ஜோதிடமும் பக்தியும்🙏
விதியை மாற்றும் ஆன்மிகக் கதை
ஒரு கிராமத்தில் புகழ்பெற்ற ஜோதிடர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
அவர் சொல்லும் வார்த்தைகளையும், கூறும் பரிகாரங்களையும் மக்கள் ஆழமாக நம்பினர். பலரும் அதனால் நன்மை பெற்றதாக கூறினர்.
இதைக் கேள்விப்பட்ட ஒரு ஏழை விவசாயி தன் வாழ்க்கையை நினைத்து மனம் நொந்தான்.
விளைச்சல் இல்லை… லாபம் இல்லை… குடும்பம் துன்பத்தில் தவித்தது.
“நாமும் அந்த ஜோதிடரைச் சந்தித்து பார்க்கலாம்” என்று முடிவு செய்தான்.
“என் தலைஎழுத்து எப்போது மாறும்?” என்ற ஏக்கத்துடன்
தன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோதிடரைச் சந்தித்தான்.
ஜோதிடர் அவன் ஜாதகத்தை பார்த்தார்.
சில நொடிகள் அமைதியாக இருந்தார்.
பிறகு,
“நாளைக்கு வா… சொல்லுகிறேன்,” என்று அனுப்பிவைத்தார்.
அதை கவனித்த அவரது மகள் கேட்டாள்:
“அப்பா, நீங்கள் எல்லோருக்கும் உடனே ஜாதகம் கணித்து சொல்வீர்கள்.
இவரை மட்டும் ஏன் நாளைக்கு வரச் சொன்னீர்கள்?”
ஜோதிடர் கனத்த குரலில் கூறினார்:
“அவனுடைய ஜாதகப்படி, நாளை விடியற்காலையில் அவன் உயிருடன் இருக்க மாட்டான்.
அவனுடைய ஆயுள் முடிவடைகிறது.”
“பரிகாரம் இல்லையா, அப்பா?” என்று கேட்டாள் மகள்.
“ஒரு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தால் ஆயுள் பலப்படும்.
அதோடு அவன் மிகப் பெரிய பணக்காரனாகவும் உயர வாய்ப்பு உண்டு.
ஆனால் அவன் பரம ஏழை… அது அவனால் சாத்தியமில்லை…” என்றார்.
இதற்கிடையில் அந்த ஏழை மனம் உடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.
அப்போது திடீரென கடும் காற்று, மழை, இடி முழங்கியது.
“மழையில் நனைந்தால் உடம்பு கெடும்.
மருத்துவரிடம் செல்ல பணமில்லை…” என்று எண்ணி
அருகில் இருந்த ஒரு பாழடைந்த பழைய சிவன் கோவிலில் ஒதுங்கினான்.
அந்த கோவிலைப் பார்த்து அவன் மனம் உருகியது.
“அட கடவுளே…
உன்னை வசதி உள்ளவர்கள் கூட கவனிக்கவில்லை.
என்னிடம் பணம் இருந்தால்
இந்த கோவிலை சீர்செய்து உனக்கு கும்பாபிஷேகம் செய்திருப்பேன்…”
என்று மனதார நினைத்தான்.
அவன் மனக்கண்களில் அந்த கோவில் புதுப்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேகம் நடைபெறுவது போல கண்டு ஆனந்தமடைந்தான்.
மழை நின்றது.
அவன் கோவிலின் படிகளை இறங்கி வெளியே வந்ததும் —
அந்த நொடியிலே பயங்கரமான இடி கோவிலின் மீது விழுந்தது!
கோவில் சிதறி சரிந்தது!
அவன் சில நொடிகள் நடுங்கினான்…
பிறகு உணர்ந்தான் —
“கடவுளே, நீயே காப்பாற்றினாய்!”
என்று கண்ணீர் மல்க நன்றி கூறி வீடு சென்றான்.
மறுநாள் காலையில் அவன் உயிருடன் எழுந்தான்.
நேராக ஜோதிடர் வீட்டிற்கு சென்றான்.
ஜோதிடர் அவனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
“நேற்று என்ன நடந்தது?” என்று கேட்டார்.
அவன் நடந்ததையெல்லாம் கூறினான்.
அப்போது ஜோதிடர் உணர்ந்தார்:
“இவன் மனதார ஆண்டவருக்காக நினைத்தான்.
அந்த சுத்தமான எண்ணமே
அவனுடைய விதியை மாற்றியது.”
அந்த ஏழை விவசாயி பின்னர் விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெற்று செழிப்புடன் வாழ்ந்தான்.
அவன் உண்மையிலேயே அந்த கோவிலைச் சீர்செய்து கும்பாபிஷேகம் செய்து,
கடவுளுக்கு நன்றி செலுத்தினான்.
கதையின் உண்மை
தலைஎழுத்தைக் கூட மாற்றும் சக்தி
நாம் செய்யும் புண்ணிய காரியங்களுக்குண்டு.
பயந்து தர்மம் செய்யாதீர்கள்.
பலன் எதிர்பார்த்து செய்யாதீர்கள்.
அன்பால் செய்யுங்கள்.
ஏழைகளுக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் உணவு அளியுங்கள்.
கோவில் சீரமைக்கும் பணிக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.
உழவாரப்பணி செய்பவர்களை மதித்து உதவுங்கள்.
இறப்பை தவிர்க்க முடியாது.
ஆனால் நாம் செய்யும் புண்ணியங்கள்
சில துன்பங்களைத் தள்ளிப் போடக் கூடும்.
திருவாசகம், திருப்புகழ், தேவாரம் பாராயணம் செய்வது
மனத் துன்பத்தை நீக்கும்.
ஏழையின் சிரிப்பில் மகேசனை காணலாம்.
தாய் தந்தைக்கு செய்யும் சேவையில் நாராயணனை காணலாம்.
கிரகங்கள் ஆண்டவரால் படைக்கப்பட்டவர்கள்.
அவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள்.
நாம் செய்யும் பாவ–புண்ணியங்களுக்கு ஏற்ப பலன் கிடைக்கிறது.
திருச்சிற்றம்பலம்
— Savittri Raju ✨
#ஆன்மீக கதைகள் #ஆன்மீக கதைகள்


