செ.சாா்லஸ் செபஸ்டின்
678 views • 2 days ago
#இன்றைய வேத வசனம் #இன்றைய வசனம் #இன்றைய இறைவார்த்தை சிந்தனை*
*"நிலையில்லாததும் - நிரந்தரமானதும்"*
ஓர் அன்பியத் திருப்பலியில் பங்குப் பணியாளர், செல்வரான இளைஞர் இயேசுவிடம் வருகின்ற இறைவாக்குப் பகுதியை வாசித்துவிட்டு, அதற்கு விளக்கம் கொடுத்தபோது, “இயேசுவிடம் வந்த செல்வரான இளைஞர் எப்படியும் ஒரு இலட்சதிபதியாக இருந்திருப்பார். ஒருவேளை அவர் இயேசு சொன்னதன்படி நடந்திருந்தால், கோடிஸ்வராராகி இருப்பார்” என்றார்.
இதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு மூதாட்டி, “சுவாமி! எதை வைத்து நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்றாள். அதற்கு பங்குப் பணியாளர் அவளிடம், “இயேசுவிடம் வந்த செல்வரான இளைஞரிடம் எப்படியும் இலட்ச ரூபாய் மதிப்புள்ள பணமும் பொருளும் இருந்திருக்கலாம். அவைகூட அழிந்துபோகக் கூடியவைதான். ஆனால், அவர் மட்டும் இயேசுவின் வார்த்தையின் படி நடந்திருந்தால் பெரிய கோடிஸ்வரர் ஆயிருக்கலாம், அல்லது விலை மதிக்கப்பெறாத நிலைவாழ்வை உரித்தாக்கிக் கொண்டிருக்கலாம். இயேசுவின் வார்த்தையின்படி நடக்காமல் முட்டாளாய் இலட்சாதிபதியாகவே இருந்தார்” என்றார்.
ஆம், பலரும் இந்தச் செல்வரான இளைஞரைப் போன்று நிலைவாழ்வைப் பெற நிலையில்லாததை விட்டவிடத் தயாராய் இல்லாமல் இருக்கின்றார்கள். இது வேதனையிலும் வேதனையானது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு இதே செய்தியைத் தான் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
*திருவிவிலியப் பின்னணி:*
“நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள நான் என்ன நன்மையைச் செய்ய வேண்டும்?” என்ற கேள்வியோடு இயேசுவிடம் வருகின்ற செல்வரான இளைஞரிடம் அவர், “கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட” என்று பத்துக்கட்டளைகளில், இரண்டாவது பகுதியில் வருகின்ற கட்டளைகளைக் கடைப்பிடிக்கச் சொல்கின்றார். அதே நேரத்தில், பத்துக் கட்டளைகளில் வருகின்ற கடைசிக் கட்டளையை நீக்கிவிட்டு, அதற்கு மாற்றாக, “உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” (லேவி 19:18) என்று லேவியர் புத்தகத்தில் இடம்பெறும் கட்டளையை இணைத்துச் சொல்கின்றார்.
“இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று சொல்லிவிட்டுச் செல்வரான இளைஞர் இயேசுவிடம், “இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?” என்று கேட்கின்றபோதுதான், இயேசு அவரிடம், “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும்” என்கிறார்.
செல்வரான இளைஞர் தன்னை மிகுதியாக அன்பு செய்தார்; ஆனால், அவர் தனக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்யத் தயாராக இல்லை. அப்படி அவர் தன்னை அன்பு செய்தது போல், தனக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்திருந்தால், அவர் தன்னிடம் இருந்த செல்வதை அடுத்திருப்பவருக்குக் கொடுக்க முன் வந்திருப்பார். அந்த மனம் அவருக்கு இல்லாமல் போனதால், அவர் நிலைவாழ்வைப் பெற முடியாமல் போனார்.
இந்தச் செல்வரான இளைஞரைப் போன்றுதான் பலரும் அழியக் கூடியவற்றை அல்லது நிரந்தரமில்லாததைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், “மானிடா! உன் கண்களுக்கு இன்பம் தருவதை உன்னிடமிருந்து ஒரே நொடியில் எடுத்துவிடப் போகிறேன்” என்ற வார்த்தைகளோடு தொடங்குகின்றது. ஆண்டவர் சொல்வது போல், இப்போது நமது கண்களுக்கு இன்பம் தரும் எதுவும் நிரந்தரமில்லை. ஆண்டவர் மட்டுமே நிரந்தரமானவர். அதனால் நாம் அவரைப் பற்றிக் கொண்டு நிலைவாழ்வைப் பெறுவோம்.
*சிந்தனைக்கு:*
நிலையற்ற செல்வத்தைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுத்து, நிலைவாழ்வைப் பெறுவோம்.
அடுத்திருப்பவரை அன்பு செய்யாமல் ஆண்டவரை அன்பு செய்ய முடியாது. அவரை அடையவும் முடியாது.
நமது கைகள் பிறருக்குக் கொடுக்கத் தாழ்கின்றபோதெல்லாம், நமது வாழ்வு உயர்கின்றது.
*இறைவாக்கு:*
‘ஆண்டவரைத் தேடுங்கள்; நீங்கள் வாழ்வீர்கள்’ (ஆமோ 5:6) என்பார் இறைவாக்கினர் ஆமோஸ். எனவே, நாம் ஆண்டவரைத் தேடி, அவரது வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
*- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*
11 shares