#நல்லதே பேசு நல்லதே நினை மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன்:
“நோன்பு மனிதனை நற்குணங்களுடன் வடிவமைக்கும் ஆன்மீகப் பயணம்”
சென்னை, பிப்.23–
ரமலான் மாதத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும் நோன்பு, மனித வாழ்க்கையில் நல்ல குணங்கள் மற்றும் ஒழுக்கங்களை உருவாக்க முக்கிய காரணமாக திகழ்கிறது என்று முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:–
ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுவதும் நோன்பு வைப்பது இறைவன் அளித்த கட்டளையாகும். நோன்பின் மூலம் மனிதன் பசியை உணர்வுபூர்வமாக அறிந்து கொள்ள முடிகிறது,உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன.மேலும், ஏழை எளிய மக்களின் துயரங்களை உணர்ந்து, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மாதமாக ரமலான் திகழ்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதுபோல், நோன்பு கடைப்பிடிப்பதன் மூலம் மனிதனின் உடல், மனம், ஆன்மா ஆகியவை தூய்மை அடைகின்றன. பசி, தாகம் அனுபவிப்பதன் மூலம் ஏழை எளியவர்களின் துயரத்தை உணர முடியும். சகோதரத்துவம், பொறுமை, தன்னடக்கம் போன்ற நற்குணங்கள் வளர்க்கப்படுகின்றன.
நோன்பு என்பது வெறும் பசி, தாகத்தை தவிர்ப்பது மட்டுமல்ல. தீய செயல்களிலிருந்து முழுமையாக விலகி, ஒழுக்கத்துடன் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள உதவும் பாலமாகவும், வாழ்க்கையின் பலமாகவும் அமைந்துள்ளது.என
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


