A Mohan Raj
720 views • 1 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பன்னிரெண்டாம் திருமுறை*
*பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.*
*பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.*
*காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.*
*முதற் காண்டத்தில்,
திருமலைச் சருக்கம்,
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்,
இலை மலிந்த சருக்கம்,
மும்மையால் உலகாண்ட சருக்கம்,
திருநின்ற சருக்கம்
என்ற ஐந்து சருக்கங்களும்,*
*இரண்டாம் காண்டத்தில்,
வம்பறா வரிவண்டுச் சருக்கம்,
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்,
பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்,
கறைக்கண்டன் சருக்கம்,
கடல்சூழ்ந்த சருக்கம்,
பத்தராய்ப் பணிவார் சருக்கம்,
மன்னிய சீர்ச் சருக்கம்,
வெள்ளானைச் சருக்கம்
என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.*
*இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.*
இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர்
இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி
அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம்
பதிகம் பற்றிய சுருக்கமான
*பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்*
திருநின்ற சருக்கத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட பெரியபுராணம் நூலில் இடம்பெறும் மிக முக்கியமான புராணங்களில் ஒன்றாகும். இது அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் புகழையும், அவரது இறைத் தொண்டுகளையும் விவரிக்கிறது.
*இந்த புராணத்தில் கிட்டத்தட்ட 500 பாடல்கள் வரை உள்ளதால் அன்பர்கள் படித்து புரிந்து கொள்ள வசதியாக அடுத்த சில நாட்களுக்கு தினமும் 50 பாடல்கள் வீதம் பகிர்ந்து கொள்கிறேன்.*🙏
*இன்றைய பதிவில் 101 முதல் 150 வரையிலான பாடல்கள்*
பாடல் வரிகள் :
*பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்*
ஆனந்த வெள்ளத்தின் இடை
மூழ்கி அம்பலவர்
தேன் உந்து மலர் பாதத்து
அமுது உண்டு தெளிவு எய்தி
ஊனம் தான் இலர் ஆகி
உவந்து இருந்தார் தமைக் கண்டே
ஈனம் தங்கியது இலதாம்
என்ன அதிசயம் என்றார். 101
அதிசயம் அன்றிது முன்னை
அமண் சமயச் சாதகத்தால்
இது செய்து பிழைத்து இருந்தான்
என வேந்தற்கு உரை செய்து
மதி செய்வது இனிக் கொடிய
வல் விடம் ஊட்டுவது என்று
முதிர வரும் பாதகத்தோர்
முடை வாயால் மொழிந்தார்கள். 102
ஆங்கு அது கேட்டலும் கொடிய
அமண் சார்பால்கெடு மன்னன்
ஓங்கு பெருமையினால் நஞ்சு
ஊட்டும் என உரைப்பத்
தேங்காதார் திருநாவுக்கரையரை அத்
தீய விடப்
பாங்கு உடைய பால் அடிசில்
அமுது செயப் பண்ணினார். 103
நஞ்சும் அமுது ஆம் எங்கள்
நாதன் அடியார்க்கு என்று
வஞ்சம் மிகு நெஞ்சு உடையார்
வஞ்சனையாம் படி அறிந்தே
செஞ்சடையார் சீர் விளக்கும் திறல்
உடையார் தீ விடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த பால்
அடிசில் மிசைந்து இருந்தார். 104
பொடி ஆர்க்கும் திருமேனிப்
புனிதர்க்குப் புவனங்கள்
முடிவாக்கும் துயர் நீங்க
முன்னை விடம் அமுதானால்
படியார்க்கும் அறி அரிய
பசுபதியார் தம் உடைய
அடியார்க்கு நஞ்சு அமுதம்
ஆவது தான் அற்புதமோ. 105
அவ் விடத்தை ஆண்ட அரசு
அமுது செய்து முன் இருப்ப
வெவ் விடமும் அமுது ஆயிற்று
என அமணர் வெருக் கொண்டே
இவ் விடத்தில் இவன் பிழைக்கில்
எமக்கு எல்லாம் இறுதி எனத்
தெவ் விடத்துச் செயல்
புரியும் காவலற்குச் செப்புவார். 106
நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம்
சமயத்தினில் விடம் தீர்
தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா
வகை தடுத்தான்
எஞ்சும் வகை அவற்கு இலதேல்
எம் உயிரும் நின் முறையும்
துஞ்சுவது திடம் என்றார் சூழ்
வினையின் துறை நின்றார். 107
மற்றவர் தம் மொழி கேட்டு
மதி கெட்ட மன்னவனும்
செற்ற அவனை இனிக் கடியும்
திறம் எவ்வாறு எனச் செப்ப
உற்றவரும் மந்திர சாதகம்
நாங்கள் ஒழித்திட நின்
கொற்ற வயக் களிற்று எதிரே
விடுவது எனக் கூறினார். 108
மா பாவிக் கடை
அமணர் வாகீசத் திருவடியாம்
கா பாலி அடியவர் பால்
கடக் களிற்றை விடுக என்னப்
பூ பாலர் செயல் மேற்கொள் புலைத்
தொழிலோன் அவர் தம் மேல்
கோ பாதி சயமான கொலைக்
களிற்றை விடச் சொன்னான். 109
கூடத்தைக் குத்தி ஒரு
குன்றம் எனப் புறப்பட்டு
மாடத்தை மறித்திட்டு மண்டபங்கள்
எடுத்து எற்றித்
தாடத்தில் பரிக்காரர் தலை
இடறிக் கடக் களிற்றின்
வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது
ஒரு விறல் வேழம். 110
வேறு - சந்தக் கலிவிருத்தம்
பாசத் தொடை நிகளத்
தொடர்பறியத் தறி முறியா
மீ சுற்றிய பறவைக்
குலம் வெருவத் துணிவிலகா
ஊசல் கரம் எதிர் சுற்றிட
உரறிப் பரி உழறா
வாசக் கட மழை முற்பட
மதவெற்பு எதிர் வருமால். 111
இடி உற்று எழும் ஒலியில்
திசை இப உட்கிட அடியில்
படி புக்கு உற நெளியப்
படர் பவனக் கதி விசையில்
கடிது உற்று அடு செயலில்
கிளர் கடலில் படு கடையின்
முடிவில் கனல் என முன்
சினம் முடுகிக் கடுகியதே. 112
மாடு உற்று அணை இவுளிக்
குலம் மறியச் செறி வயிரக்
கோடுற்று இரு பிளவிட்டு அறு
குறை கைக்கொடு முறியச்
சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப்
புடை அணி செற்று
ஆடுற்று அகல் வெளியுற்று அது
அவ்வடர் கைக்குல வரையே. 113
பாவக் கொடு வினை முற்றிய
படிறுற்று அடு கொடியோர்
நாவுக்கரசர் எதிர் முற்கொடு
நணுகிக் கருவரை போல்
ஏவிச் செறு பொருகைக்
கரியினை உய்த்திட வெருளார்
சேவிற்று திகழ்பவர் பொன் கழல்
தெளிவு உற்றனர் பெரியோர். 114
வேறு - அறுசீர் விருத்தம்
அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை
தம் மேல் வரக் கண்டு
விண்ணவர் தம் பெருமானை விடை
உகந்து ஏறும் பிரானைச்
சுண்ண வெண் சந்தனச் சாந்து
தொடுத்த திருப் பதிகத்தை
மண் உலகு உய்ய எடுத்து
மகிழ் உடனே பாடுகின்றார். 115
வஞ்சகர் விட்ட சினப் போர்
மதவெங் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை நீள் முடிக் கூத்தர்
தேவர்க்கும் தேவர் பிரானார்
வெஞ்சுடர் மூவிலைச் சூல வீரட்டர்
தம் அடியோம் நாம்
அஞ்சுவது இல்லை என்று என்றே
அருந்தமிழ் பாடி உறைந்தார். 116
தண் தமிழ் மாலைகள் பாடித்
தம் பெருமான் சரணாகக்
கொண்ட கருத்தில் இருந்து
குலாவிய அன்புறு கொள்கைத்
தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து
எதிர் தாழ்ந்து நிலத்தில்
எண் திசையோர்களும் காண
இறைஞ்சி எழுந்தது வேழம். 117
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி
அவ் வேழம் பெயரத்
தூண்டிய மேல் மறப் பாகர்
தொடக்கி அடத்துத் திரித்து
மீண்டும் அதனை அவர் மேல்
மிறை செய்து காட்டிட வீசி
ஈண்டு அவர் தங்களையே கொன்று
அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே. 118
ஓடி அருகர்கள் தம்மை
உழறி மிதித்துப் பிளந்து
நாடிப் பலரையும் கொன்று
நகரம் கலங்கி மறுக
நீடிய வேலை கலக்கும்
நெடும் மந்தரகிரி போல
ஆடி அவ் யானையும் மன்னற்கு
ஆகுலம் ஆக்கியது அன்றே. 119
யானையின் கையில் பிழைத்த வினை
அமண் கையர்கள் எல்லாம்
மானம் அழிந்து மயங்கி
வருந்திய சிந்தையர் ஆகித்
தானை நில மன்னன் தாளில்
தனித் தனி வீழ்ந்து புலம்ப
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு
இனிச் செய்வது என் என்றான். 120
நங்கள் சமயத்தின் நின்றே
நாடிய முட்டி நிலையால்
எங்கள் எதிர் ஏறு அழிய யானையால்
இவ் வண்ணம் நின் சீர்
பங்கப் படுத்தவன் போகப்
பரிபவம் தீரும் உனக்குப்
பொங்கழல் போக அதன் பின்
புகை அகன்றால் என என்றார். 121
அல்லிருள் அன்னவர் கூற அரும்
பெரும் பாவத்தவன் தான்
தொல்லைச் சமயம் அழித்துத்
துயரம் விளைத்தவன் தன்னைச்
சொல்லும் இனிச் செய்வது என்னச்
சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர்
கல்லுடன் பாசம் பிணித்துக் கடல்
இடைப் பாய்ச்சுவது என்றார். 122
ஆங்கு அது கேட்ட அரசன்
அவ்வினை மாக்களை நோக்கித்
தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம்
உறக் கொடு போகிப்
பாங்கு ஒரு கல்லில் அணைத்துப்
பாசம் பிணித்து ஓர் படகில்
வீங்கு ஒலி வேலையில் எற்றி
வீழ்த்துமின் என்று விடுத்தான். 123
அவ் வினை செய்திடப் போகும்
அவருடன் போயர் உகந்த
வெவ்வினை யாளரும் சென்று
மேவிட நாவுக்கரசர்
செவ்விய தம் திரு உள்ளம்
சிறப்ப அவருடன் சென்றார்
பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி
முடித்தார் அப்பாதகர். 124
அப்பரிசு அவ்வினை முற்றி அவர்
அகன்று ஏகிய பின்னர்
ஒப்பரும் ஆழ் கடல் புக்க
உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும்
எப்பரிசு ஆயினும் ஆக
ஏத்துவன் எந்தையை என்று
செப்பிய வண் தமிழ் தன்னால்
சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார். 125
வேறு - கலிவிருத்தம்
சொல் துணை வேதியன்
என்னும் தூய் மொழி
நல் தமிழ் மாலை
ஆம் நமச்சிவாய என்று
அற்ற முன் காக்கும்
அஞ்சு எழுத்தை அன்பொடு
பற்றி உணர்வினால்
பதிகம் பாடினார். 126
பெருகிய அன்பினர்
பிடித்த பெற்றியால்
அருமலரோன் முதல்
அமரர் வாழ்த்துதற்கு
அரிய அஞ்சு எழுத்தையும்
அரசு போற்றிடக்
கரு நெடுங்கடலின்
உட் கல் மிதந்ததே. 127
அப் பெருங்கல்லும் அங்கு
அரசு மேல் கொளத்
தெப்ப மாய் மிதத்தலில்
செறிந்த பாசமும்
தப்பியது அதன் மிசை
இருந்த தாவில் சீர்
மெய்ப் பெரும் தொண்டனார்
விளங்கித் தோன்றினார். 128
இருவினைப் பாசமும்
மலக்கல் ஆர்த்தலின்
வருபவக் கடலில் வீழ்
மாக்கள் ஏறிட
அருளும் மெய் அஞ்செழுத்து
அரசை இக்கடல்
ஒரு கல் மேல் ஏற்று
இடல் உரைக்க வேண்டுமோ. 129
அருள் நயந்து அஞ்செழுத்து
ஏத்தப் பெற்ற அக்
கருணை நாவரசினைத்
திரைக் கரங்களால்
தெருள் நெறி நீர்மையின்
சிரத்தில் தாங்கிட
வருணனும் செய்தனன் முன்பு
மா தவம். 130
வாய்ந்த சீர் வருணனே
வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே
சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டு எழுந்து
அருள் வித்தனன்
பூந்திருப் பாதிரிப்
புலியூர்ப் பாங்கரில். 131
அத் திருப் பதியினில்
அணைந்த அன்பரை
மெய்த் தவக் குழாம்
எலாம் மேவி ஆர்த்தெழ
எத் திசையைனும் அர
என்னும் ஓசைபோல்
தத்து நீர்ப் பெருங்கடல்
தானும் ஆர்த்ததே. 132
தொழும் தகை நாவினுக்கு
அரசும் தொண்டர் முன்
செழும் திருப் பாதிரிப்
புலியூர்த் திங்கள் வெண்
கொழுந்து அணி சடையாரைக்
கும்பிட்டு அன்புற
விழுந்து எழுந்து அருள்
நெறி விளங்கப் பாடுவார். 133
வேறு - கட்டளைக் கலித்துறை
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையும்
ஆகி என எடுத்துத்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்
அடியோங் கட்கு என்று
வான் தாழ் புனல் கங்கை வாழ்
சடையானை மற்று எவ் உயிர்க்கும்
சான்றாம் ஒருவனைத் தண்
தமிழ் மாலைகள் சாத்தினரே. 134
வேறு - கலித்துறை
மற்றும் இணையன வண் தமிழ்
மாலைகள் பாடி வைகி
வெற்றி மழவிடை வீரட்டர்
பாதம் மிக நினைவால்
உற்றதொர் காதலின் அங்கு நின்று
ஏகி ஒன்னார் புரங்கள்
செற்றவர் வாழும் திருவதிகைப்
பதி சென்று அடைவார். 135
தேவர் பிரான் திரு மாணிக்
குழியும் தினை நகரும்
மேவினர் சென்று விரும்பிய சொல்
மலர் கொண்டு இறைஞ்சிப்
பூவலர் சோலை மணமடி
புல்லப் பொருள் மொழியின்
காவலர் செல்வத் திருக்
கெடிலத்தைக் கடந்து அணைந்தார். 136
வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த
தீயம் இறைகள் எல்லாம்
எஞ்ச வென்று ஏறிய இன்
தமிழ் ஈசர் எழுந்து அருள
மஞ்சிவர் மாடத் திருவதிகைப்
பதி வாணர் எல்லாம்
தம் செயல் பொங்கத் தழங்கு
ஒலி மங்கலம் சாற்றல் உற்றார். 137
மணி நெடுந் தோரணம் வண்
குலைப் பூகம் மடற் கதலி
இணையுற நாட்டி எழு நிலைக்
கோபுரம் தெற்றி எங்கும்
தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச்
செஞ் சாந்து நீவி
அணி நகர் முன்னை அணி
மேல் அணி செய்து அலங்கரித்தார். 138
வேறு - கட்டளைக் கலித்துறை
மன்னிய அன்பின் வள நகர்
மாந்தர் வயங்கு இழையார்
இன்னிய நாதமும் ஏழ் இசை
ஓசையும் எங்கும் விம்மப்
பொன் இயல் சுண்ணமும் பூவும்
பொரிகளும் தூவி எங்கும்
தொல் நகரின் புறம் சூழ்ந்து
எதிர் கொண்டனர் தொண்டரையே. 139
தூய வெண் நீறு துதைந்த
பொன் மேனியும் தாழ் வடமும்
நாயகன் சேவடி தைவரும்
சிந்தையும் நைந்து உருகிப்
பாய்வது போல் அன்பு நீர் பொழி
கண்ணும் பதிகச் செஞ் சொல்
மேய செவ்வாயும் உடையார்
புகுந்தனர் வீதி உள்ளே. 140
கண்டார்கள் கை தலைமேல் குவித்து
இந்தக் கருணை கண்டால்
மிண்டாய செங்கை அமண்கையர்
தீங்கு விளைக்கச் செற்றம்
உண்டா யினவண்ணம் எவ் வண்ணம்
என்று உரைப்பார்கள் பின்னும்
தொண்டு ஆண்டு கொண்ட
பிரானைத் தொழுது துதித்தனரே. 141
இவ் வண்ணம் போல எனைப்
பல மாக்கள் இயம்பி ஏத்த
மெய் வண்ண நீற்று ஒளி
மேவும் குழாங்கள் விரவிச் செல்ல
அவ் வண்ணம் நண்ணிய அன்பரும்
வந்து எய்தி அம்பவளச்
செவ் வண்ணர் கோயில்
திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே. 142
வேறு - கலித்துறை
உம்பர் தம் கோனை உடைய
பிரானை உள் புக்கு இறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு
காதலினால் திளைத்தே
எம் பெருமான் தனை ஏழையேன்
நான் பண்டு இகழ்ந்தது என்று
தம் பரிவால் திருத் தாண்டகச்
செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார். 143
வேறு - கொச்சகக் கலிப்பா
அரி அயனுக்கு அரியானை
அடியவருக்கு எளியானை
விரி புனல் சூழ் திருவதிகை
வீரட்டானத்து அமுதைத்
தெரிவரிய பெரும் தன்மைத்
திருநாவுக் கரசு மனம்
பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப்
பணி செயும் நாள். 144
புல் அறிவில் சமணர்க்காப்
பொல்லாங்கு புரிந்து ஒழுகும்
பல்லவனும் தன்னுடைய பழவினைப்
பாசம் பறிய
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி
ஆண்ட அரசினைப் பணிந்து
வல்லமணர் தமை நீத்து
மழவிடையோன் தாள் அடைந்தான். 145
வீடு அறியாச் சமணர் மொழி
பொய் என்று மெய் உணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்
கண் கண் நுதற்குப்
பாடலி புத்திரத்தில் அமண்
பள்ளியொடு பாழிகளும்
கூட இடித்துக் கொணர்ந்து
குண பரவீச்சரம் எடுத்தான். 146
இந் நாளில் திருப்பணிகள்
செய்கின்ற இன் தமிழுக்கு
மன்னான வாகீசத் திருமுனியும்
மதிச் சடைமேல்
பன்னாகம் அணிந்தவர் தம் பதி
பலவும் சென்று இறைஞ்சிச்
சொன்னாமத் தமிழ் புனைந்து தொண்டு
செய்வான் தொடர்ந்து எழுவார். 147
திருவதிகைப் பதி மருங்கு
திரு வெண்ணெய் நல்லூரும்
அருளும் திரு ஆமாத்தூர்
திருக்கோவலூர் முதலா
மருவு திருப்பதி பிறவும் வணங்கி
வளத் தமிழ் பாடிப்
பெருகு விருப்புடன் விடையார்
மகிழ் பெண்ணாகடம் அணைந்தார். 148
கார் வளரும் மாடங்கள் கலந்த
மறை ஒலி வளர்க்கும்
சீர் உடை அந்தணர் வாழும்
செழும் பதியின் அகத்து எய்தி
வார் சடையார் மன்னு
திருத் தூங்கானை மாடத்தைப்
பார் பரவும் திருமுனிவர்
பணிந்து ஏத்திப் பரவினார். 149
புன் நெறியாம் அமண் சமயத்
தொடக்குண்டு போந்தவுடன்
தன்னுடனே உயிர்வாழத் தரியேன்
நான் தரிப்பதனுக்கு
என்னுடைய நாயக நின் இலச்சினை
இட்டு அருள் என்று
பன்னு செழுந்தமிழ் மாலை
முன் நின்று பாடுவார். 150
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
5 shares