#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #பிரதோஷ வழிபாடு 🔱🙏 Post* ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவர முநயே நம: மனித மனம் எவ்வளவு அனுபவத்தைப் பெற்றாலும், பெற்ற அனுபவத்திற்கேற்ப பக்குவப்படுவதின் அடர்த்திச் சற்றுக் குறைவாகத்தான் இருக்கும். அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. எத்தனை முறை பகவான் தனது க்ருபையை வர்ஷித்து நம்முடனான தனது இருப்பைக் காட்டிக்கொண்டாலும் மனித மனதின் இயல்பு அடுத்த முறையும் பகவானின் இருப்பைச் சோதித்துப்பார்க்கும். அதை அடியேன் பலமுறை உணர்ந்துள்ளேன். சமீபத்திலும் அப்படியொரு நிகழ்வு. கடந்த 04.08.2026 அன்று காலை மனதில் ஏதோ வெறுமைக் குடிகொள்ள, திருவஹிந்திரபுரம் தேவநாதனைச் சேவிக்கவேண்டும் போலிருந்தது. அன்று மாலையே திருவஹிந்திரபுரம் சென்றோம். திருவஹிந்திரபுரத்தை அடையும் போது மணி சரியாக 4.45. ஸ்வாமி ஸ்ரீமணவாள மாமுநிகள் சன்னதி நடை சாத்தியிருந்தது. வெளியில் இருந்தே ஸ்வாமியை சேவித்துவிட்டுத் தேவநாதனைச் சேவிக்க பெரியகோவிலுக்குள் சென்றோம். அப்போது தான் நடை திறந்திருந்தார்கள். ஓரிருவரைத் தவிர கூட்டமே இல்லை. ஸ்ரீசெங்கமலத்தாயாரை மிக ஏகாந்தமாக சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. பொதுவாகவே அடியேன் தாயாரையும், பெருமாளையும் சேவிக்கும் போது மனதினுள்ளே அடியேனின் தோஷத்தையும் அன்றைய மனநிலைக்கேற்ப விஷயத்தையும் முறையிடுவதுண்டு. அப்படி முறையிடும் போதெல்லாம் ஏதாவது ஒருவிதத்தில் பிராட்டியும், பிரானும் ‘நான் இருக்க கவலை ஏன்?’ என்பதுவாக நிகழ்வை நிகழ்த்துவர். தாயாருக்கு மல்லிகைப்பூவை அடியேனின் மனைவி சமர்பிக்க, அதை அர்ச்சக ஸ்வாமி தாயாரின் திருக்கழுத்தில் சாத்தும்போது ஏற்கனவே சாத்தியிருந்த பூ தாயாரின் மடியில் விழுந்தது. பிராட்டி அடியேனின் அன்றைய மனநிலைக்கான மருந்தைப் புகட்டினாள் என்பதே சத்தியம். ‘அட போப்பா… இதலாம் ஒரு விஷயமா? இது ஏதோ Aberrant state மனநிலையாக இருக்கும்’ என்று கருதினாலும் அதைப்பற்றி அடியேனுக்குக் கவலையில்லை. அன்று மேலும் இரண்டு விஷயங்கள் நடந்தன. தாயாரைச் சேவித்துவிட்டு ஸ்ரீராமன், ஸ்ரீஆண்டாள் சேவை முடித்து ஸ்ரீரங்கநாதன் சன்னதியின் உள்ளே செல்லும் போதே அப்படியொரு அனுபவம். அர்ச்சக ஸ்வாமி மற்றும் எங்கள் இருவரைத் தவிர யாருமில்லை. எத்தனை முறை இந்த ரங்கநாதனைச் சேவித்தாலும் அப்போதைக்கப்போது புதிதாக இருப்பான். பெருமாளின் திருவடிகளை வருடும் பெரியபிராட்டியும், பூதேவி பிராட்டியும் அப்படியொரு அழகு. திருவஹிந்திரபுரம் சென்றால் ஸ்ரீரங்கநாதனை நிதானமாக அனுபவித்துச் சேவியுங்கள். ‘….அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே’ என்று மனதில் பாடி, படியிறங்க எத்தனித்தோம். அர்ச்சக ஸ்வாமி, ‘ஏன் அதுக்குள்ள போறீங்க? நின்னு இன்னும் நிதானமா பெருமாளைச் சேவிங்கோ’ என்றார். ‘ஹே ரங்கநாதா! அடியேன் விட்டாலும், நீ என்னை விடமாட்டாய் போலும்’ என்றெண்ணி மீண்டும் தாயார் இருவரின் திருமுக மண்டலத்தின் அழகையும், ஸ்ரீரங்கநாதனின் திருமேனியழகையும் சேவித்து எத்தனை இடர்வரினும் எனக்காய் நீயிருக்க அத்தனை இடரதுவும் கரைந்தே போகிறதே பித்தனாம் எனக்கருள பெரிதாய் என்செய்தேன் அத்தனே திருவரங்கா தாய்மை உனக்கியல்போ! என்று அடியேன் எழுதிய திருக்கலிவிருத்தப் பாசுரத்தைச் சேவித்துக் கண்கலங்கினேன். பிறகு தேவநாதனை சேவிக்கச் செல்ல அங்கும் கூட்டமில்லை. அப்படியொரு சேவை!. தேவநாதனைச் சேவிக்கும் போது தாய்மந்தி உடல்பிடித்த சேயதுவாய் இருந்திட்டு பிடிதளர்ந்து வீழ்ந்திட்டேன் வாய்க்கவ்விச் சேய்சுமக்கும் பூனையதன் கருவுதித்த குட்டியெனத் திருந்திட்டேன் ……. என்ற ‘ஸ்ரீகாழிச்சீராம விண்ணகர்த் திருவைந்து’ பாசுரம் நினைவில் வரவும், மூலவர் தேவனாதனின் கருவரையிலிருந்து ஒரு பூனை வெளியே ஓடிவரவும் சரியாக இருந்தது. அடியேன் கையைக் கூப்பியவாறு அப்படியே ஸ்தம்பித்து நின்றேன். இப்பாசுரத்தையும், அந்த நிகழ்வையும் விளக்கினால் பதிவு விரியும். ஏற்கனவே இப்பாசுரத்தின் விளக்கத்தைப் பதிவிட்டுள்ளேன். பிராட்டியின் கருணையையும், பெருமாளின் கருணையையும் யாரால் விளக்கிவிட முடியும்? அடுத்து ஸ்ரீஹயக்ரீவனைச் சேவிக்க ஔஷதகிரி ஏறினோம். சன்னதியின் முன்பு இடது புரத்தில் ஒரு அரசமரமும், அதன் கீழே ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியும் உண்டு. போகும் போதே ஒரு ஸ்ரீவைஷ்ணவர் பன்னிரு திருமண்காப்புகளுடன் குடும்பதோடு அவ்வரச மரத்தையும், ஸ்ரீஹயக்ரீவனையும் வலம் வந்ததைப் பார்த்தேன். அடியேனின் மனைவி தானும் ஸ்ரீஹயக்ரீவனை வலம்வர வேண்டுமென்று அடியேனின் கையையும் பிடித்து அழைத்தார். இதுவரை அடியேன் அப்படி வலம் வந்ததில்லை. இதுவே முதல்முறை. பிறகு சன்னதியின் உள்ளே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஹயக்ரீவனையும் சேவித்து அங்கேயே நீண்ட நேரம் அமர்ந்திருந்தோம். திருவஹிந்திரபுரம் சென்று வந்த மறுநாளுக்கு மறுநாள் காலை ஏனோ ஸ்ரீஹயக்ரீவனின் நினைவாகவே இருந்தது. அப்படியிருக்கும் போதே ‘திருவஹிந்திரபுரத் திருவைந்தில்’ ஒரு பாசுரத்தில் ஸ்ரீஹயக்ரீவனைக் குறிக்குமிடத்து ‘ஔடத கிரிவாழ் பரியன்’ என்று எழுதியிருந்தது மனதில் நிழலாடியது. மேலும் ஸ்ரீஹயக்ரீவனுக்கென்று இதுவரை ஏதும் பாசுரங்கள் எழுதவில்லையே என்று நினைக்கும்போதே…. ஒரு பதிகம் எழுதினால்தான் என்ன! என்ற எண்ணம் வர அன்றே ‘ஸ்ரீஹய்க்ரீவத் திருப்பதிகத்தின்’ பத்து பாசுரங்களையும் எழுதிமுடித்தேன். ஸ்ரீஹயக்ரீவன் தானே விஷயமாக இருந்து எழுதுவித்தான் என்பதுதான் உண்மை. மாணவர்கள் ஸ்ரீஹயக்ரீவனை ப்ரார்த்திக்கும் விதமான பாவத்தில் அமைந்தது இதன் தனிச்சிறப்பு. நம்பினால் நம்புங்கள்…. அடியேனின் அனுபவத்தில் சொல்கிறேன் திருவஹிந்திரபுரத்தில் சேவைசாதிக்கும் ஸ்ரீஹயக்ரீவன் ஞானத்தின் திருவுருவம். படிக்கும் மாணவர்களை அவசியம் திருவஹிந்திரபுரம் அழைத்துச் சென்று சேவிக்க வையுங்கள். ஒரேயொரு முறைதான் அவனுருவமாகத் திகழும் அந்த அரசமரத்தையும் ஸ்ரீஹயக்ரீவனையும் எந்த ப்ரார்த்தனையும் இல்லாமல் வலம் வந்தேன். அதற்கே 'என் ஊரைச் சொன்னாய், என் பேரைச் சொன்னாய்' என்றவளவிலே பகவான் க்ருபை பொழிந்து அவனுக்கான ஒரு பதிகத்தை எழுத வைத்துவிட்டான். இது போன்று எத்தனை முறை நம்முடனான தனது இருப்பை பகவான் காட்டிக்கொடுத்தாலும், அடுத்தமுறையும் அவனிருப்பை மீண்டுமொரு முறை உறுதி செய்ய மனம் விழைவது வேடிக்கைதான். பாழும் மனித மனம்…. வேறு என்ன சொல்ல? அடியேன்🙏 (10.08.2026) #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #💥ஓம் ந ம சி வா ய💥 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ்
21 shares

More like this