A Mohan Raj
607 views • 1 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பன்னிரெண்டாம் திருமுறை*
*பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.*
*சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.*
*பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.*
*காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.*
*முதற் காண்டத்தில்,
திருமலைச் சருக்கம்,
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்,
இலை மலிந்த சருக்கம்,
மும்மையால் உலகாண்ட சருக்கம்,
திருநின்ற சருக்கம்
என்ற ஐந்து சருக்கங்களும்,*
*இரண்டாம் காண்டத்தில்,
வம்பறா வரிவண்டுச் சருக்கம்,
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்,
பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்,
கறைக்கண்டன் சருக்கம்,
கடல்சூழ்ந்த சருக்கம்,
பத்தராய்ப் பணிவார் சருக்கம்,
மன்னிய சீர்ச் சருக்கம்,
வெள்ளானைச் சருக்கம்
என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.*
*இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.*
இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர்
இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி
அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம்
பதிகம் பற்றிய சுருக்கமான
*பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - திருநாளைப் போவார் நாயனார் புராணம்*
திருநாளைப் போவார் நாயனார் (சைவ சமயத்தில் நந்தனார் என்றும் அழைக்கப்படுபவர்), சிவபெருமானை உருகி வழிபட்ட 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் சோழ நாட்டில் கொள்ளிட நதிக்கரையில் உள்ள ஆதனூர் என்னும் ஊரில் எளிய குலமான புலைப்பாடியில் பிறந்தவர். பிறப்பால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சிவபெருமான் மீது இவர் கொண்ட பக்திக்கு எல்லையே இல்லை. சேக்கிழார் அருளிய பெரியபுராணத்தில் இவருடைய வாழ்க்கை வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
பெயர்க்காரணம்தில்லையில் (சிதம்பரம்) வீற்றிருக்கும் நடராசப் பெருமானை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் நந்தனாருக்கு இருந்தது. ஆனால், அக்கால சமூகக் கட்டுப்பாடுகளையும் தனது எளிய குலத்தையும் நினைத்து ஊருக்குள் செல்லத் தயங்கினார். ஒவ்வொரு நாளும் தில்லைக்குச் செல்ல எண்ணி, தனக்குத்தானே "நாளைப் போவேன்" என்று கூறி நாட்களைக் கடத்தினார். இதனால் இவருக்கு "திருநாளைப் போவார்" என்ற திருநாமம் உண்டாயிற்று.
இவருடைய வாழ்வில் நடந்த அற்புதங்கள்திருப்புன்கூர் நந்தி விலகிய அற்புதம்: நந்தனார் திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயிலுக்கு வழிபடச் சென்றார். தீண்டாமை காரணமாகக் கோயிலின் வாசலில் நின்று இறைவனைத் தொழ முயன்றார். ஆனால், நேரே இருந்த நந்தி தேவர் மறைத்ததால் சிவபெருமானை அவரால் பார்க்க முடியவில்லை. பக்தனின் ஏக்கம் அறிந்த சிவன், "நந்தியைச் சற்றே விலகச் சொல்லி" அவருக்கு நேர்க்காட்சி தந்தார். இன்றும் அத்தலத்தில் நந்தி விலகியே இருப்பதைக் காணலாம். அங்கேயே அவர் ஒரு திருக்குளத்தையும் வெட்டினார். தில்லை
தீக்குளிப்பு அற்புதம்: இறுதியாகத் தில்லை எல்லைக்கு வந்த நந்தனாரால் உள்ளே செல்ல இயலவில்லை. இறைவனின் திருவருளால், தில்லை வாழ் அந்தணர்கள் ஒரு தீக்குழியை (வேள்வித் தீ) அமைத்துக் கொடுத்தனர். நந்தனார் சிவனின் திருவடிகளைத் தியானித்துத் தீயினுள் இறங்கி, முப்புரிநூல் அணிந்த முனிவர் வடிவில் பொன்னம்பலத்துள் புகுந்து நடராசப் பெருமானின் திருவடி நிழலில் கலந்தார்.
பாடல் வரிகள் :
*பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - திருநாளைப் போவார் நாயனார் புராணம்*
கொச்சகக் கலிப்பா
பகர்ந்துலகு சீர் போற்றும்
பழைய வளம் பதியாகும்
திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன்
செழுமணிகள் திரைக் கரத்தால்
முகந்து தர இரு மருங்கும்
முளரி மலர்க் கையேற்கும்
அகல் பணை நீர் நன்னாட்டு
மேற்காநாட்டு ஆதனூர். 1
நீற்றலர் பேர் ஒளி நெருங்கும்
அப்பதியின் நிறை கரும்பின்
சாற்று அலைவன் குலை வயலில்
தகட்டு வரால் எழப் பகட்டேர்
ஆற்றலவன் கொழுக் கிழித்த சால்
வழி போய் அசைந்து ஏறிச்
சேற்றலவன் கரு உயிர்க்க
முருகுயிர்க்கும் செழுங் கமலம். 2
நனை மருவுஞ் சினை பொதுளி நறு
விரை சூழ் செறி தளிரில்
தினகர மண்டலம் வருடுஞ் செழுந்
தருவின் குலம் பெருகிக்
கனமருவி அசைந்து அலையக் களி
வண்டு புடை சூழப்
புனல் மழையோ மதுமழையோ
பொழிவு ஒழியா பூஞ்சோலை. 3
பாளை விரி மணங் கமழும்
பைங்காய் வன் குலைத்தெங்கின்
தாளதிர மிசை முட்டித் தடம்
கிடங்கின் எழப்பாய்ந்த
வாளை புதையச் சொரிந்த
பழமிதப்ப வண் பலவின்
நீளமுதிர் கனி கிழி
தேன் நீத்தத்தில் எழுந்துகளும். 4
வயல் வளமும் செயல் படு
பைந் துடவையிடை வருவளமும்
வியலிடம் எங்கணும் நிறைய
மிக்க பெரும் திருவினவாம்
புயலடையும் மாடங்கள் பொலிவு
எய்த மலியுடைத்தாய்
அயலிடை வேறு அடி நெருங்கக்
குடி நெருங்கி உளது அவ்வூர். 5
மற்றவ்வூர் புறம் பணையின் வயல்
மருங்கு பெரும் குலையில்
சுற்றம் விரும்பிய கிழமைத் தொழில்
உழவர் கிளை துவன்றிப்
பற்றிய பைங் கொடிச் சுரை மேல்
படர்ந்த பழம் கூரையுடைப்
புற்குரம்பைச் சிற்றில் பல
நிறைந்து உளதோர் புலைப்பாடி. 6
கூருகிர் மெல்லடி அளகின் குறும்
பார்ப்புக் குழுச் சுழலும்
வார் பயில் முன்றிலில் நின்ற
வள்ளுகிர் நாய் துள்ளு பறழ்
கார் இரும்பின் சரி செறிகைக்
கரும் சிறார் கவர்ந்து ஓட
ஆர் சிறு மென் குரைப்படக்கும்
அரைக்கு அசைத்த இருப்பு மணி. 7
வன் சிறு தோல்மிசை உழத்தி மகவு
உறக்கும் நிழல் மருதும்
தன் சினை மென் பெடையொடுங்குந்
தடங்குழிசிப் புதை நீழல்
மென் சினைய வஞ்சிகளும் விசிப்
பறை தூங்கின மாவும்
புன்றலை நாய்ப் புனிற்று முழைப்
புடைத்து எங்கும் உடைத்து எங்கும். 8
செறிவலித் திண் கடைஞர் வினைச்
செயல்புரிவை கறை யாமக்
குறி அளக்க அழைக்கும் செங்
குடுமி வாரணச் சேக்கை
வெறி மலர்த் தண் சினைக் காஞ்சி
விரி நீழல் மருங்கு எல்லாம்
நெறி குழல் புன் புலை மகளிர்
நெற் குறு பாட்டு ஒலி பரக்கும். 9
புள்ளும் தண் புனல் கலிக்கும்
பொய்கையுடைப் புடை எங்கும்
தள்ளும் தாள் நடை அசையத்
தளை அவிழ் பூங்குவளை மது
விள்ளும் பைங் குழல் கதிர்
நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள்
கள்ளுண்டு களி தூங்கக்
கறங்கு பறையும் கலிக்கும். 10
இப்படித்து ஆகிய கடைஞர்
இருப்பின் வரைப்பினின் வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன் கழற்கே
விளைத்த உணர்வொடும் வந்தார்
அப்பதியில் ஊர் புலைமை
ஆன்ற தொழில் தாயத்தார்
ஒப்பிலவர் நந்தனார் என
ஒருவர் உளர் ஆனார். 11
பிறந்து உணர்வு தொடங்கிய பின்
பிறைக் கண்ணிப் பெருந்தகைபால்
சிறந்த பெரும் காதலினால்
செம்மை புரி சிந்தையராய்
மறந்தும் அயல் நினைவு இன்றி
வரு பிறப்பின் வழி வந்த
அறம் புரி கொள்கையராயே
அடித்தொண்டின் நெறி நின்றார். 12
ஊரில் விடும் பறைத் துடைவை
உணவுரிமையாக்கொண்டு
சார்பில் வரும் தொழில் செய்வார்
தலை நின்றார் தொண்டினால்
கூரிலைய முக் குடுமிப் படை
அண்ணல் கோயில் தொறும்
பேரிகையே முதலாய முகக்
கருவி பிறவினுக்கும். 13
போர்வைத் தோல் விசி வார்
என்று இனையனவும் புகலும் இசை
நேர் வைத்த வீணைக்கும்
யாழுக்கும் நிலை வகையில்
சேர்வுற்ற தந்திரியும் தேவர்
பிரான் அர்ச்சனை கட்கு
ஆர்வத்தினுடன் கோரோசனையும் இவை
அளித்து உள்ளார். 14
இவ் வகையால் தந்தொழிலின் இயன்ற
வெலாம் எவ்விடத்தும்
செய்வனவும் கோயில்களில் திரு
வாயில் புறம் நின்று
மெய் விரவு பேரன்பு
மிகுதியினால் ஆடுதலும்
அவ்வியல்பில் பாடுதலுமாய் நிகழ்வார்
அந்நாளில். 15
திருப் புன்கூர்ச் சிவலோகன்
சேவடிகள் மிக நினைந்து
விருப்பினோடும் தம் பணிகள்
வேண்டுவன செய்வதற்கே
அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு
ஆதனூர் தனில் நின்றும்
வருத்தமுறுங் காதலினால் வந்து
அவ்வூர் மருங்கணைந்தார். 16
சீர் ஏறும் இசை பாடித்
திருத் தொண்டர் திரு வாயில்
நேரே கும்பிட வேண்டும் என
நினைந்தார்க்கு அது நேர்வார்
கார் ஏறும் எயில் புன்
கூர்க் கண்ணுதலார் திரு முன்பு
போரேற்றை விலங்க அருள்
புரிந்து அருளிப் புலப்படுத்தார். 17
சிவலோகம் உடையவர் தம்
திரு வாயில் முன்னின்று
பவ லோகம் கடப்பவர் தம்
பணிவிட்டுப் பணிந்து எழுந்து
சுவலோடுவார் அலையப் போவார்
பின் பொரு சூழல்
அவலோடும் அடுத்தது கண்டு
ஆதரித்துக் குளம் தொட்டார். 18
வடம் கொண்ட பொன் இதழி
மணி முடியார் திரு அருளால்
தடம் கொண்ட குளத்து அளவு
சமைத்து அதற்பின் தம் பெருமான்
இடம் கொண்ட கோயில் புறம்
வலம் கொண்டு பணிந்து எழுந்து
நடம் கொண்டு விடை கொண்டு
தம் பதியில் நண்ணினார். 19
இத் தன்மை ஈசர் மகிழ் பதி
பலவும் சென்று இறைஞ்சி
மெய்த்த திருத் தொண்டு செய்து
விரவுவார் மிக்கு எழுந்த
சித்தமொடுந் திருத் தில்லைத்
திரு மன்று சென்று இறைஞ்ச
உய்த்த பெருங் காதல் உணர்வு
ஒழியாது வந்து உதிப்ப. 20
அன்று இரவு கண் துயிலார்
புலர்ந்து அதற்பின் அங்கு எய்த
ஒன்றியணை தரு தன்மை உறு
குலத்தோடு இசைவு இல்லை
என்று இதுவும் எம்பெருமான் ஏவல்
எனப் போக்கு ஒழிவார்
நன்றுமெழுங் காதல் மிக
நாளைப் போவேன் என்பார். 21
நாளைப் போவேன் என்று
நாள்கள் செலத் தரியாது
பூளைப் பூவாம் பிறவிப்
பிணிப்பு ஒழியப் போவாராய்ப்
பாளைப் பூங்கமுகுடுத்த பழம்
பதியினின்றும் போய்
வாளைப் போத்து எழும் பழனஞ்
சூழ் தில்லை மருங்கணைவார். 22
செல்கின்ற போழ்து அந்தத் திரு
எல்லை பணிந்து எழுந்து
பல்கும் செந்தீ வளர்த்த பயில்
வேள்வி எழும் புகையும்
மல்கு பெரும் இடையோதும்
மடங்கள் நெருங்கினவும் கண்டு
அல்கும் தம் குலம் நினைந்தே
அஞ்சி அணைந்திலர் நின்றார். 23
நின்றவர் அங்கு எய்தற்கு அரிய
பெருமையினை நினைப்பார் முன்
சென்று இவையும் கடந்து ஊர் சூழ்
எயில் திருவாயிலைப் புக்கார்
குன்று அனைய மாளிகைகள்
தொறும் குலவும் வேதிகைகள்
ஒன்றிய மூவாயிரம் அங்கு
உள என்பார் ஆகுதிகள். 24
இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல்
அரிது என்று அஞ்சி
அப்பதியின் மதில் புறத்தின்
ஆராத பெருங் காதல்
ஒப்ப அரிதாய் வளர்ந்து ஓங்க
உள் உருகிக் கை தொழுதே
செப்ப அரிய திரு எல்லை
வலங் கொண்டு செல்கின்றார். 25
இவ் வண்ணம் இரவு பகல் வலம்
செய்து அங்கு எய்து அரிய
அவ் வண்ணம் நினைந்து அழிந்த
அடித் தொண்டர் அயர்வு எய்தி
மை வண்ணத் திரு மிடற்றார்
மன்றில் நடம் கும்பிடுவது
எவ் வண்ணம் என
நினைந்தே ஏசறவினொடுந் துயில்வார். 26
இன்னல் தரும் இழி பிறவி இது
தடை என்றே துயில்வார்
அந் நிலைமை அம்பலத்துள்
ஆடுவார் அறிந்து அருளி
மன்னு திருத் தொண்டர் அவர்
வருத்தம் எலாம் தீர்ப்பதற்கு
முன் அணைந்து கனவின் கண்
முறுவலோடும் அருள் செய்வார். 27
இப் பிறவி போய் நீங்க
எரியினிடை நீ மூழ்கி
முப்புரி நூல் மார்பர் உடன் முன்
அணைவாய் என மொழிந்து
அப் பரிசே தில்லை வாழ்
அந்தணர்க்கும் எரி அமைக்க
மெய்ப் பொருள் ஆனார்
அருளி அம்பலத்தே மேவினார். 28
தம் பெருமான் பணி கேட்ட
தவ மறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயின் முன்பு
அச்சமுடன் ஈண்டி
எம்பெருமான் அருள் செய்த பணி
செய்வோம் என்று ஏத்தித்
தம் பரிவு பெருக வரும் திருத்
தொண்டர் பால் சார்ந்தார். 29
ஐயரே அம்பலவர் அருளால்
இப் பொழுது அணைந்தோம்
வெய்ய அழல் அமைத்து உமக்குத்
தர வேண்டி என விளம்ப
நையும் மனத் திருத் தொண்டர்
நான் உய்ந்தேன் எனத் தொழுதார்
தெய்வ மறை முனிவர்களும் தீ
அமைத்த படி மொழிந்தார். 30
மறையவர்கள் மொழிந்து அதன் பின்
தென் திசையின் மதில் புறத்துப்
பிறை உரிஞ்சும் திருவாயில்
முன்பாக பிஞ்ஞகர் தம்
நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு
அமைத்த குழி எய்தி
இறையவர் தாள் மனம் கொண்டே எரி
சூழ வலம் கொண்டார். 31
கை தொழுது நடமாடுங்
கழலுன்னி அழல் புக்கார்
எய்திய அப் பொழுதின் கண்
எரியின் கண் இம்மாயப்
பொய் தகையும் உருவொழித்துப் புண்ணிய
மா முனி வடிவாய்
மெய் திகழ் வெண்ணூல் விளங்க
வேணி முடி கொண்டு எழுந்தார். 32
செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர்
மேல் வந்து எழுந்த
அந்தணன் போல் தோன்றினார்
அந்தரத்து துந்துபி நாதம்
வந்து எழுந்தது இரு விசும்பில்
வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப்
பைந்துணர் மந்தாரத்தின் பனி
மலர்மாரிகள் பொழிந்தார். 33
திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள்
கை தொழுதார்
பரவரிய தொண்டர்களும் பணிந்து
மனம் களி பயின்றார்
அருமறை சூழ் திரு மன்றில்
ஆடுகின்ற கழல் வணங்க
வருகின்றார் திரு நாளைப்
போவாராம் மறை முனிவர். 34
தில்லை வாழ் அந்தணரும் உடன்
செல்லச் சென்று எய்தி
கொல்லை மான் மறிக் கரத்தார்
கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு
உய்ய நடம் ஆடும்
எல்லையினைத் தலைப்பட்டார்
யாவர் களும் கண்டிலரால். 35
அந்தணர்கள் அதிசயத்தார் அருமுனிவர்
துதி செய்தார்
வந்தணைந்த திருத் தொண்டர் தம்மை
வினை மாசு அறுத்துச்
சுந்தரத் தாமரை புரையும் துணை
அடிகள் தொழுது இருக்க
அந்தம் இலா ஆனந்தப் பெரும்
கூத்தர் அருள் புரிந்தார். 36
மாசு உடம்பு விடத் தீயின்
மஞ்சனம் செய்து அருளி எழுந்து
ஆசில் மறை முனியாகி
அம்பலவர் தாள் அடைந்தார்
தேசுடைய கழல் வாழ்த்தித் திருக்
குறிப்புத் தொண்டர் வினைப்
பாசம் அற முயன்றவர்தம் திருத்
தொண்டின் பரிசு உரைப்பாம். 37
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
9 likes
9 shares