவரிடம் ஆசிகளைப் பெற்றார்கள். அதை அறிந்து கொள்ள முடிந்தவர்கள் அவரது மஹான் எனும் தேஜஸ்சைக் கண்டு அவருக்கு சிஷ்யர்கள் ஆயினர். அவர் வட நாடுகளுக்கு சென்று வந்தது முதல் அவரது சீடர்களினால் ஸ்ரீ பாத வல்லபா (வல்லபா என்றால் வலிமையானவர், திறமையானவர் என்று பொருள்) என்று அழைக்கப்படலானார் (இத்துடன் அத்தியாயம்-5 முடிந்தது). தொடரும். 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள் #ஞானிகள் பேசுகிறோம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
ரவிசங்கர் ராஜா, ஆரணி
636 views
7 days ago
AI indicator
*குரு சரித்திரம்-7* புதிய தொடர் பதிவு அத்தியாயம் - 5(i) கலி துவங்கி விட்ட இந்த வேளையில் நானே அவளது மகனாகப் பிறந்து பூவுலகை காப்பேன் என மனதில் முடிவு செய்த தத்தாத்திரேயர் அவளுடைய கருப்பையில் சென்று அமர்ந்து கொள்ள முடிவு செய்தார். சுமதியோ தன்னை மறந்து உள்ளே ஓடிச் சென்று தன் கணவர் செய்த சிரார்த்த காரியம் முடியும் வரை அமைதியுடன் இருந்த பின் அவரிடம் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள். நல்ல பாண்டித்தியம் பெற்று இருந்த அப்பலராஜுவுக்கு புரிந்தது அப்படி பிட்ஷை எடுத்து வந்திருந்தவர் தத்தாத்திரேயராகவே இருந்திருக்க வேண்டும். அவர்தான் தன் பக்தர்களை சோதிக்க இப்படி எல்லாம் தன்னை அடையாளம் காண முடியாதபடி பல்வேறு வேஷங்களில் வந்து நாடகங்களை நடத்துவார் என்று கேள்விப்பட்டு இருந்தார் (இதனால்தானோ என்னவோ தத்தாத்திரேயரின் அவதாரம் எனக் கருதப்படும் சீரடி சாயிபாபாவும் மாறு வேடங்களில் பக்தர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களை சோதிக்க பிட்ஷை எடுப்பதுண்டு என்று அவருடைய வாழ் வரலாற்றுக் கதைகளில் சில நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன). மேலும் எவர் ஒருவர் அகால வேளைகளில் பிட்ஷை எடுக்க வருவார்களோ அவர்கள் விஷ்ணு பகவானின் அம்சமாக இருப்பார்கள் என்று பண்டிதர்கள் கூறுவார்கள். பித்ரு காரியங்கள் நடைபெறும்போது நல்ல முறையில் பித்ரு காரியங்கள் நடைபெறும் இடங்களில் பித்ருக்களை சாந்தப்படுத்த, விஷ்ணு பகவான் ஏதேனும் ஒரு ரூபத்தில் சென்று அங்கு தரப்படும் பிட்ஷைகளை ஏற்பார் என்று சாஸ்திர நம்பிக்கைகள் உண்டு (இங்கு பிட்ஷை என்பது பிராமண போஜனத்தைக் குறிக்கும்). தத்தாத்திரேயரோ பகவானையும் விஷ்ணு உள்ளடக்கியவர். ஆகவே காட்சி தந்த பின் உடனே மறைந்து விட்ட நிகழ்வும் காட்டுவது என்ன என்றால் திதி தரும் வேளையில் வந்திருந்தது நிச்சயமாக தத்தாத்திரேயராகவே இருந்திருக்க வேண்டும் என்று நம்பினார். அப்படி நடந்த நிகழ்ச்சி மூலம் தான் செய்த பித்ரு காரியம் திருப்திகரமாக நடந்துள்ளது என்றும் அதற்குரிய புண்ணியம் நிச்சயம் தமக்கு நல்ல பலன்களைத் தரும் என்று நம்பினார். அது மட்டும் அல்ல உண்மையிலேயே வந்திருந்தது தத்தாத்திரேயர் என்றால், தமக்கு விரைவில் தத்தாத்திரேய அவதாரமாக இருக்கும் மகன் பிறக்க சாத்தியம் உள்ளது. அப்படி நடந்தால் வந்திருந்தது நிச்சயமாக தத்தாத்திரேயரே என்பதும் தெரிந்துவிடும் என மகிழ்ந்தார்கள். காலம் ஓடியது. சுமதி மீண்டும் கர்பவதி ஆகி ஒரு அழகிய ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். பிறந்த குழந்தையின் கால்களில் மீன் மற்றும் ஆமை மற்றும் சங்கு போன்ற வடிவ ரேகைகள் இருந்தன. அப்படிப்பட்ட ரேகைகள் சாதாரண மானிடர்களுக்கு இருக்காது. தப்பித் தவறி யாருக்காவது சங்கு ரேகை இருக்க முடியும். அதைக் கொண்டவர்கள் பெரும் வித்வான்களாக இருப்பார்கள். ஆனால் கூர்ம அவதாரத்தைக் குறிக்கும் ஆமை மற்றும் மச்சாவதாரத்தைக் குறிக்கும் மீன் போன்ற உருவ ரேகைகள் மானிடர்களுக்கு இருக்காது. அவை உருவெடுக்க இரண்டும் பெரிய மகான்களாக உருவெடுக்க உள்ளவர்களுக்கும், தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே இருக்கும். மேலும் அந்தக் குழந்தையின் ஜாதகத்தை ஆய்வு செய்த பண்டிதர்கள் அந்த குழந்தை நிச்சயமாக தெய்வாம்சம் பொருந்தியது என்றும், பிற்காலத்தில் பெரும் ஞானியாக உருவெடுப்பார என்றும், பல சீடர்களைக் கொண்டு அவர்களுக்கு தர்ம நெறிகளை போதிக்கும் ஆசானாக இருந்து பெருமை மிக்கவராகவும் விளங்குவார் என்று கூறினார்கள். அதைக் கேட்ட பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்படியாக நல்ல அம்சங்களோடு பிறந்த குழந்தைக்கு ஸ்ரீபாதா என்று பெயரிட்டார்கள். ஒரு பிராமண வம்சத்தில் நடைபெறும் அனைத்து சடங்குகளையும் பிசகாமல் செய்தார்கள். முதன் முதலில் குழந்தைக்கு உணவு தரும் வைபவமான அன்னப்பிரசனம் முதல் குலதெய்வக் காணிக்கை, பூணல் வைபவம், பாடசாலையில் புகுதல், வேதங்களைக் கற்றறிதல் என அனைத்தையும் அந்த குழந்தைக்கு செய்ய அதுவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக நன்கே வளரத் துவங்கியது. பாடங்களை கிரஹிப்பதிலும் படிப்பதிலும் அதன் ஆர்வம் மிகப் பெரிய அளவில் இருந்ததையும், எளிதில் அனைத்தையும் கற்றதையும் கண்டு அதற்கு பாடம் பயில்வித்த ஆசான்களே பிரமித்தார்கள். குழந்தை வளர்ந்து சிறுவனாகி இளைஞ்சனாகி திருமண வயதையும் எட்டியது. அதனால் அவருடைய பெற்றோர்கள் அந்த இளைஞனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து பெண் பார்க்கத் துவங்கியபோது அந்த சிறுவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஒருநாள் தனது பெற்றோர்களிடம் அந்த இளைஞர் கூறினார் "தாய், தந்தையே, எனக்கு திருமணம் செய்ய முயலாதீர்கள். நான் சில குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே இந்த பூமியிலே பிறந்து இருக்கிறேன். என்னுடைய இந்த ஜென்மத்தில் நான் அனைத்து பெண் இனத்தையும் எனது தாய் குலமாகவே பாவிப்பேன் என்பது விதி. நான் பலருக்கும் தர்ம நெறியை போதிக்கும் ஆசானாக இருந்து, ஞானமும் தந்து தர்மத்தை நிலை நாட்ட வேண்டும். நானே தபம் செய்து இறுதியில் முக்தி அடைய நினைக்கிறேன். நான் பரப்பிரும்மனாக இருக்கவே பிறந்தவன். ஆகவே என்னை திருமண பந்தத்தில் மாட்டி வைக்க எண்ணாதீர்கள் என்று கூறினார். " தொடரும். 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள் #ஞானிகள் பேசுகிறோம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.5K views
7 days ago
AI indicator
*குரு சரித்திரம்-6* புதிய தொடர் பதிவு அத்தியாயம்-5 துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தினால் விஷ்ணு பகவான் பத்து அவதாரங்களை எடுத்தார். பகீரதன் பெரும் பிரயாசை செய்து கங்கையை பூமிக்கு எடுத்து வந்தார். அந்த செயலை பகீரத பிரயத்தினம் என்பார்கள். இந்த உலகில் தீமைகள் அதிகரித்தபோது அதே போன்ற பகீரதப் பிரயத்தினம் செய்து தீமைகளை தடுத்து நிறுத்தி தர்ம நெறியை நிலைநாட்ட மனித உருவில் அவதரிக்க முடிவு செய்த தத்தாத்திரேயர் தன்னிடம் வேண்டிக் கொண்ட ஒரு பிராமணப் பெண்மணிக்கு அவளுடைய மகனாகவே இந்த பூமியில் பிறந்தார். அந்தக் கதையை இப்போது கூறுகிறேன் கேள்" என்று கூறிய சித்த முனிவர் அந்தக் கதையைக் கூறத் துவங்கினார். " துவாபர யுகமும் முடிந்து கலியும் பிறந்தது. அங்காங்கே தர்மநெறி முறைகள் குறையத் துவங்கின என்றாலும் பரவலாக தர்ம நெறி முறைகளை அனுஷ்டித்துக் கொண்டு இருந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அப்படி வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள்தான் அப்பலராஜு என்ற தெலுங்கு பிராமணத் அனைத்து தம்பதியினர். சாஸ்திர நெறிமுறைகளை விட்டு விலகாமல், வேதங்களை கற்றறிந்து, தர்மநெறி முறையில் வாழ்ந்து வந்தவர்கள் அந்த தம்பதியினர். கணவனும் மனைவியும் நகமும் சதையும் போல அனைத்திலும் ஒற்றுமையுடன் இருந்தவாறு வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்களின் பெரும் வருத்தம் என்ன என்றால் அவர்களுக்கு பிறந்த பத்து மழலை செல்வங்களில் எட்டு இறந்து விட மிஞ்சியது இரண்டேதான். ஆனாலும் அவற்றிலும் ஒன்று குருடாகவும், இன்னொன்று முடமாகவும் பிறந்து இருந்தது. நாம் செய்த புண்ணியப் பலன் இதுதான் என்று தம்மைத் தாமே தேற்றிக் கொண்டு அப்போதும் தர்ம நெறி தவறாமல் வாழ்ந்து வந்தார்கள் அந்த தம்பதியினர். வீட்டிலும் ஒவ்வொருவர் இறந்தவர்களுக்கு வருடாந்திர திதி கொடுப்பது வழக்கம் அல்லவா. அது போலவேதான் அப்பலராஜு வீட்டிலும் சிரார்த்த தினம் வந்தது. அன்று வேண்டும் என்றே தத்தாத்திரேயர் ஒரு பிராமணர் உருவில் சென்று பிராமணர்கள் போஜனம் முடியும் முன்னரே அந்த வீட்டில் யாசகம் கேட்டார். எந்த ஒருவர் வீட்டிலும் சிரார்த்த தினத்தன்று பிராமண போஜனம் முடியும்வரை பிட்ஷை போட மாட்டார்கள். அதுவும் சிரார்த்த காரியங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போதோ கதவைக் கூட திறக்க மாட்டார்கள். யாராவது கால் கைகளை அலம்பிக் கொள்ளாமல் வீட்டுக்குள் வந்துவிட்டால் சிரார்த்த காரியத்துக்கு களங்கம் ஏற்பட்டு சாஸ்திர சம்பிரதாயங்களை மீறியதாகி விடும் என்பதினால் அந்தப் பழக்கம் நடைமுறையில் இருந்தது. சிரார்த்த காரியங்கள் துவங்கி விட்ட நிலையில் வாசலில் வந்து நின்ற பிராமணரை அப்பலராஜுவின் மனைவியான சுமதி பார்த்து விட்டாள். அவளும் நல்ல தர்ம பத்தினி என்பதினால் அவள் மனதில் இனம் புரியாத ஒரு பயம் தோன்றியது. சிரார்த்தம் நடக்கும் வீடுகளில் எந்த ஒரு பிராமணரும் சென்று யாசகம் கேட்பதில்லை. ஆனால் இந்த பிராமணர் ஏன் சிரார்த்தம் நடந்து கொண்டு இருக்கும்போதே வாசலில் வந்து 'பவதி பிட்ஷாம் தேகி' என்று கேட்கிறார். இந்த சம்பவம் ஏதோ ஒரு காரணமாகத்தான் நடக்கிறது. ஆனால் அதன் காரணம் அவளுக்கு விளங்கவில்லை. அது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கமோ மனதில் ஒரு சலனம். வாசலில் வந்து பிட்ஷை எடுக்கும் பிராமணருக்கு பத்து அரிசி தானியத்தைக் கூட அட்சதைப் போல-போடாமல் அனுப்புவது பெரும் குற்றம். அதுவும் திவசம் நடக்கும் அன்று அப்படி வெறும் கையுடன் ஒரு பிராமணரை அனுப்பிவிட்டால், பிட்ஷை கிடைக்காத அவர் மனதில் வருத்தத்தோடு சென்றால் பித்ரு காரியமும் நிறைவடையாதே என அனைத்தையும் சில ஷணங்களில் யோசனை செய்து விட்டு தனது கணவனை ஜாடையாகக் கேட்கலாம் என எண்ணிக் கொண்டு அவரை நோக்கினாள். ஆனால் அப்பலராஜு அவளை கவனிக்காமல் சிரார்த்த மந்திரங்களை ஓதியபடி அமர்ந்து கொண்டிருக்க வாயிலில் வந்திருந்த பிராமணரும் இரண்டாம் முறையாக 'பவதி பிட்ஷாம் தேகி' எனக் கூறி விட்டார். சாதாரணமாக மூன்று முறை அப்படிக் கூவிய பின் ஒன்றும் கிடைக்காவிடில் பிட்ஷை கேட்டு வருபவர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள் என்பதினால் சுமதி சற்றும் தாமதிக்காமல் வெளியில் சென்று அவசரமாக பிட்சைப் போட்டு விட்டு வீட்டுக்குள் செல்ல முற்பட்டாள். அதையே எதிர்பார்த்துக் காத்திருந்த தத்தாத்திரேயர் சற்றும் தாமதிக்காமல் அவளுக்கு தன்னுடைய நிஜ ரூபத்துடன் தரிசனம் தர அவள் அங்கேயே அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தாள். "அம்மா, உனக்கு என்ன வரம் வேண்டும்...கேள்... தருகிறேன்" என்று தத்தர் அவளைக் கனிவுடன் கேட்க அவளும் அவரிடம் கூறினாள். "பரமாத்மா, கேட்டவர் அனைவருக்கும் அவர்கள் கேட்டதை எல்லாம் தயங்காமல் கொடுத்து அருள் புரிபவர் நீங்கள். அப்படிப்பட்டவர் இங்கு வந்து என்னை அம்மா என்று அழைத்தீர்கள். ஆனால் அந்த சப்தத்தை மரணம் அடைந்து விட்ட என் எட்டு குழந்தைகள் மூலம் ஒருநாள் கூட கேட்க முடியாத அபலை நான். அது மட்டும் அல்ல, உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளும் குருடாகவும், முடமாகவும் இருக்கும்போது நான் கேட்க என்ன உள்ளது? ஆனாலும் இந்த ஜென்மத்தில் அம்மா என்று என்னை அழைக்க மழலைப் பேறு இல்லை என்றாலும், அடுத்த ஜென்மத்திலாவது உங்களைப் போன்ற நற் பண்புகள் கொண்ட, நீண்ட ஆயுளும், நோயற்றவனாகவும், பெரும் புகழ் பெற்று விளங்குபவனாகவும் இருக்கும் ஒரு மகவை நான் பெற்றிட அருள் புரிந்தால் அதுவே இந்த அபலைக்கு போதும்' என்று கதறி அழுதாள். ஆனால் அவளுக்கு தன் முன் காட்சி தந்தது தத்தாத்திரேயர் என்பது அப்போது புரியவில்லை. மனம் அத்தனை வெறுமையாக இருந்தது. அவளை தேற்றி சமாதானப்படுத்தினார் தத்தர். 'அம்மா, கவலைப்படாதே. விரைவிலேயே நீ மீண்டும் கர்ப்பம் அடைந்து நல்லதொரு மகனைப் பெற்றெடுப்பாய். அது தத்தாத்திரேய அவதாரமாக இருக்கும் (தான் என்று கூறாமல் இப்படி மறைமுகமாகக் கூறினார்). ஆனால் ஒன்றை மனதில் ஞாபகம் வைத்துக் கொள். பிறக்கும் மகன் வயதானதும் அவன் கூறும் எதையும் தட்டாதே, தடுக்காதே. அவன் கூறுவதை அப்படியே செய்யும் மனநிலையில் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். ஏன் எனில் உனக்குப் பிறக்க உள்ள மகனோ பெரிய மகானாகி பலருக்கும் தீட்ஷை தருபவனாக இருப்பான். தன்னிடம் வந்து சரண் அடைந்தவர்களுக்கு பாதுகாப்பு வகையில் தரும் சக்தியையும் பெற்று இருப்பான். ஆகவே நீ மன நிம்மதியோடு சென்று பித்ரு காரியங்களை நடத்தி முடிக்க உன் கணவருக்கு துணை இரு' என்று கூறிய பின் அப்படியே சென்று விட்டார். அதுவே துவாபர யுகம் முடிந்து கலியும் பிறந்த நேரம் ஆகும். தொடரும். 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள் #ஞானிகள் பேசுகிறோம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
ரவிசங்கர் ராஜா, ஆரணி
663 views
7 days ago
AI indicator
*குரு சரித்திரம்-5* புதிய தொடர் பதிவு அத்தியாயம்-4 சித்த முனிவர் கூறத் துவங்கினார். மகனே இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட விதமே சுவையானது. அது படைக்கப்பட்ட போது உலகமே பிரளயத்தில் மூழ்கி இருந்தது. அப்போது கடலில் ஆதிசேஷன் மீது விஷ்ணு பகவான் படுத்திருந்தார். அவருடையத் தொப்பிள் கொடியில் இருந்து வெளிவந்த பிரும்மா நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்தபோது அவருக்கு நான்கு முகங்கள் பிறந்தன. அதன் பின் அவர் வேதங்களைப் படைக்க, யுகங்களும் படைக்கப்பட்டன. அடுத்தடுத்து காலங்கள், திசைகள், பதினான்கு லோகங்கள், பாதாளம், தேவலோகம் என அனைத்தையும் படைத்து விட்டு சனகா, சனாதனா, சனத்குமரா மற்றும் சனத் சுஜாதா போன்றவர்களையும் முனிவர்களையும் படைத்தார். அதன் பின்னர் ஏழு தன்னையே இரண்டாகப் பிளந்து கொண்டு வலப் புறத்தில் இருந்து மனுவையம் இடப்புறத்தில் இருந்து ஷட ரூபா என்பவர்களையும் படைக்க அந்த இருவருக்கும் தேவஹுதி என்ற ஒரு பெண் பிறந்தாள். தேவஹுதி என்பவள் மனித குலத்திற்கு அதிபதியான கர்தபிரஜாபதி எனும் முனிவரை மணந்து கொண்டாள். அவர்களுக்கு ஒன்பதுப் பெண்கள் பிறந்தனர். பிரும்மாவின் கண்களில் இருந்து அத்ரி முனிவர் பிறந்தார். காலத்தின் சில செயல்பாட்டினால் அத்ரி முனிவரை பதி விரதையான அனுசூயா என்பவர் மணந்து கொண்டாள். அனுசூயாவுக்கு இணையான பதி விரதை இந்த பிரபஞ்சத்திலேயே இருக்க முடியாது என்ற அளவு அவள் புகழ் எங்கெங்கும் பரவியது. அவளைப் பொருத்தவரை அவள் கனவிலும், மனதிலும், நினைவிலும், உள்ளத்திலும் சேவைகளிலும், ஏன் அவள் பார்வை செல்லும் அனைத்து இடங்களிலும் அவளுக்கு அத்ரி முனிவரை தவிர வேறு எதுவுமே தெரியவில்லை எனும் அளவில் பதிவிரதையாக இருந்தாள். அதனால் அவளை அனைவருமே உலக நாயகி ஜெகதாம்பா என்றே அனைவரும் அழைத்தனர். அனுசூயா கணவனுக்கு அனுசரணையாக இருந்து கொண்டு அவருக்குத் தேவையான அனைத்தையும் செய்து வந்தாள். அவரது பூஜைக்கான பழங்கள், பூக்கள் என அனைத்தையும் தானே கொண்டு வந்து கொடுத்தும், வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை கணவர் இல்லாத நேரங்களில் அவர் சார்பாக உபசரித்தும் அவர்களுக்கு தேவையானதை கணவர் மூலம் செய்தும் வந்தாள். இப்படியாக அத்ரி முனிவர் மற்றும் அனுசூயாவின் வாழ்கை ஆனந்தமாக சென்று கொண்டு இருந்தபோது இந்திரனும் பிற தேவர்களும் அவள் பெற்று இருந்த சக்தியைக் கண்டு பொறாமைக் கொண்டு அஞ்சலாயினர். ஏன் எனில் மகா பதிவிரதையாக உள்ளவர்கள் அபார சக்தியைப் பெற்று தேவேந்திரனை விட வலிமையான சக்தி பெற்றவர்கள் ஆகி விடுவார்கள் என்ற நியதி இருந்ததே அதன் காரணம். அவளது பதிவிரதா சக்தியைக் கண்டு திருமூர்த்திகளின் மனைவிகள் கூட பொறாமைப்படும் அளவுக்கு அவள் புகழ் பெற்று இருந்தாள். அதனால் அவளுடைய பதிவிரதா சக்தி எந்த அளவிற்கு பலம் வாய்ந்தது என சோதனை செய்து பார்க்குமாறு இல்லாததையும், பொல்லாததையும் கூறி திருமூர்த்திகளின் மனைவிகள் தமது கணவன்மார்களை தூண்டி விட ஒரு நாள் மதியம் திடீரென திருமூர்த்திகள் மூவரும் பிராமணர் போலச் சென்று அனுசூயாவின் குடில முன் நின்று கொண்டு "அம்மா, தாயே, நாங்கள் பிராமணர்கள். எங்களுக்கு உணவு தர முடியுமா?" என்று கேட்டார்கள். அவளும் ஸ்நானம் செய்துவிட்டு அவர்களை வருமாறும், அதற்குள் தனது கணவரும் வந்து விடுவார் என்றும், அதற்குள் அவர்களுக்கான உணவையும் தயார் செய்து வைப்பதாகவும் கூறினாள். அவர்களும் குளித்து விட்டு வந்தப் பின் உணவருந்த அமர்ந்தார்கள். ஆனால் அத்ரி முனிவர் வந்தபாடில்லை. அவர்கள் தாம் விரைவில் திரும்பிச் செல்ல வேண்டும் எனக் கூறியதால், அத்ரி முனிவர் வராவிடிலும் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை உணவருந்தாமல் அனுப்பக் கூடாது என்று எண்ணிய அனுசூயாவும், வந்தவர்களுக்கு அர்க்கியம் தந்து, இலைப் போட்டு சாப்பிட உட்காருமாறு கூறினாள். வந்தவர்களோ அனுசூயா திடுக்கிடுவது போல ஒரு நிபந்தனையை வைத்தார்கள். அவர்கள் கூறினார்கள் "அம்மணி, இதுவரை நாங்கள் எங்கு சென்று உணவு அருந்தினாலும் எங்களுக்கு உணவு பரிமாறுபவர்கள் தம் உடலில் ஒரு பொட்டுத் துணியும் இருக்காமல் அவர்கள் மனது களங்கம் இல்லா நிர்வாண நிலையில் உள்ளது என்ற சத்தியத்தை வெளிப்படுத்தும் விதமாக நிர்வாணமான உடம்புடன் இருந்து, பறிமாறினால்தான் உணவு அருந்துவோம் என்ற விரதம் பூண்டு உள்ளோம். எவர் ஒருவர் பரிபூரணமான நிர்வாண நிலையில் மனதை வைத்திருப்பாரோ அவரே பரிபூரண பதிவிரதையாக இருக்க முடியும் என்பதால் நீயும் அப்படிப்பட்ட நிலையில் பறிமாறினால்தான் உணவை உண்போம்" என்றார்கள். அடுத்தகணமே வந்தவர்கள் யார் என்பதை தனது பதிவிரதா சக்தி மூலம் அனுசூயா உணர்ந்து கொண்டு விட்டாள். சமையல் அறையினுள் சென்று மானசீகமாக தன் கணவரை வணங்கினாள். வந்திருப்பது பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவன் என்றும் தன் கற்பை சோதனை செய்யவே அவர்கள் வந்து இருக்கிறார்கள் என்பதினால் மூவரும் என் குழந்தைகளாக மாற வேண்டும் என அவரை வேண்டினாள். அவ்வளவுதான் அடுத்தகணம் திருமூர்த்திகள் மூவரும் சிறு குழந்தைகளாக மாறி தரையில் உருளத் துவங்க அவர்களை எடுத்து தனது மடியில் வைத்துக் கொள்ள,அவள் மார்பில் இருந்து வழிந்த பாலை அந்த மூவரும் குடித்தார்கள். அதன் பின் உறங்கி விட்டார்கள். தனது கடமைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த அத்ரி முனிவர் தனது ஞான திருஷ்டியினால் நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். அதே சமயம் திருமூர்த்திகளின் மனைவிகளும் அங்கு வந்து சேர்ந்தார்கள். அனுசூயாவும் நடந்ததை அவர்களுக்கு கூற அங்கு நடந்ததைக் கேள்விப்பட்டவர்கள் அவள் மகா பதிவிரதை என்பதை புரிந்து கொண்டு அவள் கால்களில் விழுந்து மன்றாடி தத்தம் கணவன்மார்களை மீண்டும் தம்மிடம் பழைய உருவிலேயே திருப்பித் தருமாறு கேட்டார்கள். அத்ரி முனிவரும் அனுசூயாவும் அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு திருமூர்த்திகளுக்கு பழைய உருவை திருப்பிக் கொடுக்க அவர்கள் முன் பிரசன்னமான திருமூர்த்திகள் மூவரும் ஒன்றிணைந்த உருவமாகி தத்தாத்திரேயர் எனும் அவதாரத்தை காட்டினார்கள் ". (தத்தாத்திரேய அவதாரம் தோன்றக் காரணமாக இந்த நாடகம் திருமூர்த்திகளினால் நடத்தப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. ஏன் எனில் அந்த அவதாரத்தின் மூலமே மும்மூர்த்திகளின் சார்பாக ஒரு குரு பரம்பரையை தோற்றுவிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. அவர் கலிகாலத்தில் பதினாறு அவதாரங்களை எடுத்து மனித குலத்தை ரட்சிக்க உள்ளார் என்கிறார்கள்) இதைக் கூறிய சித்த முனிவர் நாமத்ஹரகாவிடம் மேலும் கூறினார். "மும்மூர்த்திகளின் அவதாரமான தத்தாத்திரேயர் பல மனித ரூபங்களை எடுத்து மனித உலகில் உலவ உள்ளார். அவர்களது மேம்பாட்டிற்காக தான் யார் என்பதை வெளிக் காட்டாமல் பல்வேறு ரூபங்களை எடுத்தும், எடுக்கவும் உள்ளார். அவரது மகிமைகள் ஏராளம் உண்டு. இப்போதும் அவர் உலகில் அவதாரம் எடுத்து வந்துள்ளார்". அதை எல்லாம் கேட்ட நமத்ஹரகா சித்த முனிவரிடம் ஆவலுடன் கேட்டார். "கடவுளைப் போல என்முன் வந்து என்னுடைய அஞ்சாமைகளை விலக்கிக் கொண்டு இருக்கும் மகா முனிவப் பெருமானே, தத்தாத்திரேயர் மனித உலகில் ஒரு அவதாரம் எடுத்து வந்து உள்ளார் என்று கூறினீர்களே, அந்த அவதாரம் என்ன, அவர் இப்போது எங்கு இருக்கிறார் போன்ற விவரங்களை தயவு செய்து எனக்கு எடுத்துரைப்பீர்களா" எனப் பணிவுடன் கேட்க சித்த முனிவரும் அந்தக் கதையையும் கூறத் துவங்கினார் (இத்துடன் அத்தியாயம் 4 முடிந்தது). தொடரும். 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள் #ஞானிகள் பேசுகிறோம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
ரவிசங்கர் ராஜா, ஆரணி
3.2K views
7 days ago
AI indicator
*குரு சரித்திரம்* அத்தியாயம்-1 புதிய தொடர் பதிவு முன்னுரை:தத்தாத்திரேய அவதாரங்களாக பல மகான்கள் அவதரித்து உள்ளார்கள். மும்மூர்த்திகளின் அவதாரமான தத்தாத்திரேயர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பூமியில் ஒரு அவதூதராக அவதரித்தார். அவர் அதிக சக்தி பெற்றவர். அவரைப் பற்றி விவரங்கள் மற்றும் அவரை ஆராதிப்பது போன்றவை மராட்டிய மற்றும் கர்நாடக மானிலங்களில் மட்டுமே மிக அதிகமாக உள்ளது. அதற்குக் காரணமும் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டுமே தத்தாத்திரேய அவதாரங்களாக பல மகான்கள் இருந்துள்ளார்கள் என்பதே. எங்கெல்லாம் மராட்டிய மக்கள் அதிகம் வசிப்பார்களோ அங்கெல்லாம் தத்தர் வழிபாடு அதிகம் உள்ளன. கால ஓட்டத்தில் மெல்ல மெல்ல தத்தர் வழிபாடும், அவருடைய சக்தியும் பிற மாநிலங்களிலும் பரவலாயிற்று. 'தத்த பரம்பரா' என்பதில் ஸ்ரீபாதவல்லபா மற்றும் ஸ்ரீ ந்ருசிம்ம சரஸ்வதி ஆகிய இரு சத்புருஷர்களும் மிக முக்கியமாக மற்றும் மேன்மையானவர்களாக கருதப்படுபவர்கள். ஏன் ஷீரடி சாயி கூட தத்தரின் அவதாரமே என்கிறார்கள். இந்த நிலையில் மக்கள் மிக அதிகமாக போற்றிப் படிக்கும் குரு போதனைகள் அதாவது 'குருசரிதம்' என்ற புத்தகம் தத்தரின் பக்தர்களினால் வேத புத்தகமாகவே படிக்கப்பட்டு வருகிறது. அதைப் பாராயணம் செய்வதினால் தத்தாத்திரேயர் அருள் கிடைத்து புத்திர பாக்கியம், செல்வம், வளமான வாழ்க்கை என அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பரவலான நம்பிக்கை. குரு சரித்திரம் என்பது சுமார் 600 அல்லது 700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இந்த மூல புத்தகம் சமஸ்கிருதம் மற்றும் மராட்டிய மொழிகளில் இரு மொழிகளைக் கலந்து எழுதப்பட்டு உள்ளதாக கூறுவார்கள். இந்த புத்தகம் பல பாகங்களாக எழுதப்பட்டு உள்ளது. ஞான காண்டம், கர்ம காண்டம் மற்றும் பக்தி காண்டம் என மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்பட்டு உள்ள இந்த புத்தகம் ஸ்ரீ நரசிம்ஹ சாஸ்வதி ஸ்வாமிகளின் சீடரான ஒரு சித்தர் ஸ்ரீ நரசிம்ஹ சரஸ்வதி ஸ்வாமிகளின் பெருமைகளை அவருடைய ஒரு பக்தரான நமத்ஹரகா என்பவருக்கு விளக்கிக் கூறியதான கதையை உள்ளடக்கி எழுதப்பட்டு உள்ளது. இனி குரு சரிதாவை படிப்போம்: அத்தியாயம் - 1 நமத்ஹரகா எனும் அந்தணர் ஸ்ரீ நரசிம்ஹ ஸ்வாமிகளின் மகிமைகளைப் பற்றிக் கேட்டறிந்திருந்தார். அவர் அந்தணர் அல்ல, துவஜகுலா எனும் குலத்தில் பிறந்தவர் என்றும் ஒரு கதை உண்டு. அவர்களும் பிராமணர்களைப் போல பூணூல் தரிப்பவர்களே ஆவார்கள். ஆகவே தமது சமய முறைக்கு ஏற்ப எட்டு வயதிலேயே பூணூல் அணிந்து கொண்டவர். நரசிம்ஹ ஸ்வாமிகளின் மகிமைகளைப் பற்றிக் கேட்டறிந்திருந்த அவர் தானும் அவருடைய சீடராக வேண்டும் என்ற எண்ணத்துடன் குருவைத் தேடி அலையத் துவங்கினார். அவருக்கு தம்முடைய குரு எங்கிருப்பார் என்பது தெரியவில்லை. அப்போது ஸ்ரீ நரசிம்ஹ ஸ்வாமிகள் கர்நாடகத்தில் இருந்த கனகபுரா எனும் ஊரில் இருந்தார். அதைக் கேள்விப்பட்டவர் உடனடியாக தனது குருவை தேடியவாறு ஒரு சிறு மூட்டையில் தனக்குத் தேவையான பொருட்களை தலையில் எடுத்து வைத்துக் கொண்டு எங்கு போகின்றோம் என்பது கூடத் தெரியாமல் நெடிய பயணத்தைத் துவக்கினார். நடந்து கொண்டே சென்றவர் வழி நெடுக தனது குருநாதரை அடையாளம் காட்டுமாறு தன் மனதில் தோன்றிய தெய்வங்களை வேண்டிக் கொண்டே சென்று கொண்டு இருந்தார். தெய்வமே, மும்மூர்த்திகளின் அவதாரமே, அனைவருக்கும் கருணைக் காட்டுபவரே, உமது பாதங்களை தரிசித்த மட்டிலேயே அனைத்து பாபங்களும் விலகும் என்கிறார்களே, நான் ஒரு அனாதை, எனக்கு வேறு யாருமே இல்லை. பசியால் அழும் குழந்தை அழுது கொண்டே இருக்கட்டும் என்று எந்த தாயாவது மௌனமாக அதைப் பார்த்துக் கொண்டு இருப்பாளா? அது போலத்தான், எனக்கு அன்னை, பிதா, தெய்வம், உற்றார், உறவினர் என இந்த அனாதைக்கு அனைவருமாக உள்ள நீங்களே இத்தனை நாளாகியும் இந்த ஆதரவற்ற அனாதைக்கு காட்சி தராமல் ஏன் ஏமாற்றுகிறீர்கள்? நான் செய்த பிழைதான் என்ன? நான் என்னை அறியாமலேயே தவறு ஏதும் செய்திருந்தால் என்னை மன்னித்து விட்டு, எனக்கு காட்சி தர வேண்டும் என மனப்பூர்வமாக உம்மை வேண்டுகிறேன். உம்மை தரிசிக்காவிடில் நான் இல்லாமல் போய்விடுவேனே. உம்மைக் காண, உங்கள் எண்ணங்களோடு உம்மைக் தேடிக் கொண்டு நடக்கும் என் மனக் குறையை விரைவில் தீர்த்து வையுமையா" என கண்களில் நீர் ஓட குருநாதரை நினைத்து அழுதபடி மனம் ஒடுங்கிப் போனவர் ஒருநாள் களைப்படைந்து வழியில் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருந்தபோது அப்படியே உறங்கி விட்டார். அப்படி ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருந்தவர் கனவில் ஒரு மகான் அவருக்குக் காட்சி தந்தார். அவரைக் கனவிலே கண்டவர் கனவிலேயே அவரை பூஜித்து, அவர் கால்களில் விழுந்து, விழுந்து வணங்கினார். அந்த மஹான் வேறு யாரும் அல்ல, அவர் தேடிப்போய் கொண்டு இருந்த அதே ஸ்ரீ நரசிம்ஹ ஸ்வாமிகள்தான்! நமத்ஹரகாவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!! தொடரும். 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏 #ஞானிகள் பேசுகிறோம்