நாளை 26.08.2026 திருவோணம் திருநாள்! *************************************************** திருவோணத்தின் சிறப்புகள் : --------------------------------------------------------------------------------- திருவோணம் என்பது இருபத்தேழு நட்சத்திரங்களில் மிகவும் மங்களகரமான நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. இது மகாவிஷ்ணுவின் திரு நட்சத்திரம். அதனால் ``பெருமாள் நட்சத்திரம்’’ என்றே பக்தர்கள் போற்றுகின்றனர். ``திருவோணத்தான்’’ என்று பெருமாளை ஆழ்வார்கள் கொண்டாடுவார்கள். ஆவணி மாத திருவோணத்தில்தான் மகாவிஷ்ணு வாமன அவதாரமாகவும் பின்னர் திருவிக்ரமனாகவும் உலகைக் காத்தார். ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நாளில் (ச்ரவண விரதம்) பலர் விரதம் இருந்து பெருமாளை வழிபடுகின்றனர். ஆனால் ஆவணி மாத திருவோணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் திருப்பதியில் திருமலை திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு (பெருமாளின் அவதாரம் புரட்டாசி திருவோணம்) சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், உற்சவங்கள் நடைபெறும். அதேபோல் ஒப்பிலியப்பன் கோயில் திருத்தலத்தில் திருவோண நட்சத்திரம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அங்கு மாதந்தோறும் திருவோண உற்சவமும், ஆவணி மாதத்தில் வாமன ஜெயந்தி விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. ஹயக்ரீவர் நட்சத்திரமும் திருவோணம்தான். இந்த ஆவணி திருவோண நாளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை ஓணம் பண்டிகை பழமையான பண்டிகை. திருமழிசை ஆழ்வார் ``ஓணப் பெருவிழாவின் ஒலி அதிர’’ என்று இந்த பண்டிகையின் சிறப்பைப் பாடி இருக்கின்றார். பெரியாழ்வாரும் தம்முடைய திருப்பல்லாண்டு பாசுரத்தில் ``எந்தை தந்தை தந்தை தன் மூத்தப்பன் ஏழ்படி கால் தொடங்கி வந்து வழிவழியாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழாவில்’’ என்று பாடியதால் தமிழகத்தில் திருவோணப் பெருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வந்ததை அறிகிறோம். வாமன அவதார ஜெயந்தி விழா இது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் தனித்துவம் பெற்றது. முதலில், குள்ளமான பிரம்மச்சாரி வடிவில் வாமனராக மகாபலியிடம் மூன்று அடி நிலம் கேட்டார். பின்னர் விஸ்வரூபம் எடுத்து திருவிக்ரமனாக மாறி, ஒரு அடியால் பூமியையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்தார். மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனுக்கு அருளைப் புரிந்தார். அதனால் இது கருணையும் நீதியும் இணைந்த அவதாரமாகக் கருதப்படுகிறது. அடுத்தடுத்து இரண்டு அவதாரங்கள் திருமாலின் பன்னிரு திருநாமங்களிலும் ``வாமனன்’’ மற்றும் ``திரிவிக்ரமன்’’ (திருவிக்ரமன்) ஆகிய திருநாமங்கள் அடுத்தடுத்ததாக வருகின்றன. "ௐ வாமனாய நம: "ௐ திரிவிக்ரமாய நம: என்ற திருநாமங்களை ஜபிப்பது இந்த நாளில் மிகவும் சிறப்பானதாகும். ஓணம் என்பது வெறும் அறுவடைத் திருவிழா மட்டுமல்ல. தர்மம், தானம், சமத்துவம், பக்தி ஆகியவற்றை நினைவூட்டும் ஆன்மிக விழாவாகும். மகாபலி அரசன் மிகச் சிறந்த தானவீரன். ஆனால் சிறிது அகந்தை ஏற்பட்டபோது, இறைவன் அவனைத் தண்டிக்கவில்லை. அவனது அகந்தையை நீக்கி, பக்தியை வளர்த்து, ஆண்டுதோறும் தனது மக்களைப் பார்க்க வரம் அளித்தார். அதனால்தான் ஓணத் திருநாளில் மகாபலி தனது மக்களைப் பார்க்க வருவதாக கேரள மக்கள் நம்புகின்றனர். இந்தக் கதையின் தத்துவம் என்ன? செல்வம் நிலையானதல்ல. அதிகாரம் நிரந்தரமல்ல. தாழ்மைதான் உயர்வு. இறைவனிடம் சரணாகதி அடைந்தால் வாழ்வு நிறைவு பெறும். கொடுக்கும் மனமே மனிதனை உயர்த்தும். இறைவன் மகாபலியை அழிக்கவில்லை. அவரை உயர்ந்த பக்தராக மாற்றினார். அதுவே இந்த அவதாரத்தின் மகிமை. கேரளாவில் ஓணம் மாநிலத்தின் மிகப்பெரிய திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது. வீடுகள் முழுவதும் பூக்களால் ``பூக்களம்’’ அமைக்கப்படுகிறது. அனைவரும் புதிய ஆடை அணிவார்கள். ஓணச் சாப்பாடு எனப்படும் பிரம்மாண்டமான சைவ விருந்து தயாரிக்கப்படுகிறது. பலவகையான நிவேதனங்கள் இறைவனுக்குப் படைக்கப்படுகின்றன. யானை ஊர்வலங்கள், செண்டை மேளம், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், படகுப் போட்டிகள், பாரம்பரிய நடனங்கள் ஆகியவை கேரளா முழுவதும் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் வைணவக் கோயில்களில் வாமன ஜெயந்தி, திருவோண உற்சவம், திருமஞ்சனம், புறப்பாடு, வேதபாராயணம், திவ்யப் பிரபந்த சேவை, சிறப்பு அலங்காரம் ஆகியவை நடைபெறும். வீடுகளில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல், அக்காரவடிசல், பாயாசம், வெண்பொங்கல், பழங்கள் போன்றவற்றை நிவேதனம் செய்து வழிபடுகின்றனர். ஆவணி திருவோண விரதம் இருப்பது எப்படி? அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டைச் சுத்தம் செய்து கோலம் போட வேண்டும். பெருமாள் படத்திற்கு அல்லது விக்ரகத்திற்கு துளசி மாலை, தாமரை அல்லது மணமுள்ள மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். சாத்துவிக உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். பலர் உபவாசமாக இருந்து மாலை பூஜைக்குப் பிறகு பிரசாதம் அருந்துவார்கள். "ௐ நமோ நாராயணாய’’, விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீசூக்தம், புருஷசூக்தம், திருப்பாவை, பெரியாழ்வார் திருமொழி, நம்மாழ்வார் பாசுரங்கள், வாமன அவதாரத்தைப் போற்றும் பகுதிகளைப் பாராயணம் செய்யலாம். துளசி அர்ச்சனை செய்து, இயன்றளவு அன்னதானம் அல்லது தானம் செய்வது மிகவும் சிறப்பானது. மாலை நேரத்தில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று திருவோண நட்சத்திர வழிபாட்டில் கலந்து கொண்டு பெருமாளின் திருவடிகளைத் தரிசிக்க வேண்டும். ஆவணி திருவோணத்தில் பக்தியுடன் விரதம் இருந்து வாமன திரு விக்ரமனை வழிபடுபவர்களுக்கு அகந்தை நீங்கி ஞானம் பெருகும். குடும்பத்தில் ஐஸ்வர்யம், ஆரோக்கியம், ஒற்றுமை, மன அமைதி, இறையருள் ஆகியவை பெருகும். ஓணத்தில் வளம் பெருகட்டும் மகிழ்ச்சி பொங்கட்டும் #ௐ_நமோ_நாராயணா.. ➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️ #✨கடவுள் #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
58 shares

More like this