A Mohan Raj
720 views 1 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* திருநின்ற சருக்கத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட பெரியபுராணம் நூலில் இடம்பெறும் மிக முக்கியமான புராணங்களில் ஒன்றாகும். இது அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் புகழையும், அவரது இறைத் தொண்டுகளையும் விவரிக்கிறது. *இந்த புராணத்தில் கிட்டத்தட்ட 500 பாடல்கள் வரை உள்ளதால் அன்பர்கள் படித்து புரிந்து கொள்ள வசதியாக அடுத்த சில நாட்களுக்கு தினமும் 50 பாடல்கள் வீதம் பகிர்ந்து கொள்கிறேன்.*🙏 *இன்றைய பதிவில் 101 முதல் 150 வரையிலான பாடல்கள்* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர் தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமைக் கண்டே ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார். 101 அதிசயம் அன்றிது முன்னை அமண் சமயச் சாதகத்தால் இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து மதி செய்வது இனிக் கொடிய வல் விடம் ஊட்டுவது என்று முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள். 102 ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால்கெடு மன்னன் ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்பத் தேங்காதார் திருநாவுக்கரையரை அத் தீய விடப் பாங்கு உடைய பால் அடிசில் அமுது செயப் பண்ணினார். 103 நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால் வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார். 104 பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனங்கள் முடிவாக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுதானால் படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம் உடைய அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ. 105 அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெருக் கொண்டே இவ் விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி எனத் தெவ் விடத்துச் செயல் புரியும் காவலற்குச் செப்புவார். 106 நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர் தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான் எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார். 107 மற்றவர் தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும் செற்ற அவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு எனச் செப்ப உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின் கொற்ற வயக் களிற்று எதிரே விடுவது எனக் கூறினார். 108 மா பாவிக் கடை அமணர் வாகீசத் திருவடியாம் கா பாலி அடியவர் பால் கடக் களிற்றை விடுக என்னப் பூ பாலர் செயல் மேற்கொள் புலைத் தொழிலோன் அவர் தம் மேல் கோ பாதி சயமான கொலைக் களிற்றை விடச் சொன்னான். 109 கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டு மாடத்தை மறித்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றித் தாடத்தில் பரிக்காரர் தலை இடறிக் கடக் களிற்றின் வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம். 110 வேறு - சந்தக் கலிவிருத்தம் பாசத் தொடை நிகளத் தொடர்பறியத் தறி முறியா மீ சுற்றிய பறவைக் குலம் வெருவத் துணிவிலகா ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறிப் பரி உழறா வாசக் கட மழை முற்பட மதவெற்பு எதிர் வருமால். 111 இடி உற்று எழும் ஒலியில் திசை இப உட்கிட அடியில் படி புக்கு உற நெளியப் படர் பவனக் கதி விசையில் கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின் முடிவில் கனல் என முன் சினம் முடுகிக் கடுகியதே. 112 மாடு உற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக் கோடுற்று இரு பிளவிட்டு அறு குறை கைக்கொடு முறியச் சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப் புடை அணி செற்று ஆடுற்று அகல் வெளியுற்று அது அவ்வடர் கைக்குல வரையே. 113 பாவக் கொடு வினை முற்றிய படிறுற்று அடு கொடியோர் நாவுக்கரசர் எதிர் முற்கொடு நணுகிக் கருவரை போல் ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார் சேவிற்று திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர். 114 வேறு - அறுசீர் விருத்தம் அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை தம் மேல் வரக் கண்டு விண்ணவர் தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானைச் சுண்ண வெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப் பதிகத்தை மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார். 115 வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை நோக்கிச் செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார் வெஞ்சுடர் மூவிலைச் சூல வீரட்டர் தம் அடியோம் நாம் அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார். 116 தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரணாகக் கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத் தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில் எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம். 117 ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத் தூண்டிய மேல் மறப் பாகர் தொடக்கி அடத்துத் திரித்து மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே. 118 ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்து நாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல ஆடி அவ் யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே. 119 யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம் மானம் அழிந்து மயங்கி வருந்திய சிந்தையர் ஆகித் தானை நில மன்னன் தாளில் தனித் தனி வீழ்ந்து புலம்ப மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனிச் செய்வது என் என்றான். 120 நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால் எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ் வண்ணம் நின் சீர் பங்கப் படுத்தவன் போகப் பரிபவம் தீரும் உனக்குப் பொங்கழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார். 121 அல்லிருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான் தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைத்தவன் தன்னைச் சொல்லும் இனிச் செய்வது என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் கல்லுடன் பாசம் பிணித்துக் கடல் இடைப் பாய்ச்சுவது என்றார். 122 ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித் தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக் கொடு போகிப் பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில் வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான். 123 அவ் வினை செய்திடப் போகும் அவருடன் போயர் உகந்த வெவ்வினை யாளரும் சென்று மேவிட நாவுக்கரசர் செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார் பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்பாதகர். 124 அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் ஒப்பரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும் எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று செப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார். 125 வேறு - கலிவிருத்தம் சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி நல் தமிழ் மாலை ஆம் நமச்சிவாய என்று அற்ற முன் காக்கும் அஞ்சு எழுத்தை அன்பொடு பற்றி உணர்வினால் பதிகம் பாடினார். 126 பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு அரிய அஞ்சு எழுத்தையும் அரசு போற்றிடக் கரு நெடுங்கடலின் உட் கல் மிதந்ததே. 127 அப் பெருங்கல்லும் அங்கு அரசு மேல் கொளத் தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும் தப்பியது அதன் மிசை இருந்த தாவில் சீர் மெய்ப் பெரும் தொண்டனார் விளங்கித் தோன்றினார். 128 இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல் ஒரு கல் மேல் ஏற்று இடல் உரைக்க வேண்டுமோ. 129 அருள் நயந்து அஞ்செழுத்து ஏத்தப் பெற்ற அக் கருணை நாவரசினைத் திரைக் கரங்களால் தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட வருணனும் செய்தனன் முன்பு மா தவம். 130 வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச் சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன் பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில். 131 அத் திருப் பதியினில் அணைந்த அன்பரை மெய்த் தவக் குழாம் எலாம் மேவி ஆர்த்தெழ எத் திசையைனும் அர என்னும் ஓசைபோல் தத்து நீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே. 132 தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன் செழும் திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள் வெண் கொழுந்து அணி சடையாரைக் கும்பிட்டு அன்புற விழுந்து எழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார். 133 வேறு - கட்டளைக் கலித்துறை ஈன்றாளுமாய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத் தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங் கட்கு என்று வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ் உயிர்க்கும் சான்றாம் ஒருவனைத் தண் தமிழ் மாலைகள் சாத்தினரே. 134 வேறு - கலித்துறை மற்றும் இணையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி வெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால் உற்றதொர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள் செற்றவர் வாழும் திருவதிகைப் பதி சென்று அடைவார். 135 தேவர் பிரான் திரு மாணிக் குழியும் தினை நகரும் மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சிப் பூவலர் சோலை மணமடி புல்லப் பொருள் மொழியின் காவலர் செல்வத் திருக் கெடிலத்தைக் கடந்து அணைந்தார். 136 வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள் எல்லாம் எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருள மஞ்சிவர் மாடத் திருவதிகைப் பதி வாணர் எல்லாம் தம் செயல் பொங்கத் தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார். 137 மணி நெடுந் தோரணம் வண் குலைப் பூகம் மடற் கதலி இணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் தெற்றி எங்கும் தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச் செஞ் சாந்து நீவி அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார். 138 வேறு - கட்டளைக் கலித்துறை மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார் இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்மப் பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும் தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே. 139 தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும் நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப் பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ் சொல் மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே. 140 கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை கண்டால் மிண்டாய செங்கை அமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம் உண்டா யினவண்ணம் எவ் வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும் தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே. 141 இவ் வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்த மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவிச் செல்ல அவ் வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம்பவளச் செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே. 142 வேறு - கலித்துறை உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே எம் பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று தம் பரிவால் திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார். 143 வேறு - கொச்சகக் கலிப்பா அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதைத் தெரிவரிய பெரும் தன்மைத் திருநாவுக் கரசு மனம் பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் பணி செயும் நாள். 144 புல் அறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும் பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து வல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான். 145 வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த காடவனும் திருவதிகை நகரின் கண் கண் நுதற்குப் பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான். 146 இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு மன்னான வாகீசத் திருமுனியும் மதிச் சடைமேல் பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச் சொன்னாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார். 147 திருவதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய் நல்லூரும் அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா மருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ் பாடிப் பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகடம் அணைந்தார். 148 கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும் சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி வார் சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப் பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார். 149 புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்தவுடன் தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்கு என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று பன்னு செழுந்தமிழ் மாலை முன் நின்று பாடுவார். 150 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
5 shares

More like this